செவ்வாய், 31 ஜனவரி, 2017

மதமற்றவர்  என்று தம்மை அறிவித்துக்கொள்ளும் உரிமை

மதமற்றவர்  என்று தம்மை அறிவித்துக்கொள்ளும் உரிமை தனி மனிதனுக்கு உண்டு;  அதில் அரசு தலையிட முடியாது!

மும்பை உயர்நீதிமன்றத்தின் முற்போக்கான தீர்ப்பு

தமிழர் தலைவர் வரவேற்று அறிக்கை!

மும்பை, செப்.24- தன்னை மதமற்றவர் என்று அறிவித்திட தனி மனிதனுக்கு உரிமை உண்டு; அதில் தலை யிட யாருக்கும் உரிமை கிடையாது என்று மண்டையில் அடித்ததுபோல மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித் துள்ளது.

இந்தியாவில் உள்ள எவரிடமும் அவர் தனது மதம்பற்றிக் குறிப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது என்ற திட்டவட்ட மான தீர்ப்பு ஒன்றை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று (23.9.2014) அளித்து வரலாறு படைத்துள்ளது!

இயேசுவை நம்புபவர்கள் - ஆனால் கிறித்துவ மதத்தை நம்பாதவர்கள்

கிறித்துவ மதப் பிரிவில் ஒன்றான Full Gospel Church of God என்ற அமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள், அவர் கள் ஏசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள்தான்; ஆனால், கிறித்துவ மதத்தை நம்பாதவர்கள் என்ற நிலைப்பாடு உடையவர்கள்!

அம்மூவர் (டாக்டர் ரஞ்சித் மொய்ட்டி, கிஷோர் நசாரே, சுபாஷ் ரணவேர் என்பவர்கள்) மராத்திய அரசின் அச்சகப் பதிவிதழில் (கெசட்டில்) நாங்கள் கிறிஸ்துவர்கள் அல்ல; எந்த மதத்தையும் சேராதவர்கள் என்று வெளியிட (கட்டணம் கட்டி) விண்ணப்பித்திருந்தார்கள்.

நீதிமன்றத்தில் மனு

அவர்களது விண்ணப்பங்களை மராத்திய அரசும், அச்சகத் துறையும் ஏற்று வெளியிட மறுத்துவிட்டன. அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது.

எனவே, அவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (PIL) ஒன்றினைத் தாக்கல் செய்து, நீதி கேட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்டீஸ் அபய் ஒக்கா, ஜஸ்டீஸ் ஏ.எஸ்.சந்துர்கர் ஆகிய இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மேற்கூறியவாறு, அரசு யாரையும் மதத்தைப் போடவேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது, தங்களுக்கு மதமில்லை (‘‘No Religion’’) என்று  அறிவிப்பதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்து விட்டனர்!

மதம் என்ற கேள்விக்கு நேராக அரசின் எந்த மனுவையும், பூர்த்தி செய்யும்போது மதமற்றவர் எனக் குறிப்பிடலாம் - இத்தீர்ப்பின்மூலம் என்பது சட்டப்படி தெளிவாக்கப்பட்ட தனி மனித உரிமையாகிவிட்டது!

ஆணித்தரமான தீர்ப்பு!

எனக்கு எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இல்லை; நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல என்று கூறும் உரிமை ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு என்று ஆணியடித்த தீர்ப்பை மிகச் சிறப்பாக நாட்டோருக்கு அளித்துள்ளது!

மதச்சார்பற்ற (செக்குலர்) அரசின் கீழுள்ள மக்கள் மதங்களைச் சாராதவராகவோ, மதம் பிடிக்காதவர் களாகவோ இருக்க முழு உரிமையுடையவர்கள் ஆவார் கள் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது - இத்தீர்ப்பின் மூலம்.

இந்திய அரசியல் சட்டத்தின் 25 ஆம் பிரிவின்கீழ் இவ் வுரிமை - அடிப்படை உரிமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்!

நாட்டில் மதங்களால் ஏற்பட்ட நன்மைகள் ஏதாவது இருப்பின், அது துளியளவே; ஆனால் தீமைகளோ மலையளவு!

வரலாற்றில் ரத்த ஆறு எப்பொழுதெல்லாம் ஓடியதாகக் கூறப்படுகிறதோ, காட்டப்படுகிறதோ அவை மதங்களால் உருவான சண்டைகளால்தானே!

மதங்களால் ஏற்படும் வன்முறைகள்!

புனிதப் போர்கள், சிலுவைப் போர்கள் எல்லாம் நல்ல எடுத்துக்காட்டுகள் அல்லவா? மதங்களைப் பரப்பிட வாள் முனையைத்தானே பல மதங்கள் இன்றளவும் நம்புகின்றன?

ஈராக்மீது போர் தொடுத்து சதாம் உசேனை அழித்த (ஜூனியர்) ஜார்ஜ் புஷ் - கடவுள் தான் இந்தப் போரை நடத்தும்படி தனக்குக் கட்டளையிட்டார் என்று புளுகவில்லையா? கடவுள், மதத்தினால் மனிதகுலம் பெற்ற நன்மைகள் இவை!

மதங்களின் அடிப்படைவாதிகள் (Fundamentalists) என்ற வெறியர்கள் தலிபான் போன்றவர்கள் - மற்ற பிரிவினர், கிறித் துவ, ஹிந்துமத சாமியார், சாமியாரிணிகளும் எவ்வளவு வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளனர்!

பாபர் மசூதி இடிப்பும், அதன் எதிர்விளைவுகள் எவ்வளவு கொலை, கொள்ளைகள், உயிர்ச்சேதங்கள், அமைதியற்ற கொடுமைகளை இன்றளவும் உருவாக்கிக் கொண்டுள்ளன!
இந்து மதம் சகிப்புத் தன்மையுடைய மதமாம்! நேற்று முன்தினம் வந்த நீதிமன்ற வழக்கு என்ன? அதே மதத்தின் ஒரு பிரிவினர் ஊர்வலம் போனால், வைணவப் பிரிவின் மற்றொரு கடவுள் சிலையை திரை போட்டு மூடி, கதவை சாத்திய கேலிக் கூத்தைப் பார்க்கவில்லையா? அடிதடி நடக்கவில்லையா? வழக்கு மன்றத்தில் நிலுவையில் இப்பிரச்சினை இருக்கிறதே! இதுதான் சகிப்புத்தன்மையின் அடையாளமா? வெட்கமாக இல்லையா?

உண்ணுதலில், உடுத்துவதில், எண்ணுதலில் எல்லாம் அன்றாட வாழ்க்கையில்கூட மதம் புகுந்து மனிதர்களி டையே வேற்றுமையைத்தானே உருவாக்கியுள்ளது!

யானைக்குப் பிடிக்கும் மதத்தைவிட ஆபத்தானது!

யானைக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேட்டைவிட, மக்களுக்கு மதம் பிடித்தால் ஏற்படும் கேடுகளை, கலவரங்களை நாடு அன்றாடம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது!

எனவே, மதமற்ற மக்களாக வாழுங்கள், மதம் பிடிக்காத மனிதநேயம் உள்ளவர்களாக மாறுங்கள் தோழர்களே, தோழியர்களே!

கி.வீரமணி    
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
24.9.2014

-விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக