புதன், 28 நவம்பர், 2018

மும்பை மாநில சமூகநீதி மாநாடு 2018 (24.11.2018)



சமூகநீதி மாநாட்டில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபுலே, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன.



மாநாட்டில் திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி சிறப்புரையாற்றினார்.



மும்பை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பெரியார் & அம்பேத்கர் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயனாடை அணிவித்து தந்தை பெரியார் சிலையினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன், மகாத்மா ஜோதிபா ஃபுலே அறக்கட்டளை நீதாபாய் புலே ஆகியோர் வழங்கினர்.

-  விடுதலை நாளேடு, 25.11.18

* நீதித்துறையிலும், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை - தேவை!

நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் படம் திறந்திடுக!

சமூகநீதி மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றினார்.

புரட்சியாளர் மகாத்மா ஜோதிபா ஃபுலேவின் அய்ந்தாம் தலைமுறையினரான நீதாபாய் புலே அவர்களுக்கு கழகத்தின் சார்பில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி சிறப்பித்தார். வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், மும்பை ரவிச்சந்திரன் உடன் உள்ளனர்.

மும்பை, நவ.27 தனியார் துறைகளில் இடஒதுக்கீடு, தந்தைபெரியார் படம் நாடாளுமன்றத்தில் திறப்பு உள்ளிட்ட ஒன்பது (நவமணி) அரிய தீர்மானங்கள் மும்பையில் நடை பெற்ற சமூக நீதி மாநாட்டில்  நிறைவேற்றப்பட்டன. அனைத்து தீர்மானங்களையும் மகளிரணியினர் முன்மொழிந்தனர்.

மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  (24-11-2018 சனிக் கிழமை மாலை நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1

சமுக நீதி தொடர்பான இடஒதுக்கீடு முறைமைகளைச் சட்டமாக்கி 9-ஆம் அட்டவணையில் சேர்த்திடுக :-

நடுவணரசில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 60 (அறுபது) ஆண்டுகளுக்கும் மேலாகவும், பிற்படுத்தப்பட் டோருக்கு 1993ஆம் ஆண்டு முதலும் இடஒதுக்கீடு முறை நடைமுறையில் இருப்பினும், பல மாநிலங்களிலும், மத்திய ஆட்சியிலும் வெறும் அரசின் ஆணை மூலமாக மட்டுமே இந்த இடஒதுக்கீடு தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடு தொடர்பாக எந்த அறிவிப்பு வந்தாலும், உடனே நீதிமன்றம் தலையிடும் போக்கு அதிகரித்துவரும் நிலையில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு, அவை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்ட வணையில் சேர்க்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. சிறீவள்ளி தயாளன்

தீர்மானம் வழிமொழிந்தவர் : மானமிகு இ.அந்தோணி,

தீர்மானம் 2

தனியார் துறையில் இடஒதுக்கீடு:-

புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக, மத்திய மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தனியார் துறை அரசாங்கத்தால் வெகுவாக ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, அதிகம் பாதிக்கப்படுவோர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தபட்ட, பழங்குடியின மக்கள் தான்.  தனியார் துறையில் இடஒதுக்கீடு இல்லாத நிலையில், உயர் பதவிகளில் இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாய்ப்பு என்பது குதிரைக் கொம்பே என்ற நிலைதான் உள்ளது.

தனியார் துறை என்றாலும், அரசின் அனைத்துச் சலுகைகளையும் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆகவே சமூகப் பொறுப்பு தனியார் துறை நிறுவனங்களுக்கு கட்டாயம் உண்டு என்பதால் மேலைநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் இடஒதுக்கீடு நேர்மறை செயல்பாடு நடைமுறையில் உள்ளது. அதே போன்று, இந்தியாவிலும் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு முறையே 27, 15, 7.5 விழுக் காடு இடஒதுக்கீடு அளித்திட வகை செய்யும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியு றுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. பொன்மாலா ஆரிய சங்காரன்

தீர்மானம் வழிமொழிந்தவர்: மானமிகு அ.கண்ணன்

தீர்மானம் : 3

நீதித் துறையில் இட ஒதுக்கீடு :-

நீதிபதிகள் நியமனங்களில் கீழமை நீதிமன்றங்களில் தற் போது இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் உயர் நீதி மன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் இட ஒதுக்கீடு முறை இல்லை. தற்போது உச்ச நீதி மன்றத்தில் உள்ள 28 நீதிபதிகளில் (மொத்தம் 31 பதவிகள்) ஒருவர் கூட தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சார்ந்தவர் அல்ல. பிற்படுத்தப்பட்ட சமுகத்திலிருந்து ஒரே ஒருவர் மட்டும் நீதிபதியாக பதவி வகிக்கின்றார்.  இந்திய நாட்டு மக்கள் தொகையில் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் தொகை 80 விழுக்காடு என்ற நிலையில் உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் இதுகாறும் வழங்கபட வில்லை.

உச்ச நீதி மன்ற நீதிபதிகளில் பெரும் பான்மையினர் மேல்ஜாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே என்பது ஓர் அதிர்ச்சியானத் தகவலாகும். எனவே இந்தியாவின் அனைத்து நீதி மன்றங்களிலும் இந்திய அரசமைப்பில் வழங்கப் பட்டி ருக்கும் இட ஒதுக்கீடு முறை காழ்ப்புணர்வின்றி நடைமுறைப் படுத்தப் பட்டு, உரிய விகிதாச்சார அடிப்படையில் நியமனங்கள் செய்யப் பட  வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. நங்கை குமணராசன்

தீர்மானம் வழிமொழிந்தவர் : மானமிகு வெ.சித்தார்த்தன்

தீர்மானம் : 4

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு

நிரந்தர விலக்கு வேண்டும்:-

சூத்திரனுக்கு கல்வி மறுக்கும் மனு சாஸ்திரத்தின் புதிய வடிவம் தாம் நீட் தேர்வு. பணம் படைத்தவன் வீட்டுப் பிள் ளைகள் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற  நிலையை உருவாக்கியதன் மூலம் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை நிரந்தர மாக்கி சமூக நீதிக்கு எதிரான செயலின் வடிவமே நீட் தேர்வு.

நீட் தேர்வு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு தன் 92 ஆவது அறிக்கையில் விருப்பமில்லாத மாநிலங்களை விட்டுவிட்டுக் கல்வி நீட் தேர்வை அமல் படுத்தலாம் என்று அறிக்கை அளித்தப் பின்னரும் நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குக் கோரியும் கல்வியை மாநில அரசின் பட்டியலில் சேர்க்கவும் உரிய அரசியல் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன் மொழிந்தவர் : திருமதி ஜூலியட் இரவிச் சந்திரன்.

வழிமொழிந்தவர்கள்: மானமிகு ஜே.வில்சன்; அ.இராதா கிருட்டிணன்

தீர்மானம்- 5

வெளிமாநிலங்களில் வசிக்கும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு:-

இந்தியாவில் வாழும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் சமுக நிலையின் காரணமாக வாழ்வாதரம் தேடி 100 ஆண்டுகளுக்கு முன்னரே பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். எனினும், இந்திய அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப் பட்டுள்ள கல்வி, வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு இந்த மக்களுக்கு புலம் பெயர்ந்த மாநிலங்களில் மறுக்கப் படுகிறது. இது ஒடுக்கப் பட்ட மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான ஓர் உரிமை மறுப்பு என்று கூடச் சொல்லலாம்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்கள் கலைஞர் மு. கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோர் மகராஷ்ட்ரா மாநில அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இது மட்டுமின்றி மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் திருவாளர்கள் பி.சவுந்திர ராஜன், சி.குப்புசாமி ஆகியோர் நாடாளு மன்றத்திலும் பேசியுள்ளனர். மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்றத்தின் ஒரே தமிழ் சட்டமன்ற உறுப்பினரான கேப்டன் தமிழ்ச்செல்வன் அவர்களும் மகாராஷ்டிரா சட்ட மன்றத்தில் குரல் எழுப்பியதுடன், முதல்வரிடமும் பல முறை வலியுறுத்தியுள்ளார். இவர்களுக்கு இம்மாநாடு நன்றி தெரிவிப்பதுடன், வெளிமாநிலங்களில் வாழும் மக்களுக்கும் இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளின் படி இட ஒதுக்கீடு முறையை அமல் செய்திட உரிய சட்டத் திருத்ததை முன்னெடுக்குமாறு மகராஷ்டிர மாநில அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர்: திருமதி. பேரரசி காமராசு

வழிமொழிந்தவர்கள்: மானமிகு சங்கர் திராவிட். மு.சசிகுமார்

தீர்மானம்: 6

ஆணவப் படுகொலைகளுக்கு முடிவு கட்டுக.

காதல் திருமணங்கள் சாதி மறுப்பு திருமணங்களாகும் போது ஆதிக்கச் சாதிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபடு கின்றனர். தமிழகத்தில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற சாதிய ஆணவப் படுகொலைகள் வன்மையாக கண்டிக்கத் தக்கன. அச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் முன்மொழிந்தவர் : திருமதி. உமா கணேசன்

வழிமொழிந்தவர்கள்: மானமிகு இசக்கிப் பாண்டியன், பரமசிவம்

தீர்மானம்: 7

கிரீமிலேயர் முறையை நீக்குக:-

மண்டல் குழு பரிந்துரைகள் அமலாக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்த நிலையிலும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப் பட வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்த பிறகும் இதுவரை பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு 12  விழுக்காடு அளவிலேயே உள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாகும். பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வருமான வரம்பு (கிரீமிலேயர்) புகுத்தப்பட்டதும் இதற்கொரு முக்கிய காரணமாகும். அர சமைப்புச் சட்டத்தில் எங்கும் காணப் படாத இந்த கிரீமிலேயர் முறையை உடனடியாக நீக்குமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம்-8

நாடாளுமன்றத்தில்

தந்தை பெரியார் படத்தினைத் திறந்திடுக !

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குப் பாடுபட்டதற்காக இந்திய அரசால் தாமிரப் பட்டயம் அளித்தும் அவருடைய நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டும், 125 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டும், மதிப்பளிக்கப்பட்டவரும் அய்.நா,வின் யுனஸ்கோ அமைப்பின் சார்பில் பாராட்டு விருது அளிக்கப்பட்டவரும், மக்கள் மத்தியில் தீண்டாமை, ஜாதி, மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பரப்புரை செய்து பெருவெற்றி கண்ட புரட்சியாளரும் பெண்ணுரிமைக்கான உயர் சிந்தனை களைக் கூறியவரும், போராடிப் பல உரிமைகளை அவர் களுக்கு ஈட்டித் தந்தவரும், சமூக நீதிக்காகத் தொடர்ந்து பாடுபட்டு இந்திய அரசமைப்புச்சட்டத்தில் முதல் திருத்தம் மூலம் நாடு முழுவதும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படுவதற்கு முழு முதல் காரணமாக இருந்தவரும்,  பகுத்தறிவுப் பகலவனுமான தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் உருவப் படத்தினை நாடாளுமன்றத்தில் திறக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும்  தந்தை பெரியார் பெயரில் ஆய்வுத்துறை ஒன்று தொடங்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 9

நீதி மன்ற தீர்ப்புகளை

மத ஈடுபாடுகளின்றி நிறைவேற்றிடுக!

கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று பாலினப் பாகுபாடு இன்றி வழிபடும் உரிமையை உச்ச நீதிமன்றம் தனது    தீர்ப்பின் மூலம் உறுதிசெய்துள்ள நிலையில், அந்தத் தீர்ப்புக்கு எதிராக சட்டத்தினை கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டு கோவிலுக்கு வழிபட வரும் பெண்களை வழிமறித்து  உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மதித்துச் செயல்பட மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க, காங்கிரசு உள் ளிட்ட கட்சிகள் மற்றும் இந்துமத அமைப்புகளின் அண்மைக் கால நடவடிக்கைகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

வாக்கு வங்கி அரசியலுக்காக மத உணர்வுகளைத் தூண்டி சட்டத்தைக் கையிலெடுக்கும் போக்கும் அதற்குத் துணைபோகின்ற அரசியல் கட்சிகள், குறிப்பாக தேசியக் கட்சிகள் என்று பறைசாற்றிக்கொள்ளும் பா.ஜ.க.; காங்கிரசு, நடவடிக்கைகள் இந்தியாவின் மதச் சார்பற்ற கொள்கைக்கும், மாநிலங்களின் இறையாண்மைக்கும் பெரும் தீங்காக அமையும் என்பதையும் இம்மாநாடு கவலையுடன் சுட்டிக் காட்டுவதுடன் அவ்வாறு செயல் படும் அரசியல் கட்சிகள் இந்திய நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சி கருதி இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்த்திடுமாறு வேண்டுகின்றது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மும்பையில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பங்கேற்றோர்

-  விடுதலை நாளேடு, 27.11.18

திங்கள், 19 நவம்பர், 2018

மும்பையில் நவ. 24 மாநில சமூகநீதி மாநாடு



மும்பை, நவ.17 மராட்டிய மாநிலத்தில் மும்பை மாநகரில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில்  மாநில மாநில சமூகநீதி மாநாடு 24.11.2018 அன்று நடைபெறுகிறது.

மும்பை செம்பூர் ஆர்.சி.மார்க் பைன் ஆர்ட்ஸ் ஆடிட்டோரியம் சிவசாமி குளிர் அரங்கத்தில் 24.11.2018 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சமூகநீதி மாநாடு தொடங்குகிறது.

சுயமரியாதைச் சுடரொளி எஸ்.எஸ்.அன் பழகன்  நினைவரங்கத்தில் மும்பை பகுத் தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் தலைமையில் மாநில சமூக நீதி மாநாடு (ஜாதி தீண்டாமை ஒழிப்பு) நடைபெறுகிறது.

மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் வரவேற்புரையாற்றுகிறார். எழுத்தாளர் புதிய மாதவி நெறியாள்கையில், மும்பை புறநகர் திமுக சொற்பொழிவாளர் முகமது அலி ஜின்னா  மாநாட்டின் தொடக்க வுரையாற்றுகிறார்.

புனே மகாத்மா ஃபுலே அறக்கட்டளை நீதிபாய் புலே, நாசிக் சந்திப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச் சந்திரன், எம்அய்டிசி தலைமை நிர்வாக அதிகாரி பொன்.அன்பழகன் அய்.ஏ.எஸ், மும்பை சயான், கோலிவாடா தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்செல்வன், மராட்டிய மாநிலத் தமிழ்ச்சங்கத் தலைவர் எஸ்.அண்ணாமலை, மராட்டிய மாநில விடுதலை சிறுத்தைகள் அமைப்புச்செயலாளர் து.ஆ.கனகராசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

‘ஏன் அவர் பெரியார்?’ தலைப்பில் தலை மைக்கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் கருத்துரையாற்றுகிறார்.

படத்திறப்பு


தந்தை பெரியார் படத்தை இரத்தினம் தொல்காப்பியன், புரட்சியாளர் அம்பேத்கர் படத்தை புஷ்பம் பொற்கோ, மகாத்மா ஜோதிபா ஃபுலே படத்தை சற்குணம் ஆரிய சங்காரன், சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் படத்தை தவமணி சண்முகராசன் ஆகியோர் திறந்துவைக்கிறார்கள்.

பரிசளிப்பு


பெரியார், அம்பேத்கர் வினா விடைப் போட்டியில் பங்கேற்ற மும்பை மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவர்களுக்கு மும்பை திமுக இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் பரிசுகளை வழங்கி பாராட்டுகிறார்.

விருது அளிப்பு


திராவிடப் பெருந்தகை விருது நிகழ்வில் மும்பை புறநகர் திமுக முன்னாள் அவைத் தலைவர் வி.தேவதாசன் கலந்துகொள்கிறார்.

மாநாட்டுத் தீர்மான அரங்கம்


சிறீவள்ளி தயாளன், நங்கை குமணராசன், பொன்மாலா ஆரிய சங்காரன், உமா கணேசன், ஜூலியட் இரவிச்சந்திரன், பேரரசி காமராசு ஆகியோர் தீர்மானங்களை முன்மொழி கிறார்கள்.

ஜாதி, மத வாதத்தை முறியடிப்போம்,


சமூக நீதிக் கொடியை உயர்த்திப்


பிடிப்போம் உரைவீச்சு


கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், மும்பை புறநகர் மாவட்டச் செயலாளர் அலிசேக் மீரான், மும்பை மாநகர திமுக பொறுப்பாளர் கருவூர் இரா.பழனிச் சாமி, மராத்திய தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பேரா.சமீரா மீரான், விடுதலை சிறுத் தைகள் கட்சி மும்பை மாநகர செயலாளர் த.சு.சாலமன் இராசா ஆகியோர் உரையாற்று கின்றனர்.

மாநாட்டின் சிறப்புரை


திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் மாநாட்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

மாநாட்டின் முடிவில் ஆர்.பரமசிவம், மு.சசிகுமார்  நன்றி கூறுகின்றனர்.

நவ.25 இல்


‘இடஒதுக்கீடு அறைகூவல்களும், பணிகளும்’-கருத்தரங்கம்


மும்பை மாத்துங்கா சி.ஆர். புதிய பூக்கடை, தெலங் சாலையில் குஜராத்தி சேவா மண்டலில் மும்பை பகுத்தறிவாளர் கழகம், மும்பை திராவிடர் கழகம் சார்பில் ‘இட ஒதுக்கீடு அறைகூவல்களும், பணிகளும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றுகிறார்.

மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் ஏ.இரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றுகிறார்.

மராட்டிய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் டாக்டர் பி.அன்பழகன் அய்.ஏ.எஸ்., நாசிக் சந்திப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச் சந்திரன், குஜராத் வருமான வரித்துறை இணை ஆணையர் நாத்திகர் மற்றும் பவுத்த நெறியாளர் அரவிந்த் சொந்தாக்கே அய்.ஆர்.எஸ், மும்பை தமிழ் எழுத்தாளர்கள் சங்க அமைப்புச் செயலாளர் அமலா ஸ்டான்லி, திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், மும்பை டாடா சமூக அறிவியல் பயிலகம் பேராசிரியர் ஏ.ராமய்யா ஆகியோர் கருத்தரங்க உரையாற்றுகின்றனர்.

கருத்தரங்க முடிவில்மும்பை யூனியன் வங்கி முதன்மை மேலாளர் (ஓய்வு) எஸ்.நல்லசேகரன் நன்றி கூறுகிறார்.

மராட்டிய மாநில திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கழகம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மராட்டிய மாநிலத் தமிழ்ச்சங்கம், மும்பை எழுத்தாளர்கள் சங்கம், புனே மகாத்மா ஃபுலே அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் சமூக நீதி மாநாடு மற்றும் இடஒதுக்கீடு குறித்த கருத்தரங்கில் பெருந் திரளாக கலந்துகொள்கின்றனர்.

- விடுதலை நாளேடு, 17.11.18

செவ்வாய், 13 நவம்பர், 2018

மலேசியா பள்ளிகளில் பெரியார் நூல்கள் இடம்பெறுகின்றன!



மலேசியா, செரம்பான் நகரத்தில் டான்சிறீ மாணிக்கவாசகம் சாலையில் அமைந்துள்ள லோபாக் தமிழ்ப்பள்ளியில் சுமார் நூறு மாணவர்களுக்கு தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், டாக்டர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய நூல்களை அன்பளிப்பாக திராவிட இயக்க பணியாளரும், தோட்ட தொழில்துறை ஆலோசகருமான மு.கோவிந்தசாமி வழங்கினார். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை நிறைமலி மேனகை, பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடையார், கு.கிருட்டிணன் மற்றும் பல ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

-  விடுதலை நாளேடு, 13.11.18

வியாழன், 1 நவம்பர், 2018

மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞருக்கு சிங்கப்பூரில் வீரவணக்கம்



சிங்கப்பூர், நவ.1 மறைந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு சூவா சுகாங் வட்டாரத்தில் உள்ள பன்னோக்கு மண்டபத்தில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி காலை நடைபெற்றது.

வீ. கலைச்செல்வம் குடும்பத்தின் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிங்கப்பூர் தமிழ் எழுத் தாளர் கழக தலைவர்  நா. ஆண்டியப்பன் தலைமை தாங்கினார். அவர் கலைஞரின் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில் முத்தமிழறிஞரின் தமிழ் இலக்கியப் பணிகளைப்பற்றி பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து தமிழறிஞர் முனைவர் சுப.திண் ணப்பன் அவர்களின் உரையை தமிழ் எழுத்தாளர் கழக செயலாளர் திரு சுப. அருணாச்சலம் அவர்கள் வாசித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்மொழி பண்பாட்டுக்கழக தலைவர் மு. ஹரிகிருஷ்ணன், கவிமாலை அமைப்பின் தலைவர் இறை மதியழகன், காப்பாளர்  அன்ப ழகன்,பெரியார்பெருந்தொண்டர் நாகராசன், சிங்கப்பூர் முஸ்லிம் லீக் சமூக சேவை அமைப்பின் தலைவர் மு.ஜஹாங்கீர், மக்கள் கவிஞர்மன்ற தலைவர் உத்தி ராபதி, கவிஞரேறு அமலதாசன், கவிஞர் இளங் கோவன், பொன்சுந்தராசு, ஜெகதீசன், ஜாகூர் உசேன்,  விசுவலிங்கம், மதியழகன், மணிமாலா,  சாரதா, மீனா, ரேணு, சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின்  மாறன்,  கவிதா, ராஜராஜன், தமிழ்ச் செல்வி, பூபாலன், பல்கலைக் கழக மாண வர்கள் குந்தவை, வானதி, வளவன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் உறுப்பினர்கள், வெளி நாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டு மறைந்த தலை வருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இறுதியாக பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

- விடுதலை நாளேடு, 1.11.18

வியாழன், 25 அக்டோபர், 2018

மலேசியா ரவுப் நகர் அரசு தமிழ்ப்பள்ளியில் பெரியார் நூலகம் அமைந்தது



பாரம்பரிய மலாய் இசையுடன் நடனமும் இடம்பெற்றது

மலேசியா. பகாங் மாநிலம், ரவுப் மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள அரசு தமிழ்ப் பள்ளியில் சுமார் இருநூறு மாணவர்கள் தங்களின் தொடக்க நிலை கல்வியை பயில்கிறார்கள். இருபது ஆசிரியர்கள் பணிபுரி கின்றனர்.

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 22.10.2018 அன்று பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு பழங்களும் சுவை நீரும் வழங்கப்பட்டன. பெரியார் பிஞ்சு இதழ்களும் பாரதிதாசன் நூல்களும், டாக்டர் கி.வீரமணியின் கட்டுரைகள் அடங்கிய நூல்களும் வழங்கப் பட்டன.

பள்ளியின் மேல் மாடியில் பெரியார் நூலகம் திறக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர்  கி. தமிழ்வாணன்  அனைவரையும் வரவேற்று விழாவிற்கு தலைமை தாங்கினார்.



நூலகத்தை திராவிட இயக்க பணியாளரும், தோட்டத் தொழில் துறை ஆலோசகருமான மு.கோவிந்தசாமி திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.  பெரியாரின் மலாயா வருகைகளைபற்றியும், அதனால் ஏற்பட்ட தமிழர் எழுச்சி பற்றியும் கூறினார். பெரியார் வலியுறுத்திய கல்வி, சேமிப்பு, சிக்கனம் பற்றி மாணவர்களுக்கு நினைவுபடுத்தினார். இந்த நூலகம் பெரியார் சுயமரியாதைபிரச்சார நிறுவனத்தின் துணையுடன் அமைக்கப்பட்டது.

இந்த விழாவில் பெரியார் பெருந்தொண்டர்கள் கோ.ஆவுடை யார், கு.க.இராமன், கு.கிருட்டிணன் மற்றும் ஆசிரியர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

-  விடுதலை நாளேடு, 24.10.18

திங்கள், 22 அக்டோபர், 2018

தஞ்சை : பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில் தமிழர் தலைவரின் வழிகாட்டுதல்

கருப்புச்சட்டை அணியாத பகுத்தறிவாளரையும் ஒன்று சேர்த்து பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாட்டை பலப்படுத்துங்கள்!




 

தஞ்சை, அக்.20- 19.10.2018 காலை 10.30 மணி அளவில் தொடங்கிய மாநில பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையை அடுத்த வல்லத்தில் பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

புரவலர் தமிழர் தலைவரின் உரை


புரவலர் தமிழர் தலைவர் கூட்டத்தில்  வழிகாட்டும்  நெறியுரையாக கூறியதாவது:


பகுத்தறிவாளர்களின் செயல்பாட்டை பரந்த அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஓராண்டிற்கு முன்பு பகுத்தறிவாளர் கழகம்,  பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் எனச் செயல்பாட்டுத் தளங்கள் விரிவுபடுத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் பகுத்தறிவாளர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பகுத்தறிவாளர்கள் எந்தத் தளத்தில் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து செயல்படக் கூடிய பணியினை பகுத்தறிவாளர் கழகமும், பகுத்தறிவு ஆசிரிய ரணியும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும் தன் அக்கறை யுடன் செய்திட வேண்டும்.

புதிதாக இணையும் பகுத்தறிவாளர்கள் கருப்புச் சட்டை அணிந்திட வேண்டும் என்பது கட்டாயமல்ல. வண்ணம் எப்படி இருந்தாலும், எண்ணம் ஒன்றாக இருப்பதை ஒருங் கிணைத்து பகுத்தறிவு நெறி சார்ந்து வாழ்வது, அந்த நெறி சார்ந்து பிரச்சாரம் செய்வது முக்கியம்.

தந்தை பெரியார் அறிவியல் மனப்பான்மையுடன் எதனையும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென, பகுத்தறிவுடன் சார்ந்த அணுகு முறையினைக் கைக் கொள்ள வேண்டும் என்று இந்த நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே - இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாவதற்கு முன்பே பிரச்சாரம் செய்துவந்தார். 1950ஆம் ஆண்டில் அரசியலமைப் புச் சட்டம் முதலில் உருவானபொழுது தந்தை பெரியார் வலியுறுத்திய கருத்துகள் அதில் இடம் பெறவில்லை. ஆனால் பின்னர் 1976ஆம் ஆண்டில் 42ஆம் முறையாக அரசியல மைப்புச் சட்டம் திருத்தப்பட்ட பொழுது இந்திய குடிமகன் ஆற்றிட வேண்டிய அடிப்படைக் கடமைகள் என பிரிவு 51ஏ (எச்)-இல் தந்தை பெரியார் கூறிய கருத்துகள் இடம் பெற்றன.

"It shall be the duty of every citizen to develop scientific temper, sprit of enquiry, humanism and reform".

அறிவியல் மனப்பான்மையினை பெருக்குவது, எதனை யும் கேள்வி கேட்டு ஆய்வு செய்திடும் உளப்பாங்கினை உருவாக்குவது. மனிதநேயம் மற்றும் சீர்திருத்தத்தினைக் கடைப்பிடிப்பது ஒரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்திடும், ஒவ்வொரு குடிமகனையும் தனது அடிப்படைக் கடமையினை ஆற்றிடவைக்கக் கூடிய தனித்துவமான இயக்கம் தந்தை பெரியார் ஏற்படுத்திய பகுத்தறிவாளர் கழகம் ஆகும்.



தகவல் தொழில்நுட்பம், கணினி சார்ந்த அறிவியல் வளர்ச்சி முக்கியத்துவம் பெற்றுவரும் நிலையில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தினை இணைய தளத்தின் மூலம் முகநூல், மின்னஞ்சல், கட்செவி, குறுஞ்செய்தி என பல வழிமுறைகளில் எடுத்துச் செல்ல வேண்டும். தேவையின் அவசியம் கருதி இத்தகைய கணினி சார்ந்த பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு தனிப் பிரிவும் ஏற்படுத்தப்படும்.

சுழன்று அடிக்கும் சூறைக் காற்றின் வலிமையுடன் மூடநம்பிக்கைகள், பிற்போக்கு பழக்கங்கள் வலுவிழந்து சமுதாயத்தில் காணாமலே போகின்ற அளவிற்கு பகுத்தறிவுப் பிரச்சாரத்தினை பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரி யரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் உரிய முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.

- இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

வரவேற்புரை


கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்தோரை வர வேற்றுப் பேசி, கூட்டத்தின் முகவுரையினையும் மாநில பகுத் தறிவாளர் கழகத்தின் தலைவர் மா. அழகிரிசாமி வழங்கினார்.

தொடக்கவுரை


தொடக்கவுரை ஆற்றிய திராவிடர் கழகத்தின் வெளி யுறவுச் செயலாளர் வீ. குமரேசன் கடந்த ஓராண்டு காலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் பாராட்டத்தக்க செயல்பாட்டினை எடுத்துக் கூறி வரவிருக்கின்ற காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகள்பற்றி எடுத்துரைத்தார்.

அடுத்து ஒவ்வொரு, மாவட்டப் பொறுப்பாளரும் தாங்கள் கடந்த காலத்தில் செய்த பணியினை அறிக்கையாக அளித்ததுடன், வருங்காலத்தில் செய்திட திட்டமிட்டுள்ளதைக் குறித்தும் சுருக்கமாக எடுத்துக் கூறினார்கள்.

கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய


மாவட்டப் பொறுப்பாளர்கள்:


மயிலாடுதுறை ப.க. செயலாளர் அ. சாமிதுரை, வட சென்னை ப.க. தலைவர் கோவி. கோபால், தர்மபுரி மாவட்ட ப.க. தலைவர் கதிர். செந்தில்குமார், தாம்பரம் மாவட்ட ப.க. தலைவர் விஜய் ஆனந்த்,  திருப்பூர் மாவட்ட ப.க. தலைவர் வெ. குமாரராசா, கோபி மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் அ. குப்புசாமி, விருதுநகர் மாவட்ட ப.க. செயலாளர் முத்து கணேஷ், மேட்டூர் மாவட்ட ப.க. செயலாளர் சி. மதியழகன், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் அ. மன்னர்மன்னன், திருத் துறைப்பூண்டி மாவட்ட ப.க. தலைவர் கவிஞர் புயல்குமார், லால்குடி மாவட்ட ப.க. தலைவர் சுப்பிரமணியன், விழுப்புரம் மாவட்ட ப.க. தலைவர் கார்வண்ணன், திருவாரூர் மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் ஆறுமுகம், ஈரோடு மாவட்ட ப.க. டாக்டர் க.பா. மோகனசுந்தர் ராஜ், கன்னியாகுமரி மாவட்ட ப.க. செயலாளர் எம். பெரியார்தாஸ், பழனி மாவட்ட ப.க. தலைவர் ச. திராவிடச்செல்வன், தஞ்சாவூர் மாவட்ட ப.க. செயலாளர் ச. அழகிரி, திருப்பத்தூர் மாவட்ட ப.க.ஆசிரி யரணி செயலாளர் சே. ஜானகிராமன், கும்பகோணம் மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் விஜயபூபாலன், நாகை மாவட்ட ப.க. செயலாளர் மு.க .ஜீவா, திருவண்ணாமலை மாவட்ட ப.க. தலைவர் பா. வெங்கட்ராமன், கிருட்டிணகிரி மாவட்ட ஆசிரியரணி அய். லூயிஸ் ராஜ், சேலம் மாவட்ட ப.க. செயலாளர் ப. கந்தவேல், பெரம்பலூர் மாவட்ட ப.க. செயலாளர் பெ. நடராசன், ஆத்தூர் மாவட்ட ப.க. தலைவர் வ. முருகானந்தம், புதுச்சேரி ப.க. தலைவர்  கு. ரஞ்சித்குமார், காரைக்குடி மாவட்ட ப.க. செயலாளர் ந. செல்வராசன், புதுக்கோட்டை மாவட்ட ப.க. தலைவர் அ.சரவணன், தென் சென்னை மாவட்ட ப.க. தலைவர் மு.ரா. மாணிக்கம்.

உரை ஆற்றிய மாநிலப் பொறுப்பாளர்கள்:


ப.க. மாநில துணைத் தலைவர்கள் முனைவர் மு.சு. கண்மணி, தரும. வீரமணி, புதுச்சேரி மு.ந.நடராசன், அ.தா. சண்முகசுந்தரம், அண்ணா சரவணன், மணிவண்ணன், கே.டி.சி. குருசாமி, கோபு. பழனிவேலு, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் சி. ரமேசு, வா. தமிழ்பிரபாகரன், இரா. கலைச்செல்வன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா. நேரு, பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா. அழகிரிசாமி ஆகியோர் உரையாற்றினர்.

மாநில ப.க. துணைத் தலைவர் கோபு. பழனிவேலு நன்றி கூறினார்.


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


19.10.2018 மாநில பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இரங்கல் தீர்மானம்:


திருநெல்வேலி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஜே. பிரின்சு, மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஜே. சுப்பிரமணியன் ஆகியோர் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.



தீர்மானம் 1:


முன்மொழிவு: கதிர். செந்தில்குமார்


அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா: (2019-2020)


தந்தை பெரியாரின் மறைவிற்குப் பின் அவர் தொடங்கி நடத்திய மாபெரும் பகுத்தறிவுப் புரட்சி இயக்கத்தினைக் கட்டிக் காத்து வழிநடத்திய அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் நாள் தொடங் குகிறது. அன்னை மணியம்மையார் மறைவிற்கு பின் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று பெரியார்தம் கொள்கைகளை பரந்துபட்டு பார் முழுவதும் பரப்பி வரும் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் உருவாக்கப் பட்டுள்ள 'ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை' (E.V.R. Maniammai Foundation) -இன் செயல்பாட்டிற்கு ஆக்கம் சேர்க்கின்ற பணிகளை ஆற்றிட இந்தக் கூட்டம் தீர்மானிக் கிறது. மேலும் அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழாவினைப் பல்வேறு தளங்களில் 2019 - 2020 ஆண்டு முழுவதும் சிறப்பாக நடத்தி கொள்கைப் பிரச்சரம் செய்திட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 2:


முன்மொழிவு: டாக்டர் க.பா. மோகன சுந்தர்ராஜ்


மத நம்பிக்கை, மதத் தொடர்பான நடவடிக்கைகளால் புரையோடிப்போயுள்ள சமத்துவமின்மையின் ஒரு நடை முறையாக உள்ள கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் வழிபாடு செய்வதற்கு 10 முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு - இந்த வயதுப் பெண்களுக்கு இயற்கையாக நிகழும், 'மாதவிடாய்' என்னும் உடல் சார்ந்த நிகழ்வினால் கோயில் தீட்டுப்பட்டுவிடும் எனக் காரணம் காட்டி - பல ஆண்டுகளாக வழிபடும் உரிமை மறுக்கப்பட்டு வந்தது, இந்த பாகுபாட்டு நடைமுறையினை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் அண்மையில் உச்சநீதி மன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வானது வயது வேறுபாடு இன்றி அனைத்துப் பெண்களும் கோவிலுக்குச் சென்று வழிபடத் தடை இல்லை எனத் தீர்ப்பு அளித்ததை இக்கூட்டம் வரவேற்கிறது; இந்த தீர்ப்பு கிடைத்திட கேரள மாநில ஆளும் அரசு எடுத்த முயற்சிகளை இந்தக் கூட்டம் பாராட்டுகிறது. மேலும் இந்தத் தீர்ப்பினை மறுத்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்த, அரசியல் பின்புலத்துடன் செயல்பட்டு வரும் மத வாதிகளின் நடவடிக்கைகளை இந்தக் கூட்டம் கடுமையாகக் கண்டிக்கிறது. பெண்களுக்கான வழிபாட்டு உரிமையில், சமத்துவ உரிமையினை நிலைநாட்டி எந்தவிதப் பாகுபாட் டிற்கும் இடம் கொடுக்காத வகையில், சபரிமலை கோயில் நிர்வாகத்தினைக் கட்டுப்படுத்திடும் வகையில் உள்ள கேரள அரசின் செயல்பாடு பாராட்டுதலுக்குரியது. உறுதியான கொள்கைப் பிடிப்புடன் வழிபாட்டு உரிமையினைப் பாலின பாகுபாடின்றி, வயது வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கிடுவதில் முனைப்புடன் தொடர்ந்து செயல்படுமாறு கேரள மாநில அரசினை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.



தீர்மானம் 3:


முன்மொழிவு: ச. அழகிரி


இல்வாழ்க்கை உறவில் மனைவியானவர் கணவனது உடமை, ஒரு பயன்பாட்டுப் பொருள் என்பதனை மறுத்து, 'இருவரும் சம உரிமை படைத்த உற்ற நண்பர்கள்' என்பதை வலியுறுத்தி மணமான பெண்களுக்கு சுதந்திர பாலியல் உரிமை வேண்டும் எனத் தொடர்ந்து தந்தை பெரியார் குரல் கொடுத்தார்; 1971 ஆம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் இது குறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தந்தை பெரியார் வலியுறுத்திய பெண்களுக்கான சுதந்திர பாலியல் உரிமையினை உறுதிப்படுத்திடும் வகையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497 கூறும் கணவனது சம்மதம் பெறாத மனைவியின் பாலியல் உறவு (Adultery) தண்டனைக்கு உரியது என்பதை மறுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497 இந்தத் தீர்ப்பின் மூலம் நீக்கப்படுகிறது. பெண் சமத்துவ அடிப்படையில் சுதந்திர பாலியல் உரிமை தண்டனைக்குரியது அல்ல என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை இந்தக் கூட்டம் பாராட்டி வரவேற்கிறது. மதவாதிகள், திரிபுவாதிகள் கூறிவரும் - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் சமூக ஒழுக்கம் பாதிக்கப்படும் - எனும் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்த்து பகுத்தறிவாளர் கழகம் சட்ட விதிகள் சார்ந்த ஒழுக்கவிதிகள் பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்திட வேண்டும் என இக்கூட்டம் முடிவு செய்கிறது.

தீர்மானம் 4:


முன்மொழிவு: லால்குடி வீ. சுப்பிரமணியன்


மனித உடல்கூறு அடிப்படையில், இயற்கையாக எழுந்திடும் பாலியல் உணர்வுகளின் பாற்பட்ட ஓரினச் சேர்க்கை சட்டபடி தண்டனைக்கு உரியது என இதுவரை நடைமுறையில் இருந்தது. ஓரினச் சேர்க்கையினை தண்டனைக்குரிய உரிய குற்றம் எனக் கூறும் இந்திய தண்டனைச் சட்டம் 377 பிரிவினை நீக்கிடும் வகையில் அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை இந்தக் கூட்டம் வரவேற்கிறது. பொது ஒழுக்கம் என்பது மனித உணர்வு, உரிமை சார்ந்ததாக சமத்துவத்தினை அளிக்கின்ற வகையில் இருந்திட வேண்டும். உடல் அமைப்பு அடிப்படையில் எழும் உணர்வுகள் தண் டனைக்கு உரியது அல்ல எனும் மனித நேய அடிப் படையிலான உச்சநீதிமன்றத் தீர்ப்பினை இக்கூட்டம் பாராட்டுகிறது.

தீர்மானம் 5:


முன்மொழிவு: பெரியார்தாஸ்


பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா (2019 - 2020)


அலுவலகப் பணிபுரிவோரும் பகுத்தறிவுப் பிரச்சாரத் தினை மேற்கொள்ளுவதற்கு ஏதுவான அமைப்பாக அறிவார்ந்த தொலைநோக்குச் சிந்தனையுடன் தந்தை பெரியார் பகுத்தறிவாளர் கழகத்தினை 1971 -ஆம் ஆண்டு நிறுவினார். உரிய அரசு அங்கீகாரம் பெற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் புரவலராகக் கொண்டு 6 செப்டம்பர் 1971 அன்று பகுத்தறிவாளர் கழகம் தொடங்கப்பட்டது. பகுத்தறிவாளர் கழகமானது. பல்வேறு தளங்களில் தமிழ்நாட்டிலும் வெளி மாநிலங்களிலும், பிறநாடுகளிலும், பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை யினை வளர்த்து மனிதநேயக் கொள்கைக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. பகுத்தறிவாளர் கழகம் நிறுவப்பட்டு 50 ஆம் ஆண்டு தொடங்கிடவுள்ளது 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 6 -  ஆம் நாள் தொடங்கவுள்ள பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழா ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடி புத்தாக்க வழிமுறையில் பரந்து பட்ட பிரச்சார முறைகளைக் கைக்கொள்வது எனவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 6:


முன்மொழிவு: இ.ரெ. கிருஷ்ணமூர்த்தி


கல்வி அதிகாரமானது மாநில அரசின் அதிகார வரம்பிலிருந்து மத்திய அரசும், மாநில அரசும் கலந்து பேசி வளர்ச்சிகளை மேற்கொள்ள ஒத்திசைவுப் பட்டியலுக்கு 1976 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. அது முதல் 'கல்வி' குறித்த பெரும்பாலான முடிவுகளை மத்திய அரசே தன்னிச்சையாக மேற்கொண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சிக்கு வந்தோர் கல்வி அதிகாரத்தில் தன்னிச்சையாகச் செயல்படும் போக்கின் உச்சக் கட்டத்தில் உள்ளனர். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் கல்வி வளர்ச்சியினை மேற்கொள்ள அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகள்தான் பெரிதும் முக்கியத்துவம்; வாய்ந்தவை நடைமுறைப் பொருத் தப்பாடு உடையவை. உயர்கல்வித் துறையில் பல்வேறு வளர்ச்சிக்கான நடைமுறை மாற்றங்களைக் கொண்டு வந்த பல்கலைக் கழக மானிய ஆணையம் (University Grants Commission) எனும் தன்னாட்சி அமைப்பினை நீக்கி விட்டு இந்திய உயர்கல்வி மன்றம் (Higher Education Council of India) மூலம் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில், மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் கொண்டு வர மத்தியில் ஆள்பவர் முடிவு செய்து அதற்கான மசோதாவினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். புதிதாக அமைந்திடவுள்ள மன்றத்தின் அதிகார நிலையில் கல்வித்துறை சாராத, கல்வி வளர்ச்சி பற்றிய புரிதல் இல்லாதோர் பெரும்பாலோர் அங்கம் வகித்திடவும் வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாநில அரசின் ஆளுகையில் தன்னாட்சி அதிகாரத்துடன் ஆண்டு பலவாகச் செயல்பட்டு வரும் சீரிய பல்கலைக் கழகங்களும் இனிமேல் இந்த புதிய மன்றத்தின் அனுமதி அங்கீகாரம் பெற்றுத்தான் செயல்படும் நிலை ஏற்படும்.  உயர் கல்வித் தளத்தில் மாபெரும் பின்னடைவினை உருவாக்கக் கூடிய அதிகாரம் படைத்த இந்திய உயர்கல்விமன்றம் அமைக்கப்படுவதற்குப் பகுத்தறிவு ஆசிரியரணி கடுமையான கண்டனத்தினைத் தெரிவிக்கிறது, இத்தகைய பிற்போக்குத்தனமான உயர் கல்விக் கொள்கை முடிவினைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசினை இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7:


முன்மொழிவு: புள்ளை. வீரமணி


மதச் சார்பின்மைக்குப் புறம்பாக பள்ளிக் கூடங்களில் இந்து மதக் கருத்தினை வலியுறுத்திடும் காயத்ரி மந்திரத்தைச் சொல்ல வைக்கும் பழக்கத்தினைச் சில பள்ளிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக டில்லியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆளுகையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வி மேம்பாட்டுக் குழுவின் அறிவுரைப்படி இது கடைப்பிடிக்கப் படுவதாகக் கூறப் படுகிறது.

ஏற்கெனவே அரியானா பள்ளிக்கூடங்களில் காயத்ரி மந்திரம் ஒலித்திட அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி முதல்வர் ஆணையிட்டுள்ளது கவனத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்திடும் மதச் சார்பின்மைக்கு முற்றிலும் எதிரான போக்கினைப் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நேரடி அதிகாரத்தின்கீழ் உள்ள பள்ளிக்கூடங்களில் கடைப் பிடிக்கப்பட்டு வருவதை உடனே திரும்பப் பெற்றிட வேண்டும் என இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 8:


முன்மொழிவு: கோவி. கோபால்


தமிழ்நாடு மாநில கல்வி உயர்மட்டக் குழுவின் முடிவின்படி 11 ஆம் வகுப்பிற்கு அரசு பொதுத் தேர்வு எனவும், உயர்கல்விக்கு 11, 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டு, அதன்படி பாடப்புத்தகங்களைத் தயாரித்து, ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்து கற்றல் பணி துவங்கிய பிறகு 11 ஆம் வகுப்பு மதிப்பெண்கள், உயர்கல்வி பயில கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது என அரசு உயர்நிலைக் குழுவை ஆலோசிக்காது. அரசு தன்னிச்சையாக அறிவித்து உள்ளது. இந்த உத்தரவினைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறுவதோடு 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் பழைய அறிவிப்பினை செயல்படுத்திட வேண்டுமென இந்தக் கூட்டம் கொள்கிறது.

தீர்மானம் 9:


முன்மொழிவு: லால்குடி வீ. சுப்பிரமணியன்


மாணவர்கள் குறைந்த எண்ணிக்கை உடைய பள்ளிக்கூடங்கள் இணைக்கப்படும் என்பதாக பல பள்ளிக் கூடங்களை மூடி வரும் அரசின் முடிவினைக் கைவிட்டு, பள்ளிகளை மூடாது மாணவர்களைப் பள்ளியில் சேர்த்திடும் வழிமுறைகளை ஆராய வேண்டும் எனவும் தமிழக அரசினை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 10:


முன்மொழிவு: தஞ்சை மலர்க்கொடி


மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 5 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு என வலியுறுத்திடும். ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில்வதை மறுக்கின்ற வகையில் பல்வேறு செயல் விதிகளை உள்ளடக்கியதுமான "தேசிய மருத்துவ ஆணைய மசோதா - 2017" நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளதை மத்திய அரசு திரும்பப்பெறுமாறு என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 11:


முன்மொழிவு: குடந்தை ஆனந்தவள்ளி


மகாராட்டிரா மாநிலத்தில் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்ட பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரை கொன்ற குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் தாமதம் காட்டியதால் தொடர்ந்து கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் என பல பகுத்தறிவாளர்களும் ஒரே வித வழிமுறையில் கொல்லப்பட்டனர். இந்த கொலைகள் குறித்த விசாரணையின் மூலம் மேலும் சில பகுத்தறிவாளர்கள் கொலை செய்யப்பட உள்ளதாகவும், அந்தப்பட்டியலில் குறிப்பாக கருநாடக மாநிலப் பேராசிரியர் கே.எஸ். பகவான் அவர்களும், தமிழகத்தில் உள்ள சில எழுத்தாளர்களும் உள்ளனர் என்பதுவும் தெரியவந்துள்ளது. தமிழக அரசும், அண்டை மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்தகைய நிகழ்வுகள் தொடராமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 12:


முன்மொழிவு: முருகானந்தம்


அண்மையில் 'நக்கீரன்' ஏட்டின் ஆசிரியரை - அவரது பத்திரிகைப் பணியினைத் தடுக்கும் விதமாக, சற்றும் பொருத்தமில்லாத சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப் பட்டதை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. நக்கீரன் ஏட்டின் ஆசிரியர் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124-இன் கீழ் கைது செய்யப்பட்டது பொருத்த மில்லாதது எனக்கூறி அவரை விடுதலை செய்திட உத்தரவிட்ட நீதிமன்றத்தை இக்கூட்டம் பாரட்டுகிறது. பத்திரிகை சுதந்திரத்தைப் பறித்திட்ட நிகழ்ச்சியினைக் கண்டிக்கும் விதமாகவும் இத்தகைய நிகழ்வுகள் தொடரக் கூடாது என வலியுறுத்தும் விதமாக அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும் ஒருமுகப்படுத்தி அரசுக்குக் கடுமை யான கண்டனத்தை தெரிவித்த 'விடுதலை' ஏட்டின் ஆசிரியர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்குப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் பாராட்டுதலையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 13:


முன்மொழிவு: இரு. கிருஷ்ணன்


இயக்கப் பிரச்சார அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க பணியான, இயக்க ஏடுகளான 'விடுதலை', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' (The Modern Rationalist) இதழ்களுக்கு சந்தா சேர்ப்பதில் தனிப்பட்ட அக்கறை காட்டுமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மேலும் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தற்பொழுது முனைப்பாக மேற்கொண்டுவரும் தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஏட்டிற்குச் சந்தா சேர்த்திடும் சிறப்புப் பணியினை பொறுப்பாளர்கள் செவ்வனே செய்து தங்களது பகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட சந்தா அளவினை விரைவில் நிறைவேற்றிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.



-  விடுதலை நாளேடு, 20.10.18