செவ்வாய், 22 ஜூலை, 2025

புரட்சியாளர் ஹோசிமின் (19.05.1890 – 02.09.1969)


- பேராசிரியர் மு.நாகநாதன்

2024ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டின் பல மாநிலங்களுக்கு எனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டேன்.

எங்களது பயணம் ஹோசிமின் நகரிலிருந்து தொடங்கியது.

ஒடிந்து போகும் அளவிற்கு ஒல்லியான உடலமைப்பைப் பெற்ற  ஹோசிமின் நடத்திய புரட்சியை புரிந்து கொள்வதற்கு இந்தப் பயணம்  பெரிதும் உதவியது.

இந்த பயணம் பற்றிய கட்டுரையை புதிய சிந்தனையாளன் மாத ஏட்டில்   எழுதினேன்.

எனக்கு வியப்பை தரும் மற்றொரு  செய்தி.

பெரியாரும்,  அறிஞர் அண்ணாவும்  உலகில் எங்கெங்கெல்லாம்  புரட்சிகள் தோன்றியதோ அவற்றின் அடிப்படை கூறுகளை  நூல்கள் வழியாகவும், உரைகள் வழியாகவும், கட்டுரைகள் வழியாகவும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அளித்துள்ளனர் என்பதேயாகும்.

திராவிட இயக்கம் பொதுவுடைமை நெறியை அணைத்து, இணைத்து போற்றியது. போற்றி வருகிறது என்பதற்கு இத்தகைய தரவுகள் சான்றுபகிர்கின்றன.

1976 ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை காலத்தில் வியட்நாம் புரட்சிப் பற்றிய நூல்களைப் படிக்க  வேண்டும் என்று கலைஞர் விரும்பினார்.

கன்னிமாரா நூலகத்தில் இருந்து சில நூல்களைப்பெற்று கலைஞரிடம் கொடுத்தேன்.

விளைவு என்ன தெரியுமா?

தொடர்ந்து வியட்நாமின் வீரம் செறிந்த களங்களை பற்றி உடன்பிறப்பு மடல்களாக கலைஞர் எழுதினார்.

கடுமையான, கொடுமையான ஊடகத் தணிக்கை கத்திரிக்கோல் பாயவில்லை.

கலைஞர் கைவண்ணத்தில் வியட்நாம் புரட்சிப்பற்றிய கருத்துகள் இலக்கியமாகப் பூத்தன.

பொதுவுடைமை சிற்பி கார்ல் மார்க்சின் சிலை கன்னிமாரா நூலகத்தில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் திராவிடச் செம்மல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அறிவிப்பு என்பதும் திராவிட இயக்கம் பொதுவுடைமை இயக்கத்தின் உறவு நீட்சி தானே!

அறிஞர் அண்ணா ஹோம் லேண்ட் ஏட்டில் வியட்நாம் பற்றி எழுதிய கட்டுரையை 2010 ஆம் ஆண்டில் படித்தேன். ( Home Land, dated 16-2-1958)

வியட்நாம் நாட்டில் பயணம் செய்தபோது எல்லா சுற்றுலா தலங்களிலும், நீக்க மற,நிறைந்து  நிலைப் பெற்றிருக்கும் புத்தர் சிலைகளை  கண்ட போது அறிஞர் அண்ணாவின் சிந்தனையை தூண்டும் கட்டுரையில்  காணப்பட்ட துல்லியமான தொலைநோக்கு பார்வையை எண்ணி வியந்து போனேன்.

ஹோசிமின் பற்றி அண்ணாவின்  கணிப்பு காலம் கடந்து உயர்ந்து நிற்கிறதல்லவா?

பொதுவுடைமை வியட்நாம் மலர்ந்தபோது அண்ணா 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் நாளில் மறைந்துவிட்டார் .

அறிஞர் அண்ணாவின் அரிய ஆங்கில கருத்தை காண்போமா!

“ஹோசிமினின் பகைவர்கள்

‘சிகப்பு சர்வாதிகாரி’ என்றும்

‘கம்யூனிஸ்ட் கைக் கூலி என்றும்,

அவருடைய நண்பர்கள் ‘மக்களின் தந்தை’ என்றும், ஆசியாவின் ‘மிகச் சிறந்த புரட்சியாளர் ‘ என்றும் குறிப்பிடுகின்றனர்.

நடுநிலை நோக்கர்கள் எளிமையான, நேர்மையான மனிதர் என்றும்

நுட்பமான அரசியல் தீர்வாளர் என்றும் கூறுகின்றனர்.

பிரான்சு நாட்டைச் சார்ந்த உயர் அலுவலர் ஜுயன் செயின்ட்டென்சி அவருடன்  அரசியல் உடன்பாடு காண ஒரு ஆண்டு உரையாடல் மேற்கொண்டவர்.

அவர் குறிப்பிடுகிறார்,  “முதன்மையான ஆசியத்தலைவர், அளவிட முடியாத ஆற்றல் படைத்த மாபெரும் அறிவாளர்.

தனது பாதுகாப்பு, வசதி பற்றி சிறிதளவும் கவலைப்படாத ஒரு துறவி போன்றவர்.”

ஹோசிமின் பொதுவுடைமை இயக்கத்திற்கு எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதையும் அறிஞர் அண்ணா விளக்கியுள்ளார்.

“பவுத்தம் வியட்நாமிற்கு கி.பி.முதல் நூற்றாண்டில் சென்றது.

இன்றும் இலக்கியத்தின் ஊற்றாகாவும், மக்களை ஈர்க்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளன.

19 ஆம் நூற்றாண்டில் தின் (Dinh) என்கிற பெண் போராளியை பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் படையினர் கைது செய்து சிறையில் தூக்கிலிட்டனர்.

இந்த பெண் போராளி இறப்பதற்கு முன், சிறையின் சுவரில் தனது குருதியால் ஒரு கருத்தை பதித்தார்.

பெருமைக்குரிய புத்தரே!

நான் மீண்டும் பிறப்பதற்கு அனுமதியுங்கள்.

அப்போது எனக்கு ஆயிரம் கைகளையும், அந்த கைகளில் ஆயிரம் துப்பாக்கிகளையும் அளிக்குமாறு உங்களை வேண்டுகிறேன்.

இந்த ஈர்ப்பு மிக்க சொற்கள் தான் ஹோசிமின் மனதில் ஆழப்பதிந்து, விடுதலைக்கான வீரம் செறிந்த போரில் வழிகாட்டு உணர்வாக அமைந்தது என்று பலர்  சுட்டுகின்றனர்.

வியட்நாம் மக்களிடம் புரட்சி உணர்வையும் ஆற்றலையும் தூண்டுவதற்கு சில சிறப்பான முழக்கங்களை முன்வைத்தார்.

“நீங்கள் எங்களில் பத்து பேரைக் கொல்லலாம். கொன்ற ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் உங்களைக் கொன்று குவிப்போம்.

ஆனால் இத்தகைய கடினமான சூழலிலும் நீங்கள் தோற்பீர்கள்.

நாங்கள் வெற்றி பெறுவோம்.

சிறைக் கதவுகள் திறக்கும் போது  சுதந்திரப் பறவைகள் சிறகடித்துப் பறக்கும்.

சுதந்திரமும், விடுதலையும் தான்  உலகில் எல்லாவற்றையும் விட மதிப்பு மிக்கதாகும்.

நீங்கள் எப்படி உங்களை அன்புடன் விரும்புகிறீர்களோ, அதே போன்று  மற்ற மனிதர்களையும் விரும்புங்கள்.

ஹோசிமின் பார்வையில் முழக்கங்கள் வெறும் சொற்கள் அல்ல. அவைகள் உண்மை யானவை.

ஏற்ற கொள்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டும் நெறிகள்.

இந்த முழக்கங்கள் மக்கள் மனதில் உடனடியாகவும், ஆழ மாகவும் பதிந்து எதிரொலித்தது.

ஹோசிமினின் அடக்கமும், எளிமையும், அமைதியான குணமும் பலரை வியப்பில் ஆழ்த்தியது.

அவரை ஆண்டு முழுவதும் எளிய காக்கிச்சட்டை உடையுடன் காணமுடியும்.

ஹோசிமின் புதுடில்லிக்கு வந்தபோது மிகச் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

அவருடைய எளிமையைக் கடைப்பிடிக்கும் பண்பு  – ஹோசிமினுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில்,  கருஞ்சிவப்பு தங்க நாற்காலியில் உட்கார மறுத்தது வெளிப்படுத்தியது.

எளிய உடையுடன் ஒரு நாளில் அவர் 16 முதல் 18 மணி நேரம் உழைக்கிறார்.

வியட்நாமின் குடியரசுத் தலைவர் என்கிற முறையில் தன்னைத் தங்க கூண்டில் பூட்டிக்கொள்ள விரும்பவில்லை.

சிக்கல் நிறைந்த கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்கக் கூடிய ஆற்றல் ஹோசிமின் உள்ளத்தில் இயற்கையாக வெளிப்படுகிறது.

அவர் எடுத்து இயம்பும் கருத்துக்கள் வெற்று முழக்கமும் அல்ல.

ஒரு புள்ளியில் முடிந்து விடுவதும் அல்ல.

எளிமையானது, வலிமையானது, ஓவ்வொருவராலும் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியது.

வியட்நாம் இன்று ஆசிய நாடுகளிலேயே விரைந்து வளரும் நாடு. பல லட்சக்கணக்கான வெளிநாட்டு மக்கள் சுற்றுலாவிற்கு வருகிறார்கள்.

ஒரு விழுக்காடு பண வீக்கம் தான்  உள்ளது.

மத நம்பிக்கைகள் அற்றவர்கள் மக்கள் தொகையில் 94 விழுக்காட்டினர்.

மதம்  சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாது.

சமூகத்தில் அமைதி !

மக்களிடத்தில் மகிழ்ச்சி!!

பொருளாதாரம் வளர்கிறது.

பொருளாதார வளர்ச்சி மானுட முன்னேற்றத்தில் முடிகிறது.

அய்க்கிய நாடு மன்றத்தின் மானுட முன்னேற்றக் குறியீடுகளில் (UNDP) 2024 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் படி 193 உலக நாடுகளின் பட்டியலில் வியட்நாம் 93ஆவது இடத்தில் உள்ளது.

2022 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை  மானுட முன்னேற்றக் குறியீடுகளில் 14 சதவிகிதத்தில் ( இரண்டு ஆண்டுகளில்) உயர்ந்த வளர்ச்சி குறியீடுகளைப் பெற்று , உயர்ந்த மானுட முன்னேற்றக் குறியீடுகளைபெற்ற நாடுகளின் தொகுப்பில் உள்ளது.

எது வளர்ச்சி? எப்படிப்பட்ட வளர்ச்சி தேவை என்ற அடிப்படையை கூட உணராமல் ஸநாதனம் பேசி மக்களை இருளில் வீழ்த்தி, மக்களை மத அடிப்படையில் பிளவு ஏற்படுத்தி,பொருளாதார சரிவை சந்திப்பதினால் இந்தியா உலக நாடுகளின் பட்டியலில் – மானுட முன்னேற்றக் குறியீடுகளில் 193 நாடுகளில் 130ஆம் இடத்தில் உள்ளது.

நாட்டிற்கு தேவை புரட்டுகள் அல்ல!

பொய்கள் அல்ல!!

புரட்சி தான் என்பதை புரிய வைத்து அமெரிக்காவை ஓட ஓட விரட்டிய வியட்நாம் உயர்ந்து வளர்கிறது.

அமெரிக்க குடியரசுத் தலைவர் டிரம்ப்  இந்திய – பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது நான் தான் என்று பல முறை கூறிவிட்டார்.

அமெரிக்க மேலாதிக்கத்தை  எதிர்க்க துணிவின்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடி  மவுனம் காக்கிறார்.

வியட்நாம் விடுதலைப் போராளி ஹோசிமின் பிறந்த நாளில்   (19.05.1890) அவரது ஆளுமையை அவர் கையாண்ட முறைமைகளை நினைவு கூர்வோம்.

- விடுதலை ஞாயிறு மலர், 24,05.25

புதன், 19 மார்ச், 2025

வியட்நாமில் நடந்த இரண்டாம் உலகத் தமிழர் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் உரை!

 

உலகத் தமிழர்களே தந்தை பெரியாரை சுவாசியுங்கள்! வியட்நாமில் நடந்த இரண்டாம் உலகத் தமிழர் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் உரை!

விடுதலை நாளேடு

திராவிடர் கழகம்

வியட்நாம், பிப். 28- உலக மக்களைப் போல் மானமும் அறிவும் உள்ள மக்களாக தமிழர்களை ஆக்கிடப் பாடுபட்ட தந்தை பெரியாரை ஒதுக்கிப் பார்க்காதீர்கள் என்றார் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன். அவர் ஆற்றிய உரை வருமாறு:

தமிழ் இனம் நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பது போல் தமிழர்தாம் பண்டையவரலாற்றை திரும்பிப் பார்த்து அதிலிருந்து பெறவேண்டிய பாடங்களை பெறுவதற்காக தமிழர் பன்னாட்டு நடுவம் சார்பில் வியட்நாமில் இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாநாடு கம்போடியா நாட்டில் நடைபெற்றது. அடுத்த மாநாட்டை எகிப்தில் நடத்துவதாக டாக்டர் திருத்தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

அவரின் முயற்சிக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்

உலகம் முழுவதும் தமிழர்கள் 149 நாடுகளுக்கு மேல் வாழுகிறார்கள். தமிழர்கள் வாழாத நாடு இல்லை. அதேசமயம் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தத்துவ பேராசான் தந்தை பெரியார் 1929 ,1952 வாக்கில் மலேசியா மண்ணுக்கு சென்றார். தமது கருத்துக்களை மக்கள் மத்தியில் பறைசாற்றினார். அப்போது அவர் வலியுறுத்தியது. “இந்த மண்ணில் வந்து வாழக்கூடிய தமிழ் மக்கள் இந்த மண்ணைத்தான் சொந்த மண்ணாக கருதி இங்கேயே வாழ வேண்டும் மீண்டும் தமிழ்நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கக் கூடாது. எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இந்த மண்ணிலேயே வாழுங்கள்” என்பதை உறுதிப்படுத்தி உரையாற்றினார்.

பெரியாரின் உரை அடித்தளமிட்டது

அவரின் உரையால் உந்துதல் பெற்ற தமிழர்கள் அங்கேயே நிலையாக வாழ முயன்றதன் விளைவு அவர்களின் அடுத்த தலைமுறை மிகவும் சிறப்பாக வாழக்கூடிய வாழ்க்கையை பெற்றிருக்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்களாக பெற்றோர் கஷ்டப்பட்டு இருக்கலாம். ஆனால் இன்றைய தலைமுறை வசதியோடும் வாய்ப்போடும் வாழ்கிறார்கள் என்றால் தந்தை பெரியாரின் பேச்சு தான் அதற்கு அடித்தளம் இட்டது. உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்கள் தந்தை பெரியாரின் பகுத்தறிவு இனமான கருத்துக்களை மொழி உணர்வு கருத்துக்களை வாழ்வில் கடைப்பிடித்தால் இப்போது வாழும் வாழ்க்கையை காட்டிலும் மிகவும் சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். பெரியாரைப் போல் மக்களோடு மக்களாக இருந்து கள அனுபவம் பெற்று மக்களுக்கு தொண்டாற்றிய தலைவர்கள் வெகு சிலரே. பெரியார் ஒப்பற்ற சிந்தனையாளர். மக்களை மாற்றுவதற்கு வழி காட்டுவதற்கு மக்களுக்கு தொண்டாற்றுவதற்கு என்று சுயமரியாதை இயக்கத்தை பின்னர் நீதி கட்சி மூலமாக அதன் தலைவராக இருந்து ஆற்றிய சூழலில் நீதிக்கட்சிக்கும் இரண்டும் இணைந்த தேர்தல் முறையில் ஈடுபடாத சீர்திருத்த புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் மூலமும் உழைத்தார்…. பாடுபட்டார்… தொண்டாற்றினார். மக்களின் பிரச்சினைகளை மக்களோடே பயணித்து கள அனுபவம் பெற்றார். மக்களைத் திரட்டி உரிமைக்காக போராடி வெற்றியும் பெற்றார்.

பெரியாரை ஒதுக்கிப் பார்க்காதீர்கள்

மேல்நாடுகளில் பல உயிர்களை காவு கொடுத்து ரத்தம் சிந்தி பெற்ற உரிமைகளை இழப்புகள் இன்றி தமது தொண்டர்களின் ஈகத்தின் மூலமாக அமைதியான வழியில் பெற்றுக் கொடுத்தார். இந்த சாதனை தந்தை பெரியாரால் மட்டுமே முடிந்தது. மேல்நாடுகளில் மொழி உரிமைக்காக நாட்டின் விடுதலைக்காக பொருளாதார சமத்துவத்துக்காக என்று கட்சிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் நம் நாட்டிலோ சுயமரியாதைக்காக என்று இயக்கத்தை தொடங்கியவர் பெரியார் மட்டுமே. உலகிலேயே மான உணர்ச்சியை அடிப்படையாக வைத்து இயக்கம் தொடங்கியவர் யார். அவரும் அவரின் தொண்டர்களும் அதிகபட்ச தியாகத்தை மக்களின் நல்வாழ்வுக்காக செய்துள்ளனர் என்பதை இங்கே வந்துள்ள பெருமக்கள் நினைவு கூற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். கடவுள் மறுப்பை மத எதிர்ப்பை ஜாதி ஒழிப்பை பெண் விடுதலையை மட்டுமே வைத்து பெரியாரை ஒதுக்கி பார்க்காதீர்கள்.

பெரியாரின் மனிதத் தொண்டு

உலகின் மற்ற எந்த தலைவர்களுக்கும் பெரியார் குறைந்தவர் இல்லை. பொது வாழ்வில் தூய்மை ஒழுக்கம் நேர்மை வாய்மை இவற்றை கடைபிடித்தவர். இன்னும் சொல்லப்போனால் எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் திருக்குறள் இந்த திருவள்ளுவரின் நீட்சியாக, ஜாதியும் மதமும் சமயமும் பொய்யென உரைத்தும் கலை உரைத்த கற்பனை எல்லாம் நிலையென கொண்டாடும் கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடி போகட்டும் என்று பறைசாற்றிய வள்ளலாரின் நீட்சியாக பெரியார் மனித தொண்டு ஆற்றினார். மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினார். மக்களை சிந்திக்க தூண்டினார். மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று மனிதநேயம் போற்றினார். அவரைப் போல் ஒரு தலைவர் மேல்நாட்டு மக்களுக்கு கிடைத்திருப்பார் எனில் அந்த மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள்.. ஆனால் நாமோ அப்படி கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை… இழிவு படுத்தாமல் இருந்திருக்கலாம்… ஓய்வு என்பதும் சோம்பல் என்பதும் தற்கொலைக்குச் சமமானது என்று சொல்லி எழுபது ஆண்டுகளுக்கு மேலாக மனித தொண்டு ஆற்றிய மாமேதை அவர்.

பெரியாரை உலக மயமாக்க உழைத்திடும் ஆசிரியர்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் வழியில் இன்றும் பெரியாரை உலகு மயம் படுத்திட உலகை பெரியார் மயமாக்கிட ஓயாது உழைத்து வரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் பிரதிநிதியாக உங்கள் முன்னால் நான் நிற்கிறேன்.. பேசுகிறேன். உலகத்தின் பல்வேறு நாடுகளில் ஓராண்டுகளுக்கும் மேலாக பயணம் செய்து மக்களை மக்களின் வாழ்வாதாரத்தை வாழ்வியலை நேரிலே ஆய்வு செய்து உலக மக்களைப் போல் மானமும் அறிவும் உள்ள மக்களாக திராவிடர்களை தமிழர்களை ஆக்குவதே தம்முடைய பணி என்று சொல்லி உழைத்தவர் பெரியார். அவரின் கொள்கை பாதையில் உலகத் தமிழர்களே வாழ முயலுங்கள் என்று தமது தொடக்க உரையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

மாநாட்டில் எழுச்சித் தமிழர் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் சிறப்புரையாற்றினார். மற்றும் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், பேராசிரியர் உலகநாயகி, பேராசிரியர் ரவி, இலங்கை வானொலியின் மேனாள் முன்னணி வர்ணனையாளர் அப்துல் ஹமீத் ஆகியோர் முக்கிய உரையாற்றினர். பன்னாட்டு தமிழர் நடுவம் நிறுவனர் டாக்டர் திருத்தணிகாசலம் தலைமை தாங்கினார். இலங்கை, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திங்கள், 3 மார்ச், 2025

தெலங்கானா மாநிலத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு!

 

தெலங்கானா மாநிலத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு!

விடுதலை நாளேடு
ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

பெல்லம்பள்ளி, மார்ச் 3 ''புலே, சாவித்திரிபாய் புலே, பெரியார் ராமசாமி போன்ற பெருமக்கள் ஆற்றிய சேவைகள் நினைவுகூரத்தக்கவை'' என்ற விஞ்ஞானி தர்சினி ரமேஷ், பேராசிரியர் பாலபோயின சுதர்சன் கூறினார்.

தேசிய அறிவியல் நாளையொட்டி, பெல்லம்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் ஜூனியர் கல்லூரிகள் முன் முப்பெருமக்களின் சிலைகள் 28.2.2025 அன்று திறக்கப்பட்டன. பின்னர் சமூக சேவகர் ரங்கபிரசாத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோர் மகளிர் நலச் சங்கம் மாவட்ட அதிய க்ஷுருளா ஏற்ற சுவர்ணா, கவிஞரும் எழுத்தாளருமான தோட்ட பூ மன்னா, தெலங்கானா எழுத்தாளர் மன்றத் தலைவர் தோகல ராஜேஷ், அரசு பட்டப்படிப்பு கல்லூரி முதல்வர் கம்பள்ளி சங்கர், நல குருகுல சிஐஓ கல்லூரி முதல்வர் டி.சிறீதர், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் உதா யகாந்த், விடுதி நல அலுவலர்கள் சரிதா, விஜயலட்சுமி, சிலை நிறுவும் குழுத் தலைவர், செயலாளர்கள் ஜி.சிறீஅரி, சிரீதர் உள்ளிட்டோர் நடந்தது.

திங்கள், 30 டிசம்பர், 2024

தெலங்கானா மாநிலம் – அய்தராபாத்தில் மானவ விகாச வேதிகா வளாகத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா!

 

சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவரின் எழுச்சியுரை

விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

தெலங்கானா மாநிலம் – அய்தராபாத்தில் மானவ விகாச வேதிகா வளாகத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா!

டிசம்பர் 14 & 15 ஆகிய இருநாள்களும் தெலங்கானா – ஆந்திரா மாநிலங்களில் பரந்துபட்டு செயல்படும் மானவ விகாச வேதிகா எனும் மனித மேம்பாட்டு மன்றத்தின் 20-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. முதல் நாளான டிசம்பர் 14 அன்று மானவ விகாச வேதிகா அமைப்பின் வளாகத்தில் தந்தை பெரியாரின் சிலையினைக் காணொலி வாயிலாகத் தமிழர் தலைவர் திறந்து வைத்து இரண்டு நாள் நிகழ்ச்சியின் தொடக்கவுரையினை ஆற்றினார்.

தெலங்கானா – ஆந்திர மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முன்னோடி பகுத்தறிவாளர் மன்றங்களுள் மானவ விகாச வேதிகா ஓர் அமைப்பாகும். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தோடு பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்து இணைந்து பல பணிகளைச் செய்து வரும் அமைப்பு இது. அனைத்திந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பிலும் அங்கம் வகித்து வருகிறது.

அய்தராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகருக்கு அருகில் பாட சிங்காரம் பகுதியில் மானவ விகாச வேதிகா அமைப்பின் திறந்த வெளி அரங்கம் கடந்த பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அத்துடன் உள் அரங்கமும் அலுவலகமும் கட்டப்பட்டு அந்த வளாகத்தில் சமூகப் புரட்சியாளர்களான புத்தர், மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே, பாபாசாகிப் பி.ஆர். அம்பேத்கர், பகத்சிங் ஆகியோரது சிலைகளுடன் தந்தை பெரியாரின் மார்பளவுச் சிலையும் நிறுவப்பட்டு அந்த ஆறு சிலைகளும் 20-ஆம் ஆண்டு விழாவின் தொடக்கநாள் நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டன.

                                    தெலங்கானா மாநிலத்தில் முதன்முதலாக

திறந்து வைக்கப்படும் தந்தை பெரியாரின் சிலை

ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தில் 2006–ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தின் கடற்கரை சாலையில் தந்தை பெரியாரின் முதல் சிலையினை தமிழர் தலைவர் திறந்து வைத்திட ஆந்திர மாநில அரசின் அமைச்சர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். ஆந்திர நாத்திக சங்கத்தின் (Atheist Society of India) முன்னெடுப்பில் நிறுவப்பட்டது அந்தச் சிலை. பின்னர் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதற்குப் பின் தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்பட்ட தந்தை பெரியாரின் முதல் சிலை திறப்பு விழா இதுவாகும். மானவ விகாச வேதிகா அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

திராவிடர் கழகம்

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளில் அவருடைய சிலையினை திறக்க முடிவாகியிருந்தது. இந்த ஆண்டு தந்தை பெரியாரின் 146-ஆம் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிட ஜப்பான் நாட்டு டோக்கியோ நகருக்கு தமிழர் தலைவர் சென்றதாலும், அந்த சமயம் அய்தராபாத் நகரில் பெய்த பெரும் மழையினாலும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. பின்னர் தமிழர் தலைவரின் ஒப்புதல் பெற்று டிசம்பர் 14 – ஆம் நாளில் சிலை திறப்பு நிகழ்ச்சியினை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் டிசம்பர் 12 – ஆம் நாளன்று வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவினை வெகு விமரிசையாக தமிழ்நாடு அரசும், கேரள அரசும் வைக்கம் நகரில் ஏற்பாடு செய்திருந்தன. தந்தை பெரியாரின் கொள்கை வழித்தோன்றலான தமிழர் தலைவர் அவர்கள் அந்த நூற்றாண்டு விழாவில் முன்னிலை – சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிலையில் அய்தராபாத் நகரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தந்தை பெரியாரின் சிலை திறப்பு கூறியபடி நடந்தேறிட வேண்டும் எனக் கருதி காணொலி வாயிலாக சிலையினைத் திறந்து உரையாற்றிட இருப்பதை தெரிவித்து, அவ்விழாவிற்கு மானவ விகாச வேதிகா அமைப்பினரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். திராவிடர் கழகத்தின் சார்பாக பொருளாளர் வீ. குமரேசன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் இரா.மோகன் ஆகியோர் தந்தை பெரியார் சிலை திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடக்க நிகழ்ச்சி

திராவிடர் கழகம்

இரண்டு நாள் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பாக பகுத்தறிவு, சமூகநீதி கருத்துகள் அடங்கிய பாடல்களை ஆந்திரா கலைக்குழுவினர் எழுச்சியுடன் பாடினார்கள்.

மானவ விகாச வேதிகா அமைப்பின் தெலுங்கு மாத இதழான ‘ஸ்வேதாலோசனா’ வின் இணை ஆசிரியர் அனுமந்தராவ் நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை வரவேற்று உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தலைமையேற்று மானவ விகாச வேதிகா மத்திய கமிட்டியின் தலைவர் சீனிவாசராவ் உரையாற்றினார். பின்னர் ஆறு சமூக புரட்சியாளர்களான புத்தர், மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே, தந்தை பெரியார், பாபாசாகிப் அம்பேத்கர், பகத்சிங் ஆகியோரது சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.

தந்தை பெரியாரின் சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவரின் உரை

மானவ விகாச வேதிகா என்ற பெயரில் அய்தராபாத்தில் இயங்கி வரும் ஒரு அமைப்பு முழுக்க முழுக்க நம் பகுத்தறிவுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. டிசம்பர் 14 ஆம் நாளன்று இவர்கள் தங்கள் அமைப்பின் இருபதாம் ஆண்டு நிறைவை கொண்டாடினர். இந்த இரண்டு நாள் மாநாட்டின் போது தந்தை பெரியாரின் சிலை திறந்து வைக்கப்பட்டது. ஆசிரியரின் சார்பில் பொருளாளர்

வீ. குமரேசன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். காணொலி மூலம் வாழ்த்து தெரிவித்து ஆசிரியர் ஆற்றிய உரை இது:
அனைவருக்கும் வணக்கம். மானவ விகாச வேதிகா இயக்கத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துகள். என் உடல்நிலை காரணமாக என்னால் நேரில் கலந்துக்கொள்ள இயலவில்லை. ஆனாலும் என் மனம் தற்போது அங்கேதான் இருக்கிறது. நாம் அனைவருமே ஒரே கொள்கைக் குடும்பம்தான். நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். பல போராட்டங்களை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வந்துள்ள அமைப்பு உங்களுடையது. உங்கள் சாதனைகளைப் பாராட்ட வார்த்தைகள் போதாது. உங்களது சீரிய பணி தொடர வாழ்த்துகிறேன்.

200 ஆண்டுகளுக்கு முன் ஜோதிராவ் ஃபூலே புரட்சிகரமான இயக்கத்தை துவக்கினார். அதன்பின் பாபா சாகேப் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளை மிகப்பெரிய அளவில் மக்களிடையே பரவச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்களின் அடிச்சுவட்டில் நாமெல்லாம் அவர்களுடைய பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

எதிர் நீச்சல்கொந்தளிக்கும் போராட்டக் கடலில் எதிர் நீச்சல் போட்ட தந்தை பெரியாரின் சிலையை அங்கே நீங்கள் திறந்து வைப்பது குறித்து அளவற்ற மகிழ்ச்சி. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் இந்த ஆண்டு தன் நூற்றாண்டை நிறைவு செய்துள்ளது. சமூகத் தில் பிற்போக்குத்தனமும், காலாவதியான கோட்பாடுகளும், ஜாதி மத பேதங்களும் நிறைந் திருந்த காலக்கட்டத்தில் பெரியார் துவக்கிய இயக்கம் அது. உலகில் வேறு எங்கேனும் நம் நாட்டில் நிலவுவது போன்ற ஜாதிபாகுபாடு சார்ந்த கொடுமைகள் நடப்பதுண்டா? தகுதியையும், சாதனைகளையும் பொறுத்து மனிதர்கள் மதிக்கப் படாமல், பிறப்பு சார்ந்த பேதங்களால் அவர்கள் இழிவுப் படுத்தப்பட்டு வந்த காலத்தில் பெரியார் சுயமரியாதை இயக் கத்தைத் துவக்கினார். ஜாதி அமைப்பு என்பதே மானுட ஒற்றுமைக்கும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கும் எதிரானது என்பதே உண்மை.

மனித உரிமை

ஜாதிகள் மக்களின் மானுடத்தன்மையை அழிக்கின்றன. இந்தக் கொடுமையை எதிர்த்து பெரியார் நூறு ஆண்டுகளுக்கும் முன்பே, சுயமரியாதை இயக்கம் துவங்கியதற்கு முன்பிருந்தே போராடி வந்துள்ளார். காங்கிரசுடன் அவர் இணைந்திருந்த காலக்கட்டத்திலேயே தீவிரமாக போராடிக் கொண்டிருந்தார். வைக்கம் போராட்டத்தை எவரால் மறக்க முடியும்? மகாதேவர் ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த வீதிகளில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் நடந்துச் செல்லும் உரிமையே பறிக்கப்பட்டிருந்தது. எப்படிப்பட்ட சமூக அநீதி அது! எத்தகைய கொடுமை அந்த உரிமை மறுப்பு! பெரியார் காந்தியாருக்கு கடிதம் எழுதி – “எங்கே போயிற்று மனித உரிமை?” என்று வினா எழுப்பியிருந்தார். “வைக்கம் தெருக்களில் நாய்களும், பன்றிகளும் கூட சுதந்திரமாக உலவும்போது நம் சகோதர சகோதரிகள், ஈழவ, புலையர் பிரிவைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மனிதர்களுக்கு அங்கே நடந்துச் செல்ல உரிமை இல்லையா?” என்று காந்தியாரைக் கேட்டார் பெரியார்.தீண்டத்தகாதவர்களாக புறக்கணிக்கப்பட்ட மக்களை எவரும் பார்க்கவும் கூடாது, நெருங்கவும் கூடாது என்ற அவலநிலை வைக்கத்தில் 1924 ஆம் ஆண்டில் நிலவியது வரலாற்று உண்மை. இப்படிப்பட்ட சமூக அநீதி எங்காவது நிலவியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா நண்பர்களே? மானுடத்தை சீர்குலைப்பதல்லவா இப்படிப்பட்ட கொடுமை?

தாழ்த்தப்பட்ட பிரிவினர் மிருகங்களைவிட மோசமாக நடத்தப்பட்டனர். உயர்ஜாதியினர் தங்கள் வளர்ப்புப் பிராணிகளை அன்போடு அணைத்துக் கொண்டு முத்தமிட்டுக் கொஞ்சி வந்தனர். ஆனால் தப்பித்தவறி தாழ்ந்த ஜாதி மனிதனைத் தொட்டுவிட நேர்ந்தால் கூட உடனே குளித்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வார்களாம். எத்தகைய கொடுமை இது உச்சி முதல் பாதம் வரை நீர் ஊற்றிக்கொண்டால்தான் ‘தீட்டு’ போகும் என்பார்களாம் அந்த உயர் ஜாதி வெறியர்கள். இதையெல்லாம் எதிர்த்து, மனிதர்களை மனிதர்களாக அனைவரையும் மதிக்க வைப்பதே எங்கள் பணி.

சமூக அநீதி

உருவத்தால் மட்டுமே மக்கள் மனிதர்களாக உள்ளனர். அவர்களுடைய அன்றாட வாழ்வில் எல்லாவிதத்திலும் இழிவு! அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்வதால் என்ன பயன்? கல்வி கற்கவும் உரிமை மறுக்கப்படுவது சமூக அநீதியல்லவா? சுதந்திரம் பறிக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் அன்றாடம் நிகழும் அராஜகம். சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்த புதிய சமூகத்தை உருவாக்கவே நாங்கள் போராடி வருகிறோம். ஜாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் லட்சியம்.
தனி மரம் தோப்பாகாது என்பார்கள். ஓர் ஆங்கிலப் புதினத்தில் ராபின்சன் க்ரூஸோ தீவு பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அப்படிப்பட்ட ஆள் அரவமற்ற தனித் தீவிலாநாம் வாழ்கிறோம்? நாம் ஒரு சமூகத்தின் அங்கத்தினர்களாக ஒன்றுபட்டு, ஒரே குடும்பம் போல் வாழ்பவர்கள் அல்லவா? உறவினர்கள், நண்பர்கள் என்று மனிதர்கள் சூழ வாழ்ந்து வருகிறோம். எனவே சமத்துவம் நமக்கு இன்றியமையாத ஒன்று. சமமான வாய்ப்புகள் நம் அனைவருக்கும் கட்டாயத் தேவை. எனவே நாம் எல்லோருமே சமூகப் போராளிகளாக மாற வேண்டியது அவசியம்.

சமுதாய மாற்றம்

அதிகாரங்கள் இடம் மாறிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில் சமுதாய மாற்றங்களைக் காண முடியவில்லை. மறுமலர்ச்சி இன்றுவரை ஏற்படவில்லை. எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கும் நிலை உருவாக, முழுமையான சமத்துவம் மலர – ஜாதிகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். இதைத்தான் தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர் உட்பட பல முற்போக்குவாதத் தலைவர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்துள்ளனர். அவர்களையெல்லாம் கவுரவிக்கும் விதமாகத்தான் இன்று நீங்கள் சிறப்பாக விழா நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே பெருமிதமாக உள்ளது. பெரியாரின் உருவச் சிலையை நீங்கள் திறந்து வைப்பது எங்களுக்கு ஈடு இணையற்ற பெருமை. ஆனால் நாம் என்ன பயனை அடைந்து விட்டோம் என்றே கேட்கத் தோன்றுகிறது. ஏன் இன்னும் நம் துயரம் நீங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடை நமக்கு கிடைத்தே ஆகவேண்டும். முன்னோடியாக விளங்கிய தலைவர்களுக்குச் சிலைகள் எழுப்புவதும், மாலைகள் அணிவிப்பதும் மட்டும் போதாது. அவர்களுடைய சிந்தனைகள் மக்களைச் சென்றடையச் செய்வதே மிகவும் முக்கியம். நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் அந்தப் போராளிகளின் கொள்கைகள் பரவிப்படர நாம் செயலாற்றவேண்டும். அப்போதுதான் புதிய சமூகத்தை நம்மால் உருவாக்க இயலும். இதற்குத் தேவை அறிவியல் மனப்பான்மை. அறிவியல் கண்ணோட்டம் அவசியம் மட்டுமல்ல – அவசரமும் கூட.

அறிவியல் மனப்பான்மை

ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் முதல் குடியரசுத்தலைவர் வரை அனைவரும் அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் – “நாங்கள் அறிவியல் மனப்பான்மையுடன் வாழ்வோம்” என்று.

அரசமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு சமீபத்தில் கொண்டாடப்பட்டபோது, அதன் முகவுரை வாசிக்கப்பட்டது. இது வெறும் ஓர் அரசியல் நிகழ்வாகவோ அரசியல் சார்ந்த சடங்காகவோ இருந்து விட்டால் போதுமா? அதற்கு ஓர் சமூக நோக்கம் தேவையல்லவா? அது என்னவாக இருக்கவேண்டும்? சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் முழுமையாக மலரச் செய்ய அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை அரசமைப்புச் சட்ட முகவுரை மூலம் நாம் உணரவேண்டும். எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும் – சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி இதில் அடங்கும். இவை மூன்று வகையான நீதிகள். ஒன்றோடு மற்றொன்றை இணைத்து நாம் குழப்பிக்கொள்வதும் சரியல்ல. பொருளாதார நீதியிலிருந்து வேறுபட்டது சமூக நீதி. இவை இரண்டிலிருந்தும் மாறு பட்டது அரசியல் நீதி. அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் மட்டும் குறிப்பிடப்படவில்லை – நம் அடிப்படை கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. 51-A என்ற பிரிவு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை கொண்டு கேள்வி கேட்கும் துணிவுடனும், மனித நேய உணர்வுடனும், சீர்திருத்த நோக்கத்துடனும் வாழவேண்டும் என்பதை இந்த 51A பிரிவு வலியுறுத்தியுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் இந்தக் குறிப்பிட்ட பிரிவில் வலியுறுத்தப்பட்டிருந்தாலும் கடந்த 75 ஆண்டு காலத்தில் எந்த அள வுக்கு இது நிறைவேறியுள்ளது என்றே கேட்கத் தோன்றுகிறதுவலியுறுத்தப்பட்ட கடமை களின்படி செயலாற்றி சிறந்த சமூகத்தை நம்மால் உருவாக்க முடிந்ததா? விடை காண முடியாத கேள்வியாகவே இது இன்றும் உள்ளது.

ஒன்றிணைந்து போராட வேண்டும்

மனிதர்கள் வருவார்கள், போவார்கள். பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும் மாறி மாறி பதவி ஏற்பார்கள், விலகுவார்கள். ஆனால் நாம் காணும் மாறுதல்கள் என்ன? விளைவுகள் என்ன? நிலைமையில் மாற்றம் உண்டா? எதுவுமே இல்லை என்பதே கசப்பான உண்மையாக உள்ளது. இப்படிப்பட்ட அவலநிலையை உலகில் வேறு எங்காவது நம்மால் பார்க்க முடியுமா? எந்த ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட துயரம் உள்ளது? மனிதர்களை பார்க்கக்கூடாது, நெருங்கக் கூடாது, தீண்டக் கூடாது என்றெல்லாம் தடை விதிக்கும் நாடு உலகில் உண்டா? நாம் தான் இந்தக் கொடுமையை இன்றுவரை சகித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் முடிவு கட்டப்படவேண்டும். இந்தச் சமூக அநீதி அறவே அழிய வேண்டும். இதற்காக நாம் அனைவருமே ஒன்றிணைந்து போராட வேண்டும். இதற்கான போர் நம் மக்களின் மனங்களில் நடக்க வேண்டும்.

சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம் – இம்மூன்றும் நிறைந்த சமூகம் உருவாக நாம் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டிய தருணம் இது.
நீங்கள் தெலங்கானாவிலும் நாங்கள் தமிழ்நாட்டிலும் இருப்பது போலவே நாட்டு மக்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் நம்நாடு ஒன்றுதான். நமக்குள் பிரிவினைகள் இல்லை. தனித்தன்மைகொண்ட நம் பண்பாடுகளும், கலாச்சாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஒற்றுமையும், சமச்சீர் நிலையும் ஒன்றல்ல. இரண்டையும் சேர்த்து நாம் குழப்பிக் கொள்ளக்கூடாது. மாறுபட்ட இரண்டு அம்சங்களுமே நமக்குத் தேவை. நம்முடைய பகுத்தறிவுக் கண்ணோட்டம் மாறுபடக் கூடாது. இந்தப் பண்பு பாதுகாக்கப்பட வேண்டும். அறிவியல் பார்வை மேலும் தீவிரமடைய வேண்டும்.இனவெறி, ஜாதிவெறி, மதவெறி – இவை மூன்றுமே அடியோடு அழிய வேண்டும்.

உயிர்த் தியாகம்

தபோல்கர் போன்ற சமூகப் போராளிகளும் வேறு பல புரட்சியாளர்களும் எதற்காக உயிர்த்தியாகம் செய்தார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் சமூக விரோதிகள் அல்லர். அவர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. தேசவிரோதச் செயல் எதிலும் அவர்கள் ஈடுபடவில்லை. மக்கள் சுதந்திரமாக சுயமாகச் சிந்திக்க வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பாக இருந்துள்ளது. எவருடைய கட்டுப்பாடும் இன்றி மக்கள் செயல்படவேண்டும் என்றே அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். ஆனால் மக்கள் அப்படி வாழ முடியாத நிலையை சில தீயசக்திகள் ஏற்படுத்திவிட்டன. இதை உணரவும் விழிப்புணர்வு அடையவும் நம் மக்கள் தவறிவிட்டனர். இந்தத் தவறுக்கு விலையாக நாம் தரப்போவது என்ன என்ற கேள்வி இத்தருணத்தில் எழுகிறது.

மக்கள் அனைவரும் பகுத்தறிவுடன் சுதந்திரமாக சிந்திக்கவேண்டும். இந்த நோக்கம் நிறைவேற உங்களைப் போன்ற அமைப்புகள் போராடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. பகுத்தறிவே நம் வாழ்வின் அடிப்படைத் தத்துவமாக இருக்க வேண்டும். ஆறறிவுள்ள மனிதனால் மட்டுமே பகுத்தறிய முடியும். எனவே அதற்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அறிவியல் கண்ணோட்டமும் அறிவியலின் வளர்ச்சிக்காக அல்ல – நம் வளர்ச்சிக்காகவே.

நம்முடைய கொள்கைகளையும் திட்டங்களையும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எடுத்துச் சென்று நாம் சேர்க்கவேண்டும். அவை மக்களைச் சென்றடைய வேண்டும். மேடைகளில் முழங்கினால் மட்டும் போதாது. புதிய தலைமுறையினரை விழிப்படையச் செய்ய வேண்டும். அவர்கள் வருங்காலத்தின் தூண்கள். கடுமையாக உழைக்க இளைஞர்களை ஊக்கப்படுத்தி நாம்பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

மூடநம்பிக்கை ஒழிப்பு

நாம் வாழ்வது செயற்கை நுண்ணறிவு யுகத்தில். இருந்தாலும் தொலைகாட்சி ஒளிபரப்புகளிலும், சமூக ஊடகங்களிலும், சில பத்திரிகைகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்கள் குறையவே இல்லை. ஜோதிடம், வாஸ்து, ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற மூட நம்பிக்கைகள் இவற் றின் மூலம் இன்றும் பரவி வருவது நம் நோக் கத்திற்கு பெரும் தடையாக உள்ளது. இந்த மடமைகளுக்கெல்லாம் எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் கிடையாது. இவற்றை யெல்லாம் ஒழிக்க நாம் போராட வேண்டும்.

அரசியல் விவாதங்களோடு நாம் நின்றுவிடக் கூடாது. பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பெண்களின் முன்னேற்றம், சமூகநீதி, ஜாதி ஒழிப்பு – இப்படி பல சவால்கள் உள்ளன. ஜாதிகளின் படிநிலையமைப்பு மிகப்பெரிய கொடுமை. உலகின் எல்லா சமூகங்களிலும் சமத்துவம் நிலவுகிறது. நம் நாட்டில் சமத்துவமின்மை மட்டுமல்ல – படிநிலை அமைப்பில் சமத்துவமின்மையும் ஏணிப்படிகள் போல் நிலவி வருகிறது. உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று பிரிக்கப்பட்டு நம் மக்கள் வாழும் துயரநிலை எப்போது மாறும்? ஜாதிகள் எப்பொழுது அடியோடு ஒழியும்? நம்முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி இதுதான். ஜாதிகளின் படி நிலையமைப்பே எல்லா கொடுமைகளுக்கும் மூலகாரணம் என்று டாக்டர் அம்பேத்கரும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சமூகம் உருவாக நாம் எல்லோரும் ஒன்றிணைந்து போராடுவோம். மக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். வாழ்நாள் முழுவதும் அதைத்தான் செய்து வந்தார் பெரியார். எங்கள் திராவிடர் கழகம் தமிழ்நாட்டை பெரியார்மண்ணாக, சமூகநீதி மாநிலமாக மதித்து வருகிறது. பகுத்தறிவு பரவிப் படர போராடி வருகிறோம். மனித நேயம் தழைக்க எங்களால் இயன்றதைச் செய்து வருகிறோம். மக்களை விழிப்படையச் செய்ய நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இந்தப் பணியில் உங்கள் கரங்களைப் பலப்படுத்த நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம்.

‘‘விடுதலை’’

எங்களுடையது மக்கள் இயக்கம். எந்தவிதமான அரசியல் ஆதாயமும் தேடாதவர்கள் நாங்கள். தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் இயங்கி வருகிறோம். எங்கள் கொள்கைகளை பரவிப்படரச் செய்ய ‘விடுதலை’ என்ற பெயரில் நாளிதழ் வெளியிட்டு வருகிறோம். மாத இதழ்களும், மாதமிருமுறை இதழ்களும் கூட கொள்கைப் பரப்புக் கருவிகளாக வெளியிட்டு வருகிறோம். எங்கள் பத்திரிகைகள் தொழில் அல்ல – அவை யாவும் எங்கள் லட்சியம் – எங்கள் உயர்ந்த நோக்கம் – எங்கள் இலக்கு.

உங்கள் பணிகளும் நல்ல பயன்களை அளிக்க என் வாழ்த்துகள். “அந்தரிகீ வந்தனம்” என்று தெலுங்கில் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் சமச்சீர் அமைப்புகளாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஒன்றுபட்ட அமைப்புகளாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் போதும். எங்கள் ஒத்துழைப்பு உங்கள் அமைப்பிற்கு எப்போதும் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். அன்புச் சகோதர, சகோதரிகளே, ஒரு நல்ல பொதுநோக்கத்திற்காக நீங்களும் எங்களுடன் எப்போதும் இணைந்து ஒத்துழைப்பு அளியுங்கள். நம் அனைவரின் இலக்கும் ஒன்றாக இருக்கட்டும். பழமைகளை உணவாக அல்ல – உரமாக்கிக் கொண்டு புதிய சமூகத்தை வளர்ப்போம். மூடநம்பிக்கைகளை ஒழிப்போம். எல்லாவிதமான மடமைகளையும் அழிப்போம். பகுத்தறிவு செழிக்க மேலும் தீவிரமாகப் போராடுவோம்.மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அமைப்பைச் சார்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். தமிழ்நாட்டிற்கு வருகை புரியுங்கள். சென்னைக்கு வந்து எங்களை நேரில் சந்தியுங்கள். எங்கள் இயக்கத்தின் செயல்பாடுகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள். எங்களுடன் கலந்துரையாடி உங்களுக்குச் சரியென்று படும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

பொது மக்களின் இயக்கம்

ஒருசில மேதைகளும், அறிஞர்களும் மட்டுமே நிறைந்ததாக எந்த ஒரு இயக்கமும் குறுகலான வட்டத்திற்குள் அடைந்துவிடாமல் பொதுமக்களின் இயக்கமாக அது இருக்கவேண்டும். அப்படித்தான் எங்கள் திராவிடர் கழகம் உள்ளது. உங்கள் இயக்கமும் மக்கள் இயக்கமாக மேலும் மேலும் செழித்தோங்க என் வாழ்த்துகள். மக்களை உங்கள் இயக்கம் சென்றடையச் செய்யுங்கள் என்பதே என் பணிவான வேண்டுகோள். வாழ்க பகுத்தறிவு! வாழ்க சமூகநீதி! வாழ்க சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம்! விடை பெறுகிறேன். நன்றி.
தமிழர் தலைவரின் ஆங்கில உரையினை மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்ச்சிக்கு வருகை தந்தோர் பார்த்து செவிமெடுத்தனர். தமிழர் தலைவரின் எழுச்சிமிகு உரை தமிழர் தலைவரின் நிகழ்ச்சியில் முத்திரை பதிவாக விளங்கியது. ஆங்கில உரையின் தெலுங்கு மொழியாக்கத்தை மானவ விகாச வேதிகா அமைப்பின் தோழர் ஒருவார் வாசித்தார்.

கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆற்றிய
உரையின் சுருக்கம்:

கருத்துச் செறிவுமிக்க தமிழர் தலைவரது உரைக்குப் பின்னர் உரையாற்றுவது சற்றுகடினம். சுருக்கமாக ஒரே ஒரு கருத்தினை மட்டும் எடுத்துச் சொல்ல விரும்புகின்றேன்.

தந்தை பெரியாரின் கொள்கையின் சாரம் – மனிதர் அனைவரும் சமமானவர்கள். அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைத்திட வேண்டும். இந்த கொள்கை நடைமுறைக்கு தடையாக எதுவந்தாலும், எத்தகைய பெரிய சக்தி என்று நினைக்கப்படுவது இருந்தாலும் அவையனைத்தும் தகர்க்கப்பட வேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் வாழ்வும் பணியும். மனித சமத்துவத்திற்கு எதிராக ‘கடவுள் சொன்னார்’ என்று வந்தாலும் ‘கடவுளும்’ மறுக்கப்பட வேண்டியவர் மட்டுமல்ல; எதிர்க்கப்பட வேண்டியவர். இந்த அடிப்படையில்தான் மற்ற புரட்சியாளர்களிடமிருந்து தந்தை பெரியாரின் கொள்கையும், நடைமுறையும் வேறுபடுகிறது. மானுடம் மேம்பட முழுமையாக பயன்படுகிறது.

அண்மையில் கேரளாவில் வைக்கம் நகரில் 1924 – ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சத்யாக்கிரகத்தின் வெற்றி நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. கோவிலில் அனைவருக்கும் நுழைவு; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சராகும் உரிமை என்று முற்போக்கு நிலவிடும் தற்போதைய நிலையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடந்து செல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை. தீண்டாமையால் (untouchability) – தெருக்களில் நடந்து செல்லும் உரிமை மறுப்பு தாண்டவமாடியது. இதனை எதிர்த்து கேரளத்து முற்போக்கான தலைவர்கள் போராட்டத்தினை தொடங்குகிறார்கள். முதல் வாரத்திற்குள் அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விடுகின்றனர். போராட்டம் தோல்வி அடைந்து விடும் என்ற நிலையில் சிறையிலிருந்த தலைவர்கள் அன்றைய தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவர் பெரியாருக்குக் கடிதம் எழுதுகிறார்கள். வைக்கம் வந்து போராட்டத்தினை தொடர்ந்து நடத்திட வேண்டுகின்றனர்.முதல் போராட்டம்

உடனே பெரியாரும் வைக்கம் நகருக்கு வந்து சுற்றியுள்ள பகுதிகளிலெல்லாம் தனது எழுச்சிப் பேச்சால் மக்களைத் தட்டி எழுப்பி தொய்வடைந்த போராட்டத்தை மாபெரும் மக்கள் போராட்டமாக மாற்றுகிறார். இரண்டு முறை கைதாகி சிறையில் அடைக்கப்படுகிறார். அரசியல் கைதியாக அல்லாமல் கடுங்காவல் தண்டனைக்கு ஆளாகிறார். இறுதியில் தெருக்களில் நடக்கும் உரிமை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கிறது. வைக்கம் போராட்ட வெற்றி விழாவில் தந்தை பெரியார் பங்கேற்கிறார். இந்தியாவில் மனித உரிமைக்கான முதல் போராட்டமாக வைக்கம் போராட்டம் இடம் பெற்றது.

அந்த எழுச்சிமிகு வைக்கம் போராட்டம்தான் புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களுக்கு மகாராஷ்டிரம் – ‘மகத்’ பொதுக்குளத்தில் குடிதண்ணீர் எடுக்கும் போராட்டத்தினை நடத்திட உந்து சக்தியாக விளங்கியது. இதனை டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் பதிவு செய்கிறார். அந்த வரலாற்று நூலுக்கு ஒரு பெருமை உண்டு. டாக்டர் அம்பேத்கர் உயிருடன் வாழ்ந்தபொழுது அவர் படித்து ஒப்புதல் அளித்த வரலாறு நூல் தனஞ்செய் கீர் அவர்களுடையது மட்டும்தான்.

தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் இன்று நூற்றாண்டு விழாவாக உலகெங்கும் பேசப்படுகின்றது. அன்றைய அரசு பெரியாரைக் கைது செய்தது. இன்றைய அரசுகள் தந்தை பெரியாரைப் போற்றி விழா எடுக்கின்றன. இதுதான் உண்மையான புரட்சியின் வெற்றி.
இவ்வாறு கழகப் பொருளாளர் உரையாற்றினார்.

மானவ விகாச வேதிகா நிகழ்ச்சியில் விஜயவாடா நாத்திக மய்யத்தின் தலைவர்டாக்டர் சமரம், நியாந்தா மற்றும் ராஸ்மி, அனைத்து இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், செயலாளர் பேராசிரியர் முனைவர் சுதீஷ் கோடேராவ் மற்றும் பல்வேறு பகுத்தறிவாளர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை மானவ விகாச வேதிகா அமைப்பின் தலைவர் சீனிவாசராவ் செயலாளர் மூர்த்தி மற்றும் அந்த அமைப்பின் தோழர்கள் வெகு சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தார்.

இன்றைய தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியாரின் முதல் சிலை திறப்பு நிகழ்வு என்ற நிலையில் தமிழ்நாட்டையும் கடந்து தந்தை பெரியாரின் கொள்கைகள் ஆழமாக வேர் பிடித்து பரவி வருகின்றன என்பதன் அடையாளமாகவே மானவ விகாச வேதிகா அமைப்பினர் நடத்திய நிகழ்வு அமைந்தது. உலகம் பெரியார் மயம்! பெரியார் உலக மயம் என்பதன் எதிரொலியாக – நடைமுறையாக தெலங்கானா நிகழ்ச்சி நடைபெற்றது.

தொகுப்பு: வீ. குமரேசன்


தந்தை பெரியாரின் சிலை நன்கொடை

நன்கொடை


அய்தராபாத் – ராமோஜிராவ் திரைப்பட நகருக்கு அருகில் உள்ள மானவ விகாச வேதிகா அமைப்பின் வளாகத்தில் திறக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை நன்கொடையாக வழங்கப்பட்டதாகும். தென்காசி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளரும் – தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளருமான வி. ஜெயபாலன் அவர்கள் தந்தை பெரியாரின் சிலையினை வடிவமைத்திட ஆவன செய்து – அந்தச் சிலையினை மானவ விகாச வேதிகா அமைப்பினர் நிறுவிட நன்கொடையாக வழங்கினார். நன்கொடை அளித்த விவரங்கள் பற்றிய குறிப்பு சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் சிலையினை நன்கொடையாக வழங்கிய வி. ஜெயபாலன் அவர்களுக்கு நிகழ்ச்சியில் மானவ விகாச வேதிகா அமைப்பினர் நன்றியினைத் தெரிவித்தனர்.