உலப்பகுத்தறிவாளர்
கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ்
இறைவன் மிகப் பெரியவன் என்பார்கள். இந்த வாசகங்கள் எழுதப்பட்ட சரக்குந்துகள் சாலையோரங்களில் தலைகுப்புற விழுந்து கிடக்கும் காட்சிகளும் சர்வ சாதாரணம், தமிழ்நாட்டில்! கடவுள் ஒன்றும் பெரிய ஆள் அல்ல (GOD IS NOT GREAT) என்ற தலைப்பில் ஒரு நூல் 2007 இல் வெளிவந்து கடவுள் நம்பிக்கையாளர்களை ஒரு கலக்குக் கலக்கியது. அந்நூலாசிரியர் கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ் என்பவர் 63 வயதான அமெரிக்கர்.
1949 ஆம் ஆண்டில் ஏப்ரல் 13 ஆம் நாளில் இங்கிலாந்து நாட்டில் போர்ட்ஸ் மவுத் எனும் ஊரில் பிறந்து, ஆக்ஸ்போர்டு பல்லியால் கல்லூரியில் பயின்று இதழாளராகவும் நூலாசிரியராகவும் செயல்பட்டு அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பவர் ஹிட்சென்ஸ். தி அட்லான்டிக், வானிடிஃபேர், ஸ்லேட், வொர்ல்டு அஃபேர்ஸ், தி நேஷன், ஃபிரீ என்கொயரி போன்ற பல ஏடுகளில் எழுதி வருபவர், தொலைக்காட்சிகளில் டாக் ஷோ (TALK SHOW), விவாதங்கள் போன்றவற்றில் பங்குபெற்று தம் நாத்திக முத்திரையைப் பதித்து வருபவர். 2005 ஆம் ஆண்டில் நடத்தப்பெற்ற அயல்நாட்டுக் கொள்கை வாக்கெடுப்பில் இவர் பெயரும் போட்டியில் சேர்க்கப்பட்டு, டாப் 5 இல் இவரும் ஒருவராக உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதே இவருக்கும் இவரது கொள்கைக்கும் கிடைத்த பெருமையைப் பறைசாற்றும். இவரது புகழ் இவர் பிறந்த பிரிட்டனிலும் வாழ்ந்துவரும் அமெரிக்காவிலும் இடதுசாரிக் கருத்தாளர்களிடையே பரவலான செல்வாக்கைப் பெற்றுள்ளது ஆனாலும் அரசியல் இடதுசாரிகள் எனப்படுவோர் மத்தியிலிருந்து இவர் வேறுபட்டுக் காட்சியளிக்கும் நிலை 1989 இல் ஏற்பட்டது. புகழ்பெற்ற பகுத்தறிவு எழுத்தாளரான சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகள் நூலுக்காக அவருக்கு மரணதண்டனை விதித்து, மதக்கட்டளை (ஃபாட்வா) பிறப்பித்த ஈரான் மதத்தலைவர் அயாதொல்லா கொமேனிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இந்த இடதுசாரிகள் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஹிட்சென்ஸ் கடும் கண்டனம் தெரிவித்து தாம் வித்தியாசமானவர் என்பதை எண்பித்தார். தொடர்ந்து அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போது மத முகமூடியுடன் பாசிச முகம் காட்சி அளித்ததைக் கண்டித்தார்.
புதிய நாத்திக இயக்கத்தவன் எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் இவர், தமக்குக் கடவுள் நம்பிக்கை அறவே கிடையாது என அறிவித்திருக்கிறார். தம்மை ATHEIST எனக் கூறிக் கொள்வதைவிட ANTITHEIST எனக் கூறிக் கொள்ளவே விரும்புகிறார்.
இந்தச் சொல் பரப்பப்படவேண்டும் எனக் கூறுகிறார். கடவுள் என்பதோ, சர்வ சக்தி படைத்த பொருள் என்றோ கூறுவதும் நம்புவதும் தனிமனிதனின் சிந்தனைச் சுதந்திரத்தைத் தடைசெய்து வருகிறது எனும் கொள்கையைக் கொண்டவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் மட்டுமே அறநெறிகளையும் (ETHICS) மனித நாகரிகங் களையும் உருவாக்கி, மதங்கள் ஆக்ரமித்துள்ள இடத்தை அழித்திட வேண்டும் என்று வலியுறுத்தி கடவுள் பெரிதானதல்ல என்ற நூலை எழுதியிருக்கிறார்.
பிரிட்டன் கப்பல் படையில் பணிபுரிந்த தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர். இட்லரின் போர்க்கப்பல் ஒன்றினை வடமுனைப் போரில் மூழ்கடித்த பிரிட்டிஷ் ஜமைக்கா கப்பலின் தளபதியாக தந்தை எரிக் ஹிட்சென்ஸ் பணியாற்றிய போது, கப்பல் படையில் பெண் பிரிவின் அதிகாரியாக தாய் யுவோன் பணிபுரிந்தார்.
கேம்பிரிட்ஜ் பள்ளியிலும் ஆக்ஸ்போர்டு கல்லூரியிலும் படித்தவரான ஹிட்சென்ஸ் அமெரிக்காவின் வியட்நாம் நாட்டுக்கு எதிரான போர்ச் செயல்களைக் கண்டித்து 1960 களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கினார். 1965 இல் தொழிற்கட்சியில் சேர்ந்தார். அதே வேகத்தில் 1967 இல் தொழிற்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். வியட்நாம் போரில் அமெரிக்காவை ஆதரித்துச் செயல்பட்டவர் அப்போதைய இங்கிலாந்து தொழிற்கட்சிப் பிரதமர் ஹெரால்டு வில்சன் கட்சியின் நிலைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த காரணத்தால் ஹிட்சென்ஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும் இதே நிலைப்பாட்டைத் தம் எழுத்துகளில் வெளிப்படுத்தித்தான் நியூ ஸ்டேட்ஸ்மேன் ஏட்டில் எழுதிக் கொண்டிருந்தார். அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சரான கிசிஞ்சர் என்பாரைத் தாக்கித்தான் எழுதினார்.
1981 இல் அமெரிக்காவுக்குப் போய் தி நேஷன் இதழில் அப்போதைய குடியரசுத் தலைவர்கள் ரீகன், ஜார்ஜ் புஷ் ஆகியோரின் அயல் உறவுக் கொள்கைகளைக் கண்டித்தே எழுதி வந்தார். சைப்ரஸ் நாட்டில் பத்திரிகை நிருபராக இருந்தபோது, எலனி மெலீக்கு என்பாரை மணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார். 1989 இல் எழுத்தாளரான கரோல் ப்ளூ என்பாரை மணந்து அன்டோனியா எனும் மகளுக்குத் தந்தையானார்.
சீரான படைப்பு (INTELLIGENT DESIGN) எனும் கடவுள் நம்பிக்கையாளர்களின் புதிய படைப்புக் கொள்கையையும், அமெரிக்காவில் சில பள்ளிகளில் அது பாடமாக வைக்கப்பட்டிருப்பதையும் கடுமையாக எதிர்ப்பவர் ஹிட்சென்ஸ். இக்கொள்கையை ஆதரிக்கும் அதிபர் புஷ்சையும் கடுமையான சொற்களால் விமரிசனம் செய்து வந்தவர். ஈராக் போரில் அமெரிக்க ராணுவம் நடத்திய படுகொலைகளைக் கண்டித்தவர். புஷ் அரசு பிறப்பித்த வாரன்ட் இல்லாமல் யாரையும் உளவு பார்க்கும் உரிமைச் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போட்டவர். ஓர் எழுத்தாளனாக சமூகத்திற்கு எதிரான ஒடுக்கு முறைகளை எதிர்த்து எல்லா முனைகளிலும் போராடியவர் ஹிட்சென்ஸ் எனலாம்.
பிரிட்டனின் அரச வம்சம் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்த எழுத்தாளராகவும் விளங்குகிறார்.
ஆப்ரகாம் மதங்கள் எனப்படும் மூன்று பெரிய மதங்களையும் கண்டித்தவர். ஏக இறைவன் எனும் கொள்கையுடைய யூத, கிறித்துவ, இசுலாமிய மதங்களை ஒருசேரக் கண்டிப்பவர்; எல்லாக் கேடுகளுக்கும் அச்சாக விளங்குபவை இம்மூன்று மதங்களே என்று ஆணி அறைந்தாற்போலக் கூறுபவர். மேற்கத்திய பகுத்தறிவாளர்கள் இம்மூன்று மதங்களைத் தாக்குவதோடு நிறுத்திக் கொள்வர். இவரோ, மற்றவர்கள் தொடாத மதங்களான இந்து மதம், துக்கடா மதங்கள் போன்றவை பற்றியும் விமரிசனம் செய்து கண்டனக் குரல் எழுப்பிய பகுத்தறிவு எழுத்தாளராவார்.
எந்த மதத்தைச் சேர்ந்த யாராக இருந்தாலும், அவர்களோடு வாதிடத் தயார் எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளவர். அதன்படி கிறித்துவப் பாதிரியாரான டக்ளஸ் வில்சன் என்பவருடன் வாதிட்டார். இதன் விவரங்கள் இன்றைய கிறித்துவம் (CHRISTIANITY TODAY) எனும் இதழில் வெளியிடப்பட்டன. “IS CHRISTIANITY GOOD FOR THE WORLD?” (கிறித்துவம் உலகிற்கு நன்மையானதா?) எனும் தலைப்பில் இவரது வாதம் 2008 இல் நூலாகவே வெளியிடப் பட்டுள்ளது. இந்நூலைப் பிரபலப்படுத்து வதற்காக பலநாடுகளுக்கும் அவர் சென்றார்.
சினிமாப்படத் தயாரிப்பாளரான டாரன் டோன் என்பவர் தம் படப்பிடிப்புக் குழுவினரை அவருடன் அனுப்பி “COLLISION: IS CHRISTIANITY GOOD FOR THE WORLD” என்ற திரைப்பட மாகவே தயாரித்துள்ளார். 27-10-2009 இல் திரைப்படம் வெளிவந்தது.
கிறிஸ்டோஃபர் ஹிட்சென்சின் வாதத்திறமை உலகப் புகழ் பெற்றது என்பதற்கு இன்னுமோர் நிகழ்ச்சி. பிரிட்டனின் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர் என்பவர். தொழிற்கட்சிக்காரர். நம்மூர் கம்யூனிஸ்ட் களைப் போலவே அவரும் மதம், கடவுள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர். அவர் புரொடஸ்டன்ட் (மறுப்பியல்) கிறித்துவப் பிரிவைச் சார்ந்தவர், அவரது மனைவி கத்தோலிக்கக் கிறித்துவர். எந்தப் பிரிவின்படி திருமணம் செய்து கொண்டனர், எந்தப் பிரிவின்படி ஜெபம் செய்து குடும்பம் நடத்தினர் என்பதற்கான விவரங்கள் (என்னிடம்) இல்லை.
டோனி பிளேர் பிரதமராக இருந்த போது அமெரிக்கா அடாவடியாக ஈடுபட்ட ஈராக் போரை ஆதரித்தவர். போர் முடிந்து, பதவி இழந்து போனவர் புஷ்சைப் போலவே! இதன் காரணமாக ஹிட்சென்ஸ் இவரை எதிர்த்தது ஒரு முனை. மற்றொரு முனை என்னவென்றால், பதவி இல்லாத பிளேர் தம் மனைவியின் கத்தோலிக்க மதத்திற்கு மாறிவிட்டவர், இதனாலும் கண்டனம் செய்யப்பட்டவர்.
நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது என்று நம் ஊரில் சொல்வது போல, இந்தப் புதிய கத்தோலிக்கர், நம் ஹிட்சென்சை வாதத்திற்கு அழைத்து வாங்கிக் கட்டிக் கொண்டார். கனடா நாட்டின் டொரோன்டோ (TORONTO) நகரில் 26_10_2010 இல் வாதப்போர் நடந்தது. மங்க் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாதப்போரில் ஹிட்சென்ஸ் வழக்குத் தொடுத்தார், டோனி பிளேர் வழக்கை மறுத்தார். வாதத்திற்கு முன்னதாகவே மக்களின் மத்தியில் பரபரப்பு தொற்றி, மக்களின் வாதப்பிரதிவாதங்கள் மங்க் அறக் கட்டளையின் வலைப்பதிவில் பதிவு செய்யப்பட்டன. அதன்படி ஹிட்சென்சின் வழக்குக்கு ஆதரவாக 56 விழுக்காடு வாக்குகள், எதிர்ப்பாக (டோனி பிளேருக்கு ஆதரவாக) 22 விழுக்காடும் பதிவானது. 21 விழுக்காடு முடிவெடுக்க முடியாதவர்களின் விகிதாச்சாரம்.
வாதப்போர் முடிந்தபிறகு, ஹிட்சென்ஸ் தரப்புக்கு 68 விழுக்காடு ஆதரவு பெருகியது. 32 விழுக்காடு ஆதரவை மட்டுமே டோனி பிளேர் பெற முடிந்தது. அதாவது, கிறித்துவம் உலகிற்கு நல்லதல்ல எனும் முடிவுக்கு மூன்றில் இரண்டு பங்கினர் வந்துள்ளனர். மூன்றில் ஒரு பங்கு ஆதரவை மட்டுமே கிறித்துவ மதம் பெற முடிந்தது. மதம் என்றுமே வென்றதில்லை; என்றும் வெல்லாது.
- தொடரும்
- சு.அறிவுக்கரசு
உலகப் பகுத்தறிவாளர்
கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ்
- சு.அறிவுக்கரசு
எல்லா மத நம்பிக்கைகளுமே, கெட்டவையாகவும் வளர்ச்சி பெறாத தன்மையிலுமே உள்ளன என்றார் ஹிட்சென்ஸ். நம் ஊர் இந்து முன்னணிக்காரர்கள் போலவே, சிலர் அவரைக் கேட்டார்கள், கத்தோலிக்கர்கள் என்றாலே உங்களுக்கு வெறுப்புபோல என்று! அதற்குத்தான் அவர் மேற்காணும் பதிலைக் கூறினார். நெருப்புத் துண்டங்களில் முன் துண்டம் என்றாலும் பின் துண்டம் என்றாலும் நெருப்புதானே!
ஹிட்சென்ஸ், கிறித்துவராகவே வளர்க்கப்பட்டவர். கிறித்துவ போர்டிங் பள்ளிகளில் படித்தவர். ஆனாலும்கூட, சிறுவயதிலிருந்தே பிரார்த்தனை செய்யாதவராக இருந்தார். அவர் பாதி யூதர் என்பது அவரின் தம்பி திருமணம் செய்து கொண்டபோதுதான் இவருக்குத் தெரிய வந்தது. தன்னுடைய 90 வயதுப் பாட்டியிடம் தம் மனைவியை அறிமுகப்படுத்திய இவரின் தம்பியிடம் பாட்டி இவள் யூதப் பெண் அல்லவா? என்று கேட்டாராம். உங்களுக்கெல்லாம் ஒரு சேதி சொல்லப் போகிறேன் என்று கூறிய பாட்டி, தாம் யூத வம்சம் என்றும், தம் குடும்பப் பெயர் LYNN அல்ல; LEVIN என்பதாகும் எனக் கூறிவிட்டு, தம்முடைய கொள்ளுப் பாட்டி யூத மதத்திற்கு மாறி கொள்ளுத் தாத்தாவைக் கல்யாணம் செய்து கொண்டதாகக் கூறினார். அதன்படி, தாய் வழியில், ஹிட்சென்ஸ் யூத மதம் சார்ந்தவர் எனும் ரகசியத்தை உடைத்தார்.
(இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. பெயர்களையும், குடும்பப் பெயர்களையும் வைத்து ஒருவரின் மதம், நாடு, மொழி போன்றவற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அங்கே இருக்கிறது. பிரதீப், பிரகாஷ், ரமேஷ் உமேத் என்றெல்லாம் பெயர்கள் வைத்துக் கொள்ளும் இங்கே அத்தகைய வாய்ப்பு உண்டா?)
இதுபற்றி ஹிட்சென்ஸ் கூறும்போது, நான் யூதத்தை எதிர்ப்பவன். பாலஸ்தீனம் என ஒன்று இல்லாமலும் பாலஸ்தீனியர்கள் என்போர் இல்லாமல் இருந்தாலும்கூட, யூதர்களின் வழித்தோன்றலாக இருப்பது தவறுதான் என்றே கூறி, தம் யூத எதிர்ப்பை உறுதிப்படுத்தினார்.
2006இல் பெனிசில்வேனியாவில் நடைபெற்ற வாதப் போரில் யூத வாழ்வு முறைகள்பற்றி மார்ட்டின் அமிஸ் என்பவருடன் வாதிடும்போது (யூதரான) கார்ல்மார்க்சின் பொருள்முதல்வாதம் உண்மையானது, முதலாளித்துவத்தின் உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டார்.
சேகுவாராவின் செயல்பாடுகள் அவரைக் கவர்ந்தன. அவருக்கு ஏற்பட்ட கொடிய முடிவு அவரை மிகவும் பாதித்தது. நான் இப்போது சமதர்மவாதி (சோஷலிஸ்ட்) அல்ல என்றாலும் நான் மார்க்சிஸ்ட் எனக் கூறிக்கொண்டார்.
சோவியத் நாட்டின் வி.அய். லெனின், லியோன் ட்ராட்ஸ்கி ஆகிய இருவருமே சிறப்பானவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், மதநீக்கம் செய்யப்பட்ட (SECULAR) ரஷ்யாவை உருவாக்கியதற்காக லெனினைப் பாராட்டினார். அதே வேகத்தில், ரஷ்ய பழமை வாத சர்ச்களை செல்வாக் கிழக்கச் செய்ததற்காகவும் லெனினைப் புகழ்ந்தார். அவை பிற்போக்குத்தனம், கேடு கெட்ட மூடநம்பிக் கைகளின் உறைவிடமாக விளங்கின எனக் காரணம் கூறினார். உண்மை தானே!
கடவுள் ஒன்றும் பெரிதல்ல எனும் நூல் நாட்டளவில் சிறந்த நூல் என்கின்ற விருதுக்கு 2007 இல் பரிந்துரைக்கப்பட்ட பெருமையைப் பெற்றது. உலகம் முழுக்க விற்பனையில் சாதனை படைத்த நூலாகும். தேசிய மதவிலக்கு (செக்யுலர்) சங்கத்தின் முக்கியமான நான்குபேர்களில் ஒருவராக இவர் ஆக்கப்படுவதற்குக் காரணமான நூலாகவும் இது அமைந்துள்ளது. சுமார் 300 பக்கங்கள் கொண்ட இந்நூல் மதங்களின் மாய்மாலங்களை, முரண்பாடுகளை, பொய்க்கருத்துகளை அக்குவேறாக ஆணி வேறாக அலசி ஆய்ந்து பிய்த்துப்போட்டுவிட்டது.
கொடுமைகளின், கேடுகளின் உச்சத்திற்கே மனிதர்களை மதங்கள் துரத்தி அடித்திருக் கின்றன என வருணிக்கும் ஹிட்சென்ஸ், ஆதாரங்களை அடுக்கடுக்காகத் தந்துள்ளார். ஆண் - பெண் சேர்க்கையின்றி கடவுள்கள் பிறந்துள்ளன என்பதற்குக் கிறித்துவக் கதையைப் போலவே, பிற மதக் கதைகளை எடுத்துக் கூறுகிறார். கிரேக்கக் கடவுள் ஜூபிடர் கண்ணிப் பெண்ணானடானே மீது தங்கத்தால் குளிப்பாட்டியபோது குழந்தை பிறந்த கதை, காட்லிகஸ் என்பவள் இறகுப்பந்து ஒன்றைத் தன் மார்போடு அணைத்தபோது கருத்தரித்தது, மாதுளம் பழம் ஒன்றை மரத்திலிருந்து பறித்து மார்பில் அடக்கிய நானா, குழந்தைக் கடவுள் அட்டிசைப் பெற்றெடுத்த கதை, மங்கோலிய மன்னனின் மணமாகாத மகள் பெருத்த வெளிச்சம் தன்மீது பட்ட காரணத்தால் செங்கிஸ்கானைப் பெற்ற கதை, இகிசுக்குப் பிறந்த ஹோரஸ், கன்னிப்பெண் மையாவுக்கு மெர்க்குரி பிறந்தது என பல கதைகளை எடுத்துக் காட்டிக் கிண்டல் செய்துள்ளார்.
பைபிளின் பழைய ஏற்பாடு செய்த கேடுகளைவிட புதிய ஏற்பாடு அதிகக் கேடுகளைச் செய்துள்ளது என்பதை எண்பித்துள்ளார். யூத, கிறித்துவ மத நூல்களின் செய்திகளை எடுத்துப்போட்டு எழுதப்பட்டது குர்ஆன் என ஆதாரங்களோடு மெய்ப்பிக்கிறார்.
கத்தோலிக்க மதத்தில் சிலரைப் புனிதர் என்றாக்கும் சடங்கு ஒன்று உண்டு. யேசுவுடன் தொடக்கத்தில் சீடர்களாக இருந்தவர்களை இம்மாதிரி புனிதர்கள் (SAINT) என அழைப்பது உண்டு.
12 புனிதர்களோடு நின்றுவிடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, கத்தோலிக்கம் இப்பட்டத்தைப் பலருக்கும் தந்து வருகிறது. இதற்கான தகுதி என அவர்கள் வைத்திருப்பது அற்புதங்கள் நிகழ்த்தியிருக்க வேண்டும் என்பதுதான். அற்புதங்களைச் செய்யாவிட்டால் மதங்களே கிடையாது. மதங்களை யாரும் நம்ப மாட்டார்கள். குறிப்பாக கிறித்துவம் அற்புதங்களின் அடித்தளத்தில் எழுப்பப்பட்டு வளர்க்கப்பட்ட மதம்தான். அந்நிலை இன்றளவும் தொடர்கிறது.
இதற்காக போப் ஒரு விசாரணை நடத்துவார். அற்புதங்களுக்கு எதிரானவர்கள் கூட அழைக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். இந்தமாதிரி ஆள்கள் சாத்தானின் வக்கீல்கள் (DEVIL’S ADVOCATES) என்று அழைக்கப்படுவார்கள். (இந்தத் தலைப்பில் புதுடெல்லி தொலைக்காட்சியில் கரண்தாப்பர் நடத்தும் நிகழ்ச்சி உண்டு) அப்படி சாத்தானின் வக்கீலாக அழைக்கப்பட்ட பெருமையும் ஹிட்சென்சுக்கு உண்டு.
அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி, ஒரு கன்னியாஸ்திரிக்குப் புனிதர் பட்டம் கொடுப்பது பற்றியது. அல்பேனியா நாட்டைச் சேர்ந்த ஆக்னஸ் போஜக்ஜியு என்பவர் தொடர்புடையது. இயற்பெயரால் அறியப்பெறாமல் சூட்டிக் கொண்ட பெயரால் உலகம் முழுக்கத் தெரிந்தவரான மதர் தெரசாதான் அவர். மால்கம் முகரிட்ஜ் எனும் சுவிசேஷப் பிரசங்கி இப்பெண்மணி அற்புதங்கள் செய்ததாகக் கதை கட்டிவிட்டவர். பி.பி.சி. தொலைக்காட்சியில் இவர் எடுத்த விவரணப்படத்தின் மூலம் செய்தி உலகுக்குப் பரப்பப்பட்டது. தெரசா செய்த அற்புதம் ஒன்றும் பிரமாதமானதல்ல. அவர் நடத்திய மரண இல்லம் (HOUSE OF THE DYING) கட்டடத்தில் படப்பிடிப்புக்குப் போனபோது, அது போதுமான இயற்கை வெளிச்சமோ, ஒளி விளக்குகளோ இல்லாமல் இருந்தது. படம் பிடித்தால் சரியாக வருமா எனும் அய்யம் இயக்குநருக்கு ஏற்பட்டது காமெராமேன் கென் மாக்மில்லன் என்பார் மிகவும் நம்பிக்கையுடன், புத்தம்புதிய கோடக் (KODAK) ஃபிலிம் வைத்திருக்கிறேன், அதில் படம் எடுத்துப் பார்க்கலாம் என்று நம்பிக்கையுடன் கூறிப் படம் எடுத்து முடித்தார். பிறகு கட்டடத்திற்கு வெளியேயும் படம் எடுத்தார்கள்.
இரண்டு மாதங்கள் கழித்து படம் எடுத்தவரையில் ரஷ் போட்டுப் பார்த்தபோது, கட்டடத்தின் உள்ளே எடுத்தவை மிகப் பிரமாதமான ஒளி அமைப்பில் படம் எடுக்கப்பட்டிருந்தது. வெளியே எடுத்த படம் அவ்வளவு தெளிவாக வரவில்லையாம். ரஷ் பார்த்த மால்கம் முகரிட்ஜ் ஆ! இதுதான் தெய்வீக ஒளி! அதுதான் மதர் தெரசா! அதுதான் அவருடைய தெய்வீக ஒளி என்று கூச்சல் போட்டார். அந்தக் கூச்சல்தான் மதர் தெரசாவின் அற்புதத்தை உலகுக்கு அறிவித்தது.
இன்னொரு கதையும் அன்னை தெரசா நிகழ்த்திய அற்புதமாகக் கூறப்பட்டது. 1997 இல் தெரசா இறந்தார். அவர் அணிந்திருந்த ஓர் அலுமினிய மெடலைத் தன் அடிவயிற்றில் வைத்துக் கொண்டிருந்த மோனிகா பெஸ்ரா எனும் பெண்ணுக்கு, நீர்த்தாரையில் ஏற்பட்டு இருந்த கட்டி குணமாகிவிட்டதாம். தெரசாவின் உடலில் இருந்த மெடலுக்கே இந்தச் சக்தி இருந்தது என்று அவர் இறந்து ஒரு ஆண்டுக்குப் பிறகு கதை பரப்பப்பட்டது. இதனை மோனிகா பெஸ்ராவின் கணவர் செல்கு முர்முவும் நம்பவில்லை. மோனிகாவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மஞ்சு முர்ஷத், டி.கே. பிஸ்வாஸ், ரஞ்சன் முஸ்டாபி ஆகிய யாருமே ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் கத்தோலிக்கக் கிறித்துவர்கள் அவர்களின் தலைவர் போப் போன்ற மோசடிக் கும்பல் நம்புவதாகக் கூறி புனிதர் பட்டம் வழங்கப் போகிறார்கள்.
மிகச் சிறந்த நாத்திகரான ஹிட்சென்ஸ் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆள்பட்டுப்போய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுவிட்டார். தொண்டையிலிருந்து வயிறுவரை இருக்கும் உணவுக் குழாயில் புற்றுநோய்ப் பாதிப்பு ஏற்பட்டு அதன் விளைவாக, பேச இயலாமல் சிரமப்படுகிறார். அதன் விளைவாக இந்த ஆண்டு (2011) அமெரிக்க நாத்திக அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. மாநாட்டுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் என்னுடைய பேச்சுக் குரலை எழுப்ப இயலாத நிலை ஒன்றுதான் நான் உங்களோடு இருக்கமுடியாத நிலையை உண்டாக்கிவிட்டது. அதுவும்கூட, காலின் கொடுங்கோலுடன் நான் வாதம் செய்துவருவதால் ஏற்பட்ட விளைவுதான் என்றே நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில், கடவுள் உண்டா? எனும் தலைப்பில் இவருடன் வாதிட்டவரான அறிவியல் அறிஞர் ஃபிரான்சிஸ் காலின்ஸ் என்பவர் தேசிய நலவாழ்வு மய்யத்தின் இயக்குநராக இருக்கிறார். அவர்தான் இவருக்கு மருத்துவம் செய்கிறார். எதிர் எதிரான கொள்கைகள் இருந்தாலும் இருவரும் இனிய நண்பர்கள். காலின்ஸ் தம் நண்பரான ஹிட்சென்சுக்காகப் பிரார்த்தனை செய்வதாகவும் அது தெய்வீக சக்தியின் உதவியை நாடுவதற்காக அல்ல என்றும் மருத்துவமுறைகளின் மூலம் அற்புதங்கள் ஏதும் நிகழாதா எனும் எதிர்பார்ப்புக்காக மட்டுமே என்றும் வாஷிங்டன் போஸ்ட் ஏட்டில் எழுதியுள்ளார்.
மதவாதியால் நேசிக்கப்படும் உறுதியான நாத்திகரான ஹிட்சென்ஸ், தாம் மரணத்துடன் போராடி வருவதாகவும், இப்போராட்டத்தில் இதுவரை யாரும் வென்றது கிடையாது என்பதைத் தாம் உணர்ந்திருந்தாலும் போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். நாத்திகர்கள் அனைவரும் அரசையும் மதத்தையும் பிரிப்பதற்கும் அரசு விசயங்களில் மதங்களின் தலையீட்டைத் தடுத்திடவும், மத, கடவுள் நம்பிக்கைகளை விட்டுவிடச் செய்வதற்கு உழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இறப்பது என்பது இயற்கையானது. அதனைத் தடுத்திட முடியாது. அதனை எதிர்கொள்ள வேண்டும். இறுதிக் காலத்தில் சங்கரா, சங்கரா எனக் கூப்பாடு போட்டுப் பிழைத்துக் கொள்ளலாம் என்பதோ, செய்த தவற்றிற்காகப் பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம் என்பதோ முட்டாள்தனமானது என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ள ஹிட்சென்ஸ் இன்னும் 5 ஆண்டுக் காலம் வாழலாம் என மருத்துவர்கள் கூறியிருப்பதால், மருந்துகளால் நோய் தீருமா? எனும் எதிர்பார்ப் புடன் மட்டுமே இருந்து வருகிறார்.
உலகப் பகுத்தறிவாளர் - கிரெக் எப்ஸ்டீன் (2)
திருமணம் தேவையில்லை
- சு. அறிவுக்கரசு
நல்ல கடவுள் மறுப்பாளரான கிரெக் எப்ஸ்டீன் கடவுளின்றியே நன்மை எனும் நூலில் கடவுளின் தோற்றம் பற்றி எழுதுகிறார். நீ கடவுளை நம்புகிறாயா? என்பது அர்த்தமற்ற கேள்வி என்கிறார். கடவுள் பற்றி நீ என்ன நம்பிக்கை கொண்டிருக்கிறாய்? (WHAT DO YOU BELIEVE ABOUT GOD) என்றுதான் கேட்கவேண்டும் எனக் கூறுகிறார். ஏன் இந்தச் சிறிய வேறுபாடு கேள்வியில்? இந்த (அறிவு வளர்ச்சி)க் காலத்தில் கடவுள் என்ற சொல் எந்த அர்த்தத்தையும் தரலாம்; எனவே, அது இல்லை என்ற அர்த்தத்தையும் தரக்கூடும் என விளக்குகிறார்.
எது முதலில் வந்தது? கோழியா, முட்டையா? எது முதலில்? மதமா? நாத்திக மனித நேயமா? மதம்தான் முதலில் என்றால்... நாத்திகமும் மனித நேயமும் அதே காலகட்டத்தில் மறுப்பாக எழுந்த தத்துவங்கள்தான் என்கிறார். மறுக்க முடியுமா? இதற்கு ஆதாரமாக ரிக் வேதத்தைக் காட்டுகிறார். 3,500 ஆண்டுகளுக்குமுன் தொகுக்கப்பட்டது எனக் கூறப்படும் இந்நூலின் சில வரிகளை மேற்கோள் காட்டுகிறார். படைப்பு பற்றிய ரிக் வேத ஸ்லோகத்தைச் சுட்டுகிறார்.
யாருக்கு சரியாகத் தெரியும்?
யாரால் உறுதியாகக் கூறமுடியும்?
எப்போது இப்பிறப்பு நிகழ்ந்தது?
எப்போது இதன் படைப்பு நிகழ்ந்தது?
இந்த உலகம் படைக்கப்பட்டபின் கடவுளர்களின் பிறப்பு நடந்தது.
அப்படியெனில் இது எப்போது நடந்தது
என்று யார் அறிவார்?
எவருக்கும் இது தெரியாதே!
அவன் படைத்தானா?
படைக்கவில்லையா, என்பதும் தெரியாது சொர்க்கத்திலிருந்து குனிந்து பார்க்கும்
அவன் மட்டுமே அறிந்திருக்கலாம்! அவனுக்கே கூட, ஒருவேளை, இது தெரியாமல் இருக்கலாம்!
- இந்தச் சந்தேகம் அன்றைக்கே இருந்திருக்கிறதே!
இந்த அய்யத்தைக் கிளப்பியவர்கள் மானுடப் பற்றாளர்களாகிய லோகாயதர்கள், சார்வாகர்கள். ஒரே மாதிரியான கருத்தும் கொள்கையும் கொண்ட மனித நேயர்கள் இந்திய மண்ணில் 2,100 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறார்கள். மானுடப் பற்றாளர்கள் எனப் பெருமையுடன் பறை சாற்றுகிறார் இந்நூலில். இறப்புக்குப்பின் எந்த ஒரு வாழ்க்கையும் கிடையாது என அறுதியிட்டு அவர்கள் கூறினார்கள்.
மாதவ ஆசார்யா என்பவர் எழுதிய சர்வ தரிசன சம்கிதை எனும் நூலின் பாடல் ஒன்றினையும் எடுத்தாண்டிருக்கிறார்.
அடுத்த உலகத்திற்கு இறந்த உடல் செல்கிறதென்றால், ஏன் திரும்பவில்லை? இறந்தோரை இழந்து தவிக்கும் உறவினரைச் சாந்தப்படுத்திட
ஏன் அவர்கள் திரும்பி வரவில்லை? எல்லாம், தம் வயிற்றுப் பாட்டுக்காக
பார்ப்பனர் கட்டிவிட்ட கதையிது - செத்தவர்க்குச் செய்திடும் சடங்குகள்!
வேறெங்கும் வாழ்வு கிடையாது இவ்வுலகில் வாழும் மாந்தரெல்லாம்
மகிழ்வுடன் வாழ்ந்திடவே
பற்றுவீர் சார்வாகத் தத்துவத்தை!
எனப் போகும் பாடல் அது! IT IS ONLY AS A MEANS OF LIVELIHOOD THAT BRAHMINS HAVE ESTABLISHED HERE ABUNDANT CEREMONIES FOR THE DEAD என அப்பட்டமாக எழுதி சார்வாகக் கொள்கையை சர்வதரிசன சம்கிதை கூறுவதை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்.
இந்தியாவில் 2,600 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட சமண மதம் கூட பார்ப்பனச் சடங்குகளையும் மேலாதிக்க வல்லாண்மையையும் எதிர்த்து வந்ததுதானே! கடவுள்தான் உலகை உண்டாக்கியது என்றால் அதற்கு முன் அது எங்கே இருந்தது? அது அனைத்துக் கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்டது என்றால், இப்போது எங்கே இருக்கிறது? உலகைப் படைப்பதற்குத் தேவையான பொருள்களை அது எப்படிப் பெற்றது? எங்கிருந்து பெற்றது? என்ற கேள்விகளை சமண அறிஞர் குந்த குந்த கேட்டார் எனக் குறிப்பிடுகிறார். கீழை நாடுகளின் சிந்தனைகளில்தான் மானுடப்பற்றும், கடவுள் மறுப்பும் ஆதிகாலம் தொட்டே தொடங்கி நிலவி வந்தது என்பதை நிறுவுகிறார். நாம் பெருமை கொள்ள வேண்டிய சேதி!
ஜென் பவுத்தம் பற்றிப் படித்தவர் என்ற காரணத்தால் அவர் அதுபற்றி விளக்குகிறார். ஷான் (CHAN) என்று சீன மொழியில் அழைக்கப்படும் கட்டுப்பாடுகள் நிறைந்த வழிபாட்டு முறையே, ஜப்பானிய மொழியில் ஜென் (ZEN) எனப்படுகிறது. தியானம் என்ற பொருள்தரும் சமக்கிருதச் சொல் தியானா (DHYANA) என்பது சீனத்தில் ஷான் ஆனதாம். இந்த ஷான் முறையைக் கைக்கொள்ளும் சீன குருக்கள் ஒயின் பாட்டில், நீலப்படம் பார்க்க உதவும் டி.வி., வி.சி.ஆர். பெட்டிகளின் பக்கத்தில்தான் தைவானில் அமர்ந்து ஜெபம் செய்கிறார்களாம். இந்தக் கபடவேடதாரிகளை அடையாளம் கண்டதால்தான், இவர்கள் கம்யூனிஸ்ட் சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, சியாங்கே ஷேக்கின் ஃபார்மோஸா தீவில் அடைக்கலம் புகுந்து தம் மத வணிகத்தைச் செய்து வருகிறார்கள் போலும்!
உலகின் மதங்கள் எல்லாமே ஒன்றை மட்டுமே வலியுறுத்துவதாக அவர் எழுதுகிறார்.
உனக்குத் தீங்கு நேரும் வகையிலான காரியத்தை, நீ, பிறருக்குச் செய்யாமல் இருப்பதே உன் கடமை. (மகாபாரதம் 5:1517) இதே கருத்தையே பவுத்தம் கூறுவதாக (உதன _ வர்கம் 5,18) எழுதுகிறார். பிறர் உனக்குச் செய்வதால் உனக்குத் தீங்கு நேரிடுமானால், அதே காரியத்தை நீ பிறருக்குச் செய்யாமலிருப்பதுதான் சட்டம் என்று மாத்யூ எழுதிய பைபிள் (7, 12) கூறுவதாக எழுதுகிறார்.
வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கொள்கை ஒன்றே! அதுதான் கருணையுடன் அன்பு செலுத்துதல். பிறர் உனக்கு எதைச் செய்யக் கூடாது என்று நினைக்கிறாயோ, அதைப் பிறருக்கு நீ செய்யாதே என்று கன்பியூஷியஸ் மதம் (15, 23) கூறுவதாக எழுதுகிறார்.
தனக்கு விருப்பமானதைப் பிறருக்கும் செய்து வாழ்வதே (இறை) நம்பிக்கையாளர் என்பதற்கான அடையாளம் என்று இசுலாத் கூறுவதாக எழுதுகிறார்.
எதை நீ விரும்பவில்லையோ, அதை அடுத்தவருக்கு நீ செய்யாதே என்று யூதமதம் (டால்முட், ஷபாத் 31டி) கூறுவதாக எழுதுகிறார்.
உன் பக்கத்து வீட்டாருக்கு ஏற்படும் ஆதாயம் உன்னுடையது என்றும் அவருக்கு ஏற்படும் இழப்பும் உனக்கு ஏற்பட்டதாகும் என்றும் கருது என்று டாவோயிச மதம் கூறுகிறதாம்.
நேர்மையான வாழ்க்கை முறை என்பது எதுவென்றால், எவரையும் துன்புறுத்தாமல் இருப்பதுதான் என்கிறதாம் சமணம்.
எனவே, மனித நேய இயக்கம் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஒழுக்கநெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்று மட்டுமே கூறுகிறது என்கிறார். யூத மதத்தில் ஹலாச்சா (HALACHA) என்றும் கத்தோலிக்கக் கிறித்துவத்தில் கானன் சட்டம் (CANON LAW) என்றும் 10 கட்டளைகள் என்றும், இசுலாத்தில் ஷரியா என்றும் பவுத்தத்தில் கூறப்படும் எட்டுப் பாதைகள் (EIGHT FOLD PATH) போன்ற எல்லாமே, தற்காலத்திற்கு அவ்வளவாகப் பொருந்தி வராதவை. காலத்திற்கேற்ப மாறுதலுடன் ஒழுக்கநெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கம்பளியையும் பஞ்சையும் கலக்கக்கூடாது. இறைச்சியையும் பாலையும் கலக்கக் கூடாது. ஆணும் பெண்ணும் கலந்திருக்கக் கூடாது என வேலை செய்யும் இடங்கள், வழிபாட்டிடங்கள், திருமணங்கள் போன்றவற்றில் பேதம் காண்பது என்பவையெல்லாம் தற்காலத்திற்கு ஒத்து வராதவை என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்.
குழந்தை பிறந்தால், அதன் பெயர்சூட்டு விழா மேலை நாடுகளில் மதச் சடங்காக நடக்கும். அதுபோலவே திருமணங்கள், சாவுச் சடங்குகள் போன்றவையும் மதக் கருத்துகளின் அடிப்படையில் நடத்தப்பெறும். கடவுள், மதநீக்கம் செய்து மாந்தநேயக் கொள்கைப்படி வாழ்பவர்கள் எப்படி மதம் சம்பந்தமில்லாமல் இவற்றைச் செய்து கொள்வது என்பதுபற்றியும் விளக்குகிறார்.
குழந்தைக்குப் பெயர் வைப்பதுபற்றிக் கூறும்போது, மனைவி, கணவன் ஆகிய இருவரின் குடும்பம், கலாச்சாரம் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் பெயர் வைக்கலாம். ஞானத்தந்தை, ஞானத்தாய் என்று குடும்பப் பெரியவர்களைக் குறிப்பிட்டுக் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்வர். அதற்கு மாற்றாக அவர்களை GOD PARENTS என்பதற்குப் பதில் GUIDE PARENTS (வழிகாட்டும் பெற்றோர்) என்றழைக்கலாம் என்று கூறுகிறார்.
திருமணம் பற்றிக் கூறும்போது, ஏன் அதைச் செய்துகொள்ள வேண்டும்? அது தேவையே இல்லை என்கிறார். திருமணம் கிரிமினல் குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதைக் கருத்தில் கொள்ளலாம். 34 வயதான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பல திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். பெண் வீட்டிலிருந்து மணமகளைப் பல மணமகன்கள் விலைக்கு வாங்கியும், சிலர் நல்ல வாழ்வு வாழ்ந்திட தெய்வ கடாட்சம் கேளிச்சடங்குகள் செய்தும் திருமணங்கள் நடக்கின்றன.
திருமணம் என்பது - ஆணும் பெண்ணுமான இருவர், நாங்கள் இணைந்து வாழ முடிவு செய்திருக்கிறோம் என்பதைப் பலருக்கும் பொதுவில் தெரிவிப்பதற்கான ஏற்பாடுதான். எனவே, இது தொடர்பான ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறிக்கொண்டபின், கூட்டத்தினரைப் பார்த்து, இவர்கள் இருவரும் இன்பமாகவும் இடையூறு இல்லாமலும் இணைந்து வாழ்வதற்கு எல்லா வகையான ஊக்கமும் அளித்து திருமணப் பிணைப்பை உறுதியுடன் நீடிக்கச் செய்வீர்களா? என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். அவர்களின் சம்மதக் குரல் எழும்பியதும் திருமணம் முடிந்ததாக அறிவித்து விடலாம் என்கிறார்.
இறக்கும் தருவாயில் இருப்பவரிடம் நான் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன் என ஆறுதல் கூறுவதும், இறந்த பிறகு அவர் சொர்க்கம் சென்று விட்டார் என்று கூறுவதும் வழக்கமாகிவிட்டது.
சாவதற்குப் பலரும் பயப்படுகிறார்கள். சாகும் நேரத்தில் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுவிக்க, கடவுளோ வேறெதுவுமோ கிட்டே வருவது கிடையாது. யார் வந்தாலும் துன்பங்களை நிரந்தரமாகத் தீர்த்திடவும் முடியாது. ஆனால், நம்மால் மதிக்கப்படும், நேசிக்கப்படும் ஒருவரது இறப்பு நிகழ்ந்து விட்டால் நாம் போய் அவர்கள் குடும்பத்தினரிடம் நான் வருந்துகிறேன், என் இரக்கங்கள், என் ஆறுதல்கள் என்கிற மாதிரியான வார்த்தைகளைக் கூறாமல், உங்கள் துன்பத்தில் நானும் பங்கு கொள்கிறேன். (I TAKE PART IN YOUR GRIEF) எனக் கூறலாம் என்கிறார். இரங்கல் தெரிவிக்கக் கூடியிருப்போரிடையே, ஒருவரோ, சிலரோ இறந்தவர் பற்றிய செய்திகளைக் கூறிப் பேசலாம். கடைசியாக, இந்த இறுதிக் கூட்டத்தில் அவரின் பூத உடலை கவுரவத்துடனும் மரியாதையுடனும் அன்புடனும் பாசத்துடனும் மதித்து, அவருடைய நினைவுகளையும் ஆற்றல்களையும் நம் நினைவில் தேக்கி அவரது உடலைப் புதைத்து/எரித்து இயற்கைச் சுழற்சிக்கு அளிக்கிறோம். மண்ணிலிருந்து மண்ணுக்கே! புழுதியிலிருந்து புழுதிக்கே! சாம்பலிலிருந்து சாம்பலுக்கே! எனப் பேசி சடங்கை நிறைவு செய்யலாம் என்கிறார்.
தம்மைப் பற்றிக் கூறும்போது, தமக்கு கடவுள், கடவுளச்சி அல்லது அமானுஷ்ய ஆற்றல் கொண்ட ஆவிகள் போன்றவற்றில் நம்பிக்கை கிடையாது என்கிறார்.
ஒரே உலகம்தான் உள்ளது, அதுதான் நாம் வாழும் உலகம், இறப்புக்கு முன்னதாக நாம் வாழும் உலகம், இறப்பிற்குப் பின் எந்த வாழ்வும், உலகமும் கிடையாது என உறுதியாகச் சொல்கிறேன் என்கிறார். ஒரே வாழ்வுதான் - கருப்பையிலிருந்து கற்குழிவரை உள்ள வாழ்வுதான் (FROM WOMB TO TOMB) நான் கடவுளுக்கு எதிர்ப்பல்ல, நான் நாத்திகன் மட்டுமல்ல நான் மானுடப் பற்றாளன் என்கிறார். கடவுள் என்கிற கருத்தியல் இல்லாமலே நன்றாக இருப்பதும் நன்றாக வாழ்வதுமே என வரையறை செய்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக