சனி, 24 ஏப்ரல், 2021

நான்காவது நான்காவது உலக நாத்திகர் மாநாடு!


உலக நாத்திகர் மாநாட்டில்கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

நான்காவது உலக நாத்திகர் மாநாடு ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் உள்ள பென்ஸ் சர்க்கிளில் நாத்திக கேந்திரத்தில் 4.1.1996 அன்று துவங்கியது. மாநாட்டிற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாத்திகர்களும், அறிஞர்களும் வந்திருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து நம் கழகத் தோழர்கள் உள்பட 108 நாத்திகர்களுடன் கலந்து கொண்டோம். முதல் நாள் நிகழ்வில் வரவேற்புரையாற்றுகையில், “தந்தை பெரியாரின் நாத்திகப் பிரச்சாரத்தை விரிவாக எடுத்துரைத்தேன். மனித நேயத்தை வலியுறுத்தி பெரியார் ஆற்றிய தொண்டினை விளக்கிப் பேசினேன். இன்றைய சூழ்நிலையில் விஞ்ஞான சாதனங்களை தமக்குச் சாதகமாக்கி அஞ்ஞானத்தைப் பரப்புவதற்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திப் பேசினேன். அந்த வரவேற்பு உரையோடு மாநாட்டுப் பிரதிநிதிகளின் கவனத்திற்கு மாநாட்டில் முக்கிய விவாதமாக எடுத்துக்கொள்ள பத்து யோசனைகளையும் முன்வைத்து அதனை இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.’’ அதனைத் தொடர்ந்து மாநாட்டிற்கு வந்திருந்த இங்கிலாந்து மனிதநேய சங்கத்தின் தலைவர் சர்.ஹெர்மன் பான்டி தலைமை உரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த கார்ட்டூனிஸ்ட் மற்றும் பத்திரிகையாளர் அபு ஆபிரகாம், வி.சோபனதிரீஸ்வரராவ், சரசுவதி கோரா, கே.சுப்பாராஜு, விஜயவாடா நகர மேயர் டி.வெங்கடேசுவரராவ், பன்னாட்டு மனிதநேய கழகத்தின் தலைவர் ஜேன் லைன் வில்சன், அமெரிக்காவின் நாத்திகத் தலைவர் லீபேக்கர், ஆஸ்திரேலிய நாத்திக சங்கத்தின் பிரதிநிதி நார்மன் டைலர், அய்ரோப்பிய நாத்திக சங்கத்தின் உபதலைவர் ராபின் ஜோகன்னஸ் எனப் பல முக்கியமானோர் வந்திருந்தனர். அவர்களிடையே கருத்துப் பரிமாற்றத்தையும் செய்துகொண்டோம்.

இரண்டாம் நாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த நாத்திக அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டின் குறிக்கோளாக, “நம்பிக்கையான எதிர்காலத்திற்குப் பயனுள்ள நாத்திகம்’’“Positive Atheism for a Positive Future” என்கிற குறிக்கோளை முன்வைத்து மாநாடு நடைபெற்றது. கழகத்தின் சார்பில் வந்திருந்த ராஜதுரை, அருள்மொழி, சுனந்தா சேத், டாக்டர் நடராசன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். ஒரிசாவிலிருந்து வந்து உரையாற்றிய பேராசிரியர் ந.ராமச்சந்திரா தந்தை பெரியாரின் கருத்துகளால் நாத்திகவாதி ஆனதைச் சுட்டிக்காட்டினார். தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தை, தான் மேற்கொண்டதாகக் கூறினார்.

மாநாட்டின் இறுதி நாளில் நிறைவுரையாற்றுகையில், “மாநாட்டில் பங்கு கொண்டு உரையாற்றுவதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த செய்தியைப் படித்து மிகவும் வியந்து அதனை பெரியாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். தந்தை பெரியார் அந்தச் செய்தியைப் படித்துவிட்டு மிகவும் நிதானமாக, “மூடநம்பிக்கை என்பது இந்திய நாட்டிற்கு மட்டுமே உரித்தானது அல்ல; அது அமெரிக்கா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது’’ என என்னிடம் குறிப்பிட்டார். ஆகவே, இந்த மாநாட்டின் தத்துவமாக, மனித நேயத்தை, நாத்திகத்தைப் பரப்புகின்ற ஒளிவிளக்குகளாக நாம் செல்ல வேண்டும். சுயமரியாதை கொண்ட வாழ்க்கையை அமைத்திட நாம் அனைவரும் கூட்டுப் போராளிகளாக இருப்போம். என்னிடம் பல வெளிநாட்டு நண்பர்கள், திராவிடர் கழகத்தினர் கருப்புச் சட்டை அணிந்துள்ளதற்கான காரணத்தைக் கேட்டனர். இந்தச் சமுதாயம் இன்றும் இருளில் உள்ளதை உலகுக்குத் தெரிவிக்கின்ற வகையில் நாங்கள் கருஞ்சட்டை அணிகிறோம் என்றேன். நாம் ஒரு அமைதியான புரட்சியைச் செய்கிறோம். பெரியார், கோரா, எம்.என்.ராய் ஆகியோரது கருத்துகளே நம்மை வழிநடத்துகின்றன.

சுயமரியாதை, மனிதநேயம், பகுத்தறிவுச் சிந்தனைகள் ஆகிய இவையே உலகுக்கு வழிகாட்டக்கூடியவை! புதிய உலகை உருவாக்குவோம். இந்தப் பணியில் திராவிடர் கழகம் தனது முழு ஈடுபாட்டையும் செலுத்தும். வாழ்க பெரியார்!’’ என்பன போன்ற பல கருத்துகளை மாநாட்டில் தெரிவித்து நிறைவு செய்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஏப்ரல் 16-30.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக