வெள்ளி, 12 மே, 2017

அயர்லாந்தில் அரசு ஒளிபரப்பில் கடவுளை நோக்கி பிரபல நடிகரின் சரமாரியான கேள்விகள்! மதத் துவேஷம் என்ற புகார் தள்ளுபடி!

பிரிட்டிஷார் போட்ட மதத் துவேஷ  எதிர்ப்பு 295-ஏ சட்டத்தைத் தூக்கி எறிக!



அயர்லாந்தில் அரசு ஒளிபரப்பில் பிரபல நடிகர் ஸ்டீபென் ஃப்ரை என்பவர் கடவுளை நோக்கி எழுப்பிய பகுத்தறிவு ரீதியான வினாக்கணைகள் அங்கு மத வாதிகளைப் பதற்றத்திற்கு ஆளாக்கியது. காவல்துறைக்குப் புகார் கொடுக்கப்பட்டது- ஆனால், அந்தப் புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், பிரிட்டிஷார் போட்ட - மதத் துவேஷ எதிர்ப்புச் சட்டமான 295-ஏ என்பதை இந்தியாவில் ஏன் இன்னும் வைத்துள்ளீர்கள்? அதனைத் தூக்கி எறிய வேண்டாமா? என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அறிக்கை வருமாறு:

அயர்லாந்தின் பிரபலமான நடிகர் ஸ்டீபென் ஃப்ரை (Stephen Fry) என்ற 59 வயது நிறைந்த நடிகர்.

அய்ர்லாந்து நாட்டின் அரசு ஒளிபரப்பான RTE (2015) என்பதில் இந்த பிரபல நடிகர் ‘வாழ்க்கையின் பொருள்’ (The Meaning of Life) என்ற தலைப்பில் இக்காட்சியை நடத்தி ஒளிபரப்பினார். இதற்கு ஆன செலவை கே பைரன் (Gay Byrne) என்பவர் ஏற்றுக் கொண்டார்!

‘‘ஒரு கண்ணாடி வழியே காணும் எதிர் பாராதவை’’ (‘The Alice Through the Looking Glass’) என்று அந்நடிகர் கடவுள்பற்றிக் கடு மையாக விமர்சனம் செய்தார் - அக்காட்சியில்!

கடவுளை நோக்கி 
நறுக்குத் தெறித்த வினாக்கள்!

‘‘சொர்க்கத்தின் கதவுகளுக்குமுன் நிற்க வைக்கப்பட்டுள்ளீர்கள் நீங்கள். அப்போது கடவுளைப் பார்த்து நீங்கள் என்ன கூறுவீர்கள்?’’ என்று ஒரு கேள்வி இந்த நடிகர் ஏற்ற பாத் திரத்தை நோக்கிக் கேட்கப்படுகிறது!

ஸ்டீபன் பிரை என்ற  அந்த பிரபல நடிகர் அவருக்கே உரித்தான முறையில் தனித் தன்மையோடு - சொன்னார் (அக்காட்சியில்).
‘‘எதற்காக கடவுளே நீங்கள் ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தைகளுக்கு எலும்புப் புற்றுநோயைத் தந்தீர்கள்? எவ்வளவு அகங் காரம் (அழுக்கு மனம்) உங்களுக்கு இருந்தால் இப்படி செய்வீர்கள்? அக்குழந்தை செய்த தவறு என்ன? பாவம் என்ன?’’

‘‘மக்களாகிய எங்கள் தவறு என்று ஏதும் சொல்ல முடியாத நிலையில், இந்த உலகில் ஏன் துன்பத்தை நிறையவே படைத்தீர்கள்?’’
‘‘இது சரியல்ல. இது முழுக்க முழுக்க பெரும் தீமையான செயல் அல்லவா?’’

‘‘நான் ஏன் ஒரு நிலையில்லா மனமுள்ள - அற்பத்தனமான - முட்டாள் கடவுளை அதுவும் அநீதியும், வஞ்சமும், துன்பமும் நிறைந்த உலகத்தைப் படைத்த கடவுளாகிய உன்னை ஏன் மதிக்கவேண்டும்?’’

என்று பொரிந்து தள்ளும் காட்சி பார்வை யாளர்களான மக்களைப் பெரிதும் ஈர்த்த காட்சிகளாகியது!

மத விரோதப் புகார் தள்ளுபடி!

இதற்காக அந்நாட்டு காவல்துறையிடம் மதத் துவேஷத்தை (Blasphemy), மத விரோத கருத்தைத் தூண்டி விடுகிறார் என்று இவர்மீது புகார் கொடுக்கப்பட்டது.

இந்தக் கூற்று ஒன்றும் மத விரோதத்தையோ, மதத் துவேஷத்தையோ பரப்புவதாக இல்லை என்று கூறி, அயர்லாந்து காவல்துறை இந்தப் புகாரை தள்ளுபடி செய்துவிட்டது.

-மேற்காட்டிய கேள்விகளை 200 ஆண்டு களுக்கு முன்பே அமெரிக்காவில் இங்கர்சாலும், பிரிட்டனில் பெர்னாட்ஷாவும், பெர்ட்ரண்ட் ரசலும் எழுப்பிப் பிரச்சாரம் செய்தனர்!

அந்நாட்டு கிறித்துவ மதவாதிகள் (வெள் ளைக்காரர்) தங்கள் மதங்களின் ஆபாசங்களை வெளியே கொண்டுவராமல் தடுக்க அரசின் அதிகாரத்தின்கீழ் Blasphemy Laws’ மத விரோத துவேஷ பரப்புதலை - குற்றமாக்கினர்!

இது ஒரு மனித கருத்து சுதந்திர பறிப்பில் தலையாயது!

பிரிட்டிஷ் அரசு போட்ட சட்டம் 
இன்னும் ஏன்?

பிரிட்டிஷ் அரசு புகுத்திய இந்தியன் பீனல் கோட் என்ற இந்திய குற்றவியல் சட்டத்தில் 295-ஏ மதத்தைப்பற்றிப் பேசினால், மனம் புண்படும்  என்ற செல்லரித்த சட்டப் பிரிவை தூக்கி வீசாமல் இருப்பது ஏன்? பிரிட்டிஷ் அரசிடமிருந்து ‘‘சுதந்திரம்‘’ பெற்ற நாடாகக் கூறப்படும் நமது இந்திய நாட்டிலும், 70 ஆண்டுகளுக்குப் பிறகாவது இது எப்படிப்பட்ட சட்டம் என்பதை எண்ணிப் பார்த்து தூக்கி வீசிடவேண்டாமா? இப்படி வெள்ளைக்கார ஆதிபத்தியத்தின் கருப்புச் சட்டங்கள் நீடிக்கப்படலாமா?

பின் என்ன சுதந்திரம் - வெங்காயம்!!

மதம் கூறுவது பிரபஞ்ச உற்பத்திக்கு விஞ்ஞானத்தால் ஏற்க முடியுமா?

சென்னை                                                                                         தலைவர் 
12.5.2017                                                                                   திராவிடர் கழகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக