புதன், 9 ஆகஸ்ட், 2017

ஜெர்மனி பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு

காவிரிக்கரையில் படர்ந்த பெரியார் தத்துவங்கள் 
ஜெர்மனி ரைன் நதிக்கரையில் கிளைத்தன!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை


ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற "பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டில்" காவிரிக் கரையில் படர்ந்த பெரியார் தத்துவங்கள் ஜெர்மனி ரைன் நதிக் கரையில் கிளைத்தன! என இம்மாநாட்டை தலைமையேற்று நடத்திய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:-
2017 ஜூலை 27, 28, 29 ஆகிய மூன்று நாள்களும் பெரியார் தொண்டர்கள், பெரியார் மாணாக்கர்கள், பெரியார் பற்றாளர்கள், கருஞ்சட்டையினர், பகுத்தறிவாளர்கள், திராவிடர் இயக்கத்தினர் ஆகியோர் தம் வாழ்வில் தனிப் பெரும் திருவிழா நாள்கள் ஆகும்!
உண்ணத் தெவிட்டாத
உன்னத மருந்து
காரணம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பும் (றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ), தமிழகத்தின் தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து ஜெர்மனியில் கொலோன் நகரத்தில் உள்ள கொலோன் பல்கலைக்கழக வளாகத்தில் "பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு" என்ற தலைப்பில் பெரியார் தந்த தத்துவங்களின் மய்யமான சுயமரியாதைக் கொள்கை - லட்சியத்தினை முன்னிறுத்தி, பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஜெர்மனி கிளை முன்னெடுத்து நடத்திய மூன்று நாள் மாநாடும், அதன் ஆழமான கருத்தரங்கக் கட்டுரைகளும், கருத்துரைகளும் பகுத்தறிவாளர் - சுயமரியாதை இயக்கத்தவர்களின் உண்ணத் தெவிட்டாத உன்னத மருந்தேயாகும், அரிய உணவு ஆகும்!
தனி வரலாறு படைத்தது!
ஜெர்மன் பல்கலைக்கழக தமிழாராய்ச்சித் துறைத் தலைவரும், ஜெர்மனி பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவராக சிறப்புடன் செயல்படுபவருமான பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் அம்மையார் அவர்கள் தலைமையில் அமைந்த வரவேற்புக் குழுவினர் அம்மாநாட்டினை மூன்று நாள்களிலும் நடத்திய ஒழுங்கும், கட்டுப்பாடும், செறிவும் நாம் அனைவரும் மூக்கில் விரலை வைத்து வியக்கத்தக்க வகையில் நடந்தேறி தனி வரலாறு படைத்தன! அம்மாநாட்டில், இதுவரை
கண்டறியாதன கண்டோம்!
கேட்டறியாதன கேட்டோம்!!
உணர்ந்தறியாதன உணர்ந்தோம்!
எம் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனான யான் அம்மாநாட்டில் தலைமை தாங்கும் வாய்ப்புப் பெற்றமை எனக்கு பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் பெற்றதையும் விட கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு பெரியார் மாணவனுக்கு இதைவிடப் பேறு  வேறு ஏது?
பெரியார் பன்னாட்டு அமைப்பினருக்கு எமது தலைதாழ்ந்த நன்றிப் பெருக்கு உரியதாகும்.
இவ்வாண்டல்ல; இரண்டாயிரம் - புத்தாயிரத்தில் நம் இலக்கு - "பெரியாரை உலக மயமாக்குவோம்" என்பதாகும்!
அது கனவல்ல; கானல் நீரல்ல! இதோ செயல் வடிவம்!
ரைன் நதிக்கரையில்
2017இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாறு. அதுவும் விஞ்ஞானிகளையும், தத்துவ மேதைகளையும், வரலாற்றுப் புரட்சியாளர்களையும் தந்த ஜெர்மனி நாட்டின் ரைன் நதிக்கரையில்...!
காவிரிக் கரையில் படர்ந்த பெரியார் தத்துவங்கள் ஜெர்மனி ரைன் நதிக்கரையில் கிளைத்தன!
பெரியார் பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான மானமிகு டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் இலக்குவன் தமிழ், டாக்டர் சரோஜா இளங்கோவன், டாக்டர் திருமதி - திரு. சித்தானந்தம் சதாசிவம் போன்றவர்கள் பங்கு பெற்றதும், பல்வேறு கருத்துரைகளை அளித்ததும்,
இங்கிலாந்து நாட்டின் கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் மானமிகு தோழர் மைக்கேல் செல்வநாயகம் அவர்கள் கலந்து கொண்டதும் (அவர்தான் இவ்வாண்டு பெரியார் பன்னாட்டு அமைப்பின் இங்கிலாந்து கிளைக்கு தலைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளவர்), கொலோன் பல்கலைக்கழக மாணவர்கள், பிராங்க்பர்ட்டில் பணியாற்றும் பெரியார் கொள்கைப் பற்றாளர்கள், பிரான்சின் பாரிசிலிருந்து வந்த பெரியார் பற்றாளர் திருமதி. சுசிலா எத்துவால் உள்ளிட்ட ஏராளமான பன்னாட்டு பேராளர்கள் பங்கேற்றது பெருமகிழ்வுக்குரிய செய்தியாகும்.
தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, கழக வெளியுறவுச் செயலாளர் தோழர் வீ.குமரேசன், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், டாக்டர் எஸ்.தேவதாஸ், டாக்டர் த.ஜெயக்குமார், ஆய்வாளர் எம்.விஜயானந்த், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் எஸ்.எஸ்.சுந்தரம், முனைவர் ஆ.கலைச்செல்வன், கவிஞர் லதாராணி, 92 வயதினை எட்டிய மூத்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கணேசன் ஆகியோருடன் மொத்தம் 8 மகளிர் உள்பட 41 பேர், பேராளர்களாக கலந்து கொண்டது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
சுயமரியாதை 
ஒளி விளக்காக!
தந்தை பெரியார்தம் சுயமரியாதைக் கொள்கையின் தேவை, சிறப்பு பற்றி சுவீடன் நாட்டு உபாசலா பல்கலைக்கழகப் பேராசிரியர் பீட்டர் சால்க் (இவர் வாழ்விணையருடன் வந்து கலந்து கொண்டார் - தமிழ் அறிந்த பேராசிரியரும் கூட) கொலோன் பல்கலைக் கழகத்தில் மாணவியாகப் பயின்று டாக்டர் பட்டம் பெற்று பணியாற்றி வரும் தோழர் டாக்டர் சிர்.உன்ரா, கொலோன் பல்கலைக்கழக அறிவியல் துறை பேராசிரியரும், மேற்சொன்னவரின் வழிகாட்டிப் பேராசிரியருமான டாக்டர் உல்ப் காங்க், தந்தை பெரியார் பெண்ணுரிமை, மனித நேயம் பற்றிய ஈழத்தில் பிறந்து, ஜெர்மனியில் பல்லாண்டாக வாழும் தமிழறிஞர், சமூக சேவையாளர், பேராயர் இமானுவேல் பாதிரியார் அவர்களின் உரை, அவ்வுரையில் முகமூடிகள் கழற்றப்பட வேண்டும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வர பெரியார் சுயமரியாதை ஒளி விளக்காக பயன்படும் என்று விளக்கிய கருத்துரைகள் மறக்க முடியாத பரவசம் தந்த பாடங்கள்!
பெரியார் என்ற கருத்துக்கடலில் மூழ்கி எடுத்த முத்துக்கள் ஜொலித்தன!
மாநாட்டின் மூன்றாம் நாளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தந்தை பெரியாரின் கொள்கைகள், தத்துவங்கள் உலக மயமாக உறுதியேற்ற வரலாற்று முக்கியமான தீர்மானம் ஆகும்! ஈராண்டுக்கொரு முறை வெவ்வேறு நாடுகளில் இம்மாநாடுகள் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த மாநாடு 
அமெரிக்காவில்
டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் அடுத்த மாநாடு (2019) அமெரிக்காவில் நடைபெறும் எனக் கூறி, வாய்ப்பை மற்றவர்களிடமிருந்து தட்டிப் பறித்துக் கொண்டார்.
ஜெர்மனி மொழியில் பெரியார் நூல்களை மொழியாக்கம் செய்து உதவிய பேராசிரியர் ஸ்வென் வொர்ட்மென், கொலோன் பல்கலைக்கழக தமிழாய்வுத் துறையைச் சேர்ந்த கிளாடியா ஆகியோரும் அரும்பணியாற்றினர்.
இவர்கள்தம் வழிகாட்டியான பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ், பெரியார் வாழ்க்கைக் குறிப்புகளை ஜெர்மனி மொழியாக்கம் செய்த நூலும், பேராசிரியர் அய்யாசாமியின் ஆங்கிலக் கட்டுரை - சுயமரியாதை இயக்கம் பற்றியும், அய்யா நினைவிடக் கல்வெட்டு வாசகங்கள். கருத்து மொழிகளடங்கிய ஆங்கில வெளியிடப்பட்டன.
மாநாட்டின் இறுதியில் பெரியார் தொண்டர்கள் இம்மாநாட்டிற்கு வந்து கலந்துறவாடி, கருத்துப் பரிமாற்றப் பருகுதலின் பின் "25 வயது வாலிபர்களாகவே நாடு திரும்புகிறோம்" என்ற உணர்வுடன் புத்தாக்கம் பெற்றனர். ஜெர்மனி பெரியார் குடும்பத்திற்கு நமது நன்றி! நன்றி!! எனத் தெரிவித்தது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.
“விரிவான நடவடிக்கைகள் பின்!".
சென்னை                                                                                                                       தலைவர்
7.8.2017                                                                                                                   திராவிடர் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக