திங்கள், 9 டிசம்பர், 2019

விருதுநகர்: ப.க. பொன்விழா மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்

வடநாட்டுப் பணம் வருகிறது என்பதால் காவிகள் அத்துமீற வேண்டாம்!

சாலை விபத்துகளைவிட ஜனநாயக விபத்து ஆபத்தானது

விருதுநகர்: ப.க. பொன்விழா மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்


விருதுநகர்,டிச.1சாலைவிபத்துக்களைவிட ஜன நாயக  விபத்து ஆபத்தானது; வடநாட்டுப் பணம் வருகிறது என்பதால் காவிகள் அத்துமீற வேண்டாம் என்று திராவிடர்  கழகத் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழகப்

பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்

16.11.2019 அன்று விருதுநகரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

நம்முடைய கழகத் துணைத் தலைவர் அவர்கள் உரையாற்றும்பொழுது ஒரு கருத்தை சொன்னார்கள். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு நீங்கள் வெள்ளமென திரண்டிருக்கிறீர்கள். காலையில் நடைபெற்ற பகுத் தறிவாளர் கழக பொன்விழா தொடக்க மாநாட்டில் அரங்கம் நிரம்பி வழியக்கூடிய அளவிற்கு திரண் டிருந்தீர்கள். அந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்து, பொதுக்கூட்ட நிகழ்ச்சியாக இங்கே கூடியிருக்கிறோம்.

நாட்டிலேயே திராவிடர் கழகம்தான்

முதல் இயக்கம்

இந்த நிகழ்ச்சி நடைபெறக்கூடிய அளவிற்கு, தொடங்கப்பட்ட காலத்திலிருந்து என்ன காரணத்தி னாலோ தெரியவில்லை; இந்த மண், நம்முடைய மண். கரிசல் மண் மட்டுமல்ல, காமராசருடைய பூமி. காமராசரைப் பார்த்து, பச்சைத் தமிழர் என்ற அளவில் வைத்து, சிறப்பாகத் தாங்கியவர் தந்தை பெரியார் அவர்கள். அதுமட்டுமல்ல, நீதிக்கட்சித் தலைவர்கள் எல்லாம் இங்கு வந்தவர்கள். இப்படிப்பட்ட வரலாறு உள்ள இந்த பூமியில், திராவிடர் கழகத்தின் சார்பில் கூட அல்ல, பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், ஒரு அறிவார்ந்த, பதிவு செய்யப்பட்ட அமைப்பு. இன் னுங்கேட்டால், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., நீதிபதிகள் எல்லாம் பங்கேற்ற அமைப்பு, உருவாக்கிய அமைப்பு. இந்த அமைப்பின் பொன்விழா மாநாட்டினை இங்கே நடத்துவதற்கு, இங்கே இருக்கின்ற யாரோ சில அனாமதேயங்கள் மொட்டைக் கடிதம் எழுதுவதோ அல்லது காவல்துறையினர் மிரட்டல் கடிதங்களை வைத்துக்கொண்டு, இங்கே கூட்டம் நடத்த அனுமதி யில்லை என்று சொல்வது. அதற்குப் பொருத்தமில்லாத அளவிற்கு அவர்களையே பார்த்து மற்றவர்கள் கேலி செய்து சிரிக்கக்கூடிய அளவிற்கு இருப்பது நியாயமா? காவல்துறையை மிகவும் மதிக்கக்கூடிய இயக்கம் இருக்கிறது என்றால், நாட்டிலேயே திராவிடர் கழகம் தான் முதல் இயக்கம். அதைத்தான் எங்களுடைய துணைத் தலைவர் அவர்கள் சொன்னார்கள்.

அனைவருக்கும் அனைத்தும்

கிட்டுவதுதான் சமூகநீதி

இந்த இயக்கம் அப்படிப்பட்ட ஒரு இயக்கம். சட்டம், ஒழுங்கு, அமைதி - இவை அத்தனையும் காப் பாற்றப்படவேண்டும். சமூக நல்லிணக்கம் நிறைந்து இருக்கவேண்டும். எந்த இடத்திலும் ஜாதிச் சண்டை களோ, மதச் சண்டைகளோ இருக்கக்கூடாது. மனித நேயம் மலரவேண்டும். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிட்டுவதுதான் சமூகநீதி. சமத்துவம் என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யக்கூடிய ஒரு இயக்கம் எங்கள் இயக்கம்.

நாங்கள் என்ன அரசியலுக்குப் போகக்கூடியவர் களா? குறைந்தபட்சம் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலுக் காவது எங்களுடைய தோழர்கள் போட்டியிடலாம் என்று சொல்லி, அதன் காரணமாக நாக்கிலே தேனைத் தடவி, எங்கள் பின்னாலே ஆட்களைக் கூட்டி வந்திருப்பவர்களா?

மக்களுக்காகப் பாடுபடுகிற ஒரு இயக்கம்.

இதோ வெள்ளம்போல இங்கே அமர்ந்திருக்கிறார் களே, இவர்கள் எல்லாம் பணம் கொடுத்து அழைத்து வந்தவர்களா? இதுவரையில் அப்படிப்பட்ட ஒரு நிலை இல்லாத ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இந்த இயக்கம் ஒப்பற்ற ஒரு இயக்கம். மக்கள் இயக்கம். மக்களுக்காகப் பாடுபடுகிற ஒரு இயக்கம். மக்களுக் காக எங்களை நாங்கள் தியாகம் செய்துகொள்வோமே தவிர, மக்களுக்கு ஒரு சிறு தொல்லைகூட கொடுக்காத அளவிற்கு,

பொதுச் சொத்துக்கு நாசமின்றி,

பொது அமைதிக்குப் பங்கமின்றி

பொது ஒழுக்கத்திற்குக் கேடின்றி

நடத்தவேண்டும் என்ற அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த பாதையில், அவர்கள் உருவத்தால் மறைந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் நெருங்குகிற இந்தக் காலகட்டத்தில்கூட, அவ்வளவு கட்டுப்பாடாக இருக்கின்ற இயக்கம் இந்தக் கருஞ்சட்டை இயக்கம் - இந்தப் பகுத்தறிவாளர் கழக இயக்கம்.

எங்களுடைய மாநாடு நடைபெற்றதே, யாருக் காவது இடையூறு உண்டா?

ஊர்வலம் நடத்தக்கூடாது;

கூட்டம் போடக்கூடாது - ஏன்?

இது என்ன நியதி?

அரசமைப்பு சட்டத்தில் இருக்கிற உரிமை என்ன?

மீண்டும் காற்று அடிக்கும்

எச்சிலிலை கீழே வரும்

நாங்கள் எல்லாம் சட்டம் படித்தவர்கள் என்பது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்; நியாயம் தெரிந்தவர்களைப் பார்த்துக் கேட்கிறோம். இந்த நாட்டில் காலூன்ற முடியாதவர்கள் எல்லாம், யாரோ சில பேர் இன்றைக்கு அடித்த காற்றில் மேலே போகின்ற சில எச்சில் இலைகள், மேலே வந்துவிட்டது என்கிற காரணத்திற்காக இந்த எச்சில் இலைகளுக்கு நீங்கள் சல்யூட் அடிக்க லமா? மீண்டும் காற்று அடிக்கும் எச்சிலிலை கீழே வரும்.

நாங்கள் எப்பொழுதும் மேலேயும் போக மாட்டோம்; கீழேயும் போகமாட்டோம்; ஒரே இடம்  நாங்கள் போகக்கூடியது சிறைச்சாலையைத் தவிர வேறு கிடையாது.

லஞ்சம் வாங்கிவிட்டு சிறைச்சாலைக்குப் போகக்கூடியவர்கள் அல்ல; ஊழல் செய்துவிட்டு சிறைச்சாலைக்குப் போகக்கூடியவர்கள் அல்ல. உங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்பதற் காக நாங்கள் சிறைச்சாலைக்குப் போகக்கூடிய வர்கள்.

நாங்கள் சர்வபரிதியாகம்

செய்துகொள்ளக் கூடியவர்கள்

உங்கள் பிள்ளைகள் டாக்டர்களாக வேண்டும் என்பதற்காக, எங்களை நாங்கள் ‘‘சர்வபரிதியாகம்'' செய்துகொள்ளக் கூடியவர்கள்.

உங்கள் பிள்ளைகள் உத்தியோகம் பெறவேண்டும் என்பதற்காக சிறைச்சாலைகளுக்குச் செல்பவர்கள் நாங்கள்.

இப்படிப்பட்ட எங்களுடைய தொண்டர்கள் துறவிகளுக்கும் மேலானவர்கள் என்று மார்தட்டி னாரே தந்தை பெரியார் - அப்படிப்பட்ட ஒரு அற்புத மான இயக்கம் இது.

இது ஏதோ ஒரு சமூக விரோத இயக்கத்தைப் போல-

இது ஏதோ ஒரு தீவிரவாத இயக்கத்தைப் போல-

இது ஏதோ பெரிய பயங்கரவாத இயக்கத்தைப் போல - தவறாக நீங்கள் நினைத்துக் கொண்டு, அனுமதி மறுக்கிறீர்கள்.

மேலதிகாரிகள் சரியாக இருக்கிறார்கள்; புதிதாக வந்த அதிகாரிகள் சரியாக இருக்கிறார்கள். இதற்கு மேல் நான் இந்த சொல்லை சொல்வதற்கு என்னுடைய தகுதிக்குக் குறைவு என்று நினைக்கின்றேன். ஏனென் றால், யாரும் காவல்துறையினரின் மதிப்பைக் குறைக் கக்கூடாது. யார் ஆட்சிக்கு வந்தாலும், காவல்துறையை நம்பித்தான் இருக்கவேண்டும்.

கருஞ்சட்டைப் படை என்கிற காவல்துறை

நமக்குப் பிடிக்காத நிலை என்று கருதியவுடன், காவல்துறையை நாம் கொச்சைப்படுத்திவிட்டு, அத னுடைய மரியாதையை நாம் குறைத்துவிட்டோமே யானால், மீண்டும் நாட்டிற்குப் பாதுகாப்பு இருக்காது.  இராணுவம் எப்படி நாட்டிற்கு மிக முக்கியமோ, அதுபோலத்தான் காவல்துறை. ஆனால், அந்தக் காவல்துறையின் கட்டுப்பாட்டையும் தாண்டி இருக்கிற தனி ஒரு காவல்துறை உண்டு - அதுதான் கருஞ்சட்டைப் படை என்கிற காவல்துறை.

தமிழகத்தில் மட்டுமல்ல, சமுதாய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இங்கே உரையாற்றிய டாக்டர் அம்மையார் சொன்னாரே, அவர் என்ன திராவிடர் கழகத்துக் காரரா? பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்தவரா? ஒரு பிரபலமான டாக்டர். அறிவுபூர்வமான சிந் திக்கக்கூடிய ஒரு புரட்சிகரமான பெண்மணி. அவர் மிகவும் எளிமையாக சொன்னார்.

திராவிடர் கழகத்தினரின் பணியை யாராவது, இந்திய நாட்டில் செய்கிறார்கள் என்று காவல் துறையோ அல்லது வேறு ஏவல் துறையோ சொல் லட்டும்.

இது இந்திய அரசமைப்புச் சட்டம். இதன்மீதுதான் பஞ்சாயத்துத் தலைவரிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் வரை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை பதவிப் பிரமாணம் எடுக்கிறார்கள்.

அதிலே அடிப்படை உரிமை என்பது முன் பகுதி.

அதற்கடுத்து இருக்கக்கூடிய பகுதி, புதிதாக இணைக்கப்பட்ட பகுதி - அதுவும் நெருக்கடி நிலை  காலகட்டத்தில்.

Fundamental duties
51-A, I it shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and Reform.

இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருக் கின்ற அடிப்படைக் கடமைகள்.

நழுவக்கூடாதது, தவறக்கூடாத ஒரு கடமை என்னவென்றால், பல கடமைகள் இருக்கின்றன.

ஆதாரமில்லாமல் பேசிப் பழக்கப்பட்டவர்கள் அல்ல பெரியார் தொண்டர்கள்

51-ஏ,  யார் வேண்டுமானாலும் அதனைப் படித்துப் பார்க்கலாம். ஆதாரமில்லாமல் பேசிப் பழக்கப்பட்ட வர்கள் அல்ல பெரியார் தொண்டர்கள். எனவே, ஆதாரத்தோடுதான் நாங்கள் சொல்லுகிறோம்.

அதில் ஒரு பகுதி,

ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவியல் மனப் பான்மையை வளர்க்கவேண்டும்.

மனிதநேயம்,  ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கக்கூடிய உணர்வு வரவேண்டும்.

அதற்குமேலே சீர்திருத்தம்.

இந்த அடிப்படைக் கடமையை நிறைவேற்றக் கூடிய இயக்கம் நாட்டில், இந்தியாவில், உலகத்தில் பெரியார் இயக்கமான திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகத்தைத் தவிர, இதனை முழு வேலையாக செய்துகொண்டிருக்கிற ஒரே இயக்கம் இந்த இயக் கத்தைத் தவிர வேறு எந்த இயக்கம்?

இந்த இயக்கத்தின் பிரச்சாரம் பரவினால், உங்கள் வேலை சுமை குறையும்.

பெரியார், யாருக்காகப்  பிரச்சாரம் செய்தார்?

இந்த இயக்கத்தினுடைய பிரச்சாரம் பரவினால், கலவரங்கள் இருக்காது; காலிப்பயல்களுக்கு நாட்டில் இடம் இருக்காது.

வாலாட்டலாம் என்று நினைக்கக்கூடாது. மக்கள் தானே திருந்தக் கூடிய நிலையில் இருப்பார்கள்.

நாங்கள் கேட்பது என்ன?

95 வயது வரையில் வாழ்ந்தாரே பெரியார், யாருக்காகப்  பிரச்சாரம் செய்தார்?

பகுத்தறிவு குடும்பத்தின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார், ‘‘தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்; அவருடைய வகுப்பு மாலை நேரத்தில் தொடங்கும். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அறிவுறுத்துவார். மூன்று மணிநேரம், நான்கு மணிநேரம் பேசினார்'' என்றார்.

சாலையோர விபத்துகளைவிட ஜனநாயக விபத்துகள் ஆபத்தானவை

எண்ணிப் பாருங்கள் தோழர்களே, யாரோ சிலர் பேசுகிறார்கள்; கூலிகள், வடநாட்டுக்காரன் பணம் கொடுக்கிறான் என்பதற்காக, வடநாட்டுக் காவிகளின் பணம் வருகிறது என்பதற்காக, இங்கே திடீரென்று பல நேரங்களில் ஜனநாயகத்தில்  விபத்துகள் ஏற்படு வது உண்டு. சாலையோர விபத்துகளைவிட ஜன நாயக  விபத்துகள் ஆபத்தானவை. அப்படிப்பட்ட  ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு வந்துவிட்டார்கள் என்பதற்காக, ஏதோ அதுதான் நிரந்தரம் என்பது போல,

எங்கள்மீது ஒரு குற்றம் சொல்ல முடியுமா?

காலங்காலமாக, 50 ஆண்டுகாலமாக நாங்கள் இந்தப் பணியை செய்துவருகிறோம். ஒரு குற்றம் சொல்ல முடியுமா?

திராவிடர் கழகம் தன்னுடைய பணியை செய்து கொண்டு வருகிறது 75 ஆண்டுகாலமாக - அதனுடைய பவளவிழாவை கொண்டாடுகிறது. யாராவது விரலை நீட்ட முடியுமா? இன்ன குற்றம் என்று சொல்ல முடியுமா? தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டும்.

யாருக்காக நாங்கள் பாடுபடுகிறோம்?

இந்த இயக்கத்தின் கொள்கை என்ன?

இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்றவரை கவிழ்த்துவிட்டு, அந்த நாற்காலியை நாங்கள் பிடிக்கவேண்டும் என்பதற்காகவா?

எங்களைப் பொறுத்தவரையில், ‘‘துறவிக்கு வேந்தன் துரும்பு''

இதனை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எங்களுக்கு எந்த நாற்காலியைப்பற்றியும் கவலை யில்லை. காரணம் என்ன?

எங்களுடைய கொள்கை - சமத்துவம். அதுகூட புரியாத சிலர் சொல்வார்கள். இங்கே நண்பர்கள் விளக்கினார்கள்; தோழர் இராசா அவர்களும் விளக் கினார்கள்; நம்முடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் திருமாவளவன் அவர்களும் சொன்னார்கள்.

கடவுள் மறுப்போ, பார்ப்பன எதிர்ப்போ எங்களு டைய கொள்கையல்ல. அது ஒரு திட்டம்.

ஏன்?

ஜாதி ஒழியவேண்டும் என்பதற்கு குறுக்கே எவை இருந்தாலும் எதிர்ப்போம்.

சமத்துவம் நிலைக்கவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு, நடத்துவது மனுதர்ம ஆட்சியா?

யாரையும் புண்படுத்துவது எங்கள் வேலையல்ல!

இன்றைக்கு அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அம்பேத்கர் போன்றவர்களால்  உரு வாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு, அந்த இடத்தில் நடைபெறுவது என்ன? மனுதர்மம்.

இதனைத் தட்டிக் கேட்பதற்கு எங்களைவிட்டால், நாதியுண்டா தோழர்களே, உங்களுக்கு. இந்த மக்களுக்கு நாதி உண்டா?

யாரையும் ‘புண்படுத்துவது' எங்கள் வேலையல்ல-

யாரிடத்திலும் வீண் வம்புக்குப் போவது எங்கள் வேலையல்ல -

இது புரட்சிகரமான இயக்கம். இதற்கு ஒப்பான ஒரு புரட்சி இயக்கத்தை  நீங்கள் உலக வரலாற்றில் பார்க்க முடியாது.

எங்கள் புரட்சி வெறும் ரத்தம் சிந்துகின்ற புரட்சியல்ல - அறிவுப் புரட்சி - அமைதிப் புரட்சி - மக்களை சிந்திக்க வைக்கக்கூடிய புரட்சி.

மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால்,

சமத்துவத்திற்கு எதிரி யார்?

பகுத்தறிவினுடைய உணர்வு என்னவென்று அவர்களுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டால், அதற்குப் பிறகு, தானே எல்லாம் சரியாகும்.

சமத்துவத்திற்கு எதிரி யார்?

என்பதைப்பற்றி சிந்திக்கவேண்டாமா?

சொன்னார்களே,

முகத்திலிருந்து பிறக்க முடியுமா?

தோளிலிருந்து பிறக்க முடியுமா?

தொடையிலிருந்து பிறக்க முடியுமா?

காலிலிருந்து பிறக்க முடியுமா?

அறிவியல் பூர்வமாக வந்த அரசமைப்புச் சட் டத்தை எடுத்துவிட்டு, எப்பொழுதோ உளறி வைத் தார்கள், எழுதி வைத்திருக்கும் மனுதர்ம சாஸ்திரத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறது?

எங்களுக்கு யாரையும் புண்படுத்துவதோ அல்லது யாரையோ கொச்சைப்படுத்துவதோ, தனி மனித விரோதமோ எங்களுக்கு முக்கியம். கிடையாது. தயவு செய்து நடுநிலையில் இருந்து சிந்தித்துப் பாருங்கள்.

‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு''

இளைஞர்களே,

மானம் பெரிது.

தந்தை பெரியார் சொன்னார், உலக மக்களுக்காக சொன்னார்; ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் சொல்லவில்லை.

‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு''

மனிதர் என்று எவன் இருக்கின்றானோ அவனுக் குப் பகுத்தறிவு. அறிவு, அறிந்து கொள்வது. பகுத்தறிவு, ஆராய்ந்து, எது நல்லது? எது கெட்டது? எது தேவை? என்று அறிந்து கொள்வது.

‘‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்'' என் பதுதானே முக்கியம். இதுதானே பண்பாடு.

ஆனால், மனுதர்மத்தில் என்ன எழுதி வைத்திருக் கிறார்கள்; அதைத்தானே இப்பொழுது தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள்; அதைத்தானே கல்விக் கொள்கையாகக் கொண்டு வருகிறார்கள்.

இந்த அமைப்பு இல்லை என்றால், அதனை எடுத்துச் சொல்லக்கூடிய நாதி இல்லையே!

என்னுடைய கையில் இருக்கின்ற புத்தகம் அசல் மனுதர்மம். நாங்கள் போட்டதல்ல. பார்ப்பனர்கள் அச்சிட்டது.

ஒரு வரிகூட மாற்றம் இல்லாமல், 1919 - நீங்களோ, நாங்களோ பிறக்காத காலம். நூறு ஆண்டுகளுக்கு முன் -

திருவந்திபுரம் இளையவல்லி கோமாண்டூர்  இராமானுஜ ஆச்சாரியார்

அவர் எழுதிய புத்தகம். அச்சு போடுகிறவர் யார்?

நம்மாள்.

அவர்கள் கெட்டிக்காரர்கள்; அவர்களுடைய செலவில் செய்யமாட்டார்கள்.

வெந்தக் காய்கறிக்குத்தான் தீட்டு; வேகாத காய்கறிக்குத் தீட்டு கிடையாது

ஏனென்றால், அவாளுக்கு வெந்தக் காய்கறிக்குத் தான் தீட்டு; வேகாத காய்கறிக்குத் தீட்டு கிடையாது.

இலவசமாகக் கிடைக்கும் தண்ணீருக்குத் தீட்டு உண்டு-

ஆனால், பாலுக்குத் தீட்டு கிடையாது

நெய்க்குத் தீட்டு கிடையாது.

ஏனென்றால், மாட்டிடம் உதையை வாங்கிக் கொண்டு பாலைக் கறக்கிறான் பாருங்கள், அவன் கீழ்ஜாதி.

அதேபோன்று, பணத்திற்குத் 'தீட்டு' கிடையாது-

பச்சரிசிக்குத் தீட்டு கிடையாது.

ஆனால், சமைத்துக் கொடுத்தால் மட்டும் ‘தீட்டு'; சாப்பிட மாட்டேன் என்பார்கள்.

இப்படி சொல்லி சொல்லி, காலம் காலமாக ஏமாற் றிய உன்னை, பகுத்தறிவோடு சிந்தித்துப் பார் என்று சொன்ன ஒரு மாபெரும் இயக்கம்தான் பகுத்தறிவாளர் இயக்கம் - அதை சொன்ன தலைவர்தான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.

இப்பொழுதுதான் மும்பையில் வெளிச்சம் தெரிய ஆரம்பித்திருக்கிறது

மனுதர்மத்தைக் கொண்டு வந்து அரசமைப்புச் சட்டமாக்கவேண்டும் என்கிறார்கள்.  இந்த இயக்கம் இல்லை என்றால், அதைத் தட்டிக் கேட்கவில்லை என்றால், எதிர்க்கவில்லை என்றால் - தமிழ்நாடுதான் இன்றைக்குக் கலங்கரை விளக்கம். மற்ற இடங்களில் எல்லாம் கப்பல்கள் முட்டிக் கொள்கின்றன - அங்கே இருட்டு.

இப்பொழுதுதான் வடமாநிலங்களில் வெளிச்சம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இப்பொழுதுதான் பல இடங்களுக்குப் பரவுகிறது. பரவும், பரவாமல் இருக் காது. ஏனென்றால், இது ஏவுகணை - பெரியாருடைய சிந்தனை இருக்கிறதே, அது ஏவுகணை போன்றது.

இலக்கு நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்.

அசல் மனுதர்மம்

முதல் அத்தியாயம், சுலோகம் 87

‘‘அந்த பிரம்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப் பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறு மைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியே பகுத்தார்.''

இது மனுதர்ம வாசகம்.

உடனே நம்மாள் சொல்வார்கள், வீரமணி வந்தான், திராவிடர் கழகத்துக்காரன் வந்தான்; இந்து மதத்தை மட்டும்தான் பேசினான். வேற மதத்தைப்பற்றி பேசவில்லை.

மதம் பிடித்த மனிதனுக்குப் போடுகிற

ஊசிதான் பகுத்தறிவு ஊசி

மனிதர்களுக்கே மதம் பிடிக்கக்கூடாது; யானைக்கு மதம் பிடித்த படுகிற பாட்டை பார்க்கிறோம். மதம் பிடித்து யானையை ஊசிப் போட்டு அடக்குகிறார்கள். அதுபோன்று, மதம் பிடித்த மனிதனுக்குப் போடுகிற ஊசிதான் பகுத்தறிவு ஊசி. அதுதான் பெரியாருடைய ஊசி.

இதை நாங்கள் சொல்லவில்லை.

எந்த மதம் எங்களை ‘‘சூத்திரனாக்குகிறது?''

எந்த மதம் என்னை ‘‘பறையனாக்குகிறது?''

எந்த மதம் என்னை ‘‘சக்கிலியனாக்குகிறது?''

எந்த மதம் என்னை ‘‘கேவலமாக்குகிறது?''

எந்த மதம் என்னுடைய தாயை ‘‘தேவடியாள்'' ஆக்குகிறது?

அந்த மதம் எனக்குத் தேவையா? தூக்கி வங்காள விரிகுடாவிற்கு அப்பால் போடவேண்டாமா?

சொல்லுங்கள்!

‘‘இந்து மதம் எங்கே போகிறது?''

நான் சொல்லவில்லை. இதோ அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

இந்து மதம் என்ற பெயரே வெள்ளைக்காரன் கொடுத்தது, வெளிநாட்டுக்காரன் கொடுத்தது.

சொன்னது பெரியாரல்ல - சங்கராச்சாரியார்.

எங்களுக்கு மதம் பிடிக்காது. அருமையாக புரட்சிக்கவிஞர் சொன்னார்:

இந்த மண்ணில்

எண்ணிலா மதங்கள்

கந்தகக் கிடங்கில்

கனலின் கொள்ளிகள்

என்றார்.

நூறு வயது வரையில் வாழ்ந்த அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார், கடைசியில் உண்மை யைச் சொல்லிவிட்டுப் போனார்.

காஞ்சி சங்கராச்சாரியார், சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோனாரே அந்த சங்கராச்சாரியாருக்கு குருநாதர். இப்பொழுது இறந்துபோனவர், ஜெயிலுக் கும், பெயிலுக்கும் அலைந்தவர். அவருக்கு முன்பு இருந்தவர், சந்திரசேகரேந்திர சரஸ்வதி.

அவருடைய நண்பர்தான் அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார். அவர் எழுதியுள்ள ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற புத்தகத்தின் 19 ஆம் பக்கத்தில்,

ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட் டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கை யோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட் டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர் கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.

ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

சொல்லுவது யார்?

அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்.

வழக்குப் போடுங்கள்!

ஆகா, இப்படியெல்லாம் நீங்கள் பேசினால், வழக்குப் போடுவோம் என்று யாராவது சொன்னால், வழக்குகளைக் கண்டு சளைப்பவர்களா? நாங்கள். மற்றவர்களுக்காவது வழக்குரைஞர் தேவை. எனக்கு அதுவும் தேவையில்லை. அதற்காகத்தானே படித்திருக்கி றோம்.  வழக்குப் போடுங்கள். இங்கே சொல்லுவதை விட, நீதிமன்றத்தில் சொன்னால், நன்றாகப் பதிவாகும்.

கடவுள் மறுப்புக்கு ஒருவர் வழக்குப் போட்டு, இப்பொழுது படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

பெரியார் எப்பொழுதெல்லாம் கடவுள் மறுப்பு சொன்னார் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர் (ஒரு பார்ப்பனர் நீதிபதி உள்பட) ஆதாரத்தோடு எழுதினார்கள்.

ஆகவே, வழக்கு போடட்டும். அதைப்பற்றி கவலையில்லை.

மேலும்  அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச் சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? நூலில்,

மனு?  வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனை வருக்கும் அறிவு குறைவு.

அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கி றோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு.

நாங்கள் ஏன் மனுதர்மத்தை எதிர்க்கிறோம்?

நாங்கள் ஏன் ஜாதி தர்மத்தை எதிர்க்கிறோம்?

நாங்கள் ஏன் வருணாசிரம தர்மம் ஒழியவேண்டும் என்கிறோம்?

அந்த வருண தர்மத்தை நானே உருவாக்கினேன்; நானே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று பகவான் கண்ணன் கீதையில் சொன்னான் என்றால், கீதையும் எங்களுக்கு விரோதிதானே!

தனிப்பட்ட முறையில் கீதை மீது எங்களுக்கு என்ன கோபம்?  கிருஷ்ணன்மேல் என்ன கோபம்?

நான்கு வருணத்தை நானே உண்டாக்கினேன்; நானே நினைத்தாலும் அதனை மாற்ற முடியாது'' என் கிறான், கிருஷ்ணன் கீதையில். அரசமைப்புச் சட்டத் தையே நூறு முறை திருத்தலாம்; ஆனால், அவர் சொன்ன தர்மத்தை, அவராலேயே மாற்ற முடியாதாம்.

மேலும்  அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச் சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? நூலில்,

பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு -

சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.

“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை” இப்படிப் போகிறது மனு.

இந்த இயக்கம் ஏன் தேவை? இன்னும் நூறாண்டுக்கு அல்ல; இன்னும்பல ஆண்டுகளுக்கு.

கடைசி முட்டாள் இருக்கின்ற வரையில்,

கடைசி தற்குறி இருக்கின்ற வரையில்,

கடைசி அறியாமையில் உழலக் கூடியவன் இருக்கின்ற வரையில்,

கடைசி நிர்மூடன் இருக்கின்ற வரையில்,

இந்த இயக்கம்  தேவைப்படும்.

அறிவியல் தேவைப்படுவதைப்போல,

இருட்டை நீக்க வெளிச்சம் தேவைப்படுவதுபோல,

இதனுடைய விளைவு என்ன நண்பர்களே!

நாம் படிக்காத மக்களானோம்; ஏன் மூட்டைத் தூக்கினோம். நீதிக்கட்சி வருவதற்கு முன் எத்தனை பேர் நம்முடைய நாட்டில் படித்தோம்.

(தொடரும்)

விடுதலை நாளேடு 1 12 19

எந்த மதம் எங்களை சூத்திரனாக, பஞ்சமனாக ஆக்குகிறதோ அதை வங்காள விரிகுடாவில் தூக்கி எறிய வேண்டாமா?

விருதுநகர்: ப.க. பொன்விழா மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி முரசம்

விருதுநகர், டிச.2  எந்த மதம் எங்களை சூத்திரனாக, பஞ்சமனாக ஆக்குகிறதோ அதை வங்காள விரி குடாவில் தூக்கி எறியவேண்டாமா? என்று முரசு கொட்டினார் திராவிடர்  கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகப்

பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்

16.11.2019 அன்று விருதுநகரில் நடைபெற்ற பகுத் தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

‘‘தமிழன் அடிமையானது எவ்வாறு?''

இன்னொரு ஆதாரத்தைச் சொல்லுகிறேன்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தில் துணை வேந்தராக இருந்த மிகப்பெரிய தமிழ றிஞர் - நம்முடைய அருமை நண்பர் டாக்டர் அற வாணன் அவர்கள்.

அவர் எழுதிய ‘‘தமிழன் அடிமையானது எவ்வாறு?'' என்ற நூலில் சொல்கிறார்,

‘‘காலந்தோறும் தமிழருடைய கல்வி அறிவு போதுமானதாக இல்லை; சுத்தமாக இல்லை. 1901 இல் ஆங்கிலேயரால் எடுக்கப்பெற்ற  முதல் மக்கள் தொகை அறிவிப்பின்படி தமி ழருள் படித்தோர் தொகை ஒரு விழுக்காட் டிற்கும் குறைவுதான்; 99% பேர் படிக்காமல் இருந்தனர்.  அக்காலத்திற்குப் பின்னோக்கிச் செல்லச் செல்லத் தமிழர் கல்வி கற்றதற்கான தடயங்கள் மிகமிகக் குறைவாக உள்ளன. அல்லது இல்லாமலே உள்ளன. நாயக்கர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், பிற்காலச் சோழர் காலம், பல்லவர் காலம், களப்பிரர் காலம், சங்ககாலம் எனப் பின்னோக்கிப் பார்க் கும்பொழுது கிரேக்கம், ரோமாபுரி, எகிப்து, சீனம், யூத நாடுகளைப் போல மக்கள் நிறுவன வழி கல்வி கற்றதற்கான அல்லது கல்வி கற் பித்ததற்கான தடயங்களே இல்லை. பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளில் அரசர்கள், பிராமணர்கள் நான்கு வேதங்களையும் கற்க மானியங்கள் வழங்கிய செய்திகள், அரசர் ஆட்சிதோறும் காணப்படுகின்றன. எந்தச் செலவுமில்லாமல் இலவசமாகப் பிராமணர் களுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டது. பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு அரசே  மானியங்கள் வழங் கிற்று என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் நிறையக் கிடைத்துள்ளன'' என்று பேராசிரியர் க.ப.அறவாணன் குறிப்பிடுகின்றார்.

எனவே, நம்மாள் படிக்கவில்லை. படிக்கச் சொல்லி முதல் முயற்சியை செய்த இயக்கம் திராவிடர் இயக்கம் - நீதிக்கட்சி.

நீதிக்கட்சி 1920 இல் பிறக்கவில்லை என்றால், நமக்கு யாருக்கும் படிப்பறிவு வந்திருக்காது. ஏழு சதவிகிதம்கூட இல்லையே! நாம் எல்லாம் இன் றைக்குப் பெருமைப்படுகின்றோமே, அய்.ஜி.யாக, டி.அய்.ஜி.,யாக நம்மாட்கள் வந்திருக்கிறார்கள்; எங் களுக்குப் பெருமை. அதிகாரிகளாக காவல்துறையில் வந்திருக்கிறார்கள்; எங்களுக்குப் பெருமைதான்.

அவர்கள் எங்களுடைய கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கட்டும்; ஆனால், காக்கிச் சட்டைக்குள் வெறும் பூணூல் இருந்ததற்குப் பதில், இன்றைக்கு நம்மாள்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கின்றோம் பாருங்கள்.

இது எப்படி நடந்தது?

முப்பத்து முக்கோடி தேவர்கள் வரம் கொடுத்ததால் நடந்ததா?

நாற்பத்தைந்தாயிரம் ரிஷிகளால் வந்ததா இது?

பெரியார் என்ற மாமனிதருடைய உழைப்பினால் வந்த பலன் அல்லவா!

நீதிக்கட்சியினுடைய பலன் அல்லவா!

கல்வி வள்ளல் காமராசர் கேட்டாரே, ‘‘எவன்டா உன் தலையில் எழுதினவன்? அவன் தலையைக் கொண்டு வா - அதனை மாற்றி எழுதுவதற்காகத்தான் நான் ஆட்சிக்கு வந்திருக்கிறேன்'' என்று சொன்னவர் காமராசர்.

இராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த கல்வித் திட்டம் - குலக்கல்வித் திட்டம். அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும் என்பது.

அந்தக் குலக் கல்வித் திட்டம் மறுபடியும் இப் பொழுது வரப் போகிறது.

அதனுடைய முன்னோட்டம்தான் நீட் தேர்வு -

அதனுடைய முன்னோட்டம்தான் புதிய கல்விக் கொள்கை.

இந்தப்  பீடிகையை ஏன் நான் போட்டேன் என்று சொன்னால்,  நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எந்தக் கட்சிக்காரராக வேண்டுமானாலும் நீங்கள் இருங்கள்; தேர்தல் நேரத்தில் யாருக்கு வேண்டு மானாலும் ஓட்டுப் போடுங்கள்; ஏலம் போட்டு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள்.

இப்பொழுது ஏலம்தானே நடக்கிறது, மிக முக்கியமாக.

ஏலம் என்ற கோலம் - தேர்தல் காலம்.

அது எங்களுக்கு முக்கியமல்ல.

மனுதர்மத்தினுடைய மறுபதிப்பு

அருமை நண்பர்களே, உங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டாமா?

உங்கள் பாட்டன் படிக்கவில்லை,

உங்கள் பாட்டி படிக்கவில்லை.

உங்கள் அப்பன் படிக்கவில்லை

என் அப்பன் படிக்கவில்லை

நான் படித்தேன், என் மகன் படித்தான்

என் பேரன் இனிமேல் படிக்க முடியாது. காரணம், மீண்டும் குலக்கல்வி கதவைத் தட்டிக் கொண்டு வருகிறது. அதுதான் காவிக் கொள்கை - அதுதான் மனுதர்மத்தினுடைய மறுபதிப்பு.

இதனை சொல்வதற்கு இந்தக் கூட்டத்தைத் தவிர, வேறு எந்தக் கூட்டமும் வாய் திறக்காது. திராவிட இயக்கம்தான் அதனை செய்யும்.

இன்றைய டாக்டர்களுக்குத் தெரியுமா?

எத்தனைப் பேர்களுக்குத் தெரியும் - இன்றைய டாக்டர்களுக்குத் தெரியுமா? இந்த இயக்கம் என்ன செய்தது என்பதுபற்றி.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன் நண்பர் களே, காதைத் தீட்டிக்கொண்டு காவல்துறையும், அரசாங்கத் துறையும் பதிவு செய்யட்டும்.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்,  மருத்துவப் படிப்பிற்கு மனு போடவேண்டுமானால், சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் மனு போட முடியும்.

அதனை நீக்கிய பெருமை நீதிக்கட்சியைச் சார்ந் தது; திராவிடர் இயக்கத்தைச் சார்ந்தது. அதனால்தான், நம்மாள்கள் எல்லாம் படித்தார்கள்.

இன்றைக்குத் திரும்பிய பக்கமெல்லாம், இளஞ்செழியன் எம்.பி.பி.எஸ்., நெடுஞ்செழியன் எம்.பி. பி.எஸ்., அன்பழகன் எம்.பி.பி.எஸ்.

ஆக, இவையெல்லாம் வந்ததற்குக் காரணம்,

இந்த இயக்கம். சரசுவதி  பூஜையை நீங்கள் தொடர்ந்து கொண்டாடிய காரணத்தினால் அல்ல. அல்லவே அல்ல.

சரசுவதி என்று பெயர் கொண்ட பாட்டிக்கே கையெழுத்துப் போடத் தெரியாது. பேத்தி சரசுவதி பொறியாளர் சரசுவதி, மருத்துவர் சரசுவதி, நீதிபதி சரசுவதி என்றால், அது இந்த இயக்கத்தினுடைய சாதனையாகும்.

இந்த இயக்கம் இல்லாவிட்டால்,

இந்தக் கொள்கைப் பரவாவிட்டால் என்னவாகி யிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் தோழர்களே!

இப்பொழுது வேகமாக வருகிறார்கள்,

புதிய கல்விக் கொள்கை,

சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிறார்கள்.

வெறும் 25 ஆயிரம் பேர் பேசும் மொழியான சமஸ்கிருத மொழியை...

130 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டில், வெறும் 25 ஆயிரம் பேர் பேசும் மொழியான சமஸ்கிருத மொழியை - அனைத்து மக்களும் படிக்கவேண்டும் என்றால், என்ன நியாயம்?

செம்மொழி தமிழ் என்று கலைஞர் பாடுபட்டு உருவாக்கினாரே, அந்த செம்மொழி நிறுவனம் இன்றைக்குத் தினக்கூலி நிறுவனமாக ஆக்கப்பட்டு விட்டதே!

இதிலே நடுவிலே நடுவிலே வித்தைகள். நம்மு டைய பிரதமர் மிக அழகாக வித்தை காட்டுவார்; வித்தையிலேயே மிகச்சிறந்த வித்தை மோடி வித்தை தான். மோடி வித்தை மிக அழகாகக் காட்டுவார்.

‘‘டமில், டமில் ரொம்ப ரொம்ப ரொம்ப புராதான மொழி.

டமில் வால்க!

திருவள்ளுவர், டமில் வாழ்க!

வேட்டிக் கட்டிக்கொண்டு டமில் வாழ்க என்று சொல்வார்.

யாரை ஏமாற்றுகிறீர்கள்?

நாங்கள் ஏமாறுவோமா?

நாங்கள் போதைக்கு அடிமையானவர்கள் அல்ல; நாங்கள் டாஸ்மாக் கடையின் முன் நிற்கக்கூடிய கூட்டமல்ல; அறிவைத் தட்டி எழுப்பக் கூடிய கூட்டம்.

ஆச்சாரியாருடைய குலக்கல்வி

மீண்டும் புதிய வடிவத்தில் வருகிறது

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஆச்சாரியாருடைய குலக்கல்வி மீண்டும் புதிய வடிவத்தில் வருகிறது. பழைய கள்; புது மொந்தை.

எனவேதான், இந்த மாநாட்டினுடைய 21 தீர் மானங்களில் மிக முக்கியமான தீர்மானம், பெற் றோர்களே உங்களுக்காக, மாணவச் செல்வங் களே உங்களுக்காக - எங்களுக்காகவோ, எங்களுடைய பேரப் பிள்ளைகளுக்காகவோ -  எங்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பதற்காகவோ அல்ல - கருப்புச் சட்டைக்காரர்கள் பிள்ளை களுக்கோ அல்ல - எங்களை எதிர்க்கிறார்கள் பாருங்கள், புரியாமல் - அந்தக் காவிச் சட்டைக் காரருடைய பிள்ளைகளுக்கும் சேர்த்துதான்.

நீட் தேர்வு  ஒழிந்தால்தான், உங்களுடைய பிள்ளைகளும் படிக்க முடியும்.

இல்லையென்றால், எல்லாம் அனிதாக்கள் தான்; எல்லாம் சுபசிறீக்கள்தான். நம்முடைய பிள்ளைகள் எவ்வளவு காலம்தான் தற்கொலை செய்துகொண்டிருப்பது.

டாக்டர் ஷாலினி இவ்வளவு பெரிய டாக்டராக வந்திருக்கிறாங்க. இவர்கள் என்ன நீட் தேர்வு எழுதியா வந்தார்கள்? நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

நமது இயக்கம்  - அறிவுப் புரட்சி இயக்கம்

1. நமது இயக்கம் புரட்சி இயக்கம் - மாறுதலை விரும்பும் உழைக்கும் புரட்சி இயக்கம்.

2. ரகசியம் இல்லாதது

3. வன்முறை, வெறியாட்டம், காலித்தனம், கலவரம் இவற்றில் நம்பிக்கை இல்லாத, பங்கு கொள்ளாத அறிவுப் புரட்சி இயக்கம்.

4. இதுவரை நடத்திய கிளர்ச்சிகள் - அறப் போராட்டங்களில் ரத்த ஆறு ஓடியதா?

5. கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து உண்டா?

6. முகமூடித்தனம் எங்கள் இயக்கத்தில் இல்லை?

7. பொதுச்சொத்துக்கு நாசம் உண்டா?

8. இளைஞர்களின் கட்டுப்பாடு

9. சிறைக்கஞ்சா நெஞ்சுறுதி

10. தன்னலம் துறந்த தற்கொலை பட்டாளம்

11. இயக்கத்தால் சம்பாதித்தவர்கள் உண்டா?

12. தீவிரவாதம் - பயங்கரவாதம் ஒன்றாவது உண்டா?

13. பெரியார் ஒரு முறிமருந்து - விஷக்கடிக்கு மாற்று (தீவிர மாற்று மருந்து) ஒன்றுதான் மருந்து!

வாய்ப்புக் கொடுத்தால்

அறிவு வருகிறது

சந்திராயன் சிவன் இருக்கிறார். சிவன், சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறார். அப்பேர்ப்பட்ட சிவன், திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர். மயில்சாமி அண்ணாதுரை எங்கே படித்தவர். இந்தி படித்தவரா? சமஸ்கிருதம் படித்தவரா? ஆங்கில மொழியில் படித்தவரா? இல்லையே! எம்மொழி செம்மொழி!

வாய்ப்புக் கொடுத்தால் அறிவு வருகிறது. இது வரையில் வாய்ப்புக் கொடுக்கவில்லை; எங்களைத் தட்டித் தட்டி வைத்திருந்தீர்கள்.

உனக்குப் படிப்பு வருமாடா?

தர்ப்பைப் புல்லைக் கிள்ளி உன் வாயில் போட் டால்கூட, உன் நாக்கில் போட்டால்கூட உனக்குப் படிப்பு வராதுடா, போடா சூத்திரப் பயலே என்று கேட்ட வாத்தியார்தானே, பார்ப்பான் வாத்தியார் தானே இருந்தான்.

இன்றைக்குத்தானே எங்கள் ஆள்கள் வாத்தி யார்களாக எல்லாம் வந்திருக்கிறார்கள். அதனால் தானே வாத்தியார்களை மட்டம் தட்டுகிறார்கள். ஆசிரியர்களே வரக்கூடாது என்கிறார்கள்.

நினைத்துப் பாருங்கள் நண்பர்களே, நீட் தேர்வு எத்தனை  உயிர்களை பலிவாங்கி இருக்கிறது.

இரட்டை வேடம் போடலாமா தமிழக அரசு

ஒரு அரசாங்கம் -  இரட்டை வேடம் போடலாமா - தமிழக அரசு.

நீட் தேர்வை நாங்கள் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளமாட்டோம். எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண் டாரா?

நுழைவுத் தேர்வை அவர் கொண்டு வந்தபொழுது, 21 ஆண்டுகள் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து நாங்கள் போராடி, இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றோம்.

கலைஞர் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எங்களுக்கு இருக் கலாம், அது வேறு விஷயம். கடைசியில் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டார்கள். அவருடைய பெயரை சொல்லக்கூடிய தமிழக அரசு - அந்த சகோதரர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்,  உங்களுக்குப் போட்டியாக நாங்கள் உங்களுடைய நாற்காலியில் உட்காரப் போகிறோம் என்றா கேட்கிறோம்.

ராஜாவை மிஞ்சும்

ராஜ விசுவாசிகள்

எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க ஏன் இரட்டை வேடம் போடுகிறீர்கள்?

உங்கள் பலகீனங்கள் ஏன் டில்லிக்கு அடிமையாக உங்களை ஆக்குகிறது.

டில்லி சொல்லிவிட்டது என்றவுடன், அந்தக் கல்வித் திட்டம் இன்னும் அமுலுக்கு வரவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு முன்பாகவே அறிவிப்பு செய்துவிட்டார்கள். ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகள்.

முதலில் பள்ளிக்கூடத்திற்கே போகாமல் இருந் தனர் நம் பிள்ளைகள். பள்ளிக்கூடங்களைத் திறந்து வைத்து, வாங்க, வாங்க என்று கூப்பிட்டார்கள். காமராசர் சோறு போட்டால், அந்தப் பிள்ளைகள் படிப்பார்கள் என்றால், சோறு போடுங்கள் என்றார். அதேபோன்று, தியாகராயர் சொன்னார் முதலில்.

நீட் தேர்வில் எத்தனை பேர் தேர்வாகி இருக்கிறார்கள்?

இன்றைக்கு நீட் தேர்வில் எத்தனை பேர் தேர்வாகி இருக்கிறார்கள்.

மாநிலப் பட்டியலிலிருந்த கல்வியை ஒத்திசைவு பட்டியலுக்குக் கொண்டு போனார்கள். கன்கரண்ட் பட்டியலுக்கு - அதனை மாற்றவேண்டும் என்பது முக்கியம்.

ஆனால், இன்றைக்கு நாட்டில் ஒரே ஒரு கல்விக் கொள்கைதான் இந்தியா முழுவதும்.

ஒரே கொள்கை - ஒரே ஆட்சி.

இது கூட்டாட்சி இல்லையா!

அரசமைப்புச் சட்டத்தின் முதல் பாகம் என்ன சொல்கிறது?

India that is Bharath shall be a Union of  State

கூட்டாட்சித் தத்துவத்திற்கு

பெரிய ஆபத்து

இந்தியா, அதாவது பாரத நாடு பல மாநிலங் களுடைய கூட்டாட்சி. இந்தக் கூட்டாட்சித் தத்துவத் திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து இப்போது.

அதுமட்டுமல்ல, மாநிலங்களுக்கு இருக்கின்ற கல்வி வேறு; மத்தியில் இருக்கின்ற கல்வி வேறு. அது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம்.

5 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 11 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு - 12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு.

எல்லாவற்றிற்கும் மேலே, பல்கலைக் கழகத்தில்  படிக்கப் போகவேண்டும் என்றால், முன்பெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழில் முத்திரை அடித்துக் கொடுப்பார்கள்,  ‘‘எலிஜிபிள் பார் காலேஜ் கோர்ஸ்'' என்று.

பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு அனுமதி வாங்கவேண்டும். அதற்கு ஒரு தேர்வு எழுதவேண்டும். எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு நீட் தேர்வு எழுதவேண்டும். அதற்குப் பிறகு  நெக்ஸ்ட் என்ற தேர்வு.

இன்று அகில  உலகமும் பாராட்டக் கூடிய மருத் துவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். இங்கே இருந்து போனவர்கள்தான். ஆனால், இப்போது மருத்துவப் படிப்புப் படிக்கவேண்டும் என்றால், நீட் தேர்வு எழுதவேண்டுமாம்.

இது என்ன கொடுமை?

இன்றைய மாணவர்களுக்கு எதிர்காலமே இல் லையே!  இதைக்கேட்பதற்கு நாதி இல்லையே! கேட்டால், வாய்ப்பூட்டு,  இதைப்பற்றி பேசுவதற்கு கூட்டத்திற்கு அனுமதி கேட்டால், அனுமதி கிடை யாது.

‘‘விருதுநகர் பிரகடனம் - விருதுநகர் போராட்டக் களத்தை வகுத்திருக்கிறது''

ஆகவேதான், இந்தத் தீர்மானம் மிக முக்கிய மானது நண்பர்களே ‘‘விருதுநகர் பிரகடனம் - விருதுநகர் போராட்டக் களத்தை வகுத்திருக் கிறது'' - இந்த மாநாடு ஒரு திருப்பம் என்று சொல்ல வேண்டும்.

வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரையில் பிரச்சாரம் செய்யவிருக்கிறோம்.

இதுவரையில் நீட் தேர்வால் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளி கள் கொள்ளையடிக்கிறார்கள்.

‘‘நீட் தேர்வை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' நீதிபதிகள் கேள்வி

உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகள் கேட்கிறார்கள், ‘‘நீட் தேர்வை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' என்று.

அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதே - நாம் ஒன்றும் பிச்சை கேட்கவில்லையே நாம்! அது சட்டப்படி நமக்குள்ள உரிமை!

சட்டமன்றம் கூடும்பொழுது தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுங்கள். மசோதாவை  மீண்டும் நிறைவேற் றுங்கள். என்ன காரணத்தினால், நாங்கள் அனுப்பிய மசோதாவை திருப்பி அனுப்பினீர்கள் என்று கேளுங்கள்.

இந்த நாட்டில் ஒரு பக்கம் நீதிமன்றம்; அதில் பூணூல் மயம்; இன்னொரு பக்கத்தில் நீட், நெக்ஸ்ட் தேர்வு. எல்லாக் கதவுகளையும் சாத்திவிட்டு, அவர் களுடைய படிப்பில் மண்ணைப் போட்டால் என்ன நியாயம்?

கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்ததுபோல...

கலைஞர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி. ஆனால், கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்தானே அங்கே வந்து உட்காருகிறார்கள்.

போஸ்ட் கிராஜூவேட், சூப்பர் ஸ்பெஷாலிட்டிஸ் - இவையெல்லாம் யாருக்கு?

இவை எல்லாவற்றையும்விட சமூகநீதி - அரச மைப்புச் சட்டத்தில் இருக்கிறது.

அந்த சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்திருக் கின்ற ஆட்சி மத்தியில் இருக்கின்ற ஆட்சி.  அதற்குத் தலையாட்டுகின்ற ஆட்சிபோல் மாநிலத்தில் இருந்து கொண்டிருப்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது.

எங்களுக்கென்றும் தனிப்பட்ட முறையில் யார்மீதும் கோபமோ, வெறுப்போ கிடையாது. இந்த சமுதாயத்தின்மீது இருக்கிற அக்கறைதான்.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற, சிறுபான்மை சமுதாய மக்கள் படிக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் எங்களுக்கு.

10 சதவிகித இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்காம்.

Socially and Educationally backward classes

உச்சநீதிமன்றத்தினுடைய 9 நீதிபதிகள் அது தவறு என்று  கொடுத்த தீர்ப்பு இந்திரா சகானி வழக்கு இருக்கிறது. அதையெல்லாம் மதிப்பதற்குத் தயாராக இல்லை.

அதற்குப் பதிலாக கூடுதல் பணம் கொடுக்கிறோம்; கூடுதல் இடம் கொடுக்கிறோம் என்கிறார்கள். ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்காக 27 சதவிகித இட ஒதுக்கீட்டை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் நமக்கு ‘வரம்' போல் அளித்தாரே, அதை இன்றைக்கு இவர்கள் அமல்படுத்தவில்லை.

டாக்டர்கள் ஏன் போராடினார்கள்?

மத்திய  சதவிகிதத்திற்கு ஒதுக்கீடு என்ற ஒன்றைக் கொடுத்தாயிற்று. 27 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாமா? இல்லையா?

இதைக் கேட்பதற்கு நாதியில்லையே! நம்மால் என்ன செய்கிறான், டாஸ்மாக் கடையின்முன்  போய் நிற்கிறான்.

தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களுக்குத் தைரியும்.

இதைப்பற்றி சிந்திக்கவேண்டாமா? தோழர்களே!

தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு

இந்த இயக்கம் வெட்டியாக இதனை செய்ய வில்லை. நம்முடைய பிள்ளைகள், அது காவல் துறையில் இருக்கலாம்; அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக நம்மவர்கள் வர முடியாமல் இருந்தது. மண்டல் கமிசன் வந்த பிறகுதானே, நம்மாட்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாக வந்தார்கள்.

வங்கிகள் எல்லாம் பொதுத் துறை நிறுவனங்கள். இப்பொழுது அவற்றை எல்லாம் தனியார்த் துறையாக மாற்றுகிறார்கள். ஆகையால்தான், எங்களுடைய மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்று, தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்.

திராவிட இயக்கம், தமிழ்நாடுதான் இதற்காகக் குரல் கொடுக்கிறது. இந்தியாவினுடைய இதர பாகங்களிலும் இது எதிரொலிக்கிறது.

எனவே, நண்பர்களே!

நீட் தேர்விலே ஆள் மாறாட்டம் - எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா, இதுவரையில் தமிழ் நாட்டு வரலாற்றில்.

வடநாட்டில்கூட காப்பி அடிப்பதற்கு சட்டம் உண்டு. தமிழ்நாட்டில், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்ற தகவல்கள் புற்றீசல் போன்று வெளிவந்து கொண்டே இருக்கின்றன. வழக்கு மேல் வழக்குப் போட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

நீட் தேர்வு ஊழலை ஒழித்துவிட்டதா?

ஊழலை ஒழிப்பதற்காக நீட் தேர்வை கொண்டு வந்தோம் என்று சொன்னார்களே, நீட் தேர்வு ஊழலை ஒழித்துவிட்டதா?

இதற்குப் பதில் சொல்ல வேண்டாமா?

எனவே, நண்பர்களே!

கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை, பிராந் தியமில்லை. நாங்கள் படிக்கவேண்டும்; எங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும்;  எங்கள் வருங்கால சந்ததிகளுக்கு வாழ்வளிக்கவேண்டும். அதற்கு சமூகநீதி காப்பாற்றப்படவேண்டும் என்பதற்கான குரல் இருக்கிறதே - அந்தக் குரலை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஜாதி உண்டானது எப்பொழுது?

50 ஆண்டுகள் பகுத்தறிவாளர் கழகம் - வெள் ளைக்காரன் ஆட்சி 200 ஆண்டுகள். ஜாதி உண்டானது எப்பொழுது? ஜாதி காரணமாகத்தானே, மனுதர்மம் காரணமாகத்தானே நம்மை படிக்கவேண்டாம் என்று சொன்னார்கள்.

எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு  அறிவைக் கொடுக்காதே - இங்கே இருந்து படித்து அமெரிக்கா விற்குப் போனாங்க பாருங்கள் - அங்கே ஜாதியைக் கொண்டு போயிருக்கிறார்கள்.  Caste in the  United states  புள்ளிவிவரம்.

அம்பேத்கர் மிக அழகாக சொன்னார், இந்து மதத்தைப்பற்றி பேசுகிறோம் என்று சொல்கிறீர்களே, அம்பேத்கருடைய அறிவுரை

If Hindus migrated to other regions on the earth; caste would become a world problem

உலகப் பிரச்சினை ஆகும். இப்பொழுது ஆகிக் கொண்டிருக்கிறது.

எனவேதான் நண்பர்களே, உங்களுக்கு மிக முக் கியமாக சொல்கிறோம். இதை நாங்கள் வேடிக்கையா கவோ, விளையாட்டுக்காகவோ சொல்ல வில்லை.

பெற்றோர்களே  நீங்கள் வரவேண்டும். அலட்சிய மாக இருக்காதீர்கள். அய்.அய்.டி.யில் படிக்கின்ற பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?

காரணம் என்ன?

93 ஆவது அரசியல் சட்டத் திருத்தம்

முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் பெரியார் காலத்தில்.

இரண்டாவது அரசியல் சட்டத் திருத்தம் பெரியாருடைய தொண்டர்கள் காலத்தில்.

76 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் 69 சதவிகித இட ஒதுக்கீடு. இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக் கீட்டை அனுபவிப்பவர்கள் அத்தனை பேருக்கும் எப்படி வந்தது என்று தெரியுமா?

எங்களை எவ்வளவு கேலி செய்தார்கள்;

எவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்

அன்றைக்கு                எங்களை எவ்வளவு கேலி செய் தார்கள்; எவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்; எங்கள்  குடும்பத்தினருக்கு எத்தனை அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் வந்தன.

அந்த அவமானங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டுதான் தோழர்களே,

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், 69 சதவிகித இட ஒதுக்கீடு. அதனால்தான், அந்த அம்மையாருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை அளித்தோம். இன்னமும் சொல்கிறோம், அதிலிருந்து எங்களுக்கு மாறுபாடு கிடையாது.

மூன்று பார்ப்பனர்களை வைத்து

வேலை வாங்கியவர்கள் நாங்கள்!

நாங்கள் ஒரு முடிவெடுத்தால், அதில் எங்களுக்குத் தடுமாற்றம் இருக்காது.

சுலபத்தில் முடிவு எடுக்கமாட்டோம்; அப்படி முடிவு எடுத்துவிட்டால், நன்றி காட்டுவது எங்கள் பண்பாடு.

69 சதவிகித இட ஒதுக்கீடு எப்படி வந்தது?

இங்கே, சட்டமன்றத்திலேயே தன்னை பாப்பாத்தி என்று  பிரகடனப்படுத்திக் கொண்ட ஜெயலலிதா காலத்தில், 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் - எழுதிக் கொடுத்தது திராவிடர் கழகம்.  நிறைவேற்றியது அவர்கள்.

இன்றைக்கு இந்தியா முழுவதும் உள்ள எந்த மாநிலத்திலாவது 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறதா? அதற்கும் இப்பொழுது ஆபத்து வந்திருக்கிறது.

அப்பொழுது பிரதமராக இருந்தவர் நரசிம்ம ராவ் - அவர்  ஆந்திரப் பார்ப்பனர்.

அன்றைக்குக் குடியரசுத் தலைவராக இருந்த வர் சங்கர் தயாள் சர்மா - உத்தரப்பிரதேச பார்ப்பனர்.

மூன்று பார்ப்பனர்கள் இருந்த இடத்தில் வேலை வாங்கிய இயக்கம் திராவிடர் கழகம்.

கருஞ்சட்டைப் பட்டாளம் இராணுவத்தைவிட கட்டுப்பாடு மிகுந்தது - பெரியாரின் இராணுவம்

நீங்கள் எங்களை அலட்சியமாக நினைக்க வேண்டாம்; வெறும் எண்ணிக்கையைப் பொறுத் ததல்ல. எவ்வளவு பேர் இவர்கள் என்று நினைக் காதீர்கள். நோபல் பரிசு பெற்றவர்கள் எல்லாம் மெஜாரிட்டியா? விஞ்ஞானிகள் எல்லாம் மெஜா ரிட்டியா? இராணுவம் எல்லாம் மெஜாரிட்டியா? 130 கோடி மக்களுக்கு 130 கோடி இராணுவம் இருக்கிறதா? அல்லது இந்த ஊரில் எவ்வளவு மக்கள் தொகை இருக்கிறதோ, அவ்வளவு  போலீஸ் இருக்கிறதா? போலீசுக்குப் பயந்து தானே, சட்டம் ஒழுங்கே!  இராணுவத்திற்குப் பயந்துதானே எதிரி படையெடுக்காமல் இருக் கிறான்.

அதுபோல், கருஞ்சட்டைப் பட்டாளம் இராணு வத்தைவிட கட்டுப்பாடு மிகுந்தது - பெரியாரின் இராணுவம்.

இந்த இயக்கம் ரகசிய இயக்கமல்ல!

எனவே,

இந்த இயக்கத்தைக் கொச்சைப்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள்;

இந்த இயக்கத்தை அலட்சியமாக நினைக்காதீர்கள்.

இந்த இயக்கம் பொறுப்புள்ள இயக்கம்

இந்த இயக்கம் ரகசிய இயக்கமல்ல

இந்த இயக்கத்திற்கு ரகசியத்தில் நம்பிக்கையில்லை

இந்த இயக்கம் சாதாரணமான இயக்கமல்ல

முகமூடித்தனம் எங்களுக்குத் தெரியாது.

இரட்டை வேடம் எங்களுக்குத் தெரியாது.

அதுமட்டுமல்ல, எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு செய்யக்கூடியவர்கள் நாங்கள். அதிலிருந்து தப்பிப்பவர்கள் நாங்களல்ல.

அது உன்னுடைய மதத்தில் இருக்கிறது.

ஒரு மதத்தைச் சேர்ந்தவர் சொல்வார்,

என்ன பாவம் வேண்டுமானாலும் செய் - ஞாயிற் றுக்கிழமை சர்ச்சுக்குப் போனால் சரியாகிவிடும்.

இன்னொரு மதக்காரர் சொல்வார்,

வெள்ளிக்கிழமை கோவிலுக்குப் போனால் சரி யாகிவிடும்

தவறு செய்தால், தண்டனையை ஏற்றுக்கொள்வோம்!

12 ஆண்டுகள் செய்த பாவம், மகாமகக் குளத்தில் சென்று குளித்தால் உன் பாவம் போய்விடும் என்று சொல்வார்.

தவறு செய்யாதே -

‘‘எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று'' - குறள்

தண்டனை அனுபவி - இதுதான் பகுத்தறிவுவாதி.  தவறு செய்தால், தண்டனையை ஏற்றுக்கொள்வோம். அதில் ரகசியம் கிடையாது. கொலை, கொள்ளைக் கூட்டமா?

எனவேதான் நண்பர்களே, இந்த மண்ணிலே சொல்லுங்கள். மாபெரும் விழிப்புணர்ச்சியை அரசாங்கம் செய்யவேண்டிய வேலையை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக, தமிழக அரசே, நீங்கள் நிமிர்ந்து நிற்கவேண்டும். நிமிர முடியுமா? என்று கேட்காதீர்கள். அது உங்களைப் பொறுத்தது. மக்கள் நிமிர வைப்பார்கள்.  அதுதான் மிக முக்கியம்.

நாங்கள் அடுத்த தேர்தலைப்பற்றி கவலைப்படு கிறவர்கள் அல்ல; அடுத்த தலைமுறையினுடைய மான வாழ்வை, உரிமை வாழ்வை, கல்வி வாழ்வைப் பற்றி கவலைப்படுகிறவர்கள்.

எனவேதான், இளைஞர்களே! இந்த இயக்கத்தை நோக்கி வாருங்கள்!

நீங்கள் திசை தடுமாறாதீர்கள் -

உங்களை திசை தடுமாற வைக்க எத்தனையோ ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்; போதை மருந்தை தயாராக வைத்திருக்கிறார்கள். கிரிக்கெட் என்ற ஒரு போதை வைத்திருக்கிறார்கள். தறி கெட்டு கிரிக்கெட்டு - அதிலே சூதாட்டம்.

தமிழ்நாட்டில் ஏது வெற்றிடம் -

கற்றிடம்தான் தமிழ்நாடு!

இன்னும் சில பேர், புதிது புதிதாக மாயக் குதிரையை உருவாக்குகிறார்கள்.

தமிழ்நாட்டில் வெற்றிடம் என்கிறார்கள். தமிழ் நாட்டில் ஏது வெற்றிடம் - கற்றிடம்தான் தமிழ்நாடு.

ஆகையால், வெற்றிடம் என்று திடீரென்று சொல்வது, புரூடாக்கள் விடுவது - நம்முடைய ஊடகங்கள் அதனை பெரிதாக்குகின்றன. அவர் இந்தத் தேசத்திற்காக 35 முறை சிறைக்குச் சென்றவர்.

காருக்குறிச்சி அருணாசலம்  அருமையாக நாதசுரம் வாசிப்பார்; நாங்களும் ரசிப்போம். அதற்காக அவரை பிரதமராக ஆக்க முடியுமா?

என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு நாங்கள் தயார்!

ஆகவே நண்பர்களே! அறிவுபூர்வமான செய்தி களை சொல்வதுதான் எங்களுடைய வேலை. அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு நாங்கள் தயார்!

வீட்டை விட்டு வெளியே வரும்பொழுது, நாங்கள் திரும்பிப் போவோம் என்று நினைத்துக் கொண்டு வருவதில்லை.

ஒரு மனிதன் விபத்தில் சாகக்கூடாது - ஒரு பயனும் கிடையாது. ஆனாலும், ஒரு பயன் இருக்கிறது அதில் - அங்கேயும் பகுத்தறிவு வேலை செய்ததினால் - உறுப்புகளை மற்றவர்களுக்குக் கொடையாகக் கொடுக்கிறார்கள்.

அந்த உறுப்புகள்கூட, செட்டியார் உறுப்பு செட்டியாருக்கு இல்லை; நாடார் உறுப்பு நாடாருக்கு இல்லை; முதலியார் உறுப்பு, முதலியாருக்கு இல்லை. அங்கேயே ஜாதி ஒழிந்து போய்விட்டது - ஆனால், புரிய மாட்டேன் என்கிறது நம்முடைய ஆட்களுக்கு.

அய்யங்கார் ரத்தம், அய்யங்காருக்கா ஏற்று கிறார்கள்?

முதலியார் விழியை, முதலியாருக்கா பொருத்து கிறார்கள்?

ஆகவேதான் நண்பர்களே,

ஜாதியால்,

மதத்தால்,

பதவியால்

சூழ்ச்சியால்

ஏமாறாதீர்கள்;

இந்த இயக்கம் இல்லாவிட்டால்

உங்கள் கதி என்ன?

உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்.

உங்கள் பேரப் பிள்ளைகளுடைய கல்வி வாழ்க் கையை நினைத்துப் பாருங்கள்.

படித்தவர்களுடைய வேலை வாய்ப்பைப்பற்றி நினைத்துப் பாருங்கள்.

சமூகநீதி அழிந்தால், கல்வி வாய்ப்புகள் ஒழிந்தால், அதைக் கேட்கின்ற இந்த இயக்கம் இல்லாவிட்டால் உங்கள் கதி என்ன? முடிவு செய்யுங்கள்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.

 - விடுதலை நாளேடு 2 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக