திங்கள், 22 ஜனவரி, 2018

உலக நாத்திகர் மாநாட்டு-3

ஆயுதத்தால் வெல்லப்படுவதல்ல உலகம்

நாத்திகம் - அதன் மனிதநேயமே நம்பிக்கை ஒளி!

தமிழர் தலைவர் தலைமை உரை

- தொகுப்பு: மின்சாரம்



உலகை வெல்லுவது ஆயுதம் அல்ல - நாத்திகம் அதன் மனிதநேயமே மானுடத்திற்கு நம்பிக்கை ஒளி என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

திருச்சி பெரியார் மாளிகை வளாகத்தில் நேற்று (6.1.2018) மாலை நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் அவர் தெரிவித்த கருத்தின் சுருக்கம் வருமாறு:

உலகத்தின் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் இந்த உலக நாத்திகர் மாநாட்டுக்கு வருகை தந்துள்ளீர்கள். அதற்காக நாங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாம் பேசும் மொழிகள், தமிழ், ஆங்கிலம், பஞ்சாபி, இந்தி, மராட்டிய மொழிகளாக இருக்கலாம் - ஆனால் நம்மை இணைப்பது மனிதநேயம், மனித சமத்துவம் என்னும் பொது மொழி. இவற்றிற்காக நாம்  கொண்டிருக்கும் மகத்தான தத்துவம் தான் நாத்திகம்.

நமது அன்பு செல்வம் கவிஞர் கனிமொழி சில அருமை யான கேள்விகளை முன் வைத்தார். ஒக்கிப் புயலால் மீனவர்கள் நூற்றுக்கணக்கில் மரணம் அடைந்தார்களே - அவர்களை இழந்து குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு ஆளானார்களே அவர்களை எந்தக் கடவுள் காப்பாற்றியது என்ற நியாயமான கேள்விகளைக் கேட்டார்.

இதற்குத் தந்தை பெரியார் கேட்ட இன்னொரு கேள்வி யில் பதில் இருக்கிறது.  தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள் நம்மை எப்படி காப்பாற்றுவார் என்ற கேள்வியை முன் வைத்தார் தந்தை பெரியார்.

கோயிலில் திருட்டிலிருந்து சிலைகளைக் காப்பாற்றுவ தற்கே காவல் துறையில் தனிப் பிரிவே இருக்கிறது.

எல்லாம் கடவுள் செயல், அவனின்றி ஓரணுவும் அசையாது என்கிற - பக்தனைப் பார்த்து தந்தை பெரியார் கேட்டார்; "நீ வீட்டை விட்டு  வெளியே வரும்போது, கதவைப் பூட்டினாயா? பூட்டாமல் வந்தாயா? அவனன்றி ஓரணுவும் அசையாது என்றால் திருட்டுக்கு யார் பொறுப்பு? கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் தானே வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்தாய்?" என்று தந்தை பெரியார் கேட்பார். எந்தப் பக்தன் பதில் சொன்னான்?

மக்கள் தொகை கட்டுப்பாடு - ஃபேமிலி பிளானிங் என்பதற்காக மருத்துவத்துறை இருக்கிறது.

கடவுள் தான் பிள்ளைகளைக் கொடுப்பான் என்றால் அதனைத் தடுப்பது இந்தத் துறை தானே! மருத்துவத் துறை என்பது ஆன்டி காட் - தீயணைப்புத் துறை என்பதும் அக்னி பகவானுக்கு எதிரிதானே - அதுவும் ஆன்டிகாட் தானே! தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பேசும்போது கடவுளை எதிர்க்கும் நாத்திகர்களே என்று விளித்துதான், தன் பேச்சைத் தொடங்கினார் பெரியார்.

கடவுள் எதிர்ப்பு என்பது வெறும் மூடநம்பிக்கை எதிர்ப்பு மட்டுமல்ல; அந்தக் கடவுள்தான் ஜாதி - தீண்டாமைக்குக் காரணம், பெண்ணடிமைக்குக் காரணம். இவற்றை ஒழிக்க விரும்புவோர் யாராகவிருந்தாலும் அவற்றிற்கு மூல காரணமான கடவுளை - அதன் மீதான நம்பிக்கையை எதிர்த்து தானே ஆக வேண்டும்?

இந்த மாநாட்டைப்பற்றிக்கூட சொல்லுவார்கள், எழுதுவார்கள். பார்த்தீர்களா? பார்த்தீர்களா - இந்து மதக் கடவுளைப் பற்றி தானே பேசினார்கள், முசுலிம்களைப் பற்றி கிறித்தவர்களைப்பற்றிப் பேசினார்களா என்று கேட்பார்கள்.

நூற்றுக்கு 80 சதவீதத்துக்கு மேலிருக்கிற மக்களைப் பாதிக்கும் மதத்தைப்பற்றியும், கடவுளைப் பற்றியும் தானே முன்னுரிமை கொடுத்துப் பேச முடியும்?

லண்டனிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் பிரதி நிதிகள் இந்த மாநாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களைக் கேளுங்கள், நீங்கள் எந்த மதத்தைப் பற்றி, கடவுளைப் பற்றி விமர்சிப்பீர்கள் என்று கேட்டால் கட்டாயம் கிறித்தவ மதத்தை  பற்றிதான் விமர்சிப்போம் என்பர்; "நீங்கள் ஏன் இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதில்லை" என்று அவர்கள் நாட்டில் யாரும் கேட்க மாட்டார்கள்.

நாத்திகவாதிகளாகிய நமக்கு ஒழுக்கம் முக்கியம். மத நம்பிக்கைவாதிக்கு அது முக்கியமல்ல. எந்தக் குற்றத்தையும் செய்து விட்டு எளிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம். குற்றம் செய்தவன் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுதான் நாத்திகவாதியின் கருத்து.

 

இதுதான் பக்தி வளர்க்கும் ஒழுக்கம்!

இன்றைக்கு மாலையில் வெளி வந்துள்ள ஓர் ஏட்டில் ஒரு செய்தி. திருமங்கை ஆழ்வார் என்ற பக்தனைப்பற்றி  - சோழப் பேரரசின் தளபதியாக இருந்த திருமங்கை, சிறீ ரெங்கநாதன் கோயிலுக்கு மதில் சுவர் எழுப்பிட வழிப்பறியில்  ஈடுபட்டனாம். இது அய்பிசி 420படி குற்றம் அல்லவா? ரெங்கநாதன் கடவுள் என்ன செய்தாராம்? அவன் திருட்டைக் கண்டுபிடிக்க மாறுவேடம் போட்டுச் சென்றபோது அந்தத் ரெங்கநாதக் கடவுளிடமே வழிப்பறி செய்தானாம். அவன் பக்தியை மெச்சி அவன் காதில் 'ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தை ஓதினானாம். அன்றுமுதல் திருமங்கைக்கு ஆழ்வார் பட்டம். திருட்டுப் பயலுக்குப் பெயர் திருமங்கை ஆழ்வாராம் (பலத்த சிரிப்பு, கைதட்டல்). இதுதான் பக்தி வளர்க்கும் ஒழுக்கம்.

(திருச்சிப் பொதுக் கூட்டத்தில்

தமிழர் தலைவர் கி. வீரமணி 6.1.2018)

கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாதவர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். மும்பையில் நரேந்திர தபோல்கர், கோவிந்தபன்சாரே, கருநாடகத்தில் கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய பகுத்தறிவாளர்களை இந்துத்துவ வெறியர்கள் சுட்டுக் கொல்லவில்லையா? தமிழ்நாட்டில் கோவையில் பாரூக் என்பவரை மதவெறியர்கள் படுகொலை செய்யவில்லையா? என் உயிருக்கே அய்ந்து முறை குறி வைத்தார்களே!

மம்சாபுரத்தில் - தம்மம்பட்டியில் - சென்னையில் என்று  குறி வைத்தனர். அதற்காக அஞ்சி ஒதுங்கி விடவில்லையே! தந்தை பெரியார் கொடுத்த அந்தக் கொள்கைச் சுடரை ஏந்திச் சென்று கொண்டுதான் உள்ளேன். நல்ல பொருளுக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும் என்றார் தந்தை பெரியார்.

நாத்திகமே மானுடத்தின் நம்பிக்கை என்பதுதான் நமது மானுடக் கொள்கை, ஆயுதத்தால் வெல்லப்படுவதல்ல உலகம். மனிதநேயமான நாத்திகக் கொள்கையே உலகை வெல்லும். மனித சமூகத்துக்கு, அமைதிக்கு அதுதான் தேவை.

மதங்களால் சிந்தப்பட்ட குருதியே அதிகம்

எந்த கடவுள் மக்களைக் காப்பாற்றுகிறது?

கவிஞர் கனிமொழி எம்.பி. கர்ச்சனை

திருச்சியில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட்டுக்கு உலகின் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வந்துள்ளீர்கள்; மகிழ்ச்சியாக இருக்கிறது.

உலகில் பல மதங்கள் இருக்கின்றன. அவை மனிதனைப் பிரிக்கின்றன. ஆனால் நாத்திகம்தான் மனிதர்களை இணைக்கிறது. மதநம்பிக்கைவாதிகள் கடவுளிடம் சென்று, கடவுளே எனக்கு இதைக் கொடு - அதைக் கொடு என்று கேட்கிறார்கள். ஆனால், ஒரு பகுத்தறிவுவாதியோ அறிவைத் தேடிச் செல்லுகின்றான்.

திருச்சியில் பெரியார் மாளிகைக்கு வரும் பொழுது எங்கள் தாத்தா வீட்டுக்கு வந்த உணர்வைப் பெறுகிறோம். விடை பெறும்போது உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு செல்லும் உணர்வைப் பெறுகிறோம்.

ஆசிரியர் அவர்கள் எனது ஆசான் - குரு என்று கூடச் சொல்லலாம். இப்படிப்பட்ட ஒரு மாநாட்டில் பங்கேற்க எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பைப் பெருமையாகக் கருதுகிறேன். நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து திராவிடர் கழகத்தின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் அறிஞர் பெரு மக்களுக்கெல்லாம் என் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியாரென்றால் வெறும் கடவுள் மறுப்பாளர் என்று மட்டும் பார்க்கிறார்கள். அவர் ஏன் கடவுளை மறுக்கிறார் என்பதுதான் முக்கியம்.

மதமும், கடவுளும் மனிதர்களுக்குள் பேதத்தை விதைக்கிறது - கலகங்களை உருவாக்குகிறது. பெண்ணடி¬மையை வலியுறுத்துகிறது. அடக்கு முறைக்கு ஆயுதமாக இருக்கிறது.

அங்கே தான் பெரியார் கடவுள் மறுப்பாளர், மத எதிர்ப்பாளராக வெடிக்கிறார்.

மனிதனுக்கு பகுத்தறிவு தேவை - சுயமரியாதை தேவை, மனிதநேயம் தான் மக்களை இணைக்கும் என்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?

ஆண் - பெண் சமத்துவத்துக்கு உறுதி கூறும் ஒரே ஒரு மதம் உலகில் உண்டா? பெண்கள் உரிமைக்குத் தடையாக இருப்பது - தாய்மைக்குக் காரணமாக இருக்கக் கூடியதையே தூக்கி எறி என்று சொன்ன ஒரே தலைவர் உலகில் தந்தை பெரியார்தான்.

கீதையைப் பற்றி உயர்வாக சொல்லுவார்கள். உண்மையைச் சொல்லப் போனால் ஜாதியை உண்டாக்கியதும், அதற்கு நியாயம் கற்பிப்பதும் கீதைதான்.

உலக யுத்தங்களை விட மனித ரத்தம் சிந்தப்பட்டது மதங்களால் தான்  - மதச்சண்டைகளால்தானே!

பெண்ணுரிமைக்கு எதிராக இருப்பவர்கள் ஆண்களும், கடவுள்களும்தான்.

மனிதனுக்கு எவ்வளவு துயரங்கள், இயற்கைச் சீற்றம்  - எவ்வளவு மனிதர்கள் சாகிறார்கள் - எந்தக் கடவுள் காப்பாற்றியது? கடவுள் மக்களைக் காப்பாற்ற இருக்கிறதா - தண்டனை கொடுக்க இருக்கிறதா?

திரைப் படத்தில்தான் இயக்குநர் கதாநாயகனையும், வில்லனையும் உருவாக்குகிறார் என்றால் அந்த வேலையை கடவுள் ஏன் செய்ய வேண்டும்?

வறுமையையும், நோயையும் கடவுள் ஏன் கொடுக்க வேண்டும்? தாய்த் தந்தைமார்களின் தவறுகளால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக ஒரு குழந்தை ஏன் பிறக்க வேண்டும் -இதற்கெல்லாம் கடவுள் பொறுப்பாளியில்லையா?

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் சில கமிட்டிகளில் நியமனம் செய்வார்கள். வெங்கையா நாயுடு தலைமையிலான உள்துறைக் கமிட்டியில் நானிருந்தேன். திருப்பதிக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது, நானும் சென்றேன். நீண்ட கியூவில் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் நின்றார்கள். பல மணி நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை.

நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால் எங்களுக்கெல்லாம் சிறப்புத் தரிசனமாம். என்னோடு வந்திருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். "உங்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை இல்லை. இங்கே பார்த்தீர்களா இவ்வளவுப் பெரிய கூட்டத்தை" என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம் சொன்னேன். "கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்றால் தரிசனத்தில்கூட ஏனிந்த ஏற்றத் தாழ்வு என்று கேட்டு விட்டு - அதோ ஏழுமலையானுக்கு பெரிய உண்டியல் - பக்தர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள். பக்கத்தில் ஏன் ஸ்டன் துப்பாக்கியோடு போலீஸ்காரர் ஒருவர் உண்டியலுக்குப் பாதுகாப்பு? ஏழுமலையானுக்கு சக்தியில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது" என்று கேட்டேன்.

நாம் இத்தகைய மாநாடுகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள்  அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் கையை இன்னொருவர் பிடித்து, இணைத்துக் கொண்டே பணியாற்றிட வேண்டும்.

ஆணவக் கொலைகளும், ஜாதி மத அடிப்படை வாதங்களும் தகர்க்கப்பட மனிதநேயத்தையும், பகுத்தறிவையும் மக்களிடம் விதைத்துக் கொண்டே இருப்போம் - இருக்க வேண்டும் என்றார் கவிஞர் கனிமொழி.

மதவாதத்தைத் தடுப்பதுதான் பொருள் முதல் வாதம்

மனிதநேயம் என்பதுதான் நாத்திகம் - அறிவியல்வாதம்

எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் சிந்தனை சீற்றம்

உலகின் 18 நாடுகளிலிருந்து 500க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க உலக நாத்திகர் மாநாட்டில் எனக்கும் ஒரு வாய்ப்பளித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு என்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் மனிதநேயமும், அமைதியும், சகோதரத்துவமும் காப்பாற்றப்பட நாத்திகக் கொள்கையை உயர்த்திப் பிடிக்க இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.

பகுத்தறிவுப் பகலவனாகிய தந்தை பெரியார் அவர்கள் - கடவுள் மறுப்பாளரான முழு நாத்திகரான தந்தை பெரியார்  அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார்கள். கடைசி வரை அவர் ஜீரண உறுப்புகள் சரியாக இயங்கின. குரலில் கம்பீரம் இருந்தது. கடைசி வரை பிரியாணி சாப்பிடும் அளவுக்கு செரிமானப் பிரச்சினைகள் ஏதுமில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள ஆத்திகப் பெரு மக்களை நாம் பார்க்கிறோம். பெரியார் அளவுக்கு நீண்ட காலம் அவர்களால் வாழ முடிவதில்லை.

சர்வ சக்தி கடவுள் என்கிறார்கள் அந்தக் கடவுளால் தந்தை பெரியாரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

 





 

- விடுதலை நாளேடு,7.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக