செவ்வாய், 2 மே, 2017

அம்பேத்கர் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு செய்த பணிகள்

அம்பேத்கர் பிறந்த நாளோ, நினைவு நாளோ இல்லையே. மேதினத்திற்கு எதற்கு அம்பேத்கர் படத்தை பதிவிட்டு வாழ்த்து சொல்லவேண்டும் என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்காகவே, அம்பேத்கர் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு செய்த பணிகளை பட்டியலிடுகின்றோம். கொஞ்சம் கேளுங்கள்...

1. பிரிட்டீஷ் இந்தியாவிலேயே 8 மணிநேர வேலையை முதலில் அரசாணை வர காரணமானவர்.
2. பெண் தொழிலாளர்களுக்கான பேருகால விடுப்பிற்கு காரணமானவர்.
3. இந்தய தொழிலாளர்களுக்கான பி.எஃப். முறைக்கு காரணமானவர்.
4. தொழிலாளர்களுக்கான ESI திட்டத்தை வடிவமைத்துக்கொடுதவர்.
5. தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து பேச இரு தரப்பு பேச்சுவார்த்தையாக இல்லாமல், முத்தரப்பு பேச்சுவார்த்தையாக (அரசையும் உள்ளடிக்கிய) மாற்றியவர்.
6. இன்றைக்கு இந்திய தொழிலாளி வர்க்கம் அனுபவிக்கும் சட்டப்பாதுகாப்புகளுக்கு காரணமானவர்.
7. இந்திய விடுதலைக்கு முன்பே "சுதந்திர தொழிலாளர் கட்சி" என்று தொழிலாளர்களுக்காகவே கட்சி தொடங்கியவர்
என்று இன்னும் ஏராளமாக அம்பேத்கர் குறித்து சொல்லலாம்.

ஆங்கிலேய ஆட்சியாளர்களால், அம்பேத்கருக்கு அப்போதிருந்த வைஸ்ராய் கவுன்சிலில் ‘தொழிலாளர் நலத்துறை உறுப்பினராக’ 1942ம் ஆண்டு பதவி வழங்கப்பட்டது. இந்தப் பதவியானது நாடாளுமன்ற அமைச்சருக்குச் சமமான அதிகாரமுள்ள பதவியாகும். இதை பயன்படுத்தி முழுக்க முழுக்க தொழிலாளர் நலன்களுக்காகவே செயல்பட்டார் அம்பேத்கர்.

தொழிலாளர்களுக்கான சட்டங்கள் ஒரே சீராக அமைவதன் அவசியம், காகித கட்டுப்பாட்டு ஆணை, இந்திய தேயிலை கட்டுப்பாடு மசோதா, தேர்ச்சிபெற்ற மற்றும் பகுதி தேர்ச்சிபெற்ற பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு நிலையங்கள், தொழிலாளர்களுக்கு கிராக்கிப்படி வழங்கப்படுவது பற்றிய அறிவிப்பு, தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர் நலன்கள் பற்றிய திட்டத்தில் சமூக பாதுகாப்பு, சம்பளம், வாழ்க்கை நலம், மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) மசோதா, சுரங்க மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா, இந்திய தொழிற்சங்கங்கள் (திருத்த) மசோதா, தொழிற்சாலைகள் (திருத்த) மசோதா, ஆலைத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள், ஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா சுரங்க தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா, தொழிற்சாலைப் பணியாளார் நலக் காப்பீடு இந்திய தொழிற்சாலைப் பணியாளார்களுக்கான வீட்டு வசதித் திட்டம், தொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா, தொழிலாளர்கள் மறுவாழ்வுத் திட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் தொடர்பான விவாதங்களை மத்திய சட்டமன்றத்தில் (தற்போதைய நாடாளுமன்றம்) அன்றே கொண்டு வந்தவர் அம்பேத்கர்.

மேலும் தொழிலாளர்களோடு நெருங்கிய தொடர்பை மேற்கொள்ள, அவர்களது குறைகளைக் கேட்டறிய எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு வேகமாக தீர்வுகளைப் பெற, தொழிற்சாலைகளில் தொழிலாளர் நல அதிகாரிகள் நியமிக்கப்படுவது விரும்பத்தக்கது என்று அன்றே மத்திய அமைச்சரவையை பொதுவாக ஒப்புக்கொள்ள வைத்தவர்.

இவர் படத்தை மேதின கொண்டாட்டத்தில் இணைப்பதே தொழிலாளி வர்க்கத்தின் தற்போதைய புரட்சிகர செயலாகும். இதுவே அம்பேத்கரை, "தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்" என்று குறுக்கிப்பார்க்கும் அதிகார வர்க்கத்திற்கு தொழிலாளி வர்க்கம் கொடுக்கும் மேதின பரிசாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக