ஞாயிறு, 19 அக்டோபர், 2025

கேரளத்தில் ஒலித்த திராவிட குரல்

 


கொச்சி, மார்ச் 10- கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் ஆழுவாவில் 19.2.2025 அன்று திராவிட மக்கள் சங்கம் – Dravidan People Federation ( DPF) அமைப்பின் சார்பில் ‘திராவிடம் பேசுவோம்’ என்கிற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

திராவிட மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர், வயநாடு நவுஷாத் தலைமை ஏற்றார். இந்த நிகழ்வில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் ‘திராவிட தத்துவம்’ என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஊடவியலாளர் இந்திரகுமார் தேரடி திராவிட இயக்க செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூகநீதி
திராவிடம் என்பது மொழி வழி குடும்பமாக கால்டுவெல் எவ்வாறு வகைப்படுத்தினார்? ஆரிய பார்ப்பனியம் திராவிடம் என்பதை நில அடிப்படையில் எந்த எந்த புராணங்களில் குறித்துள்ளது என்பதையும், இன ரீதியாக மேல் நாட்டு அறிஞர்கள் திராவிட இன மக்கள் என்பதை எப்படி அடையாளப் படுத்தினார்கள் என்பதையும் ஆதரபூர்வமாக விளக்கினார். மேலும் திராவிடம் என்கிற வரையறை ஏன் தற்போது வரை தேவைப்படுகிறது. எதனால் திராவிட வரையறைக்குள் நின்று பெரியாரும் அண்ணாவும் சமூக அரசியல் தளங்களில் வேலை செய்தார்கள்.
இன்றைய ‘திராவிட மாடல்’ அரசின் தொடக்கம் நீதிக்கட்சிதான். நீதிக் கட்சி ஆட்சியில் சமூக நீதிக்கான அடித்தளம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என்று தொடர்ந்து சமூக நீதி தளத்தில் இயக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
மனுதர்மம் கீழ்நிலை மக்களை படிக்கக் கூடாது என்றதும், பெண்களை ஒதுக்கி வைத்ததும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வாய்ப்பளிக்கப்படாத மக்களின் உரிமையை திராவிடர் இயக்கம் எவ்வாறு போராடி பெற்றுத்தந்தது.

கலைஞர் அரசின் மக்கள் நல திட்டம், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு சமத்துவபுரம், பெண்களுக்கு சொத்துரிமை என்று பட்டியலிட்டு இன்றைய திராவிட மாடல் அரசின் காலை உணவு திட்டம், தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை, நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமை பெண் திட்டம், சமூகநீதி கண்கணிப்பு குழு, பெண் ஒதுவார் நியமனம், மகளிர் மேம்பாடு, பொருளாதார உயர்வு, சமத்துவ சமூக நீதிக்கான திட்டங்கள், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. மேலும் இந்தியாவில் இல்லாத அளவுக்கு கல்வி, உயர்கல்வி, விளையாட்டு துறை, மருத்துவ துறை, வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் திட்டங்கள், சிறும்பான்மையினர் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, இடஒதுக்கீடு முறை உள்ளிட்டவற்றை அடங்கிய சமத்துவ ஆட்சியை கொடுக்க முடிகிறதென்றால் அதற்கு நிலையான தத்துவம் திராவிடம் தான். திராவிடம் என்பது தற்போது அரசியல் காப்பு ஆயுதமாக பயன்பட்டு வருகிறது என்றும், ஹிந்தி சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு, மாநில சுயாட்சி கோருதல், புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு, ஆரிய பண்பாட்டு திணிப்பு எதிர்ப்பு, கூட்டாச்சி தத்துவம் காக்க, இன்று அரணாக இருப்பது திராவிட தத்துவம் என்பதை மறுக்க முடியாது.

திராவிட இன மக்களான தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கருநாடகா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சியில் திராவிடத்தின் பங்கு அதிகம் என்றும், ஆரிய ஆதிக்கத்தை விரட்டிட திராவிட மக்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது காலத்தின் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
திராவிட மக்கள் சங்கத்தின் கொடி கருப்பு ஒரு பகுதியும், சிகப்பு ஒரு பகுதியும் சிகப்பில் நீதிக் கட்சியின் தராசு சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிகழ்வில் மாவட்ட மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆசிப், வழக்குரைஞர் நீனா ஜோஸ், தோழர்கள் ஆத்தூர் சதீஷ், அரக்கல் அமீர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

-விடுதலை நாளேடு, 10.03.2025

மேற்கு வங்கத்தில் வைக்கம் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாக்கள்! ‘‘ரவீந்திரநாத் தாகூர் மண்ணில் தந்தை பெரியார் விழா!”

 


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து காணொலியில் கருத்துரை!

சாந்தி நிகேதன், ஏப்.5 மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் “பெரியார் அம்பேத்கர் சித்து கானு படிப்பு வட்டம்” சார்பில் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்து காணொலியில் கருத்துரை வழங்கினார். கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நேரில் கலந்துகொண்டு உரையாற்றினார்

பெரியார் அம்பேத்கர்
சித்துகானு படிப்பு வட்டம்!

‘‘பெரியார் அம்பேத்கர் சித்துகானு படிப்பு வட்டம்” சார்பில் (சித்து, கானு ஆகியோர் வங்கத்தின் பழங்குடி மக்கள் போராளிகள் ஆவர்) நடைபெற்ற கலந்துரையாடலில், இவ்வாண்டு மேற்கு வங்க மாநிலம் முழுவதும், பல இடங்களில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாக்களைத் தொடர்ந்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் தொடக்கமாக, இவ்விழாக்கள் மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சாந்தி நிகேதன் நகரில் 23.03.2025 அன்று சாந்தி நிகேதன் நகரில் உள்ள பாஞ்சாபோன் கலைக்கூடத்தில் காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற்றன. தொடக்க நிகழ்வாக லாலன் பக்கீரின் பவுல் பாடல்கள் (BAUL of Lalan Fakir) தருண் கியேபா குழுவினரால் பாடப்பட்டன. ஜாதி ஒழிப்பைக் குறித்துப் பாடிய பாடல் நிகழ்வில் பங்கேற்ற அனைவரிடமும் ஒரு புத்தெழுச்சியை உண்டாக் கியது. அதனைத் தொடர்ந்து சாந்திநிகேதன் மண்ணுக்கே உரிய ரவீந்திரநாத் தாகூரின் இசைக் கோவைகளிலிருந்து தேவப்ரியா ப்ரம்மா, ராகுல் ஆகியோரால் ரவீந்திர சங்கீத் இசைக்கப்பட்டது.

திராவிடர் கழகம்

 

வங்காளம், தமிழ், ஆங்கில
மொழிகளில் பதாகைகள்!

முதலில் பேராளர்கள் பதிவுடன் விழா தொடங்கியது. 230 பேராளர்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்றனர். அவர்களில் பழங்குடியினர், சமூகச் செயல்பாட்டாளர்கள், இடதுசாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். மேடைக்கு வங்காளத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவரின் ”சக்தி பாத்யகர் மேடை” என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. மேடையில் தந்தை பெரியாரின் பெரிய படத்துடன் வங்காளம், தமிழ், ஆங்கில மொழிகளில் பதாகை வைக்கப்பட்டிருந்தது. அரங்கின் வெளியில் கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய மூன்று நிறங்களில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

கழகத் தலைவரால் பாராட்டப்பெற்ற
சுப்ரியா தருண்லேகா!

தந்தை பெரியாரின் சிந்தனைகளை மேற்கு வங்க மாநிலத்தில் பரப்புரை செய்யும் வகையில், ”பெரியார் அம்பேத்கர் சித்துகானு படிப்பு வட்டம்” உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் சுப்ரியா தருண் லேகா, மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் சென்று கூட்டங்களை நடத்தியும், புத்தகங்களை அறிமுகம் செய்தும் உரையாற்றி வருவதுடன், பெரியார் அம்பேத்கர் சிந்தனையாளர்களையும் ஓரணியில் திரட்டி வருகிறார். முதலில் இவர் தந்தை பெரியாரின் “இராமாயணப் பாத்திரங்கள்” நூலை வங்க மொழியில் பெயர்த்தார். பின்னர் தந்தை பெரியார் பற்றிய ஒரு அறிமுக நூலை வங்க மொழியில் எழுதினார். அவரின் இந்த தன்னலமற்ற தொண்டுக்காக திருச்சியில் இரண்டு நாள்கள் (28.12.2024, 29.12.2024) நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) மாநாட்டில், சுப்ரியா தருண்லேகா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் சிறப்பிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

 

ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசிரியர் உரை!

நிகழ்வுக்கு மேனாள் பத்திரிகையாளரும், சாந்திநிகேதன் நகரின் முக்கிய சமூகச் செயல்பாட் டாளருமான தபஸ் மல்லிக் தலைமையேற்று சிறப்பித்தார்.
பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில் ஆஸ்திரேலியாவில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த உலக மகளிர் நாள் மற்றும் ஆஸ்தி ரேலியாவில் உள்ள சுயமரியாதைக் குடும்ப விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்றிருந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மேற்கு வங்கத்தில் உள்ள ”பெரியார் அம்பேத்கர் சித்துகானு படிப்பு வட்டம்” சார்பில் நடைபெறும் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாக் குழுவினரின் வேண்டுகோளுக்கிணங்க, ஆஸ்தி ரேலியாவிலிருந்து 12 நிமிடம் கருத்துரையைக் காணொலி வழியாக ஆங்கிலத்தில் உரையாற் றினார்.

கழகத் தலைவரின் உரைக்கு
பெரும் வரவேற்பு!

திராவிடர் கழகத்தின் தலைவர் தனது உரையில், தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டப் பங்களிப்பின் சிறப்பை, தாக்கத்தை விரிவாக எடுத்துரைத்தார். இந்தியாவில் கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற முதல் மனித உரிமை போராட்டம் என்று போற்றத்தக்க வைக்கம் போராட்டம் தொடங்கியது முதல், பல்வேறு காலகட்டங்களில் போராட்டத்தின் நிலை குறித்தும் முதல் கட்டத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பிறகு, அவர்களின் அழைப்பின் பேரில் வைக்கம் சென்ற தந்தை பெரியாரின் பங்களிப்பால் அது வெற்றி அடைந்ததையும் குறித்து பல்வேறு வரலாற்று செய்திகளை எடுத்துக் காட்டி உரையாற்றினார். வைக்கம் போராட்டத்தினை முன்னெடுத்த ஜார்ஜ் ஜோசப், கே.பி. கேசவ மேனன், மாதவன் நாயர், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, அன்னை நாகம்மையார், தந்தை பெரியாரின் தங்கை எஸ்.கண்ணம்மாள் உள்ளிட்ட பலரின் பங்களிப்பையும் காந்தியாரின் தலையீட்டையும், வைக்கம் போராட்டத்தின் வெற்றி என்பது இந்தியாவில் தீண்டாமை ஒழிப்புக்கும், சமூக நீதிக்கும், சுயமரியாதைக்குமான போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுவதற்கு அடித்தளமாக இருந்துவருகிறது என்றும் அவர் தமது உரையில் சுட்டிக்காட்டினார். அரங்கத்தில் இருந்த மக்கள் மத்தியில் திராவிடர் கழகத் தலைவரின் உரை பெரும் வரவேற்பைப் பெற்றது. (உரையின் சுருக்கமான தமிழ் வடிவம் 4ஆம் பக்கம் காண்க)

திராவிடர் கழகம்

தந்தை பெரியாரின் வாழ்வும், போராட்டமும்!

தொடக்க உரையைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் ஆனந்த் ஆச்சார்யா, ”தந்தை பெரியாரின் வாழ்வும் போராட்டமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதிய அமைப்பு குறித்தும் பல்வேறு செய்திகளை எடுத்துரைத்தார். தந்தை பெரியார், ம.சிங்காரவேலர், புரட்சியாளர் அம்பேத்கர், ஜோதிபா பூலே ஆகியோரின் கொள்கைகள் இன்றைய பார்ப்பனிய பாசிச ஆட்சி நடைபெறும் சூழலில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் விளக்கிக் கூறினார். மேற்கு வங்கத்தில் ஜாதி அமைப்பு இல்லை என்று கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், ஜாதி இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டால்தான் அதற்குரிய தீர்வை கண்டடைய முடியும் என்றும் விளக்கினார். தந்தை பெரியார் குறித்த ஒரு சிறு கையேடும், ஜோதிராவ்-சாவித்திரிபாய் பூலே ஆகியோர் பற்றிய ஒரு சிறு கையேடும் வங்க மொழியில் வெளியிடப்பட்டன.

திராவிடர் கழகம்

சமூகச் செயல்பாட்டாளர்களின் உரைகள்!

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் ரன்பீர் சுமித் தனது உரையில், மராட்டியத்தில் ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளையும், சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பார்ப்பனக் கொடுமைகளுக்கு எதிரான செயல்பாடுகளையும் குறிப்பிட்டுவிட்டு, வங்காள மக்கள் அதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் கூறினார். ஷிவ்ரி வித்யாசாகர் கல்லூரி பேராசிரியர் தசரத் முர்மு அவர்கள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பழங்குடி மக்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றினார். தொடர்ந்து உரையாற்றிய ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியரும், ஒடுக்கப்பட்ட மக்கள் தலைவருமான பத்தியநாத் சாகா இன்றைய சூழலில் தந்தை பெரியாரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வங்காளத்தின் பெண்ணியப் போராளி ரொகையா பேகம் குறித்து விரிவான புகழ்பெற்ற பேராசிரியரும், சீரிய ஆய்வளருமான மீராதுன் நகார் அம்மையார் (ஓய்வு) மிகச் சிறப்பாக உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

பார்ப்பனியத்திற்கு எதிராக
போராடிய நமோ சூத்திரர்கள்!

தொடர்ந்து, வங்காளத்தின் மட்டுவா சமூகப் புரட்சி இயக்கத்தின் நிறுவனரும், எழுத்தாளரும், சமூகச் செயல்பாட்டாளருமான சுக்ரிதி ரஞ்சன் பிஸ்வாஸ் பேசுகையில், சண்டாளர்கள் என்று இகழப்பட்ட மோசமான நிலையில் தங்களின் மட்டுவா சமூகம் தீண்டத்தகாத சமூகமாக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்ததையும், பார்ப் பன ஆதிக்கத்திற்கு எதிராக ஹரிச்சந்திரா தாக்கூர், நமோ சூத்திரர்கள் எனப்பட்டோர் விடுதலைக்குப் போராடிய செய்திகளையும் எடுத்துக் கூறினார். பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்டப்படியான உரிமைக ளை உறுதிசெய்தல் குறித்து, டாக்டர் சிப்போய் சர்வேஸ்வர் உரையாற்றினார். பின்னர் ரவிதாஸ் சிந்தனைகளைப் பின்பற்றுவோரின் தலைவர் களுள் ஒருவரான கார்த்திக் ரூய்தாஸ் உரை யாற்றினார்.

கழக துணைப் பொதுச்செயலாளர் உரை!

மதிய உணவுக்குப் பின்னர், பாடலுடன் தொடங்கிய நிகழ்வில் சந்தோஷ் சாகா, சிபு சோரன் மற்றும் தோழர்கள் கலந்துரையாடலை ஒருங்கிணைத்தனர். சுபநாத் கவிதைகளை வாசித்தார். அதன் பின்னர், திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆங்கிலத்தில் உரையாற் றினார். தந்தை பெரியாரின் தேவையை உணர்ந்து இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில், குறிப்பாக வங்காளத்தில் பழங்குடியின மக்களிடம் பெரியார் கருத்துகளைக் கொண்டு செல்லும் சுப்ரியா தருண்லேகா உள்ளிட்ட தோழர்களின் முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்தார். சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் தொடங்கப் பட்டிருந்தாலும், இந்தியா முழுமைக்கும், உலகம் முழுமைக்கும் உள்ள மக்களுக்குப் பொதுவான இயக்கம் என்பதை எடுத்துக் காட்டினார். தந்தை பெரியாரின் போராட்டங்கள் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்கு எந்த வகையில் பெரும் பங்காற்றியிருக்கிறது என் பதையும், இட ஒதுக்கீட்டின் வரலாற்றையும், இன்றைய பாஜக பாசிச ஆட்சி நடைபெறும் காலத்தில் தமிழ்நாடு மாநில உரிமைக்கும், மொழி உரிமைக்கும் நடத்தும் போராட்டத்தின் அடிப்படைகளையும் 25 நிமிட அளவில் சுருக்கமாக முன்வைத்தார்.

திராவிடர் கழகம்

ஜாதிப் பின்னொட்டை நீக்குவதை இயக்கமாக்குங்கள்!

தனது பெயருடன் ஜாதிப் பெயரொட்டு இருக்கும் நிலையை தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் மாற்றிக் காட்டியது போல வங்காளத்திலும் நடைபெற வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக சுப்ரியா பானர்ஜி என்ற தன் பெயரை சுப்ரியா தருண்லேகா என்று கடந்த ஆண்டு மாற்றிக் கொண்டார். அதனை எடுத்துக் காட்டி, வங் காளத்து முற்போக்காளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் தங்கள் ஜாதிப் பெயரொட்டை நீக்குவதை இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, காலையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தந்தை பெரியார் குறித்த “பெரியார் ஒருவர்தான் பெரியார் – அவர் போல் பிறர் யார்” என்று தொடங்கும் தமிழ்ப் பாடலை கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பாடினார். தொடர்ந்து விஸ்வபாரதி பல்கலைக்கழகத் தத்துவப் பேராசிரியரும் தமிழருமான முனைவர் டெரன்ஸ் சாமுவேல், தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளைக் குறித்து எளிய ஆங்கிலத்தில் தெளிவுபட உரையாற்றினார்.

செயல்பாட்டுக் குழு பொறுப்பாளர்கள் தேர்வு!

நிகழ்வின் இறுதியாக, பெரியார் வைக்கம் & சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாக் குழு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மார்ச் 31 கொல்கத்தாவிலும், அடுத்தடுத்து வங்காளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வைக்கம் மற்றும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாக்களை நடத்த உறுதிமேற்கொள்ளப்பட்டது. சுப்ரியா தருண் லேகா தலைமையில் தோழர்கள் பியாலிதாஸ், அரிஜித் திவர், கோபால்நாத், சுபநாத், சத்யன் போஸ், பிப்லோ சாகா, தேவப்ரியா ப்ரம்மா, சந்தோஷ் சாகா, பிபத் தரன் பாக்தி, ஸ்ருதி செளத்ரி, ஆயிஷா, ருமா முகர்ஜி ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். அபிஷேக் தத்தாராய் பொருளாளராகவும், இக் குழுவின் மாணவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளராக பினோய் தாஸ் பெயரும் அறிவிக்கப்பட்டது. மராத்திப் பேராசிரியர் ரன்பீர் சுமெத் அறிவுரைக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

ஒருங்கிணைப்பாளர்களின் அரும் பணி!

சுரேஷ் மாட்டி, ரிஷான் மேதே, சாயிட் ஹபிப் மற்றும் ஏராளமான விஸ்வபாரதி பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்வை ஒருங்கிணைக்க உதவினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் சதீஸ்வரன், சேலம் கழக மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைக்கத் தொடர்பாளர்களாக உதவினர். நிறைவாக, நிகழ்வின் தலைவர் தபஸ் மல்லிக் நன்றி கூறி நிறைவு செய்தார். கழக வெளியீடுகள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தந்தை பெரியாரின் சிலை, டி-சர்டுகளை பலரும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். திராவிடர் கழக மாநாடு நடைபெறுவதைப் போலவே, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததுடன், ஒருங் கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் பலரும் கருப்பு உடைகளியேலே நிகழ்வில் பங்கேற்றனர்.
தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆணி வேர் தமிழ்நாட்டில் இருந்தாலும் அதன் பக்கவேர்கள் இந்தியா வின் பல்வேறு பகுதிகளுக்குள் ஊடுருவி ஆங்காங்கே முளைத்துக் கிளைத்து வளர்ந்து கொண்டிருப்பதை வெளிப்படையாக உணரத் தக்க வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. – நமது சிறப்பு செய்தியாளர்

-விடுதலை நாளேடு,5.4.25

சனி, 30 ஆகஸ்ட், 2025

வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று முழங்கிய எபிகூரஸ்

- செ.ர. பார்த்தசாரதி

ஞாயிறு மலர்

2360 ஆண்டுகளுக்கு முன்பாக (பொ.மு. 341) கிரேக்கத்தில் மத்தியதரைக் கடலில் உள்ள ‘சுவர்ல சாமோஸ்’ என்கிற சின்னஞ் சிறு தீவில் ‘பிளாட்டோ’ மறைந்து அய்ந்து ஆண்டுகள் கழித்து ‘அரிஸ்டாட்டில்’ காலத்தில் ‘எபிகூரஸ்’ பிறந்துள்ளார்.

இவரின் தந்தையார் பெயர் ‘நியோக்ளீஸ்ய (பள்ளி ஆசிரியர்), தாயார் பெயர் ‘காரஸ்ட்ராட்டா’ ஆகும்.

‘டெமோகிரேடர்ஸ்ய மற்றும் ‘பிளாட்டோ’வின் சீடர்களிடம் தத்துவம் பயின்றார்.

எபிகூரஸ் முதலாவதாக தத்துவப் பள்ளியை ‘மைட்டிலீன்’ மற்றும் ‘லாம் சக’சில் நிறுவினார்.

பின்னர் பொ.மு.306இல் ஏதன்சுக்கு சென்று சமூக நல்லிணக்கத்துடன் கூடிய தத்துவப் பயிற்சித் தோட்டத்தை உருவாக்கினார்.

அவரது தாயார் ‘மந்திரம் தந்திரம்’ என்ற பெயரில் நோய்களைத் தீர்க்கும்போது உடன் இருந்ததால், மந்திரம் என்பதெல்லாம் பொய் என்பதை புரிந்து கொண்டார்.

கடவுளுக்கும், மனிதனுக்கும் தொடர்பில்லை; கடவுள் அவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார், நம்மை பார்க்க அவருக்கு நேரமில்லை, நாம்தான் நம்மைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கடவுளின் பேரால் நடப்பதாக சொல்லப்படுபவை அனைத்தும் இட்டுக்கட்டபட்டவைகளே!

கோள்கள், விண்மீன்களால் மனித வாழ்க்கையில் எந்த விளைவும் உண்டாகாது!

விதி என்றும், மறுபிறப்பு என்றும் எதுவும் கிடையாது!

இந்த வாழ்க்கையே உண்மை; இன்பமாக வாழ வேண்டும்; எளிமையாக வாழ வேண்டும்; தேவையான அளவே உண்ண வேண்டும்; மது அருந்துவது கூடாது, மிதமிஞ்சிய கேளிக்கை கூடாது. இன்பமாக இருந்தால் உடலும் இன்பமாக (நலமாக) இருக்கும்! என அறிவுரைகளை கூறியுள்ளார்.

ஆனால், எதிரிகள் அவரின் கருத்துகளை வேண்டுமென்றே திரித்து வந்துள்ளனர். எபிகூரஸ் சிந்தனைகளை பின்பற்றுபவர்களை ‘எபிகூரியன்’ (Epicurean) என்று அழைப்பார்கள். ஆனால், ஆங்கிலத்தில் ‘எபிகூரியன்’ என்ற சொல்லை அற்ப ஆசைகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பவர்கள், பெருந்தீனிக் காரர்கள், ஆடம்பரகாரர்கள், கேளிக்கைகளில் திளைப்பவர்கள் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள்.

‘இந்த உலகமும், கோள்களும், விண்மீன்களும், பேரண்டமும், அணுக் களாலும், அணுக்களின் திரட்சியாளுமே உண்டாகியுள்ளது’ என்கிறார்.

நாம் காணும் பொருள்களும், உயிரினங்களும், ஏன் மனிதனும் கூட அணுக்களின் கூட்டணியினால் உண்டானது என்கிறார்.

பேரண்டம் முழுக்க கண்ணுக்கு தெரியாத அணுக்களால் நிரப்பப் பட்டுள்ளது.


அனைத்து பொருள்களும் இயங்கிக் கொண்டுள்ளது. பொருள்களுக்குள் உள்ள அணுக்கள் ஒரு வரையறைக்குள் இயங்குகின்றன.

எந்தப் பொருளும் தடை இல்லாதவரை இயங்கிக் கொண்டே இருக்கும். அப்படியே தடை உண்டானாலும் மறு திசையில் பயணிக்கும்.

அணுக்கள் சிதைந்தாலும் வேறு வடிவத்தில் தோன்றும், இல்லாததிலிருந்து எதுவும் தோன்றாது.

நம் புவியைப் போல் வேறு புவிகளும் இருக்கக்கூடும், அதில் இங்குள்ள உயிரினங்கள் போலவோ அல்லது வேறு வகையில் கூட இருக்கலாம்.

இப்படி பல கொள்கைகளை எந்தக் கருவிகளும் இல்லாத நிலையில் ஆய்ந்துணர்ந்து கூறியுள்ளார்.

தனியாக பயிற்சி கூடம் அமைத்து இக் கொள்கைகளை பயிற்றுவித்து வந்தார்.

இந்தப் பயிற்சிக் கூடத்தில் கல்வி மறுக்கப்பட்ட பெண் இனத்தையும் சேர்த்துக் கொண்டு பயிற்றுவித்தார்.

இங்கு பயிற்சி பெற்று சென்றவர்கள் பல பகுதிகளுக்கும் சென்று அவரின் கொள்கைகளை பரப்பினர். பல நாடுகளிலும் அவரின் தத்துவங்களை பின்பற்றினர். கிறிஸ்தவ மதம் தோன்றிய பின் எபிகூரஸின் தத்துவங்கள் மறைக்கப்பட்டன, அழிக்கப்பட்டன.

எபிகூரஸ் 37 ஆய்வு நூல்களை எழுதி இருந்தாலும் அவைகள் நமக்கு கிடைக்கப்பெறவில்லை. 300க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளதாக தெரியவருகிறது.

ஞாயிறு மலர்

எதிரிகளின் கருத்துக்களில் இருந்தும், நூல்களில் இருந்தும் அவரைப் பற்றிய விமர்சனங்களாலும், அவரின் கருத்துக்களை அறிய முடிகிறது.

பொ.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘டியோஜெனிஸ் லார்டியஸ்’ என்பவர் எழுதிய நூலில், எபிகூரஸ் தனது மூன்று சீடர்களுக்கு எழுதிய கடிதம் இடம்பெற்றுள்ளது.

‘ஹெரோடோட்டஸ்’க்கு எழுதிய கடிதம் மூலம் ‘மீவியற்பியல்'(metaphysics) அதாவது “இருப்பு பொருளியல்’ பற்றிய சுருக்க கருத்து தெரிய வருகிறது.

‘பைத்தோக்கிள்சு’க்கு எழுதிய கடிதம் மூலம் ‘வானிலை நிகழ்வுகளுக்கான அணு விளக்கம்’ தெரிய வருகிறது.

‘மெனோசியஸு’க்கு எழுதிய கடிதம் மூலம் எபிகூரசின் நெறிமுறைகள் சுருக்கமாக தெரிய வருகிறது.

கடவுள் என்று ஒன்று இல்லை என்பதற்கான ஆய்வு முடிவு கருத்துகளை கூறிய எபிகூரஸ், “கடவுளுக்கும் மனிதனுக்கும் தொடர்பில்லை; கடவுள் அவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார், நம்மை பார்க்க அவருக்கு நேரமில்லை. நாம் தான் நம்மை பார்த்துக் கொள்ள வேண்டும்” என்ற கருத்தையும் முன் வைக்கிறார்.

கடவுள் மறுப்பு தத்துவத்தை நேரடியாக முன் வைத்தால் உயிருக்கு ஆபத்து வரும் என்ற நிலை இருந்ததால், ‘பயனற்ற கடவுள்’ என்று கூறி ‘பாதுகாப்பு தேடிக்கொண்டார்’ என்றுதான் தோன்றுகிறது.

ஞாயிறு மலர்

தனது 72ஆவது வயதில் (பொ.மு. 270) முதுமையாலும் சிறுநீரக கல் நோயாலும் எபிகூரஸ் மறைவுற்றார்.

ஞாயிறு மலர்

தந்தை பெரியாரின் ‘மெட்டீரியலிசம் அல்லது பிருகிருதிவாதம்’ என்ற நூலின் ஒரு பகுதியில் எபிகூரஸ்யின் ‘மீவியற்பியல்’ (metaphysics) கருத்துகள் பல இடம் பெற்றுள்ளன.

- விடுதலை ஞாயிறு மலர், 30.08.2025

 

செவ்வாய், 22 ஜூலை, 2025

புரட்சியாளர் ஹோசிமின் (19.05.1890 – 02.09.1969)


- பேராசிரியர் மு.நாகநாதன்

2024ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டின் பல மாநிலங்களுக்கு எனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டேன்.

எங்களது பயணம் ஹோசிமின் நகரிலிருந்து தொடங்கியது.

ஒடிந்து போகும் அளவிற்கு ஒல்லியான உடலமைப்பைப் பெற்ற  ஹோசிமின் நடத்திய புரட்சியை புரிந்து கொள்வதற்கு இந்தப் பயணம்  பெரிதும் உதவியது.

இந்த பயணம் பற்றிய கட்டுரையை புதிய சிந்தனையாளன் மாத ஏட்டில்   எழுதினேன்.

எனக்கு வியப்பை தரும் மற்றொரு  செய்தி.

பெரியாரும்,  அறிஞர் அண்ணாவும்  உலகில் எங்கெங்கெல்லாம்  புரட்சிகள் தோன்றியதோ அவற்றின் அடிப்படை கூறுகளை  நூல்கள் வழியாகவும், உரைகள் வழியாகவும், கட்டுரைகள் வழியாகவும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அளித்துள்ளனர் என்பதேயாகும்.

திராவிட இயக்கம் பொதுவுடைமை நெறியை அணைத்து, இணைத்து போற்றியது. போற்றி வருகிறது என்பதற்கு இத்தகைய தரவுகள் சான்றுபகிர்கின்றன.

1976 ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை காலத்தில் வியட்நாம் புரட்சிப் பற்றிய நூல்களைப் படிக்க  வேண்டும் என்று கலைஞர் விரும்பினார்.

கன்னிமாரா நூலகத்தில் இருந்து சில நூல்களைப்பெற்று கலைஞரிடம் கொடுத்தேன்.

விளைவு என்ன தெரியுமா?

தொடர்ந்து வியட்நாமின் வீரம் செறிந்த களங்களை பற்றி உடன்பிறப்பு மடல்களாக கலைஞர் எழுதினார்.

கடுமையான, கொடுமையான ஊடகத் தணிக்கை கத்திரிக்கோல் பாயவில்லை.

கலைஞர் கைவண்ணத்தில் வியட்நாம் புரட்சிப்பற்றிய கருத்துகள் இலக்கியமாகப் பூத்தன.

பொதுவுடைமை சிற்பி கார்ல் மார்க்சின் சிலை கன்னிமாரா நூலகத்தில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் திராவிடச் செம்மல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அறிவிப்பு என்பதும் திராவிட இயக்கம் பொதுவுடைமை இயக்கத்தின் உறவு நீட்சி தானே!

அறிஞர் அண்ணா ஹோம் லேண்ட் ஏட்டில் வியட்நாம் பற்றி எழுதிய கட்டுரையை 2010 ஆம் ஆண்டில் படித்தேன். ( Home Land, dated 16-2-1958)

வியட்நாம் நாட்டில் பயணம் செய்தபோது எல்லா சுற்றுலா தலங்களிலும், நீக்க மற,நிறைந்து  நிலைப் பெற்றிருக்கும் புத்தர் சிலைகளை  கண்ட போது அறிஞர் அண்ணாவின் சிந்தனையை தூண்டும் கட்டுரையில்  காணப்பட்ட துல்லியமான தொலைநோக்கு பார்வையை எண்ணி வியந்து போனேன்.

ஹோசிமின் பற்றி அண்ணாவின்  கணிப்பு காலம் கடந்து உயர்ந்து நிற்கிறதல்லவா?

பொதுவுடைமை வியட்நாம் மலர்ந்தபோது அண்ணா 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் நாளில் மறைந்துவிட்டார் .

அறிஞர் அண்ணாவின் அரிய ஆங்கில கருத்தை காண்போமா!

“ஹோசிமினின் பகைவர்கள்

‘சிகப்பு சர்வாதிகாரி’ என்றும்

‘கம்யூனிஸ்ட் கைக் கூலி என்றும்,

அவருடைய நண்பர்கள் ‘மக்களின் தந்தை’ என்றும், ஆசியாவின் ‘மிகச் சிறந்த புரட்சியாளர் ‘ என்றும் குறிப்பிடுகின்றனர்.

நடுநிலை நோக்கர்கள் எளிமையான, நேர்மையான மனிதர் என்றும்

நுட்பமான அரசியல் தீர்வாளர் என்றும் கூறுகின்றனர்.

பிரான்சு நாட்டைச் சார்ந்த உயர் அலுவலர் ஜுயன் செயின்ட்டென்சி அவருடன்  அரசியல் உடன்பாடு காண ஒரு ஆண்டு உரையாடல் மேற்கொண்டவர்.

அவர் குறிப்பிடுகிறார்,  “முதன்மையான ஆசியத்தலைவர், அளவிட முடியாத ஆற்றல் படைத்த மாபெரும் அறிவாளர்.

தனது பாதுகாப்பு, வசதி பற்றி சிறிதளவும் கவலைப்படாத ஒரு துறவி போன்றவர்.”

ஹோசிமின் பொதுவுடைமை இயக்கத்திற்கு எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதையும் அறிஞர் அண்ணா விளக்கியுள்ளார்.

“பவுத்தம் வியட்நாமிற்கு கி.பி.முதல் நூற்றாண்டில் சென்றது.

இன்றும் இலக்கியத்தின் ஊற்றாகாவும், மக்களை ஈர்க்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளன.

19 ஆம் நூற்றாண்டில் தின் (Dinh) என்கிற பெண் போராளியை பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் படையினர் கைது செய்து சிறையில் தூக்கிலிட்டனர்.

இந்த பெண் போராளி இறப்பதற்கு முன், சிறையின் சுவரில் தனது குருதியால் ஒரு கருத்தை பதித்தார்.

பெருமைக்குரிய புத்தரே!

நான் மீண்டும் பிறப்பதற்கு அனுமதியுங்கள்.

அப்போது எனக்கு ஆயிரம் கைகளையும், அந்த கைகளில் ஆயிரம் துப்பாக்கிகளையும் அளிக்குமாறு உங்களை வேண்டுகிறேன்.

இந்த ஈர்ப்பு மிக்க சொற்கள் தான் ஹோசிமின் மனதில் ஆழப்பதிந்து, விடுதலைக்கான வீரம் செறிந்த போரில் வழிகாட்டு உணர்வாக அமைந்தது என்று பலர்  சுட்டுகின்றனர்.

வியட்நாம் மக்களிடம் புரட்சி உணர்வையும் ஆற்றலையும் தூண்டுவதற்கு சில சிறப்பான முழக்கங்களை முன்வைத்தார்.

“நீங்கள் எங்களில் பத்து பேரைக் கொல்லலாம். கொன்ற ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் உங்களைக் கொன்று குவிப்போம்.

ஆனால் இத்தகைய கடினமான சூழலிலும் நீங்கள் தோற்பீர்கள்.

நாங்கள் வெற்றி பெறுவோம்.

சிறைக் கதவுகள் திறக்கும் போது  சுதந்திரப் பறவைகள் சிறகடித்துப் பறக்கும்.

சுதந்திரமும், விடுதலையும் தான்  உலகில் எல்லாவற்றையும் விட மதிப்பு மிக்கதாகும்.

நீங்கள் எப்படி உங்களை அன்புடன் விரும்புகிறீர்களோ, அதே போன்று  மற்ற மனிதர்களையும் விரும்புங்கள்.

ஹோசிமின் பார்வையில் முழக்கங்கள் வெறும் சொற்கள் அல்ல. அவைகள் உண்மை யானவை.

ஏற்ற கொள்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டும் நெறிகள்.

இந்த முழக்கங்கள் மக்கள் மனதில் உடனடியாகவும், ஆழ மாகவும் பதிந்து எதிரொலித்தது.

ஹோசிமினின் அடக்கமும், எளிமையும், அமைதியான குணமும் பலரை வியப்பில் ஆழ்த்தியது.

அவரை ஆண்டு முழுவதும் எளிய காக்கிச்சட்டை உடையுடன் காணமுடியும்.

ஹோசிமின் புதுடில்லிக்கு வந்தபோது மிகச் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

அவருடைய எளிமையைக் கடைப்பிடிக்கும் பண்பு  – ஹோசிமினுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில்,  கருஞ்சிவப்பு தங்க நாற்காலியில் உட்கார மறுத்தது வெளிப்படுத்தியது.

எளிய உடையுடன் ஒரு நாளில் அவர் 16 முதல் 18 மணி நேரம் உழைக்கிறார்.

வியட்நாமின் குடியரசுத் தலைவர் என்கிற முறையில் தன்னைத் தங்க கூண்டில் பூட்டிக்கொள்ள விரும்பவில்லை.

சிக்கல் நிறைந்த கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்கக் கூடிய ஆற்றல் ஹோசிமின் உள்ளத்தில் இயற்கையாக வெளிப்படுகிறது.

அவர் எடுத்து இயம்பும் கருத்துக்கள் வெற்று முழக்கமும் அல்ல.

ஒரு புள்ளியில் முடிந்து விடுவதும் அல்ல.

எளிமையானது, வலிமையானது, ஓவ்வொருவராலும் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியது.

வியட்நாம் இன்று ஆசிய நாடுகளிலேயே விரைந்து வளரும் நாடு. பல லட்சக்கணக்கான வெளிநாட்டு மக்கள் சுற்றுலாவிற்கு வருகிறார்கள்.

ஒரு விழுக்காடு பண வீக்கம் தான்  உள்ளது.

மத நம்பிக்கைகள் அற்றவர்கள் மக்கள் தொகையில் 94 விழுக்காட்டினர்.

மதம்  சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாது.

சமூகத்தில் அமைதி !

மக்களிடத்தில் மகிழ்ச்சி!!

பொருளாதாரம் வளர்கிறது.

பொருளாதார வளர்ச்சி மானுட முன்னேற்றத்தில் முடிகிறது.

அய்க்கிய நாடு மன்றத்தின் மானுட முன்னேற்றக் குறியீடுகளில் (UNDP) 2024 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் படி 193 உலக நாடுகளின் பட்டியலில் வியட்நாம் 93ஆவது இடத்தில் உள்ளது.

2022 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை  மானுட முன்னேற்றக் குறியீடுகளில் 14 சதவிகிதத்தில் ( இரண்டு ஆண்டுகளில்) உயர்ந்த வளர்ச்சி குறியீடுகளைப் பெற்று , உயர்ந்த மானுட முன்னேற்றக் குறியீடுகளைபெற்ற நாடுகளின் தொகுப்பில் உள்ளது.

எது வளர்ச்சி? எப்படிப்பட்ட வளர்ச்சி தேவை என்ற அடிப்படையை கூட உணராமல் ஸநாதனம் பேசி மக்களை இருளில் வீழ்த்தி, மக்களை மத அடிப்படையில் பிளவு ஏற்படுத்தி,பொருளாதார சரிவை சந்திப்பதினால் இந்தியா உலக நாடுகளின் பட்டியலில் – மானுட முன்னேற்றக் குறியீடுகளில் 193 நாடுகளில் 130ஆம் இடத்தில் உள்ளது.

நாட்டிற்கு தேவை புரட்டுகள் அல்ல!

பொய்கள் அல்ல!!

புரட்சி தான் என்பதை புரிய வைத்து அமெரிக்காவை ஓட ஓட விரட்டிய வியட்நாம் உயர்ந்து வளர்கிறது.

அமெரிக்க குடியரசுத் தலைவர் டிரம்ப்  இந்திய – பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது நான் தான் என்று பல முறை கூறிவிட்டார்.

அமெரிக்க மேலாதிக்கத்தை  எதிர்க்க துணிவின்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடி  மவுனம் காக்கிறார்.

வியட்நாம் விடுதலைப் போராளி ஹோசிமின் பிறந்த நாளில்   (19.05.1890) அவரது ஆளுமையை அவர் கையாண்ட முறைமைகளை நினைவு கூர்வோம்.

- விடுதலை ஞாயிறு மலர், 24,05.25

புதன், 19 மார்ச், 2025

வியட்நாமில் நடந்த இரண்டாம் உலகத் தமிழர் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் உரை!

 

உலகத் தமிழர்களே தந்தை பெரியாரை சுவாசியுங்கள்! வியட்நாமில் நடந்த இரண்டாம் உலகத் தமிழர் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் உரை!

விடுதலை நாளேடு

திராவிடர் கழகம்

வியட்நாம், பிப். 28- உலக மக்களைப் போல் மானமும் அறிவும் உள்ள மக்களாக தமிழர்களை ஆக்கிடப் பாடுபட்ட தந்தை பெரியாரை ஒதுக்கிப் பார்க்காதீர்கள் என்றார் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன். அவர் ஆற்றிய உரை வருமாறு:

தமிழ் இனம் நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பது போல் தமிழர்தாம் பண்டையவரலாற்றை திரும்பிப் பார்த்து அதிலிருந்து பெறவேண்டிய பாடங்களை பெறுவதற்காக தமிழர் பன்னாட்டு நடுவம் சார்பில் வியட்நாமில் இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாநாடு கம்போடியா நாட்டில் நடைபெற்றது. அடுத்த மாநாட்டை எகிப்தில் நடத்துவதாக டாக்டர் திருத்தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

அவரின் முயற்சிக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்

உலகம் முழுவதும் தமிழர்கள் 149 நாடுகளுக்கு மேல் வாழுகிறார்கள். தமிழர்கள் வாழாத நாடு இல்லை. அதேசமயம் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தத்துவ பேராசான் தந்தை பெரியார் 1929 ,1952 வாக்கில் மலேசியா மண்ணுக்கு சென்றார். தமது கருத்துக்களை மக்கள் மத்தியில் பறைசாற்றினார். அப்போது அவர் வலியுறுத்தியது. “இந்த மண்ணில் வந்து வாழக்கூடிய தமிழ் மக்கள் இந்த மண்ணைத்தான் சொந்த மண்ணாக கருதி இங்கேயே வாழ வேண்டும் மீண்டும் தமிழ்நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இந்த மண்ணிலேயே வாழுங்கள்” என்பதை உறுதிப்படுத்தி உரையாற்றினார்.

பெரியாரின் உரை அடித்தளமிட்டது

அவரின் உரையால் உந்துதல் பெற்ற தமிழர்கள் அங்கேயே நிலையாக வாழ முயன்றதன் விளைவு அவர்களின் அடுத்த தலைமுறை மிகவும் சிறப்பாக வாழக்கூடிய வாழ்க்கையை பெற்றிருக்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்களாக பெற்றோர் கஷ்டப்பட்டு இருக்கலாம். ஆனால் இன்றைய தலைமுறை வசதியோடும் வாய்ப்போடும் வாழ்கிறார்கள் என்றால் தந்தை பெரியாரின் பேச்சு தான் அதற்கு அடித்தளம் இட்டது. உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்கள் தந்தை பெரியாரின் பகுத்தறிவு இனமான கருத்துக்களை மொழி உணர்வு கருத்துக்களை வாழ்வில் கடைப்பிடித்தால் இப்போது வாழும் வாழ்க்கையை காட்டிலும் மிகவும் சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். பெரியாரைப் போல் மக்களோடு மக்களாக இருந்து கள அனுபவம் பெற்று மக்களுக்கு தொண்டாற்றிய தலைவர்கள் வெகு சிலரே. பெரியார் ஒப்பற்ற சிந்தனையாளர். மக்களை மாற்றுவதற்கு வழி காட்டுவதற்கு மக்களுக்கு தொண்டாற்றுவதற்கு என்று சுயமரியாதை இயக்கத்தை பின்னர் நீதி கட்சி மூலமாக அதன் தலைவராக இருந்து ஆற்றிய சூழலில் நீதிக்கட்சிக்கும் இரண்டும் இணைந்த தேர்தல் முறையில் ஈடுபடாத சீர்திருத்த புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் மூலமும் உழைத்தார்…. பாடுபட்டார்… தொண்டாற்றினார். மக்களின் பிரச்சினைகளை மக்களோடே பயணித்து கள அனுபவம் பெற்றார். மக்களைத் திரட்டி உரிமைக்காக போராடி வெற்றியும் பெற்றார்.

பெரியாரை ஒதுக்கிப் பார்க்காதீர்கள்

மேல்நாடுகளில் பல உயிர்களை காவு கொடுத்து ரத்தம் சிந்தி பெற்ற உரிமைகளை இழப்புகள் இன்றி தமது தொண்டர்களின் ஈகத்தின் மூலமாக அமைதியான வழியில் பெற்றுக் கொடுத்தார். இந்த சாதனை தந்தை பெரியாரால் மட்டுமே முடிந்தது. மேல்நாடுகளில் மொழி உரிமைக்காக நாட்டின் விடுதலைக்காக பொருளாதார சமத்துவத்துக்காக என்று கட்சிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் நம் நாட்டிலோ சுயமரியாதைக்காக என்று இயக்கத்தை தொடங்கியவர் பெரியார் மட்டுமே. உலகிலேயே மான உணர்ச்சியை அடிப்படையாக வைத்து இயக்கம் தொடங்கியவர் யார். அவரும் அவரின் தொண்டர்களும் அதிகபட்ச தியாகத்தை மக்களின் நல்வாழ்வுக்காக செய்துள்ளனர் என்பதை இங்கே வந்துள்ள பெருமக்கள் நினைவு கூற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். கடவுள் மறுப்பை மத எதிர்ப்பை ஜாதி ஒழிப்பை பெண் விடுதலையை மட்டுமே வைத்து பெரியாரை ஒதுக்கி பார்க்காதீர்கள்.

பெரியாரின் மனிதத் தொண்டு

உலகின் மற்ற எந்த தலைவர்களுக்கும் பெரியார் குறைந்தவர் இல்லை. பொது வாழ்வில் தூய்மை ஒழுக்கம் நேர்மை வாய்மை இவற்றை கடைபிடித்தவர். இன்னும் சொல்லப்போனால் எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் திருக்குறள் இந்த திருவள்ளுவரின் நீட்சியாக, ஜாதியும் மதமும் சமயமும் பொய்யென உரைத்தும் கலை உரைத்த கற்பனை எல்லாம் நிலையென கொண்டாடும் கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடி போகட்டும் என்று பறைசாற்றிய வள்ளலாரின் நீட்சியாக பெரியார் மனித தொண்டு ஆற்றினார். மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினார். மக்களை சிந்திக்க தூண்டினார். மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று மனிதநேயம் போற்றினார். அவரைப் போல் ஒரு தலைவர் மேல்நாட்டு மக்களுக்கு கிடைத்திருப்பார் எனில் அந்த மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள்.. ஆனால் நாமோ அப்படி கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை… இழிவு படுத்தாமல் இருந்திருக்கலாம்… ஓய்வு என்பதும் சோம்பல் என்பதும் தற்கொலைக்குச் சமமானது என்று சொல்லி எழுபது ஆண்டுகளுக்கு மேலாக மனித தொண்டு ஆற்றிய மாமேதை அவர்.

பெரியாரை உலக மயமாக்க உழைத்திடும் ஆசிரியர்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் வழியில் இன்றும் பெரியாரை உலகு மயம் படுத்திட உலகை பெரியார் மயமாக்கிட ஓயாது உழைத்து வரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் பிரதிநிதியாக உங்கள் முன்னால் நான் நிற்கிறேன்.. பேசுகிறேன். உலகத்தின் பல்வேறு நாடுகளில் ஓராண்டுகளுக்கும் மேலாக பயணம் செய்து மக்களை மக்களின் வாழ்வாதாரத்தை வாழ்வியலை நேரிலே ஆய்வு செய்து உலக மக்களைப் போல் மானமும் அறிவும் உள்ள மக்களாக திராவிடர்களை தமிழர்களை ஆக்குவதே தம்முடைய பணி என்று சொல்லி உழைத்தவர் பெரியார். அவரின் கொள்கை பாதையில் உலகத் தமிழர்களே வாழ முயலுங்கள் என்று தமது தொடக்க உரையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

மாநாட்டில் எழுச்சித் தமிழர் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் சிறப்புரையாற்றினார். மற்றும் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், பேராசிரியர் உலகநாயகி, பேராசிரியர் ரவி, இலங்கை வானொலியின் மேனாள் முன்னணி வர்ணனையாளர் அப்துல் ஹமீத் ஆகியோர் முக்கிய உரையாற்றினர். பன்னாட்டு தமிழர் நடுவம் நிறுவனர் டாக்டர் திருத்தணிகாசலம் தலைமை தாங்கினார். இலங்கை, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.