திங்கள், 22 அக்டோபர், 2018

தஞ்சை : பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில் தமிழர் தலைவரின் வழிகாட்டுதல்

கருப்புச்சட்டை அணியாத பகுத்தறிவாளரையும் ஒன்று சேர்த்து பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாட்டை பலப்படுத்துங்கள்!




 

தஞ்சை, அக்.20- 19.10.2018 காலை 10.30 மணி அளவில் தொடங்கிய மாநில பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையை அடுத்த வல்லத்தில் பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

புரவலர் தமிழர் தலைவரின் உரை


புரவலர் தமிழர் தலைவர் கூட்டத்தில்  வழிகாட்டும்  நெறியுரையாக கூறியதாவது:


பகுத்தறிவாளர்களின் செயல்பாட்டை பரந்த அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஓராண்டிற்கு முன்பு பகுத்தறிவாளர் கழகம்,  பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் எனச் செயல்பாட்டுத் தளங்கள் விரிவுபடுத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் பகுத்தறிவாளர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பகுத்தறிவாளர்கள் எந்தத் தளத்தில் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து செயல்படக் கூடிய பணியினை பகுத்தறிவாளர் கழகமும், பகுத்தறிவு ஆசிரிய ரணியும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும் தன் அக்கறை யுடன் செய்திட வேண்டும்.

புதிதாக இணையும் பகுத்தறிவாளர்கள் கருப்புச் சட்டை அணிந்திட வேண்டும் என்பது கட்டாயமல்ல. வண்ணம் எப்படி இருந்தாலும், எண்ணம் ஒன்றாக இருப்பதை ஒருங் கிணைத்து பகுத்தறிவு நெறி சார்ந்து வாழ்வது, அந்த நெறி சார்ந்து பிரச்சாரம் செய்வது முக்கியம்.

தந்தை பெரியார் அறிவியல் மனப்பான்மையுடன் எதனையும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென, பகுத்தறிவுடன் சார்ந்த அணுகு முறையினைக் கைக் கொள்ள வேண்டும் என்று இந்த நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே - இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாவதற்கு முன்பே பிரச்சாரம் செய்துவந்தார். 1950ஆம் ஆண்டில் அரசியலமைப் புச் சட்டம் முதலில் உருவானபொழுது தந்தை பெரியார் வலியுறுத்திய கருத்துகள் அதில் இடம் பெறவில்லை. ஆனால் பின்னர் 1976ஆம் ஆண்டில் 42ஆம் முறையாக அரசியல மைப்புச் சட்டம் திருத்தப்பட்ட பொழுது இந்திய குடிமகன் ஆற்றிட வேண்டிய அடிப்படைக் கடமைகள் என பிரிவு 51ஏ (எச்)-இல் தந்தை பெரியார் கூறிய கருத்துகள் இடம் பெற்றன.

"It shall be the duty of every citizen to develop scientific temper, sprit of enquiry, humanism and reform".

அறிவியல் மனப்பான்மையினை பெருக்குவது, எதனை யும் கேள்வி கேட்டு ஆய்வு செய்திடும் உளப்பாங்கினை உருவாக்குவது. மனிதநேயம் மற்றும் சீர்திருத்தத்தினைக் கடைப்பிடிப்பது ஒரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்திடும், ஒவ்வொரு குடிமகனையும் தனது அடிப்படைக் கடமையினை ஆற்றிடவைக்கக் கூடிய தனித்துவமான இயக்கம் தந்தை பெரியார் ஏற்படுத்திய பகுத்தறிவாளர் கழகம் ஆகும்.



தகவல் தொழில்நுட்பம், கணினி சார்ந்த அறிவியல் வளர்ச்சி முக்கியத்துவம் பெற்றுவரும் நிலையில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தினை இணைய தளத்தின் மூலம் முகநூல், மின்னஞ்சல், கட்செவி, குறுஞ்செய்தி என பல வழிமுறைகளில் எடுத்துச் செல்ல வேண்டும். தேவையின் அவசியம் கருதி இத்தகைய கணினி சார்ந்த பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு தனிப் பிரிவும் ஏற்படுத்தப்படும்.

சுழன்று அடிக்கும் சூறைக் காற்றின் வலிமையுடன் மூடநம்பிக்கைகள், பிற்போக்கு பழக்கங்கள் வலுவிழந்து சமுதாயத்தில் காணாமலே போகின்ற அளவிற்கு பகுத்தறிவுப் பிரச்சாரத்தினை பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரி யரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் உரிய முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.

- இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

வரவேற்புரை


கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்தோரை வர வேற்றுப் பேசி, கூட்டத்தின் முகவுரையினையும் மாநில பகுத் தறிவாளர் கழகத்தின் தலைவர் மா. அழகிரிசாமி வழங்கினார்.

தொடக்கவுரை


தொடக்கவுரை ஆற்றிய திராவிடர் கழகத்தின் வெளி யுறவுச் செயலாளர் வீ. குமரேசன் கடந்த ஓராண்டு காலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் பாராட்டத்தக்க செயல்பாட்டினை எடுத்துக் கூறி வரவிருக்கின்ற காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகள்பற்றி எடுத்துரைத்தார்.

அடுத்து ஒவ்வொரு, மாவட்டப் பொறுப்பாளரும் தாங்கள் கடந்த காலத்தில் செய்த பணியினை அறிக்கையாக அளித்ததுடன், வருங்காலத்தில் செய்திட திட்டமிட்டுள்ளதைக் குறித்தும் சுருக்கமாக எடுத்துக் கூறினார்கள்.

கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய


மாவட்டப் பொறுப்பாளர்கள்:


மயிலாடுதுறை ப.க. செயலாளர் அ. சாமிதுரை, வட சென்னை ப.க. தலைவர் கோவி. கோபால், தர்மபுரி மாவட்ட ப.க. தலைவர் கதிர். செந்தில்குமார், தாம்பரம் மாவட்ட ப.க. தலைவர் விஜய் ஆனந்த்,  திருப்பூர் மாவட்ட ப.க. தலைவர் வெ. குமாரராசா, கோபி மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் அ. குப்புசாமி, விருதுநகர் மாவட்ட ப.க. செயலாளர் முத்து கணேஷ், மேட்டூர் மாவட்ட ப.க. செயலாளர் சி. மதியழகன், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் அ. மன்னர்மன்னன், திருத் துறைப்பூண்டி மாவட்ட ப.க. தலைவர் கவிஞர் புயல்குமார், லால்குடி மாவட்ட ப.க. தலைவர் சுப்பிரமணியன், விழுப்புரம் மாவட்ட ப.க. தலைவர் கார்வண்ணன், திருவாரூர் மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் ஆறுமுகம், ஈரோடு மாவட்ட ப.க. டாக்டர் க.பா. மோகனசுந்தர் ராஜ், கன்னியாகுமரி மாவட்ட ப.க. செயலாளர் எம். பெரியார்தாஸ், பழனி மாவட்ட ப.க. தலைவர் ச. திராவிடச்செல்வன், தஞ்சாவூர் மாவட்ட ப.க. செயலாளர் ச. அழகிரி, திருப்பத்தூர் மாவட்ட ப.க.ஆசிரி யரணி செயலாளர் சே. ஜானகிராமன், கும்பகோணம் மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் விஜயபூபாலன், நாகை மாவட்ட ப.க. செயலாளர் மு.க .ஜீவா, திருவண்ணாமலை மாவட்ட ப.க. தலைவர் பா. வெங்கட்ராமன், கிருட்டிணகிரி மாவட்ட ஆசிரியரணி அய். லூயிஸ் ராஜ், சேலம் மாவட்ட ப.க. செயலாளர் ப. கந்தவேல், பெரம்பலூர் மாவட்ட ப.க. செயலாளர் பெ. நடராசன், ஆத்தூர் மாவட்ட ப.க. தலைவர் வ. முருகானந்தம், புதுச்சேரி ப.க. தலைவர்  கு. ரஞ்சித்குமார், காரைக்குடி மாவட்ட ப.க. செயலாளர் ந. செல்வராசன், புதுக்கோட்டை மாவட்ட ப.க. தலைவர் அ.சரவணன், தென் சென்னை மாவட்ட ப.க. தலைவர் மு.ரா. மாணிக்கம்.

உரை ஆற்றிய மாநிலப் பொறுப்பாளர்கள்:


ப.க. மாநில துணைத் தலைவர்கள் முனைவர் மு.சு. கண்மணி, தரும. வீரமணி, புதுச்சேரி மு.ந.நடராசன், அ.தா. சண்முகசுந்தரம், அண்ணா சரவணன், மணிவண்ணன், கே.டி.சி. குருசாமி, கோபு. பழனிவேலு, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் சி. ரமேசு, வா. தமிழ்பிரபாகரன், இரா. கலைச்செல்வன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா. நேரு, பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா. அழகிரிசாமி ஆகியோர் உரையாற்றினர்.

மாநில ப.க. துணைத் தலைவர் கோபு. பழனிவேலு நன்றி கூறினார்.


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


19.10.2018 மாநில பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இரங்கல் தீர்மானம்:


திருநெல்வேலி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஜே. பிரின்சு, மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஜே. சுப்பிரமணியன் ஆகியோர் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.



தீர்மானம் 1:


முன்மொழிவு: கதிர். செந்தில்குமார்


அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா: (2019-2020)


தந்தை பெரியாரின் மறைவிற்குப் பின் அவர் தொடங்கி நடத்திய மாபெரும் பகுத்தறிவுப் புரட்சி இயக்கத்தினைக் கட்டிக் காத்து வழிநடத்திய அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் நாள் தொடங் குகிறது. அன்னை மணியம்மையார் மறைவிற்கு பின் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று பெரியார்தம் கொள்கைகளை பரந்துபட்டு பார் முழுவதும் பரப்பி வரும் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் உருவாக்கப் பட்டுள்ள 'ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை' (E.V.R. Maniammai Foundation) -இன் செயல்பாட்டிற்கு ஆக்கம் சேர்க்கின்ற பணிகளை ஆற்றிட இந்தக் கூட்டம் தீர்மானிக் கிறது. மேலும் அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழாவினைப் பல்வேறு தளங்களில் 2019 - 2020 ஆண்டு முழுவதும் சிறப்பாக நடத்தி கொள்கைப் பிரச்சரம் செய்திட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 2:


முன்மொழிவு: டாக்டர் க.பா. மோகன சுந்தர்ராஜ்


மத நம்பிக்கை, மதத் தொடர்பான நடவடிக்கைகளால் புரையோடிப்போயுள்ள சமத்துவமின்மையின் ஒரு நடை முறையாக உள்ள கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் வழிபாடு செய்வதற்கு 10 முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு - இந்த வயதுப் பெண்களுக்கு இயற்கையாக நிகழும், 'மாதவிடாய்' என்னும் உடல் சார்ந்த நிகழ்வினால் கோயில் தீட்டுப்பட்டுவிடும் எனக் காரணம் காட்டி - பல ஆண்டுகளாக வழிபடும் உரிமை மறுக்கப்பட்டு வந்தது, இந்த பாகுபாட்டு நடைமுறையினை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் அண்மையில் உச்சநீதி மன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வானது வயது வேறுபாடு இன்றி அனைத்துப் பெண்களும் கோவிலுக்குச் சென்று வழிபடத் தடை இல்லை எனத் தீர்ப்பு அளித்ததை இக்கூட்டம் வரவேற்கிறது; இந்த தீர்ப்பு கிடைத்திட கேரள மாநில ஆளும் அரசு எடுத்த முயற்சிகளை இந்தக் கூட்டம் பாராட்டுகிறது. மேலும் இந்தத் தீர்ப்பினை மறுத்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்த, அரசியல் பின்புலத்துடன் செயல்பட்டு வரும் மத வாதிகளின் நடவடிக்கைகளை இந்தக் கூட்டம் கடுமையாகக் கண்டிக்கிறது. பெண்களுக்கான வழிபாட்டு உரிமையில், சமத்துவ உரிமையினை நிலைநாட்டி எந்தவிதப் பாகுபாட் டிற்கும் இடம் கொடுக்காத வகையில், சபரிமலை கோயில் நிர்வாகத்தினைக் கட்டுப்படுத்திடும் வகையில் உள்ள கேரள அரசின் செயல்பாடு பாராட்டுதலுக்குரியது. உறுதியான கொள்கைப் பிடிப்புடன் வழிபாட்டு உரிமையினைப் பாலின பாகுபாடின்றி, வயது வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கிடுவதில் முனைப்புடன் தொடர்ந்து செயல்படுமாறு கேரள மாநில அரசினை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.



தீர்மானம் 3:


முன்மொழிவு: ச. அழகிரி


இல்வாழ்க்கை உறவில் மனைவியானவர் கணவனது உடமை, ஒரு பயன்பாட்டுப் பொருள் என்பதனை மறுத்து, 'இருவரும் சம உரிமை படைத்த உற்ற நண்பர்கள்' என்பதை வலியுறுத்தி மணமான பெண்களுக்கு சுதந்திர பாலியல் உரிமை வேண்டும் எனத் தொடர்ந்து தந்தை பெரியார் குரல் கொடுத்தார்; 1971 ஆம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் இது குறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தந்தை பெரியார் வலியுறுத்திய பெண்களுக்கான சுதந்திர பாலியல் உரிமையினை உறுதிப்படுத்திடும் வகையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497 கூறும் கணவனது சம்மதம் பெறாத மனைவியின் பாலியல் உறவு (Adultery) தண்டனைக்கு உரியது என்பதை மறுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497 இந்தத் தீர்ப்பின் மூலம் நீக்கப்படுகிறது. பெண் சமத்துவ அடிப்படையில் சுதந்திர பாலியல் உரிமை தண்டனைக்குரியது அல்ல என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை இந்தக் கூட்டம் பாராட்டி வரவேற்கிறது. மதவாதிகள், திரிபுவாதிகள் கூறிவரும் - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் சமூக ஒழுக்கம் பாதிக்கப்படும் - எனும் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்த்து பகுத்தறிவாளர் கழகம் சட்ட விதிகள் சார்ந்த ஒழுக்கவிதிகள் பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்திட வேண்டும் என இக்கூட்டம் முடிவு செய்கிறது.

தீர்மானம் 4:


முன்மொழிவு: லால்குடி வீ. சுப்பிரமணியன்


மனித உடல்கூறு அடிப்படையில், இயற்கையாக எழுந்திடும் பாலியல் உணர்வுகளின் பாற்பட்ட ஓரினச் சேர்க்கை சட்டபடி தண்டனைக்கு உரியது என இதுவரை நடைமுறையில் இருந்தது. ஓரினச் சேர்க்கையினை தண்டனைக்குரிய உரிய குற்றம் எனக் கூறும் இந்திய தண்டனைச் சட்டம் 377 பிரிவினை நீக்கிடும் வகையில் அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை இந்தக் கூட்டம் வரவேற்கிறது. பொது ஒழுக்கம் என்பது மனித உணர்வு, உரிமை சார்ந்ததாக சமத்துவத்தினை அளிக்கின்ற வகையில் இருந்திட வேண்டும். உடல் அமைப்பு அடிப்படையில் எழும் உணர்வுகள் தண் டனைக்கு உரியது அல்ல எனும் மனித நேய அடிப் படையிலான உச்சநீதிமன்றத் தீர்ப்பினை இக்கூட்டம் பாராட்டுகிறது.

தீர்மானம் 5:


முன்மொழிவு: பெரியார்தாஸ்


பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா (2019 - 2020)


அலுவலகப் பணிபுரிவோரும் பகுத்தறிவுப் பிரச்சாரத் தினை மேற்கொள்ளுவதற்கு ஏதுவான அமைப்பாக அறிவார்ந்த தொலைநோக்குச் சிந்தனையுடன் தந்தை பெரியார் பகுத்தறிவாளர் கழகத்தினை 1971 -ஆம் ஆண்டு நிறுவினார். உரிய அரசு அங்கீகாரம் பெற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் புரவலராகக் கொண்டு 6 செப்டம்பர் 1971 அன்று பகுத்தறிவாளர் கழகம் தொடங்கப்பட்டது. பகுத்தறிவாளர் கழகமானது. பல்வேறு தளங்களில் தமிழ்நாட்டிலும் வெளி மாநிலங்களிலும், பிறநாடுகளிலும், பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை யினை வளர்த்து மனிதநேயக் கொள்கைக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. பகுத்தறிவாளர் கழகம் நிறுவப்பட்டு 50 ஆம் ஆண்டு தொடங்கிடவுள்ளது 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 6 -  ஆம் நாள் தொடங்கவுள்ள பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழா ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடி புத்தாக்க வழிமுறையில் பரந்து பட்ட பிரச்சார முறைகளைக் கைக்கொள்வது எனவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 6:


முன்மொழிவு: இ.ரெ. கிருஷ்ணமூர்த்தி


கல்வி அதிகாரமானது மாநில அரசின் அதிகார வரம்பிலிருந்து மத்திய அரசும், மாநில அரசும் கலந்து பேசி வளர்ச்சிகளை மேற்கொள்ள ஒத்திசைவுப் பட்டியலுக்கு 1976 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. அது முதல் 'கல்வி' குறித்த பெரும்பாலான முடிவுகளை மத்திய அரசே தன்னிச்சையாக மேற்கொண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சிக்கு வந்தோர் கல்வி அதிகாரத்தில் தன்னிச்சையாகச் செயல்படும் போக்கின் உச்சக் கட்டத்தில் உள்ளனர். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் கல்வி வளர்ச்சியினை மேற்கொள்ள அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகள்தான் பெரிதும் முக்கியத்துவம்; வாய்ந்தவை நடைமுறைப் பொருத் தப்பாடு உடையவை. உயர்கல்வித் துறையில் பல்வேறு வளர்ச்சிக்கான நடைமுறை மாற்றங்களைக் கொண்டு வந்த பல்கலைக் கழக மானிய ஆணையம் (University Grants Commission) எனும் தன்னாட்சி அமைப்பினை நீக்கி விட்டு இந்திய உயர்கல்வி மன்றம் (Higher Education Council of India) மூலம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில், மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் கொண்டு வர மத்தியில் ஆள்பவர் முடிவு செய்து அதற்கான மசோதாவினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். புதிதாக அமைந்திடவுள்ள மன்றத்தின் அதிகார நிலையில் கல்வித்துறை சாராத, கல்வி வளர்ச்சி பற்றிய புரிதல் இல்லாதோர் பெரும்பாலோர் அங்கம் வகித்திடவும் வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாநில அரசின் ஆளுகையில் தன்னாட்சி அதிகாரத்துடன் ஆண்டு பலவாகச் செயல்பட்டு வரும் சீரிய பல்கலைக் கழகங்களும் இனிமேல் இந்த புதிய மன்றத்தின் அனுமதி அங்கீகாரம் பெற்றுத்தான் செயல்படும் நிலை ஏற்படும்.  உயர் கல்வித் தளத்தில் மாபெரும் பின்னடைவினை உருவாக்கக் கூடிய அதிகாரம் படைத்த இந்திய உயர்கல்விமன்றம் அமைக்கப்படுவதற்குப் பகுத்தறிவு ஆசிரியரணி கடுமையான கண்டனத்தினைத் தெரிவிக்கிறது, இத்தகைய பிற்போக்குத்தனமான உயர் கல்விக் கொள்கை முடிவினைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசினை இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7:


முன்மொழிவு: புள்ளை. வீரமணி


மதச் சார்பின்மைக்குப் புறம்பாக பள்ளிக் கூடங்களில் இந்து மதக் கருத்தினை வலியுறுத்திடும் காயத்ரி மந்திரத்தைச் சொல்ல வைக்கும் பழக்கத்தினைச் சில பள்ளிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக டில்லியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆளுகையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வி மேம்பாட்டுக் குழுவின் அறிவுரைப்படி இது கடைப்பிடிக்கப் படுவதாகக் கூறப் படுகிறது.

ஏற்கெனவே அரியானா பள்ளிக்கூடங்களில் காயத்ரி மந்திரம் ஒலித்திட அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி முதல்வர் ஆணையிட்டுள்ளது கவனத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்திடும் மதச் சார்பின்மைக்கு முற்றிலும் எதிரான போக்கினைப் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நேரடி அதிகாரத்தின்கீழ் உள்ள பள்ளிக்கூடங்களில் கடைப் பிடிக்கப்பட்டு வருவதை உடனே திரும்பப் பெற்றிட வேண்டும் என இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 8:


முன்மொழிவு: கோவி. கோபால்


தமிழ்நாடு மாநில கல்வி உயர்மட்டக் குழுவின் முடிவின்படி 11 ஆம் வகுப்பிற்கு அரசு பொதுத் தேர்வு எனவும், உயர்கல்விக்கு 11, 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டு, அதன்படி பாடப்புத்தகங்களைத் தயாரித்து, ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்து கற்றல் பணி துவங்கிய பிறகு 11 ஆம் வகுப்பு மதிப்பெண்கள், உயர்கல்வி பயில கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது என அரசு உயர்நிலைக் குழுவை ஆலோசிக்காது. அரசு தன்னிச்சையாக அறிவித்து உள்ளது. இந்த உத்தரவினைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறுவதோடு 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் பழைய அறிவிப்பினை செயல்படுத்திட வேண்டுமென இந்தக் கூட்டம் கொள்கிறது.

தீர்மானம் 9:


முன்மொழிவு: லால்குடி வீ. சுப்பிரமணியன்


மாணவர்கள் குறைந்த எண்ணிக்கை உடைய பள்ளிக்கூடங்கள் இணைக்கப்படும் என்பதாக பல பள்ளிக் கூடங்களை மூடி வரும் அரசின் முடிவினைக் கைவிட்டு, பள்ளிகளை மூடாது மாணவர்களைப் பள்ளியில் சேர்த்திடும் வழிமுறைகளை ஆராய வேண்டும் எனவும் தமிழக அரசினை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 10:


முன்மொழிவு: தஞ்சை மலர்க்கொடி


மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 5 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு என வலியுறுத்திடும். ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில்வதை மறுக்கின்ற வகையில் பல்வேறு செயல் விதிகளை உள்ளடக்கியதுமான "தேசிய மருத்துவ ஆணைய மசோதா - 2017" நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளதை மத்திய அரசு திரும்பப்பெறுமாறு என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 11:


முன்மொழிவு: குடந்தை ஆனந்தவள்ளி


மகாராட்டிரா மாநிலத்தில் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்ட பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரை கொன்ற குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் தாமதம் காட்டியதால் தொடர்ந்து கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் என பல பகுத்தறிவாளர்களும் ஒரே வித வழிமுறையில் கொல்லப்பட்டனர். இந்த கொலைகள் குறித்த விசாரணையின் மூலம் மேலும் சில பகுத்தறிவாளர்கள் கொலை செய்யப்பட உள்ளதாகவும், அந்தப்பட்டியலில் குறிப்பாக கருநாடக மாநிலப் பேராசிரியர் கே.எஸ். பகவான் அவர்களும், தமிழகத்தில் உள்ள சில எழுத்தாளர்களும் உள்ளனர் என்பதுவும் தெரியவந்துள்ளது. தமிழக அரசும், அண்டை மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்தகைய நிகழ்வுகள் தொடராமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 12:


முன்மொழிவு: முருகானந்தம்


அண்மையில் 'நக்கீரன்' ஏட்டின் ஆசிரியரை - அவரது பத்திரிகைப் பணியினைத் தடுக்கும் விதமாக, சற்றும் பொருத்தமில்லாத சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப் பட்டதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. நக்கீரன் ஏட்டின் ஆசிரியர் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124-இன் கீழ் கைது செய்யப்பட்டது பொருத்த மில்லாதது எனக்கூறி அவரை விடுதலை செய்திட உத்தரவிட்ட நீதிமன்றத்தை இக்கூட்டம் பாரட்டுகிறது. பத்திரிகை சுதந்திரத்தைப் பறித்திட்ட நிகழ்ச்சியினைக் கண்டிக்கும் விதமாகவும் இத்தகைய நிகழ்வுகள் தொடரக் கூடாது என வலியுறுத்தும் விதமாக அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும் ஒருமுகப்படுத்தி அரசுக்குக் கடுமை யான கண்டனத்தை தெரிவித்த 'விடுதலை' ஏட்டின் ஆசிரியர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்குப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் பாராட்டுதலையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 13:


முன்மொழிவு: இரு. கிருஷ்ணன்


இயக்கப் பிரச்சார அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க பணியான, இயக்க ஏடுகளான 'விடுதலை', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' (The Modern Rationalist) இதழ்களுக்கு சந்தா சேர்ப்பதில் தனிப்பட்ட அக்கறை காட்டுமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மேலும் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தற்பொழுது முனைப்பாக மேற்கொண்டுவரும் தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஏட்டிற்குச் சந்தா சேர்த்திடும் சிறப்புப் பணியினை பொறுப்பாளர்கள் செவ்வனே செய்து தங்களது பகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட சந்தா அளவினை விரைவில் நிறைவேற்றிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.



-  விடுதலை நாளேடு, 20.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக