உலக நாத்திகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலக நாத்திகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஜூலை, 2024

திருச்சியில் டிசம்பர் 28–29 நாள்களில் உலக நாத்திகர் – பகுத்தறிவாளர் – மனிதநேயர் – சுதந்திர சிந்தனையாளர் மாநாடு!

 


விடுதலை நாளேடு

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர்

சங்கக் கூட்டமைப்பின் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு!

சென்னை, ஜூலை 3 – உலக நாத்திகர், பகுத்தறிவாளர், மனிதநேயர், சுதந்திர சிந்தனையாளர் மாநாடு திருச்சியில் டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.

இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 30.6.2024 அன்று காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டத்தின் தேசியத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் தலைமையேற்று நடத்தினார். கூட்டத்தில், கூட்டமைப்பின் தேசியச் செயலாளர் பேராசிரியர் முனைவர் சுடேஷ் கோடேராவ், செயற்குழுவில் அங்கம் வகித்திடும் தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும், கூட்டமைப்பின் துணைத் தலைவருமான இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

21 மாநிலங்களில் செயல்பட்டுவரும் – கேரளா, கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு, செயலாளர் பாவலர் செல்வமீனாட்சி சுந்தரம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் வடசென்னை மாவட்ட செயலாளர் இராமு ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டமைப்பின் அடுத்த தேசிய மாநாட்டினை, பகுத்தறிவாளர் கழகத்தின் முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் பங்கேற்று உரை

இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் வேண்டுதலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் என்ற நிலையில் பங்கேற்று உரையாற்றினார்.
தமிழர் தலைவரின் உரைச் சுருக்கம் வருமாறு:

சமுதாயத்திற்குக் கேடு ஏற்படுத்திவரும் மதவெறியை, மூடநம்பிக்கைகளை எதிர்த்து களமிறங்கி போராடி வருவதில் பகுத்தறிவாளர் சங்கங்கள் ஒரு குறிப்பிடத்தகுந்த சிறப்பான பணியினை ஆற்றி வருகின்றன. அவை ஆற்றிய களப்பணிகளால் நாட்டில் ஒரு மாறுதலான அரசியல் சூழல் ஏற்படும் என நினைத்திருந்த நேரத்தில், மதவெறி அமைப்புகளுக்கு ஊக்கம் அளிக்கும் சக்தியினர் மீண்டும் அதிகார நிலைக்கு வந்துள்ளனர். எந்தச் சோதனையினையும் சாதனையாக்கிக் கொள்ளும் பகுத்தறிவாளர் சங்கத்தினர் நடப்புச் சூழலையும் நேர்கொண்டு சமுதாயத்தில் மக்களிடம் விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தி விடுவார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.

திருச்சியில் மாநாடு

பகுத்தறிவாளர்களின் செயல்பாடு உலகளாவிய மக்களுக்குரியது; அனைவருக்கும் தொடர்புடையது. அந்த வகையில், பன்னாட்டு பகுத்தறிவு, மனிதநேய, நாத்திக, சுதந்திர சிந்தனைமிக்க அறிஞர்களை – அமைப்பின் தலைவர்களை அழைத்து, தமிழ்நாட்டில் ஒரு மாநாடு நடத்திடலாம். தமிழ்நாட்டின் மய்யத்தில் இருக்கும் திருச்சி மாநகரில் அந்த மாநாட்டினை நடத்திடுவோம்.

வருகின்ற டிசம்பர் திங்கள் 28, 29 ஆகிய இரு நாள்களில் மாநாட்டினை நடத்திடுவோம். இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தேசிய மாநாட்டினையும் சேர்த்து மிகப்பெரும் மாநாடாக நடத்திடுவோம். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நடைபெறும் காலத்தில் இந்த உலக மாநாடு நடைபெறுவது சிறப்புக்குரியது.
இரண்டு நாள் மாநாட்டிலும் அறிஞர் பெருமக்கள், முற்போக்குக் கொள்கையாளர்கள் பங்கேற்று உரையாற்றுவர். மாநாட்டின் நோக்கத் தலைப்பில் பங்கேற்பாளர்கள் கட்டுரை படித்திடவும், தனி அரங்கு நிகழ்ச்சிகளாகவும் இரண்டு நாள்களும், திருச்சியில் மக்கள் பங்கேற்கும் வகையில் திறந்தவெளியில் பொதுக் கூட்டம் நடைபெறும். மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் நடத்தப்படும்.

கடந்த காலங்களில் இரண்டு உலக நாத்திகர் மாநாடுகள் மற்றும் பல கழக மாநாடுகளை நடத்திக் காட்டிய திருச்சி நகரில், இரண்டு நாள் மாநாடு நடைபெறுவது மக்களுக்கும், பகுத்தறிவாளர் சங்கத்தினருக்கும் ஆக்கமும், ஊக்கமும் நிச்சயம் அளித்திடும்.

மாநாடு குறித்த தொடர் பணிகள் பற்றிய ஆலோசனை களை கூட்டமைப்பின் அங்கமாக உள்ள சங்கத்தினர் தெரிவிக்கலாம். மாநாட்டினை வெற்றிகரமாக அனைவரது ஈடுபாட்டுடன் நடத்திடுவோம்.
– இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களுக்கும், தேசியச் செயலாளர் பேராசிரியர் முனைவர் சுடேஷ் கோடேராவ் அவர்களுக்கும் பயனாடை அணிவித்து வரவேற்று சிறப்புச் செய்தார்.

 

சனி, 24 ஏப்ரல், 2021

நான்காவது நான்காவது உலக நாத்திகர் மாநாடு!


உலக நாத்திகர் மாநாட்டில்கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

நான்காவது உலக நாத்திகர் மாநாடு ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் உள்ள பென்ஸ் சர்க்கிளில் நாத்திக கேந்திரத்தில் 4.1.1996 அன்று துவங்கியது. மாநாட்டிற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாத்திகர்களும், அறிஞர்களும் வந்திருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து நம் கழகத் தோழர்கள் உள்பட 108 நாத்திகர்களுடன் கலந்து கொண்டோம். முதல் நாள் நிகழ்வில் வரவேற்புரையாற்றுகையில், “தந்தை பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தை விரிவாக எடுத்துரைத்தேன். மனித நேயத்தை வலியுறுத்தி பெரியார் ஆற்றிய தொண்டினை விளக்கிப் பேசினேன். இன்றைய சூழ்நிலையில் விஞ்ஞான சாதனங்களை தமக்குச் சாதகமாக்கி அஞ்ஞானத்தைப் பரப்புவதற்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திப் பேசினேன். அந்த வரவேற்பு உரையோடு மாநாட்டுப் பிரதிநிதிகளின் கவனத்திற்கு மாநாட்டில் முக்கிய விவாதமாக எடுத்துக்கொள்ள பத்து யோசனைகளையும் முன்வைத்து அதனை இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.’’ அதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கு வந்திருந்த இங்கிலாந்து மனிதநேய சங்கத்தின் தலைவர் சர்.ஹெர்மன் பான்டி தலைமை உரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த கார்ட்டூனிஸ்ட் மற்றும் பத்திரிகையாளர் அபு ஆபிரகாம், வி.சோபனதிரீஸ்வரராவ், சரசுவதி கோரா, கே.சுப்பாராஜு, விஜயவாடா நகர மேயர் டி.வெங்கடேசுவரராவ், பன்னாட்டு மனிதநேய கழகத்தின் தலைவர் ஜேன் லைன் வில்சன், அமெரிக்காவின் நாத்திகத் தலைவர் லீபேக்கர், ஆஸ்திரேலிய நாத்திக சங்கத்தின் பிரதிநிதி நார்மன் டைலர், அய்ரோப்பிய நாத்திக சங்கத்தின் உபதலைவர் ராபின் ஜோகன்னஸ் எனப் பல முக்கியமானோர் வந்திருந்தனர். அவர்களிடையே கருத்துப் பரிமாற்றத்தையும் செய்துகொண்டோம்.

இரண்டாம் நாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த நாத்திக அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டின் குறிக்கோளாக, “நம்பிக்கையான எதிர்காலத்திற்குப் பயனுள்ள நாத்திகம்’’“Positive Atheism for a Positive Future” என்கிற குறிக்கோளை முன்வைத்து மாநாடு நடைபெற்றது. கழகத்தின் சார்பில் வந்திருந்த ராஜதுரை, அருள்மொழி, சுனந்தா சேத், டாக்டர் நடராசன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். ஒரிசாவிலிருந்து வந்து உரையாற்றிய பேராசிரியர் ந.ராமச்சந்திரா தந்தை பெரியாரின் கருத்துகளால் நாத்திகவாதி ஆனதைச் சுட்டிக்காட்டினார். தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தை, தான் மேற்கொண்டதாகக் கூறினார்.

மாநாட்டின் இறுதி நாளில் நிறைவுரையாற்றுகையில், “மாநாட்டில் பங்கு கொண்டு உரையாற்றுவதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த செய்தியைப் படித்து மிகவும் வியந்து அதனை பெரியாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். தந்தை பெரியார் அந்தச் செய்தியைப் படித்துவிட்டு மிகவும் நிதானமாக, “மூடநம்பிக்கை என்பது இந்திய நாட்டிற்கு மட்டுமே உரித்தானது அல்ல; அது அமெரிக்கா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது’’ என என்னிடம் குறிப்பிட்டார். ஆகவே, இந்த மாநாட்டின் தத்துவமாக, மனித நேயத்தை, நாத்திகத்தைப் பரப்புகின்ற ஒளிவிளக்குகளாக நாம் செல்ல வேண்டும். சுயமரியாதை கொண்ட வாழ்க்கையை அமைத்திட நாம் அனைவரும் கூட்டுப் போராளிகளாக இருப்போம். என்னிடம் பல வெளிநாட்டு நண்பர்கள், திராவிடர் கழகத்தினர் கருப்புச் சட்டை அணிந்துள்ளதற்கான காரணத்தைக் கேட்டனர். இந்தச் சமுதாயம் இன்றும் இருளில் உள்ளதை உலகுக்குத் தெரிவிக்கின்ற வகையில் நாங்கள் கருஞ்சட்டை அணிகிறோம் என்றேன். நாம் ஒரு அமைதியான புரட்சியைச் செய்கிறோம். பெரியார், கோரா, எம்.என்.ராய் ஆகியோரது கருத்துகளே நம்மை வழிநடத்துகின்றன.

சுயமரியாதை, மனிதநேயம், பகுத்தறிவுச் சிந்தனைகள் ஆகிய இவையே உலகுக்கு வழிகாட்டக்கூடியவை! புதிய உலகை உருவாக்குவோம். இந்தப் பணியில் திராவிடர் கழகம் தனது முழு ஈடுபாட்டையும் செலுத்தும். வாழ்க பெரியார்!’’ என்பன போன்ற பல கருத்துகளை மாநாட்டில் தெரிவித்து நிறைவு செய்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஏப்ரல் 16-30.21