சனி, 18 மார்ச், 2023

புரட்சி வீரர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேராவுக்கு வரவேற்பு விழா!

 

உடல்நலன் பாராமல் கொள்கை சமரசமின்றி உழைத்த மாபெரும் புரட்சியாளர்கள் தந்தை பெரியாரும் - சேகுவேராவும்!

இந்தியா - கியூபா ஒருமைப்பாட்டுக் குழுவுக்கும் - 

சி.பி.எம். கட்சிக்கும் பாராட்டுகள்: தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, ஜன.19 தந்தை பெரியாரும், சேகுவேராவும் கொள்கையில் சமரசமின்றி உழைத்த மாபெரும் புரட்சியாளர்கள்; பொதுவுடைமை இயக்கத்துக்கும், திராவிட இயக்கத்துக்கும் தொடர்பு எப்பொழுதும் உண்டு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முழங்கினார்.

அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக் குழு

நேற்று (18.1.2023) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக்குழு சார்பில் நடைபெற்ற புரட்சியாளர் சேகுவேராவின் மகள்  டாக்டர் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோருக்கு மாபெரும் வரவேற்பு மற்றும் சோசலிச கியூபாவுக்கு தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைத் தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி யில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

எல்லையற்ற மகிழ்ச்சிக்குரிய ஓர் அருமையான விழா!

மகிழ்ச்சியோடு தமிழ்நாட்டில், தமிழ்நாட்டில், தமிழ் நாட்டில் நாம் பெருமையடையக் கூடிய மகிழ்ச்சிக்குரிய, எல்லையற்ற மகிழ்ச்சிக்குரிய ஓர் அருமையான விழா - இந்த விழாவில், வழமையான பொங்கல் திருநாளில், உழைக்கின்ற பாட்டாளி மக்களுக்கு மட்டுமல்ல, உழைக்கின்ற பேச முடியாத ஜீவன்களுக்குக்கூட விழா எடுக்கக்கூடிய அறுவடைத் திருநாள் என்ற உழவர் திருநாள் முடிந்து, அந்த விழாவின் தொடர்ச்சி யாக, நேற்று காணும் பொங்கல் - இன்றைக்குக் காண வேண்டியவரை காணும் பொங்கலாகவே வந்திருக்கக் கூடிய மிக அருமையான  ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்களுக்கும், அவரை ஒருங்கிணைத்து அழைத்து வந்த பேபி அவர்களின் அமைப்பிற்கும் முதலில் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரியார் மண்ணைச் சார்ந்த, சமதர்ம மண்ணைச் சார்ந்த, சுயமரியாதை மண்ணைச் சார்ந்த, தமிழ்நாட்டு மண்ணிற்கு, அம்மையார் அவர்களை அழைத்து வந்தமைக்கு நன்றி!

‘‘தோழர், தோழர்’’ என்று அழையுங்கள் என்றார் தந்தை பெரியார்!

புரட்சியாளர் சேகுவேரா - 'சே' என்றால், தோழர் என்று அர்த்தம். ‘‘தோழர்; தோழர்’’ என்று அழையுங்கள் என்று தந்தை பெரியார் அவர்கள், எங்களைப் போன்ற, உங்களைப் போன்ற இளைஞர்கள் பிறக்காத காலத்திற்கு முன்பே, தமிழ்நாட்டில் ‘‘தோழர், தோழர்’’ என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

பெருமலையை, சிறு உளி தகர்ப்பதுபோல...

‘‘காம்ரேட்’’ என்று சொல்லக்கூடிய அந்த அற்புத மான பொதுவுடைமைத் தத்துவம். அந்தப் பொது வுடைமைத் தத்துவத்தைப்பற்றி சிறப்பாக உலகம் முழுவதும் பரவச் செய்து வெற்றி பெறும் நல்வாய்ப்பு - ஏகாதிபத்தியங்கள் எவ்வளவுதான் எதிர்த்தாலும், எங்களால் பெருமலையை, சிறு உளி தகர்ப்பதுபோல, கியூபா போல நின்று வெற்றி பெற முடியும் என்று காட்டுவதற்கு, அந்தப் புரட்சியாளருடைய வரிசையில் சிறந்தவராக சேகுவேரா அமைந்திருக்கிறார்.

அப்படிப்பட்ட அருமையான புரட்சியாளர் சேகுவேராவின் மகள்  டாக்டர் அலெய்டா குவேரா அவர்களுக்கும், அவருடைய பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா அவர்களுக்கும் மாபெரும் வரவேற்பு - சோசலிச கியூபாவிற்கு வரவேற்பு என்ற இந்த அருமையான நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருக் கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 

தமிழ்நாட்டினுடைய செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

‘தமிழ்நாடு’ என்று சொல்லும்பொழுது இப்பொழுது எவ்வளவு பூரிப்படைகிறீர்கள்; இந்த பூரிப்பு மட்டுமல்ல நண்பர்களே, இங்கே எழுப்பப்படும் கரவொலி சாதாரணமான கரவொலி அல்ல - இது எங்கெங்கோ போய் ஒலித்து, யார் யாரையோ குடைந்து கொண் டிருக்கின்ற கரவொலியாகவும் இருக்கின்றது என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.

இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாற்றியுள்ள அரு மைத்தோழர் குணசேகரன் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக் கூடிய தோழர் சுந்தரராஜன் அவர்களே, வேல்முருகன் அவர்களே, செல்வா அவர்களே, வர வேற்புப் பாடல் பாடிய டி.எம்.கிருஷ்ணா அவர்களே,

விருந்தினர் அறிமுக உரையை மிக உணர்ச்சிப் பூர்வமாக இங்கே நிகழ்த்திய நம்முடைய கேரளத்துத் தோழர் சகோதரர் எம்.ஏ. பேபி அவர்களே,

கலைஞர் தந்த பகுத்தறிவுச் செல்வம், அறிவுச் செல்வம், கொள்கைச் செல்வம் - 

அருமைத் தோழர் கனிமொழி

எங்கள் தனித்தமிழ்ச் செல்வம், திராவிட முன் னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் என்பதெல்லாம் பிறகு, எந்நாளும் பகுத்தறிவுச் செல்வம், கலைஞர் தந்த பகுத்தறிவுச் செல்வம், எங்கள் அறிவுச் செல்வம், கொள்கைச் செல்வம் - அருமைத் தோழர் கனிமொழி அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற எங்கள் ஆருயிர் தோழர், நாங்கள் பிரிய முடியாத தோழர் என்றால், அவர் தோழர் முத்தரசன்தான் - சி.பி.அய்.யின் தமிழ்நாட்டுச் செயலாளர் அவர்களே,

அதேபோல, தமிழ்நாட்டில் யாரையெல்லாம் ஒரு காலத்தில் ஒடுக்கி வைத்திருந்தோம் என்று ஆணவக் காரர்கள் நினைக்கின்றார்களோ, அந்த ஒடுக்குமுறை யாளர்கள் எல்லாம் இன்றைக்கு அலறக்கூடிய அள விற்கு ஒருவர் இருக்கிறார் என்றால், அவர்தான் எங்கள் எழுச்சித் தமிழர் சகோதரர் தொல்.திருமாவள வன் என்று சொல்லக்கூடிய பெருமைமிகு தோழரே!

இந்நிகழ்ச்சியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கலந்துகொண்டுள்ள கொள்கை விளக்க அணியின் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்களே,

காங்கிரஸ் பேரியக்கம் - அந்தப் பேரியக்கம் - இலட்சியத்தில் தமிழ்நாடு வழிகாட்டுகிறது. அரசியல் ரீதியாகப் பார்க்கும்பொழுது, மற்ற மாநிலங்களில் இருக்குமா இதுபோன்ற கூட்டணி என்பது வேறு; ஆனால், இது தமிழ்நாடு - எங்களை இலட்சியங்கள் ஒன்றிணைக்கும் - எதுவும் எங்களைப் பிரிக்காது என்று காட்டுவதற்காக வந்திருக்கின்ற அருமைச் சகோதரர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர், செய்தித் தொடர்பாளர் அருமைத் தோழர் கோபண்ணா அவர்களே,

இவர்கள் எல்லாம் உறவுக்காரர்கள்தான்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிரணி தலைவர் - நம் குடும்பத்து உறுப்பினர் என்று அவரையும் அழைக்கலாம். பல பேர் நினைக்கலாம், இவர் என்ன, எல்லோரையும் உறவு  கொண்டாடுகிறாரே என்று - ஆம்!  இவர்கள் எல்லாம் உறவுக்காரர்கள்தான். அவருடைய தாய் - தந்தையாருடைய திருமணமே, தந்தை பெரியாருடைய தலைமையில்தான் நடைபெற்றது என்கிற வரலாறு இருக்கிறதே, அது இளைய தலைமுறையினருக்குத் தெரிவிக்கப்படவேண்டிய வரலாறாகும்.

அதுபோலவே, தோழர் இராமகிருஷ்ணன் அவர்கள். நாங்கள் ஒரே ஊரைச் சார்ந்தவர்கள்; ஒரே தெருவைச் சார்ந்தவர்கள். அதுதான் மிகவும் முக்கியமானது.

நம்முடைய நாராயண ஆறுமுக நாயனார் அவர்களே,

பேராசிரியர் ஹாஜாக்கனி அவர்களே,

தமிழ்நாடு பெற்றிருக்கின்ற பெருமைமிகுந்த நாடாளுமன்ற உறுப்பினர்

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றால், எவ்வளவு சுறுசுறுப்பாக, எவ்வளவு ஆவேசமாக, எல்லா உரிமைகளையும் எவ்வாறு கேட்கவேண்டுமோ அவ்வாறே கேட்கிறார் என்று சொன்னால், தமிழ்நாடு பெற்றிருக்கின்ற பெருமைமிகுந்த நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் வெங்கடேசன் அவர்களே,

இந்த மேடையைப் பார்க்கிறேன்; இந்த மேடையில் பேசவேண்டிய அவசியமில்லை. இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றவர்களும் சரி; மேடைக்கு எதிரில் அமர்ந்திருக்கின்ற நீங்களும் சரி; யாருக்கு என்ன பதில் வேண்டுமோ - அவர்களுக்குப் பதில் சொல்லக்கூடிய அற்புதமான வாய்ப்புப் பெற்றுள்ள உணர்வாளர்கள்.

இங்கேயே ஒரு கியூபா புரட்சி ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

ஒன்றை மட்டும் எடுத்து நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

என்ன இவர்களுக்கு இவ்வளவு உறவுகள் என்று நினைக்கலாம். நான் இங்கே வந்தவுடன், புரட்சியாளர் சேகுவேராவின் மகள்  டாக்டர் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள்.

அருகிலிருந்த மொழி பெயர்ப்பாளர் சிறப்பான முறையில் மொழி பெயர்த்து அவர்களுக்குச் சொன்னார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மேனிஃபேஸ்டோ அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்தவர்!

அந்த வகையில், தந்தை பெரியார் அவர்களின் புரட்சிகரமான  சாதனைகளைப்பற்றியெல்லாம் நம்முடைய தோழர் சேகுவேராவின் மகளுக்குச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், தோழர் பேபி அவர்கள், ஒரு முத்தாய்ப்பான செய்தியை சொன்னார்.

அது என்னவென்றால், தந்தை பெரியார் அவர்கள்தான், கம்யூனிஸ்ட் கட்சியின் மேனிஃபேஸ்டோ அறிக்கையை இந்தியாவில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு, அதற்காக சிறைச்சாலைக்குச் சென்றவர் என்று சொன்னார்.

புதுப்பிக்கவேண்டிய உறவல்ல; 

தொடர்கின்ற உறவு - இருக்கின்ற உறவு

இந்த அறிமுகம் போதும்; நம் உறவு என்பது எப்பொழுதும் புதுப்பிக்கவேண்டிய உறவல்ல; தொடர்கின்ற உறவு - இருக்கின்ற உறவு என்பதுதான் மிகவும் முக்கியம்.

இது ஒரு பெரிய நிகழ்ச்சி. காண வேண்டியவர்களை காணும் பொங்கல் நாளின் மீட்சியாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி.

உலகளாவிய மனிதப் பார்வை சேகுவேரா அவர்களுக்கும், தந்தை பெரியார் அவர்களுக்கும் இருந்தது என்பதை இளைஞர் உலகம் பார்த்து உணர்ந்து கொள்ளவேண்டும்.

இன்றைய இளைஞர்கள் எல்லாம் சேகுவேரா படத்தையும், இன்னொரு பக்கம் தந்தை பெரியாரின் படத்தையும் போட்டிருப்பார்கள்.

சமுதாயத்தை மாற்றிப் புரட்டிப் போடக்கூடிய மிக முக்கியமான புரட்சி!

ஏனென்றால், இரண்டு பேரும் புரட்சியாளர்கள். அவர்கள் செய்த புரட்சி என்பது சமுதாயத்தை மாற்றிப் புரட்டிப் போடக்கூடிய மிக முக்கியமான புரட்சியாகும்.

‘‘இனிவரும் உலகம்’’

பெரியார் பேசுகிறார் கேளுங்கள்:

‘‘ஒரு மனிதன் தன்னுடைய காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலி இருந்தாலும், அவன் எனக்கு வலிக்கிறது என்று சொல்வதுபோல, உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கும் ஏற்படும் சங்கடத்தையும், குறைபாடுகளையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்டதுபோல நினைக்கும்படியாக அனுபவிப்பதுபோல் துடிக்கும்படியும், அவ்வளவு கூட்டு வாழ்க்கையின் ஒற்றுமையும், உணர்ச்சியும் உள்ள சமுதாயம் ஏற்படும்’’ என்று தந்தை பெரியார் 1943 இல், ‘இனிவரும் உலகம்’ என்ற உரையின்மூலம் சொன்னார்கள்.

அந்த உரையைக் கேட்ட அண்ணா அவர்கள், ‘‘இனிவரும் உலகம்‘‘ என்ற தலைப்பில் எழுதி, நூலாக வந்திருக்கிறது.

இது பெரியாருடைய கருத்து 1943 ஆம் ஆண்டு.

வண்ணங்கள் மாறுபடலாம்; ஆனால், எண்ணங்கள், புரட்சியை நோக்கியே, எல்லா சாலைகளும் அங்கு நோக்கியே என்று சொல்லக்கூடிய அளவிற்கு உணர்ச்சி வந்திருக்கிறது.

சேகுவேரா பேசுகிறார்!

இப்பொழுது சேகுவேரா பேசுகிறார் கேளுங்கள்:

‘‘If you tremble with indignation at every injustice, then you are a comrade of mine.’’

‘‘ஒவ்வொரு அநீதியைப் பார்க்கும்பொழுது, உங்களுடைய கைவிரல்கள், உங்கள் உடல்கள் நடுநடுங்கி கோபதாபங்களை உருவாக்கக் கூடிய அந்த சூழ்நிலையில் இருந்தால், நீ என்னுடைய தோழன்.’’

"Yes. We are the Comrades of the Cuba's humanists

We are the Comrades of Working Class

We are the Comrades of oppressed, depressed and suppressed

We oppose tooth and nail - fundamentalists and facists"

எனவே, இந்த நாள் ஓர் இனிய நாள். 

இரு தலைவர்களும் உடல் நோய் பாராமல் உழைத்தவர்கள் இறுதி வரையில்!

அதுபோல நண்பர்களே, இரு தலைவர்களும் உடல் நோய் பாராமல் உழைத்தவர்கள் இறுதி வரையில் - தந்தை பெரியாரும் சரி; சேகுவேரா அவர்களும் சரி.

அவருடைய மகளையும், பேத்தியையும் அவ்வளவு அன்போடு வரவேற்கிறோம். இது ஒரு சம்பிரதாய உறவல்ல.

நீங்கள் கியூபாவின் மகள் மட்டுமல்ல; இந்த நாட்டின் மகள். இந்த நாட்டின் மகள். இங்கே வந்திருக்கின்ற பேத்தி, எங்கள் பேத்தி.

நீங்கள் தமிழ்நாட்டு மகள்!

இந்த நாட்டு மகள் என்பதைவிட, அதிகமாக ஒருபடி மேலே சொல்கிறேன். நீங்கள் தமிழ்நாட்டு மகள். அதுபோல, கேரளத்தின் மகள். அதுபோல, வங்கத்தின் மகள்.

எங்கே இருந்தாலும், நீங்கள் எங்கள் செல்வம்; எங்கள் உறவு - இந்த உறவு நீடிக்கவேண்டும். 

தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய உடலில் இயற்கை வழியிலே சிறுநீர் பிரியாத நேரத்தில்கூட வயிற்றில் துளை போட்டு, ஒரு குழாயை இணைத்து, அந்தக் குழாயின் மறுபகுதியை ஒரு பாட்டிலினுள் வைத்து, அந்தப் பாட்டிலை ஒரு வாளியில் வைத்து, அதைத் தூக்கிக்கொண்டு 5 ஆண்டுகாலம் நடந்தார் என்பது மிகப்பெரிய வரலாறு.

பதவி மோகமற்ற போராளிகள்

அதேநேரத்தில்தான், கியூபா புரட்சியில் வென்று, அமைதியை நிலவ வைத்து, பொறுப்பைத் துறந்து சென்றவர், நம்முடைய சேகுவேரா அவர்கள். அவருடைய உடல் நலத்தைப் பொருட்படுத்தாமல், பதவி மோகமற்ற போராளியாக -எங்கெல்லாம் அநீதிகள் நடைபெறுகின்றனவோ - எங்கெல்லாம் சமூக அநீதிகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் எனக்கு வேலை இருக்கிறது; அங்கெல்லாம் நான் செல்வேன் என்று சொன்னவர்தான் காமரேட் என்ற உணர்வுபடைத்த சேகுவேரா அவர்களுடைய பணி.

அதனால்தான், இன்னொரு மகளைப் பார்த்துச் சொன்னார், நீங்களும் குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். கொள்கைப் பணிக்கு வாருங்கள் என்று சொன்னார்.

அது வாரிசு முறையல்ல நண்பர்களே - புரட்சியின் தொடர்ச்சி அது!

பொதுவுடைமைதனைக் 

காப்போம்! காப்போம்!!

‘‘இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் 

இது எனது என்ற கொள்கையை உடைப்போம் 

உலகமெங்கும் புதிய சமுதாயத்தைப் படைப்போம்

பொதுவுடைமைதனைக் காப்போம்! காப்போம்!!’’

இதுதான் உறுதி என்று சொல்லி, உங்களை வரவேற்கிறோம்!

வாழ்க புரட்சி!

வளர்க புரட்சி!

வாழ்க தமிழ்நாடு!

வளர்க பொதுவுடைமைத் தத்துவம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.

.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘‘தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு’’ எனும் முழக்கம்!
‘‘தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு’’ எனும் முழக்கம்!

புரட்சியாளர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோருக்கு நடைபெற்ற வரவேற்பு விழாவில் உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் - ‘’மகிழ்ச்சியோடு தமிழ்நாட்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாட்டில் (மூன்று முறை) நாம் பெருமை யடையக் கூடிய விழா’’ என்று உரைத்தபோது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சேர்ந்து விண்ணைப் பிளக்கும் வகையில்,
‘‘தமிழ்நாடு வாழ்க!’’,  ‘‘தமிழ்நாடு வாழ்க!’’, ‘‘தமிழ்நாடு வாழ்க!’’ என்று பலத்த கைதட்டலுடன் முழக்கமிட்டது மெய்சிலிர்க்கச் செய்தது. 
குறைந்த நேரம் பேசினாலும், கலகலக்கச் செய்தார் ஆசிரியர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக