வியாழன், 29 ஏப்ரல், 2021

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாடு, சென்னை பெரியார் திடல் 10.1.1996


உலக நாத்திகர் மாநாட்டில்கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

பன்னாட்டு நாத்திக பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு அழைப்பாளர்களுடன் ஆசிரியர்

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாடு சென்னை பெரியார் திடலில் 10.1.1996 அன்று வெகு சிறப்புடன் நடைபெற்றது. மாநாட்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், பெரியார் பிஞ்சுகள், இளைஞரணி, மகளிரணியினர், மாணவரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர்கள் என அனைவரும் கழகக் கொடியினை உயர்த்திப் பிடித்தவண்ணம் கலந்துகொண்டனர். ‘தீ மிதி’ நிகழ்வும், மாநாட்டு மேடையில் நடைபெற்றது. திராவிடர் கழக அமைப்பாளர் பேபி சமரசத்தின் மகன் செல்வன் எழிலனுக்கும், ஒசூர் மாணிக்கவாசகம் தனலட்சுமி ஆகியோரின் செல்வி செந்துவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து திருமணம் நடத்தி வைத்தேன்.

மாநாட்டில் தமிழக நிதி அமைச்சர் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நடிகர் இனமுரசு சத்யராஜ், எம்.டி.கோபால கிருட்டினன், ஆந்திர மாநிலம் விஜயவாடா, கோரா நாத்திக மய்யத்தின் அமைப்பாளர் இலவணம், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாத்திக அமைப்பின் அதிகாரப் பூர்வப் பங்கேற்பாளரான நார்மன் டெய்லர், அமெரிக்காவைச் சேர்ந்த திருமதி பார்பராஸ் டாக்கர், ஜெர்மனியைச் சேர்ந்த ஃப்ராங்க் ஷீட், லண்டனைச் சேர்ந்த பிரிட்டீஷ் ஹுமனிஸ்ட் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ஹாரி ஸ்டோப்ஸ் ரோப் ஆகியோர் உரையாற்றினார்கள். முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுத் தலைமை உரையாற்றுகையில், “ஒரு காலத்தில் ரசல், இங்கர்சால் போன்றவர்களை நாம் இங்குக் கொண்டு வந்தோம். இன்று தந்தை பெரியாரை பிற நாட்டவர்கள் கொண்டு செல்கிறார்கள். இது ஒரு மகிழ்ச்சிக்குரிய திருப்பம்! தந்தை பெரியாரின் தத்துவம். தலைமுறை இடைவெளி யில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நம்முடைய இயக்கம், தமிழகத்தைத் தாண்டி, எல்லைகளைக் கடந்து உலக மானிட இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது’’ என்பன போன்ற தந்தை பெரியாரின் பல கருத்துகளை எடுத்துக் கூறினேன்.

மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாட்டினைத் தொடர்ந்து, 11.1.1996 அன்று தஞ்சை வல்லத்தில் பன்னாட்டு நாத்திக பகுத்தறிவாளர்கள் Lasse Siren (Finland), Harie Bols (Holland), Robyn Johannes (Belgium), Robert Morgan (U.S.), Pertti Holopa Nien (Sweedish), Herma Mittendorff (Holland), Eric Jacob (Germany), Norman Taylor (Australia), G.Lavanam (Vijayawada), Everelt Cross ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டாகத் தந்தை பெரியார் முழு உருவச் சிலையினைத் திறந்து வைத்தனர். அறிஞர்களின் ஆங்கில உரையினை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கு.வெ.கி.ஆசான் அவர்கள் மொழிபெயர்த்துக் கூறினார். நிகழ்வில் நிறைவுரையாற்றுகையில், “சிலை அமைப்புக் குழுவினருக்கும், கழகத் தோழர்களும், சிலையினை அன்பளிப்பாக வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் கு.தங்கமுத்து, ஏணிப்படி அமைத்துத் தந்த கல்வி வள்ளல் ‘வீகேயென் கண்ணப்பன், சிலையின் அடிபீடத்தை சிறப்பாக உருவாக்கித் தந்த ஈஸ்வரனார், வேழவேந்தன் ஆகியோருக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தேன். நமது அழைப்பின் பேரில் கலந்துகொண்ட பன்னாட்டு நாத்திகர்களுக்கு நினைவுப் பரிசளித்து, பாராட்டையும் தெரிவித்து, பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகள் காலத்தைக் கடந்து என்றும் நாட்டிற்குத் தேவை’’ என பல கருத்துகளை கூறினேன். பன்னாட்டு நாத்திகர்களை வழி நெடுக கழகத் தோழர்கள் உற்சாகம் பொங்க வரவேற்றனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஏப்ரல் 16- 30 .21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக