செவ்வாய், 23 ஜனவரி, 2018

நாளேடுகள் பார்வையில் உலக நாத்திகர் மாநாடு

ஜூனியர் விகடன்' பார்வையில்




‘நக்கீரன்'  பார்வையில்


 




- விடுதலை நாளேடு, 13.1.18

திங்கள், 22 ஜனவரி, 2018

உலக நாத்திகர் மாநாட்டு-3

ஆயுதத்தால் வெல்லப்படுவதல்ல உலகம்

நாத்திகம் - அதன் மனிதநேயமே நம்பிக்கை ஒளி!

தமிழர் தலைவர் தலைமை உரை

- தொகுப்பு: மின்சாரம்



உலகை வெல்லுவது ஆயுதம் அல்ல - நாத்திகம் அதன் மனிதநேயமே மானுடத்திற்கு நம்பிக்கை ஒளி என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

திருச்சி பெரியார் மாளிகை வளாகத்தில் நேற்று (6.1.2018) மாலை நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் அவர் தெரிவித்த கருத்தின் சுருக்கம் வருமாறு:

உலகத்தின் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் இந்த உலக நாத்திகர் மாநாட்டுக்கு வருகை தந்துள்ளீர்கள். அதற்காக நாங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாம் பேசும் மொழிகள், தமிழ், ஆங்கிலம், பஞ்சாபி, இந்தி, மராட்டிய மொழிகளாக இருக்கலாம் - ஆனால் நம்மை இணைப்பது மனிதநேயம், மனித சமத்துவம் என்னும் பொது மொழி. இவற்றிற்காக நாம்  கொண்டிருக்கும் மகத்தான தத்துவம் தான் நாத்திகம்.

நமது அன்பு செல்வம் கவிஞர் கனிமொழி சில அருமை யான கேள்விகளை முன் வைத்தார். ஒக்கிப் புயலால் மீனவர்கள் நூற்றுக்கணக்கில் மரணம் அடைந்தார்களே - அவர்களை இழந்து குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு ஆளானார்களே அவர்களை எந்தக் கடவுள் காப்பாற்றியது என்ற நியாயமான கேள்விகளைக் கேட்டார்.

இதற்குத் தந்தை பெரியார் கேட்ட இன்னொரு கேள்வி யில் பதில் இருக்கிறது.  தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள் நம்மை எப்படி காப்பாற்றுவார் என்ற கேள்வியை முன் வைத்தார் தந்தை பெரியார்.

கோயிலில் திருட்டிலிருந்து சிலைகளைக் காப்பாற்றுவ தற்கே காவல் துறையில் தனிப் பிரிவே இருக்கிறது.

எல்லாம் கடவுள் செயல், அவனின்றி ஓரணுவும் அசையாது என்கிற - பக்தனைப் பார்த்து தந்தை பெரியார் கேட்டார்; "நீ வீட்டை விட்டு  வெளியே வரும்போது, கதவைப் பூட்டினாயா? பூட்டாமல் வந்தாயா? அவனன்றி ஓரணுவும் அசையாது என்றால் திருட்டுக்கு யார் பொறுப்பு? கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் தானே வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்தாய்?" என்று தந்தை பெரியார் கேட்பார். எந்தப் பக்தன் பதில் சொன்னான்?

மக்கள் தொகை கட்டுப்பாடு - ஃபேமிலி பிளானிங் என்பதற்காக மருத்துவத்துறை இருக்கிறது.

கடவுள் தான் பிள்ளைகளைக் கொடுப்பான் என்றால் அதனைத் தடுப்பது இந்தத் துறை தானே! மருத்துவத் துறை என்பது ஆன்டி காட் - தீயணைப்புத் துறை என்பதும் அக்னி பகவானுக்கு எதிரிதானே - அதுவும் ஆன்டிகாட் தானே! தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பேசும்போது கடவுளை எதிர்க்கும் நாத்திகர்களே என்று விளித்துதான், தன் பேச்சைத் தொடங்கினார் பெரியார்.

கடவுள் எதிர்ப்பு என்பது வெறும் மூடநம்பிக்கை எதிர்ப்பு மட்டுமல்ல; அந்தக் கடவுள்தான் ஜாதி - தீண்டாமைக்குக் காரணம், பெண்ணடிமைக்குக் காரணம். இவற்றை ஒழிக்க விரும்புவோர் யாராகவிருந்தாலும் அவற்றிற்கு மூல காரணமான கடவுளை - அதன் மீதான நம்பிக்கையை எதிர்த்து தானே ஆக வேண்டும்?

இந்த மாநாட்டைப்பற்றிக்கூட சொல்லுவார்கள், எழுதுவார்கள். பார்த்தீர்களா? பார்த்தீர்களா - இந்து மதக் கடவுளைப் பற்றி தானே பேசினார்கள், முசுலிம்களைப் பற்றி கிறித்தவர்களைப்பற்றிப் பேசினார்களா என்று கேட்பார்கள்.

நூற்றுக்கு 80 சதவீதத்துக்கு மேலிருக்கிற மக்களைப் பாதிக்கும் மதத்தைப்பற்றியும், கடவுளைப் பற்றியும் தானே முன்னுரிமை கொடுத்துப் பேச முடியும்?

லண்டனிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் பிரதி நிதிகள் இந்த மாநாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களைக் கேளுங்கள், நீங்கள் எந்த மதத்தைப் பற்றி, கடவுளைப் பற்றி விமர்சிப்பீர்கள் என்று கேட்டால் கட்டாயம் கிறித்தவ மதத்தை  பற்றிதான் விமர்சிப்போம் என்பர்; "நீங்கள் ஏன் இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதில்லை" என்று அவர்கள் நாட்டில் யாரும் கேட்க மாட்டார்கள்.

நாத்திகவாதிகளாகிய நமக்கு ஒழுக்கம் முக்கியம். மத நம்பிக்கைவாதிக்கு அது முக்கியமல்ல. எந்தக் குற்றத்தையும் செய்து விட்டு எளிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம். குற்றம் செய்தவன் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுதான் நாத்திகவாதியின் கருத்து.

 

இதுதான் பக்தி வளர்க்கும் ஒழுக்கம்!

இன்றைக்கு மாலையில் வெளி வந்துள்ள ஓர் ஏட்டில் ஒரு செய்தி. திருமங்கை ஆழ்வார் என்ற பக்தனைப்பற்றி  - சோழப் பேரரசின் தளபதியாக இருந்த திருமங்கை, சிறீ ரெங்கநாதன் கோயிலுக்கு மதில் சுவர் எழுப்பிட வழிப்பறியில்  ஈடுபட்டனாம். இது அய்பிசி 420படி குற்றம் அல்லவா? ரெங்கநாதன் கடவுள் என்ன செய்தாராம்? அவன் திருட்டைக் கண்டுபிடிக்க மாறுவேடம் போட்டுச் சென்றபோது அந்தத் ரெங்கநாதக் கடவுளிடமே வழிப்பறி செய்தானாம். அவன் பக்தியை மெச்சி அவன் காதில் 'ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தை ஓதினானாம். அன்றுமுதல் திருமங்கைக்கு ஆழ்வார் பட்டம். திருட்டுப் பயலுக்குப் பெயர் திருமங்கை ஆழ்வாராம் (பலத்த சிரிப்பு, கைதட்டல்). இதுதான் பக்தி வளர்க்கும் ஒழுக்கம்.

(திருச்சிப் பொதுக் கூட்டத்தில்

தமிழர் தலைவர் கி. வீரமணி 6.1.2018)

கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாதவர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். மும்பையில் நரேந்திர தபோல்கர், கோவிந்தபன்சாரே, கருநாடகத்தில் கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய பகுத்தறிவாளர்களை இந்துத்துவ வெறியர்கள் சுட்டுக் கொல்லவில்லையா? தமிழ்நாட்டில் கோவையில் பாரூக் என்பவரை மதவெறியர்கள் படுகொலை செய்யவில்லையா? என் உயிருக்கே அய்ந்து முறை குறி வைத்தார்களே!

மம்சாபுரத்தில் - தம்மம்பட்டியில் - சென்னையில் என்று  குறி வைத்தனர். அதற்காக அஞ்சி ஒதுங்கி விடவில்லையே! தந்தை பெரியார் கொடுத்த அந்தக் கொள்கைச் சுடரை ஏந்திச் சென்று கொண்டுதான் உள்ளேன். நல்ல பொருளுக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும் என்றார் தந்தை பெரியார்.

நாத்திகமே மானுடத்தின் நம்பிக்கை என்பதுதான் நமது மானுடக் கொள்கை, ஆயுதத்தால் வெல்லப்படுவதல்ல உலகம். மனிதநேயமான நாத்திகக் கொள்கையே உலகை வெல்லும். மனித சமூகத்துக்கு, அமைதிக்கு அதுதான் தேவை.

மதங்களால் சிந்தப்பட்ட குருதியே அதிகம்

எந்த கடவுள் மக்களைக் காப்பாற்றுகிறது?

கவிஞர் கனிமொழி எம்.பி. கர்ச்சனை

திருச்சியில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டுக்கு உலகின் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வந்துள்ளீர்கள்; மகிழ்ச்சியாக இருக்கிறது.

உலகில் பல மதங்கள் இருக்கின்றன. அவை மனிதனைப் பிரிக்கின்றன. ஆனால் நாத்திகம்தான் மனிதர்களை இணைக்கிறது. மதநம்பிக்கைவாதிகள் கடவுளிடம் சென்று, கடவுளே எனக்கு இதைக் கொடு - அதைக் கொடு என்று கேட்கிறார்கள். ஆனால், ஒரு பகுத்தறிவுவாதியோ அறிவைத் தேடிச் செல்லுகின்றான்.

திருச்சியில் பெரியார் மாளிகைக்கு வரும் பொழுது எங்கள் தாத்தா வீட்டுக்கு வந்த உணர்வைப் பெறுகிறோம். விடை பெறும்போது உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு செல்லும் உணர்வைப் பெறுகிறோம்.

ஆசிரியர் அவர்கள் எனது ஆசான் - குரு என்று கூடச் சொல்லலாம். இப்படிப்பட்ட ஒரு மாநாட்டில் பங்கேற்க எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பைப் பெருமையாகக் கருதுகிறேன். நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து திராவிடர் கழகத்தின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் அறிஞர் பெரு மக்களுக்கெல்லாம் என் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியாரென்றால் வெறும் கடவுள் மறுப்பாளர் என்று மட்டும் பார்க்கிறார்கள். அவர் ஏன் கடவுளை மறுக்கிறார் என்பதுதான் முக்கியம்.

மதமும், கடவுளும் மனிதர்களுக்குள் பேதத்தை விதைக்கிறது - கலகங்களை உருவாக்குகிறது. பெண்ணடி¬மையை வலியுறுத்துகிறது. அடக்கு முறைக்கு ஆயுதமாக இருக்கிறது.

அங்கே தான் பெரியார் கடவுள் மறுப்பாளர், மத எதிர்ப்பாளராக வெடிக்கிறார்.

மனிதனுக்கு பகுத்தறிவு தேவை - சுயமரியாதை தேவை, மனிதநேயம் தான் மக்களை இணைக்கும் என்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?

ஆண் - பெண் சமத்துவத்துக்கு உறுதி கூறும் ஒரே ஒரு மதம் உலகில் உண்டா? பெண்கள் உரிமைக்குத் தடையாக இருப்பது - தாய்மைக்குக் காரணமாக இருக்கக் கூடியதையே தூக்கி எறி என்று சொன்ன ஒரே தலைவர் உலகில் தந்தை பெரியார்தான்.

கீதையைப் பற்றி உயர்வாக சொல்லுவார்கள். உண்மையைச் சொல்லப் போனால் ஜாதியை உண்டாக்கியதும், அதற்கு நியாயம் கற்பிப்பதும் கீதைதான்.

உலக யுத்தங்களை விட மனித ரத்தம் சிந்தப்பட்டது மதங்களால் தான்  - மதச்சண்டைகளால்தானே!

பெண்ணுரிமைக்கு எதிராக இருப்பவர்கள் ஆண்களும், கடவுள்களும்தான்.

மனிதனுக்கு எவ்வளவு துயரங்கள், இயற்கைச் சீற்றம்  - எவ்வளவு மனிதர்கள் சாகிறார்கள் - எந்தக் கடவுள் காப்பாற்றியது? கடவுள் மக்களைக் காப்பாற்ற இருக்கிறதா - தண்டனை கொடுக்க இருக்கிறதா?

திரைப் படத்தில்தான் இயக்குநர் கதாநாயகனையும், வில்லனையும் உருவாக்குகிறார் என்றால் அந்த வேலையை கடவுள் ஏன் செய்ய வேண்டும்?

வறுமையையும், நோயையும் கடவுள் ஏன் கொடுக்க வேண்டும்? தாய்த் தந்தைமார்களின் தவறுகளால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக ஒரு குழந்தை ஏன் பிறக்க வேண்டும் -இதற்கெல்லாம் கடவுள் பொறுப்பாளியில்லையா?

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் சில கமிட்டிகளில் நியமனம் செய்வார்கள். வெங்கையா நாயுடு தலைமையிலான உள்துறைக் கமிட்டியில் நானிருந்தேன். திருப்பதிக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது, நானும் சென்றேன். நீண்ட கியூவில் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் நின்றார்கள். பல மணி நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை.

நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால் எங்களுக்கெல்லாம் சிறப்புத் தரிசனமாம். என்னோடு வந்திருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். "உங்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை இல்லை. இங்கே பார்த்தீர்களா இவ்வளவுப் பெரிய கூட்டத்தை" என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம் சொன்னேன். "கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்றால் தரிசனத்தில்கூட ஏனிந்த ஏற்றத் தாழ்வு என்று கேட்டு விட்டு - அதோ ஏழுமலையானுக்கு பெரிய உண்டியல் - பக்தர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள். பக்கத்தில் ஏன் ஸ்டன் துப்பாக்கியோடு போலீஸ்காரர் ஒருவர் உண்டியலுக்குப் பாதுகாப்பு? ஏழுமலையானுக்கு சக்தியில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது" என்று கேட்டேன்.

நாம் இத்தகைய மாநாடுகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள்  அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் கையை இன்னொருவர் பிடித்து, இணைத்துக் கொண்டே பணியாற்றிட வேண்டும்.

ஆணவக் கொலைகளும், ஜாதி மத அடிப்படை வாதங்களும் தகர்க்கப்பட மனிதநேயத்தையும், பகுத்தறிவையும் மக்களிடம் விதைத்துக் கொண்டே இருப்போம் - இருக்க வேண்டும் என்றார் கவிஞர் கனிமொழி.

மதவாதத்தைத் தடுப்பதுதான் பொருள் முதல் வாதம்

மனிதநேயம் என்பதுதான் நாத்திகம் - அறிவியல்வாதம்

எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் சிந்தனை சீற்றம்

உலகின் 18 நாடுகளிலிருந்து 500க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க உலக நாத்திகர் மாநாட்டில் எனக்கும் ஒரு வாய்ப்பளித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு என்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் மனிதநேயமும், அமைதியும், சகோதரத்துவமும் காப்பாற்றப்பட நாத்திகக் கொள்கையை உயர்த்திப் பிடிக்க இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.

பகுத்தறிவுப் பகலவனாகிய தந்தை பெரியார் அவர்கள் - கடவுள் மறுப்பாளரான முழு நாத்திகரான தந்தை பெரியார்  அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார்கள். கடைசி வரை அவர் ஜீரண உறுப்புகள் சரியாக இயங்கின. குரலில் கம்பீரம் இருந்தது. கடைசி வரை பிரியாணி சாப்பிடும் அளவுக்கு செரிமானப் பிரச்சினைகள் ஏதுமில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள ஆத்திகப் பெரு மக்களை நாம் பார்க்கிறோம். பெரியார் அளவுக்கு நீண்ட காலம் அவர்களால் வாழ முடிவதில்லை.

சர்வ சக்தி கடவுள் என்கிறார்கள் அந்தக் கடவுளால் தந்தை பெரியாரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

 





 

- விடுதலை நாளேடு,7.1.18

உலக நாத்திகர் மாநாடு-2



மதங்கள் மக்களைப் பிரிக்கின்றன; நாத்திகம் - பகுத்தறிவுதான் இணைக்கின்றன!

உலக நாத்திகர் மாநாடு 'ஆன்மிகம் - கடவுள் - மதம்' என்பவை புரட்டுகள் என்பதை அறிவிப்பதாகும்!

தமிழர் தலைவர் பேட்டி

திருச்சி,ஜன.6மதங்கள் மக்களைப் பிரிக்கின்றன; நாத்திகம், பகுத்தறிவுதான் மக்களை இணைக்கின்றன; உலக நாத்திகர் மாநாடு 'ஆன்மிகம் - கடவுள் - மதம்' என்பவை புரட்டுகள் என்பதை அறிவிப்பதாகும்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திருச்சியில் நேற்று  (5.1.2018) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

500 பேர்களுக்குமேல்...

உலக நாத்திகர் மாநாட்டினை திராவிடர் கழகமும், ஆந்திராவில் இருக்கக்கூடிய கோரா நாத்திகர் மய்யமும் சேர்ந்து ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவ துடன், சர்வதேச ரீதியாக உலகத்தின் பல பகுதிகளில் அப்படி நடைபெறும்பொழுது உலக பகுத்தறிவாளர் அமைப்பாக இருக்கக்கூடிய - International Ethical Humanist Association. அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள், அய்ரோப்பிய பொறுப் பாளர்கள், அதேபோல, இங்கிலாந்தில் இருக்கக் கூடியவர்கள், இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கக் கூடியவர்கள் - அத்துணைப் பேரும் 500 பிரதிநிதிகளுக்குமேல் வந்திருக் கிறார்கள். மூன்று நாள்களுக்கு கருத்தரங்கம் நடக்கவிருக்கிறது.

மதங்கள் மக்களை பிரிக்கின்றன

நாத்திகம் இணைக்கிறது

மதங்கள் மக்களைப் பிரித்திருக்கின்றன; கடவுள்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய சச்சரவுகளையும், கலவரங் களையும், இடிபாடுகளையும், இடிப்புகளையும் உருவாக் குகின்றன.

இணைப்புகளை உருவாக்குபவை நாத்திகம்தான் - பகுத்தறிவுதான் என்பதற்காக Atheism is the best hope of humanity - 
- மனித குலத்தினுடைய முழு நம்பிக்கை என்பது இருக்கிறதே, நாத்திகத்தின் மூலம் தான் பரவ முடியும். நாத்திகம் ஒரு நன்னெறி. நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்பு மட்டுமல்ல; ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டு, அறிவியல் சிந்தனையை உருவாக்குவதுதான் நாத்திகம் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் மூன்று நாள்கள் - உலகத்தின் பல பகுதிகளில் இருக்கக்கூடியவர்களும், இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கக் கூடியவர்களும் வந்துள்ளனர்.

அந்த வகையில், அய்.எச்.இ.யூ. அமைப்பைச் சார்ந்த அம்மையார் வந்திருக்கிறார். நம்முடைய மேனாள் மத்திய அமைச்சரும், மிகப்பெரிய நெருப்பாற்றில் நீந்தி வெளியே வந்தவருமான அருமை சகோதரர் இராசா அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.

தொடக்கவிழா நடைபெறவிருக்கிறது. மூன்று நாள்கள் இந்த மாநாடு நடைபெறவிருக்கின்றன. இரண்டாவது நாள்  முற்பகுதி நிகழ்வுகள் தஞ்சையிலுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலும்,  மாலையில் பொது மக்களுக்கான பகுதி திருச்சி புத்தூரில் பெரியார் மாளிகையிலும், அதற்கடுத்த நாள் இதே இடத்தில் தமிழர் திருநாள் திராவிடர் திருநாளாகிய பொங்கல் விழாவையும், தமிழ்ப் புத்தாண்டையும் வெளி நாட்டுப் பிரதிநிதிகளை வைத்துக் கொண்டாடக் கூடிய அளவிற்கு, இந்த மாநாடு முடிவடையவிருக்கிறது.

எனவே, மூன்று நாள்கள் - நிறைய கருத்தரங்கங்கள் - ஆய்வுக் கட்டுரைகளும் நிறைய படிக்கப்பட இருக்கின்றன.

மிகப்பெரிய அளவில், மதவாதம் தலைதூக்கக் கூடிய காலகட்டத்தில், நாத்திகர் மாநாட்டில் சிறந்த அளவிற்கு, பகுத்தறிவு கருத்துகளை, மனிதநேய கருத்துகளை, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு ஆகிய தத்துவங்களையெல்லாம் உலகளாவிய அளவிற்கு, பெரியா ருடைய கருத்துகள், பெரியார் உலகமயமாகியிருக்கிறார் என்பதைக் காட்டக்கூடிய வண்ணம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம்.

நாத்திகர் மாநாடு

அரசியல் உணர்வுகளுக்காக அல்ல!

செய்தியாளர்: ஆன்மிக அரசியல் என்று பரவலாகப் பேசப்படுகின்ற இந்தச் சூழலில், இந்த நாத்திகர் மாநாடு எத்தகைய  தாக்கத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தும்?

தமிழர் தலைவர்: ஆத்மா என்பதே பித்தலாட்டம்.  அதனுடைய தமிழ்ச்சொல் விளக்கம் ஆன்மா. எனவே, இல்லாத ஒன்றை நம்புவது என்பது, எவ்வளவு பெரிய புரட்டு என்பது தானாகவே தெரியும். இந்த நாத்திகர் மாநாடு  அரசியல் உணர்வுகளுக்காக நடைபெறவில்லை. ஆனால், இதனுடைய தாக்கம் பல பேருக்குப் புரிய வைக்கக் கூடிய உணர்வை உருவாக்கும்.

ஏனென்றால், ஆத்மா என்பது ஒரு கூடு விட்டு  கூடு பாயும் என்று சொல்வதைப்போல, பலர் கூடு பாய்ந்து கொண் டிருக்கிறார்கள்; அவர்களை அடையாளம் காட்டும்.

எனவேதான், தத்துவ ரீதியான ஒரு மாறுபட்ட கருத்துதான் கடவுளை மற; மனிதனை நினை என்பது. ஜாதியை ஒழி - தீண்டாமையை அழி - மூடநம்பிக்கைக்கு இடம் கொடுக்காதே என்ற கருத்துகளை வலியுறுத்தக்கூடிய மாநாடுதான் இந்த உலக நாத்திகர் மாநாடு.

எனவே, இது அரசியல் பார்வையோடு செய்யப்படுவதல்ல; தத்துவ ரீதியாகவே, ஆன்மா, கடவுள், மதம் போன்றவை போலித்தனங்கள், புரட்டு என்பதை காட்டுவதற்கான, அறிவிப்பதற்கான மாநாடாகும் இம்மாநாடு.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

- விடுதலை நாளேடு, 6.1.18

திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு -1





திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு  கோலாகலமாக தொடங்கியது

பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் பெருந்திரளாக பங்கேற்பு



திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்றவர்கள்: பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் ஆலோசனைக்குழு இயக்குநர் எலிசபெத் ஓ’காசே,  லண்டன் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைமை செயல் அலுவலர் கேரே மெக்கலாண்ட், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,  மேனாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மற்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராசா, பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பொறுப்பாளர் (அமெரிக்கா) டாக்டர் இலக்குவன்தமிழ், தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலை பல்கலைக்கழகம்) இணைவேந்தர் ச.ராசரத்தினம், விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் டாக்டர் கோ.விஜயம், மகாராட்டிரா அந்தராஷ்ரதா நிர்மூலன் சமிதி அமைப்பின் செயல்தலைவர் அவினாஷ் பாட்டில், பன்னாட்டு நாத்திகர் கூட்டமைப்பின் (அமெரிக்கா) ரஸ்டம் சிங், கழகப் பொதுச் செயலாளர் 
வீ. அன்புராஜ், வெளியுறவு செயலாளர் வீ. குமரேசன் உள்ளனர்.

திருச்சி, ஜன.5 நாத்திக, மனிதநேய சகோதரத்துவ சிந்தனையாளர்கள் பன்னாட்டளவிலிருந்து வருகை தந்து சிறப்பிக்கின்ற மாநாடாக உலக நாத்திகர் மாநாடு  இன்று (5.1.2018) காலை திருச்சியில் தொடங்கியது.

திருச்சி கே.சாத்தனூர் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் என்.எஸ்.கே. அரங்கத்தில் 5.1.2018 அன்று காலை 9 மணியளவில் மாநாட்டுக்கு வருகைதருவோருக்கான பதிவுடன் மாநாடு தொடங்கியது.

உலக நாத்திகர் மாநாடு-2018 இன்று  தொடங்கி (ஜனவரி 5,6,7) மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.

2011 ஆம் ஆண்டில் இதே ஜனவரி 5,6,7 ஆகிய மூன்று நாள்களில் உலக நாத்திகர்கள் மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

இன்று நடைபெறுகின்ற இம்மாநாட்டில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் நாத்திக அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். 2018ஆம் ஆண்டின் உலக நாத்திகர் மாநாட்டின் நோக்கம் மனிதநேயமே. இந்த உலக நாத்திகர் மாநாடு மனித நேயத்தை உறுதிப்படுத்தி, சிந்திக்கவும், செயல்படவும் உள்ள உரிமைகளை வலியுறுத்துகிறது.

புத்தக காட்சி திறப்பு

பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின்  (அய்.இ.எச்.யூ)ஆலோசனைக்குழு இயக்குநர் எலிசபெத் ஓ’காசே புத்தக காட்சியைத்  திறந்துவைத்தார்.

தமிழர் தலைவர் தலைமையில்

மாநாடு தொடக்கம்



திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் (அமெரிக்கா) டாக்டர் லட்சுமண்தமிழ் தொடக்க உரையாற்றினார்.

ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயவாடா நாத்திக மய்யத்தின் செயல் இயக்குநர் டாக்டர் கோ.விஜயம் மாநாட்டின் நோக்க உரையாற்றினார்.

மாநாட்டில் இந்தியா முழுவதுமிருந்தும், பன்னாட்டளவி லிருந்தும் பேராளர்கள் ஏராளமான அளவில் பங்கேற்றனர்.

அறிஞர் பெருமக்கள் பன்னாட்டளவிலிருந்து உலக நாத்திகர் மாநாட்டு மேடைக்கு குறிப்பிட்ட நேரத்தில் வருகை தந்தனர்.

பகுத்தறிவாளர்களின் படத் திறப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்துத்துவ வன்முறைகளுக்கு பலியான, பகுத்தறிவு, நாத்திகக் கருத்துகளை துணிவுடன் பேசியும், எழுதியும் வந்த அறிஞர்களின் நினைவைப் போற்றும் வகையில் டாக்டர் நரேந்திர தபோல்கர், தோழர் கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரின் படங்களை திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப்புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் திறந்துவைத்தார். மாநாட்டில் பங்கேற்ற அறிஞர் பெருமக்கள், பேராளர்கள் அனைவரும் எழுந்து நின்று மறைந்த பகுத்தறிவாளர்களுக்கு மரியாதை செலுத்தும்வண்ணம் முழக்கமிட்டு புரட்சிகர வணக்கம் செலுத்தினார்கள்.

புத்தகங்கள் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆங்கில நூல்களான Bhagavad Gita - Myth or Mirage 
(பகவத் கீதை கற்பனை அல்லது புரட்டு) மற்றும் March of Atheism (நாத்திகத்தை நோக்கிய நடைப்பயணம்) ஆகிய நூல்களுடன், பேராசிரியர் சுரேந்தரா அஜ்நாத் எழுதிய Compilation of ‘Old Testament of Indian Atheism’- 
இந்திய நாத்திக தொன்மையான கருத்துகளின் தொகுப்பு எனும் ஆங்கில நூல், வரியியல் வல்லுநர் ச.ராசரத்தினம் எழுதிய Essays on Matters which Matter (A Rationalist’s Perception)- முக்கியத்துவம் மிக்க கட்டுரைக் கோவை (ஒரு பகுத்தறிவாளரின் பார்வையில்) ஆங்கில நூல், தந்தை பெரியார் 1928, மற்றும் 1929ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட ஆங்கில ஏடு ரிவோல்ட் இதழ்களின் தொகுப்பு நூலாக Compilation of ‘Revolt’-Published by Periyar in 1928 &1929 ஆகிய நூல்கள்  உலக நாத்திகர் மாநாட்டில் வெளியிடப்பட்டன.

மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், அறிஞர் பெருமக்கள்

பன்னாட்டு மனிதநேயம் மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் லண்டன் தலைமை செயல் அலுவலர் கேரே மெக்கலாண்ட், மேனாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மற்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராசா,  மகாராட்டிரா அந்தராஷ்ரதா நிர்மூலன் சமிதி அமைப்பின் செயல்தலைவர் அவினாஷ் பாட்டில், பன்னாட்டு நாத்திகர் கூட்டமைப்பின் சார்பில் (அமெரிக்கா) ரஸ்டம் சிங், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன(நிகர்நிலை பல்கலைக்கழகம்) இணைவேந்தர் ச.ராசரத்தினம் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அறிஞர் பெருமக்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவுப் பரிசு அளித்து சிறப்பு செய்தார்.

பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் வா.நேரு நன்றி கூறினார்.

பெரியார் உலகமயம்



உலக நாத்திகர் மாநாட்டில் டாக்டர் நரேந்திர தபோல்கர், தோழர் கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரின் படங்களை திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் திறந்து வைத்தார்


திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்னெடுத்து தந்தைபெரியார் கொள்கைகளை உலகமயமாக்கும் பணிகளின் வெற்றிப் படிக்கட்டுகளாக   பன்னாட்டளவில் பல்வேறு நாடுகளில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. உலகெங்கும் தந்தை பெரியார் கொள்கைகள் பரப்புகின்ற பணிகள் தொய்வின்றி நடந்துவருகின்றன. அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெரியாரியம் பரவி வருகிறது.

பன்னாட்டளவில் அறிஞர் பெருமக்கள், பகுத்தறிவு, சுயமரியாதை, மனித நேயம், மனித உரிமைகளைப் போற்றுவோர் உலகத் தலைவர் தந்தை பெரியார் கொள்கைகள், நாத்திகக் கருத்துகள் யாவும் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதை உலகுக்கு பறைசாற்றும் வண்ணம் உலக நாத்திகர் மாநாட்டில்  ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.


திருச்சியில் இன்று (5.1.2018) தொடங்கிய உலக நாத்திகர் மாநாட்டில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முன்னிலையில், பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் (அய்.இ.எச்.யூ.) ஆலோசனைக் குழு இயக்குநர் எலிசபெத் ஓகாசே புத்தகக் காட்சியை திறந்து வைத்தார். உடன் மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா, கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் முக்கிய பிரமுகர்கள்.

படுகொலை செய்யப்பட்ட நாத்திகர்கள் தோழர் கோவிந்த் பன்சாரே, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, டாக்டர் நரேந்திர தபோல்கர் ஆகியோரின் படங்களை உலக நாத்திகர் மாநாட்டில்  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்தபொழுது திரண்டிருந்த அறிஞர் பெருமக்கள் எழுந்து நின்று புரட்சிகர வணக்கம் செலுத்தினர் (திருச்சி, 5.1.2018)

- விடுதலை நாளேடு, 5.1.18

பெரியார் வாழ்க! நாத்திகம் வாழ்க! இந்தி, பஞ்சாபி, தெலுங்கு, மலையாளம், ஒடிசா மொழிகளில் முழக்கம்!



7.1.2018 உலக நாத்திகர் மாநாட்டின் மூன்றாம் நாள் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் 190 அடி உயரத் தந்தை பெரியார் சிலை, நூலகம், சிறுவர் பூங்கா, உணவு மய்யம் அமையு மிடத்தில் கேட்ட ‘பெரியார் வாழ்க! நாத்திகம் வாழ்க!' என்னும் முழக்கம் - எழுப் பப்பட்ட மொழிகள் தமி ழல்லாத இந்தி, பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, ஒடிசா, மலையாளமாக இருந்த போதிலும் நாத்திக உலகம் ஒன்றிணைந்து இருப்பதை அடையாளம் காட்டியது. இந்த முழக்கம் கேட்ட வேளை கூடக் காலை 7 மணி. அதுவும் மார்கழிப்  பனி குளிர் நிறைந்த காலை வேளை. ஏறக்குறைய மாநாட்டுக்குப் பேராளர்கள் எல்லோருமே வந்து சேர்ந்து விட்டனர். அவ்வாறு வந்து சேர்வதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்த திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பாராட்டுக்குரியவர்.

இதைவிட அந்தக் காலை வேளையில் தமிழர் தலைவர் ஆசிரியர் குறித்த நேரத்தில் வந்ததோடு, கரடுமுரடான அந்தக் கட்டாந்தரையில் கால் பதித்துப் பெரியார் சிலை அமையும் இடத்திற்குச் சென்று பேராளர்களுக்குக் தந்தை பெரியார் சிலை அமைக்கும் இடத்தைக் காட்டியதோடு, பொறியாளர் பேராசிரியர் டாக்டர் சுந்தராஜூலுவை அழைத்துச் சிலையின் உயரம், தோற்றம், அமைப்பு ஆகியவற்றை விளக்கிச் சொல்லும்படி கேட்டுக் கொள்ள அவர் வரைபடத்தை வைத்து விளக்கியபோது ஆர்வத்துடன் கேட்டவர்கள், அதிலும் குறிப்பாக இந்தியாவின் பிற பகுதியிலிருந்தும், அயல் மண்ணில் இருந்து வந்தவர்களும் வியப்பில் ஆழ்ந்ததுடன் ஆசிரியரின் அரும்பெரும் முயற்சியையும், அதற்காகத் திட்டம் உருவாக் கியதையும் வாய்விட்டுப் பாராட்டியதுடன் மிகவும் உணர்ச்சிப் பெருக்கில் அவர்களாகவே ‘தந்தை பெரியார் வாழ்க!' நாத்திகம் வாழ்க' என்று பல மொழிகளில் உரத்த குரலில் முழங்கவும் செய்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் தந்தை பெரியார் சிலை அமையவிருந்த இடத்திலிருந்த மாபெரும் பள்ளத்து அடித்தளத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். வீரமணி ஜி! வீரமணி ஜி! என்று அவருடன் நின்று படம் எடுக்கக் காட்டிய ஆர்வம் பெருமைக்குரியது.

அதன்பின் பன்னாட்டுப் பேராளர்கள் பன்னாட்டு மனிதநேய ஒன்றிய முதன்மைச் செயல் அலுவலர் கேரேமெக்கலாண்ட், ஆலோசனை இயக்குநர் எலிசபெத் ஓ'காசே, மகாராஷ்டிரா அந்தராஷ்டிரதா நிர்மூலன் சமிதியின் செயல் தலைவர் அவினாஷ் பாட்டீல் ஆகியோர் பல்வேறு மொழிகளில் கொள்கை முழக்கமிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண் டனர். தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி கழகக் கொடியை உயர்த்திப்பிடித்து அசைக்க பெரியார் உலகத்திடலில் 190அடி உயரத்தில் அமையவுள்ள பெரியார் சிலை நினைவாக 190 மரக்கன்றுகளை ஆர்வத்துடன் நட்டனர்.

மாநாட்டின் நிறைவு விழாவிற்கு முன் 7.1.2018இல் நடை பெற்ற மூன்றாம் நாள் ஆய்வு அமர்வினை ஒடிசா பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தானே சுவர்சாகுவின் தலைமையில், விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் விகாஷ் கோரா நடுவராக இருந்து அமர்வை நடத்தியபோது, பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் "கல்வியில் திறனாய்வுச் சிந்தனையும், தடையற்ற தேடலும்" எனும் தலைப்பில் ஆய்வு உரையும், மும்பையிலிருந்து வருகை புரிந்த கல்வியாளர் சந்திரம்மா மஜூம்தார், "ஆத்திகத்திலிருந்து நாத்திகத்திற்கு" எனும் தலைப்பிலும், திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் "பெரியாரின் பகுத்தறிவாளர் மக்கள் இயக்கம்" எனும் தலைப்பிலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அடித்தள மக்கள் குறித்த ஆய்வாளர் ஒய். சீனிவாசராவ் "பெரியாரின் பொருத்தப்பாடு" எனும் தலைப்பிலும் கருத்துரைகளை வழங்கினர்.

உலக நாத்திகர் மாநாடு சமத்துவப் பொங்கலுடன், பொங்கல் விழாவுடன் நிறைவு பெற்றது. பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்று திரண்டு கோலமிட்டு ஆங்காங்கே கரும்பை நட்டு வைத்து அந்த வளாகத்தையே அழகு மிளிர எழிலோங்கச் செய்தனர். பொங்கல் பானையைச் சுற்றிலும் பஞ்சாப், மராட்டியம் முதலிய பகுதிகளிலிருந்து வந்த பேராளர்கள் உடன் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் கரகாட்டம் நடந்து கொண்டிருந்தது.

அவ்வேளையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கட்டுரை யாளர்களையெல்லாம் மேடைக்கு அழைத்துச் சால்வை  அணி வித்துச் சிறப்புச் செய்தார்.

இந்த மாநாடு சிறக்கக் கழகத் தோழர்கள் நிதியளித் தும், விளம்பரம் செய்து ஒத் துழைத்த போதும் இரண்டு பேர் சிறப்பிக்கப்பட வேண்டிய வர்கள். ஒருவர் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ். திருச்சியிலும், தஞ்சை யிலும் மாநாட்டுக்குரிய ஏற்பாடுகளைக் கச்சிதமாகச் செய்து முடித்த வீ.அன்புராஜ் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்த வந்த பேராளர்களுக்குத் தக்க வகையில் தங்குமிடம், போக்குவரத்து குறைவில்லாமல் கவனித்துக் கொண்டார்.

அடுத்துக் கடந்த இரண்டு மாத காலமாகவே சென்னையில் மாநாட்டுப் பணிகளை, பேராளர்களைத் தொடர்பு கொள்வதை, தகவல் அளிப்பதைச் செம்மையாகச் செய்தமையால் பாராட்டுக்குரியவர் வீ.குமரேசன் ஆவார்.

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு யாரை எப்படிச் சிறப்பிக்க வேண்டும், பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்பது நன்கு தெரியும். ஆதலால் நிறைவுநாளன்று மாநாடு சிறக்க உழைத்த திரு. வீ.அன்புராஜ், திரு. வீ.குமரேசன் ஆகியோரை விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் கோ.விஜயம் சால்வை அணிவித்துப் பாராட்டி மகிழ்ந்தார்.

எல்லா நாடுகளையும் பார்க்கிறோம். அமெரிக்காவில் ஒரே மதம், கறுப்பர், வெள்ளையர் என நிறவேற்றுமை. அய்ரோப்பாவில் ஒரே மதம், ஒரே இனம். ஆனால் இந்தியாவில் முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பதாயிரம் ரிஷிகள், கின்னார், கிம்புருடர், அட்டதிக்குப் பாலகர்கள், 64 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், ஆயிரத்து எட்டு ஜாதிகள் அதில் பல உட்ஜாதிகள், சாஸ்திரம், சம்பிரதாயம் என்று மதத்தின் அடிப்படையில் எல்லாம் ஒரே ஜாதி, ஒரே கடவுள், ஒரே மதமில்லை. இத்தகைய இந்தியாவில் ஜாதியை, மதத்தை அழிக்கப் புறப்பட்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் என்று இரண்டு பட்டம் பெற்றவர்கள், ஒரு பட்டம் பெற்றவர்கள், வெறும் நான்காம் வகுப்புப் படித்த தலைவர் பின் நின்றார்கள்.

அந்தத் தலைவன் வழியில் சற்றும் அடிபிறழாது, அக்கொள்கையில்  சற்றும் வழுவாது, உடலில் பல உடல் நோவுகளுக்கு ஈடுகொடுத்து உழைக்கும் ஒரே தலைவராகத் திகழும் ஆசிரியர் தமிழர் தலைவர் பின்னே இன்று பல்லோரும் கூடி நிற்பது அவர் கொண்ட கொள்கையின் வெற்றி. அந்தக் கொள்கையின் அடிச்சுவட்டில் நடைபெற்ற மாநாடுதான் நாத்திகர் மாநாடு - உலக நாத்திகர் மாநாடு

உலக நாடுகளைப் பொருத்தவரையில் நாத்திகம் என்றால் அது கடவுள் மறுப்பு, கடவுளே இல்லை என்பதோடு முடிந்து விடுகிறது. ஆனால்  தமிழ் மண்ணில் நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்புமட்டுமல்லாமல் சாதி ஒழிப்பு, இன உணர்வு, சமத்துவம், வகுப்புரிமைக் கோட்பாடு, பெண்ணடிமை ஒழிப்பு, இடஒதுக்கீடு எனும் பல ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வாழ்வை உயர்த்தும் உன்னத நோக்கங்கள் உடையது. அதனாலேயே தான் திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில், சீக்கிய சமயத்தவரான, சீக்கிய நெறியைப் பின்பற்றி, தலைப்பாகை, கையில் கங்கணம், தாடி முதலாய சீக்கிய அடையாளங்களை உடையவர்களும், பஞ்சாபிலிருந்து வந்த பேராளர்களும், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இக்கட்டுரையாசிரியர் போன்று பல பேராசிரியர்கள், அறிஞர்கள், பிற அரசியல் இயக்கத்தவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது. இல்லையெனில் இம்மாநாடு திராவிடர் கழக மாநாடுகளில் ஒன்றாக அமைந்திருக்குமேயன்றி உலக நாத்திகர் மாநாடு என்று தனி முத்திரை பதித்துத் தந்தை  பெரியாரை உலகமயமாக்குவதில் பெரும் பங்கு பெற்றிருக்க முடியாது. எனவே தான் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல் இம்மாநாட்டின் வெற்றி, சிறப்பைக் கூறுகையில் திராவிடர் கழகத்தின், தமிழர் தலைவரின் சாதனை மகுடத்தில் ஒரு மணிக் கல் என்று குறிப்பிட்டோம். நாடுகள் பலவற்றிலிருந்து வந்தவர்களெல்லாம் தந்தை பெரியாரின் கோட்பாடு அரங்குக்குள்ளே முடங்கி விடாமல் மக்களிடையே ஒருங்கிணைந்து உயிர் பெற்று மிகப் பேரளவில் துடிப்புடன் விளங்குவது கண்டு வியந்து போனார்கள்.

- விடுதலை நாளேடு, 20.1.18