திங்கள், 3 செப்டம்பர், 2018

டில்லியில் பெரியார் மய்யம்


PERIYAR- SOCRATES OF SOUTH EAST ASIA

Friday, 14 May 2010

டில்லியில் பெரியார் மய்யம் திறப்பு

Unmai:May 1-15
posted by Mukilan Murugasan 

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் மனித நேயக் கொள்கைகள், சமூக நீதி மற்றும் கிராமப்புற மேம்பாடு சமூக சேவை, கல்விப் பணி, பகுத்தறிவுப் பிரச்சாரம் ஆகியவற்றைச் செய்யும் பொருட்டும், தந்தை பெரியாரின் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பும் வகையிலும் இந்திய நாட்டின் தலைநகரான டில்லியின் புறநகர்ப் பகுதியில் பாம்நொலி என்ற இடத்தில் பெரியார் மய்யம் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் சீரிய முயற்சியால் உருவாக்கப்பட்டது.

இம்மய்யம் உருவாக திராவிடர் கழகத் தோழர்களின் உழைப்பு அபாரமானது. ஏறத்தாழ 2, 21/2 ஆண்டுகள் தமிழர்களிடம் சென்று நன்கொடை பெற்று இந்த மய்யம் உருவாகக் கடுமையாகக் உழைத்தனர். தமிழர்களின் கடும் உழைப்பாலும் அவர்களின் நிதியுடனும் கட்டப்பட்டது. தமிழர்கள் கொடுத்த நன்கொடையை வைத்து இம்மய்யத்தின் பெரும்பகுதிப் பணிகள் முடிக்கப்பட்டன. தங்கள் அடிமைத்-தளையான தாலியை அகற்றி பெரியார் மய்யத்திற்குக் கொடுத்த கழகக் குடும்பங்களும் உண்டு.

1998 இல் வி.பி.சிங் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 2000ஆம் ஆண்டு (அக்டோபர்) பன்னாட்டு நாத்திக அமைப்பான சர்வதேச மனித நேய மற்றும் அறநெறி மன்றத்தின் தலைவர் லெவி ஃபிராகல் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தில்லியின் முதலமைச்சர் ஷீலா தீக்ஷத், சந்திரஜித்யாதவ்,நி.ரி. மூப்பனார் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் இராஜா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்சிராம், உ.பி. முதல்வர் மாயாவதி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் புது டில்லி முதலமைச்சர் ரூ 5 இலட்சத்தை பெரியார் மய்யத்திற்கு அளிப்பதாகக் கூறினார். இந் நிகழ்ச்சியில் ஏறத்தாழ 1,200 தோழர்கள் பங்கேற்றனர்.

இங்கு கணினிப் பயிற்சி உள்ளிட்ட ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பெரியார் மய்யத்தில் இந்திரப்பிரஸ்த பல்கலைக்-கழகத்தின் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. வகுப்புகளுக்குப் படிப்பு மய்யம் அமைக்கப்பட்டது. சிறப்பான கணினி மய்யம் ஒன்றும் இயங்கியது. வான்படை, எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களும், அருகில் உள்ள கிராமப்புற இளைஞர்களும் இவ்வகுப்பில் சேர்ந்துள்ளனர்.தேசிய திறந்த வெளிப் பள்ளி இப் பெரியார் மய்யத்தை தொழிற்கல்விக் கணினிப் பயிற்சிக்கெனவும் ஏற்றுக்கொண்டது. கட்டிடக் கலைபற்றி அகில உலகக் கருத்தரங்கு பெரிய பல்கலைக்கழகத்தோடு இணைந்து அண்மையில் பெரியர் மய்யம் சார்பில் நடத்தப்பட்டது.

பள்ளிச் சிறுவர்களுக்கு முதல் வகுப்பில் தொடங்கி 12 ஆம் வகுப்பு வரையிலும் பல்வேறு பாடங்களில் குறைந்த கட்டணத்தில் நடத்தப்பட்டன.

உஷா நிறுவனத்தோடு இணைந்து கிராமப்-புறப் பெண்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது.

டில்லி அரசும், இந்திரப்பிரஸ்த பல்கலைக்-கழகமும் பெரியார் மய்யத்தின் அருகில் கணினிப் பயன்பாட்டை மிகுதிப்படுத்தவும் பயிற்சி கொடுக்கவும் முடிவு செய்தனர்.

அதோடு இல்லாமல் அடிக்கடி சமூக நீதி ஆர்வலர்கள் -கூடும் இடமாக பெரியார் மய்யம் ஆனது. கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் தலைவர்களின் சந்திப்புகள் என்று சமூக நீதிக்கான களமாக உருவானதால், மிரண்டு போன பார்ப்பனர்கள் சதி செய்தனர். இந்த பெரியார் மய்யத்தின் பணிகளைக் கண்டு மிரண்ட அன்றைய பாரதீய ஜனதா கட்சியின் அரசாங்கம் 2001 ஆம் ஆண்டு அதை இடித்தது.

மாலை 5 மணிக்கு முறையான தடை ஆணையை உச்ச நீதிமன்றத்தில் பெற்றும் அதிகாரிகள் சட்ட விரோதமாக இடித்தார்கள். பெரியார் மய்யம் இடிக்கப்பட்டதைக் கேட்டவுடன் தமிழர்கள் கொதித்தார்கள் சட்ட நடவடிக்கைகள் தமிழர்களின் நிதியுதவியுடனே எடுக்கப்பட்டன.

தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்-களும் கண்டித்தனர். முன்னாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் தனது உடல் நிலையைப் பாராமல் வந்து சென்னையில் நடந்த கண்டனக் கூட்டத்தில் பங்கு கொண்டார். இந்தச் சம்பவம் நடந்தபின் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அன்றைய பிரதமர் வாஜபேயி உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து நம் தரப்பு நியாயங்களை விளக்கியது.

அதன்பின் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் சீரிய முயற்சியால் டில்லியின் முக்கியப் பகுதியான ஜசோலா என்ற பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு புதிய பெரியார் மய்யம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மய்யம் நொய்டா தேசிய நெடுஞ்-சாலையை ஒட்டி 43,560 சதுர அடி பரப்பளவில் அழகிய கட்டிடமாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம், கணினி மய்யம், அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சி மய்யம் போன்றவை அமைந்துள்ளன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப் பட்டுள்ள கணினிப் பயன்பாடு மற்றும் மேலாண்மை வகுப்புகள் நடை பெறுகின்றன. இங்கு பெரியார் கலாச்சாரக் குழுமம் (Periyar Cultural Centre) ஒன்றைச் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது உலகத் தமிழர்-கள், மனித நேயப் பற்றாளர்கள், சமூக நீதி ஆர்வலர்கள் ஆகியோரை இணைக்கும் மய்யமாகத் திகழும்.

இந்த மய்யம் 2010 மே-_2 அன்று திறக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் திறந்து வைக்கிறார். இதில் தமிழர் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர்கள் டாக்டர் பரூக் அப்துல்லா, ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்-கின்றனர்.

--------------------------------------------------------------------------------

டில்லி பெரியார் மய்ய கட்டுமானப் பணிகள்
ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

1. அமைவிடம் : எண் 1 மற்றும் 2 (1&2), ஜஸோலா, புதுடில்லி நிலப்பரப்பு : ஒரு ஏக்கர்

2. கட்டடம் : அய்ந்து அடுக்குகள் கொண்டது (Five Storied building) கட்டுமானம் : 63,378 சதுர அடிகள் மதிப்பு : சுமார் ரூ.1000 லட்சங்கள்

3. கட்டட வடிவமைப்பு மற்றும் ஆக்கம்: பெரியார் ஆலோசனைக் குழுமம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், வல்லம்-தஞ்சாவூர் மற்றும் அனுராக் அஸோசியேட்ஸ், புதுடில்லி.

4. கட்டடத்தின் சிறப்புத் தன்மைகள்:

தொடக்க காலப் பணிகள் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி, மேனாள் இந்தியப் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோரால் ஏப்ரல் 2005இல் தொடங்கி வைக்கப்பட்டது. பசுமைக் கட்டடம் (Green building) சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் வழக்கமாக பயன்படுத்தப்படும் செங்கற்களுக்குப் பதிலாக, வலுவூட்டப்பட்ட பிணைப்புக் கற்கள் (Stabilised interlocking Blocks) மற்றும் ஆலைச்சாம்பல் கலந்த பிணைப்புக்கற்கள் (Fly Ash interlocking Blocks) கட்டடம் முழுமைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடித்தளம் (Basement) உருவாக்க 7000 கனமீட்டர் அளவு மண் தோண்டப் பட்டுள்ளது. அந்த மண்ணையே பயன்படுத்தி 3.80 லட்ச எண்ணிக்கையிலான வலுவூட்டப்பட்ட பிணைப்புக் கற்கள் திட்ட இடத்திலேயே (Project Site) தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தக் கட்டடத் தேவையைப் பூர்த்தி செய்ய மீதம் 2.26 லட்ச எண்ணிக்கையிலான ஆலைச்சாம்பல் கலந்த பிணைப்புக் கற்கள் நம் வளாகத்திலேயே தயாரிக்கப் பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

கட்டடம் வழக்கமான முறையில் (Conventionally) உருவாக்கியிருக்கும் நிலையில் 19.90 லட்சம் செங்கற்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும். மாறாக 6.06 லட்சம் பிணைப்புக்கற்கள் (ஒரு பிணைப்புக்கல் = 3.25 செங்கற்கள்) கொண்டு கட்டடம் முழுமையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் 19.90 லட்சம் செங்கற்கள் பயன்படுத்தத் தேவையான 6.07 மெட்ரிக் டன் மர அளவு (Deforestation) தவிர்க்கப்பட்டுள்ளது.

புத்தாக்க எரிசக்தி கலன்கள் (Renewable Energy Gadgets) கட்டட முழுமைக்கும் மின்சார சிக்கன விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. (LED ð™¹èœ- Ligh Emitting Diodes) கட்டடத்தில் பயன்படுத்தப்படும் சுடுநீர் தேவையை சூரிய கொதி கலன்கள் (Solar water heaters) மூலம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டடத்தில் உருவாகும் மக்கும் கழிவுகளை (Degradable waste) கழிவை மறுசுழற்சிக்கு உள்படுத்தும் கலன் (Bio-gas Plants) கொண்டு சுற்றுச் சூழலை பாதிக்கும் பசுமைக் குடில் வாயுக்களை, நம் தேவைக்கு உட்படுத்தப்பட்டு மாசற்ற நிலையை உருவாக்கப்பட்டுஉள்ளது.

கட்டடம், தற்காலத்தில் அச்சுறுத்தும் நில நடுக்கம் போன்ற பேரிடர்களிலிருந்து மீளும் வகையில் உள்ள தொழில்நுட்பத்துடன் ஒன்பது அடுக்குகள் கட்டும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெரியார் மய்யக்கட்டடம், அதன் கட்டுமானப் பணிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிஸ்ஸா, பீகார், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, புதுடில்லி ஆகிய மாநிலங்களிலிருந்து கட்டடக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப் பட்டிருப்பது வேறு எந்தக்கட்டடத்திற்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பாகும்

Malaysian Dravidian Association at 05:28

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக