ஞாயிறு, 23 நவம்பர், 2025

ஆஸ்திரேலியா – மெல்போர்னில் (நவ. 1,2) நடைபெற்ற நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாடு -மாநாட்டு வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நமது சல்யூட்!



 * ஆஸ்திரேலியா – மெல்போர்னில் (நவ. 1,2) நடைபெற்ற நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாடு

* தமிழ்நாட்டிலிருந்து 24 பேராளர்கள், பன்னாடுகளிலிருந்தும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருமக்கள் பங்கேற்பு
* தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி – ஆ.இராசா எம்.பி. நேரில் பங்கேற்பு
*பெரியார் உலகத்தையும், அதன் பணிச் சுமைகளையும் சற்றுச் சுமக்க முன்வாருங்கள் தோழர்களே!
பெரியார்-அம்பேத்கர் தத்துவ ஏவுகணை
பூமிப்பந்தில் இடைவெளி இன்றி எங்கும் பாயும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் அறிக்கை!

கடந்த நவம்பர் 1,2 ஆகிய நாள்களில் ஆஸ்திரேலியா – மெல்போர்னில் பெரியார் பன்னாட்டமைப்பும், பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டமும் இணைந்து நடத்திய பன்னாட்டு மாநாட்டின் சிறப்புகளைப் பாராட்டியும், மாநாடு சிறக்க ஒத்துழைத்தவர்களைப் பாராட்டியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆசிரியர் அறிக்கை

அமெரிக்காவில் இயங்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பு (‘Periyar International’) தொடங்கி வெள்ளி விழாவைத் தாண்டி, சுமார் 30 ஆண்டுகளாக – மிகச் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றது.

டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் திருமதி சரோஜா இளங்கோவன் இணையரின் தந்தை பெரியார் பற்றிய அயலகப் பணிகள்

அமெரிக்காவில் குடியேறிய டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் திருமதி சரோஜா இளங்கோவன் ஆகியோர் தங்களது டாக்டர் பணியிலிருந்து – ஓய்வு வயதை நிறைவு செய்யும் முன்பே, இதற்கெனவே விருப்ப ஓய்வு பெற்று, முழு நேரமும் பெரியார் பணி தொடர்வதையே தமது தொண்டறமாகத் தொடருகின்றனர்.

பேராசிரியர் டாக்டர் இலக்குவன் தமிழ் போன்ற கொள்கை உறவுகள் பலரும் இத்தொண்டில் திளைத்து, கடமையாற்றுவதில் தனி இன்பம் கண்டு, சலிப்போ, சோர்வோ இன்றி அவ்வமைப்புச் செயல்படுவதைத் தங்களது அறப்பணியாகக் கருதி, பேராதரவு தந்து, நாளும் இப்பெரும் அறிவுத் திருப்பணி – அறப்பணி தொடரத் துணை நிற்கின்றனர்.

ஆசிரியர் அறிக்கை

ஆசிரியர் அறிக்கை

ஆசிரியர் அறிக்கை

எண்ணற்ற பலரும் குடும்பம் குடும்பமாகப் பணிப் பகிர்வு செய்து, தொண்டற இலக்கண, இலக்கியங்களாகி, ‘‘பெரியார் உலக மயம்  – உலகம் பெரியார் மயம்’’ என்று உழைக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம்

இதுபோலவே, சுமார் 4, 5 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆஸ்திரேலியாவில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் (‘PATCA’) தொடங்கப்பட்டது.

அங்கும் ஜாதி, வர்ண பேதம், மனிதநேயத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் ஜாதி வெறித்தனம், சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது, பள்ளிப் பாடப் புத்தகங்கள் வாயிலாக பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைப் புகுத்தி, இதற்குக் கலாச்சாரப் போர்வை போர்த்தி – அங்குள்ள ஆஸ்திரேலியர்களை ஏமாற்றி நிலைக்கும் திட்டத்தை எதிர்த்துப் பிறந்ததுதான் ‘‘பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம்.’’

ஆசிரியர் அறிக்கை

ஆஸ்திரேலியாவில் பதிவு பெற்றது

பெர்த் நகரில் குடியிருக்கும் தானே பதவி (விருப்ப) ஓய்வு பெற்ற, சிறந்த பாரம்பரிய பெரியாரிஸ்ட் ஆன முனைவர் மகிழ்நன் அண்ணாமலை, அதுபோல சிட்னி வாழ் டாக்டர் முகம்மது ஹாரூண் காசிம் மற்றும் அவர்களது கொள்கைக் கூட்டாளிகள் எல்லாம் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கி, உழைத்து ஆஸ்திரேலியாவில் கேன்பெர்ரோ, கோல்டுகோஸ்ட், பிரிஸ்பேன், மெல்போர்ன் போன்ற பகுதிகளில் வசிக்கும் பல பெரியார் – அம்பேத்கர் கொள்கைப் பற்றாளர்களான குடும்பங்களை  ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இது பதிவு பெற்றது.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில், அவர்களையெல்லாம் சந்தித்து, கலந்துரையாடி கொள்கை மகிழ்ச்சியைத் தந்திட, என்னுடன் நமது கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களும் பயணித்து, முளைத்த செடிக்கு நீர்ப் பாய்ச்சி பாதுகாத்திடுவதற்குரிய வாய்ப்பளித்த மெல்போர்ன் நிகழ்ச்சி, அன்றைய எங்களது கொள்கைப் பயணத்தின் கடைசி நாள் நிகழ்ச்சியாகும்.

மெல்போர்ன் தோழர்கள் அரங்க.மூர்த்தி, தாயுமானவர், சுரேஷ் குடும்பத்தின் போன்ற பலரின் குடும்பத்தினர் அவர்களில் சிலர் எனது தலைமையில், தங்களது வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்திக் கொண்டவர்கள்.

பெரியார் பன்னாட்டு மாநாடுகள்
இதுவரை 4 நாடுகளில்!

அப்போதுதான், பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களின் பெருமுயற்சியால், முதல் மாநாடு ஜெர்மனி, இரண்டாவது மாநாடு அமெரிக்கா, மூன்றாவது மாநாடு குறித்து தெரிவித்தார். கனடா என்ற வரிசையில், நான்காவது மாநாட்டினை ஆஸ்திரேலியாவில் நடத்த முன்பே திட்டமிட்டதை, மெல்போர்ன் தோழர் அரங்க மூர்த்தி தலைமையிலான கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் திருமதி ராதிகா சரவணன், இளமதி போன்றோர் பலரும் கடும் உழைப்பைத் தந்தனர். எவ்வித தயக்கமும் இன்றி அங்கே பன்னாட்டு மாநாட்டை நடத்திட முன்வந்தனர்.

அமைப்பின் செயல்மிகு தலைவர் முனைவர் அண்ணா.மகிழ்நன், முகம்மது ஹாரூண் காசிம் ஹாரூண், கேன்பெர்ரோ வாழ் தோழர் சுரேஷ், திருமதி சுமதி விஜயகுமார் போன்ற பலரும் உற்சாகத்துடன் மாநாட்டை நடத்தினர்.

மெல்போர்னில் சீரும் சிறப்புடனும் நடைபெற்ற இரண்டு நாள் மாநாடுகள்

மாநாட்டில் கலந்து, அதன் வெற்றியை பூரிப்புடன் நேரில் அனுபவிக்க ஆயத்தமான நிலையில், இங்குள்ள இயக்கப் பணிகளின் அவசரத்தினாலும், உடல்நிலையைக் கருதியும், அவ்வாய்ப்பை நான் இறுதியில் இழக்க வேண்டி வந்தாலும், காணொலிமூலம் அவர்களுடன் கலந்தே மகிழ்ந்தேன் – இணையத்தின்மூலம் இன்பத்தைப் பெற்றேன் – பெற்றோம்!

ஆசிரியர் அறிக்கை

ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த இரண்டு நாள் மாநாட்டிற்கு (நவம்பர் 1, 2) வாழ்த்தியருளிய ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும், துணை முதலமைச்சரும், தி.மு.க.வின் பகுத்தறிவுப் பாசறையின் இளைய தளபதியுமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வாழ்த்துரைகளும் நிகழ்ச்சித் தொடக்கத்திலேயே சிறப்பான முத்திரை பதித்தன.

தமிழ்நாட்டிலிருந்து 24 பேராளர்கள் பங்கேற்பு!

தமிழ்நாட்டிலிருந்து சுமார் 24 பேர் கொண்ட அறிவார்ந்த இருபால் கொள்கை உறவுகள், கழகப் பொருளாளர் மானமிகு வீ.குமரேசன் அவர்களது தலைமையில் சென்று, பேராளர்களாக (Delegates) கலந்து பயனாளிகள் ஆயினர்.

இவ்விழாவிற்கு சிங்கப்பூர், கத்தார், இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து பேராளர்கள், கருத்தாளர்களாகவே கலந்து பங்களித்தது மாநாட்டிற்கு மேலும் சிறப்பைக் கூட்டியது.

நிகழ்ச்சியில், நமது கொள்கை வீரர், நாடாளுமன்றத்தில் பெரியார் குரலாக, திராவிடர் குரலாக விளங்கும் மானமிகு ஆ.இராசா, பாரம்பரிய ‘திராவிடக் கொள்கை முத்து’ தமிழ்நாடு சமூகநீதி கண்காணிப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பெரியார் மருத்துவக் குழுமத் தலைவர் டாக்டர் இரா.கவுதமன், கருத்தியலாளர்களான வழக்குரைஞர் அ.அருள்மொழி, போராளி ஓவியா, நாடாளுமன்ற உறுப்பினர், புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர் கவிஞர் ராஜாத்தி சல்மா, தமிழ்நாடு அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, அர்கேஷ் கவுடா, கருநாடக சட்ட வல்லுநர் நண்பர் பேராசிரியர் ரவிவர்ம குமார், கோகுல் கிருபா சங்கர், தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர், டாக்டர் ஆதித்ய சோந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பதெல்லாம் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தன.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பேராசிரியர்கள் – பெருமக்கள் பங்கேற்பு

அதையும் தாண்டி, ஆஸ்திரேலிய முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஆஸ்திரேலியா விக்டோரியா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கரீனா கார்லேண்ட், செனேடர் – நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா டேவிட் ஷு பிரிட்ஜ், மெல்போர்ன் பல்கலைக் கழகம், ஆஸ்திரேலியா பேராசிரியர் ஹரி பாபுஜி, ஆஸ்திரேலியா டாக்டர் மிஷேல் ஆனந்தராஜா, ஆஸ்திரேலியா டாக்டர் முகம்மது ஹாரூண் காஸிம், ஆஸ்திரேலியா டாக்டர் கார்த்திக் தங்கராஜ், ஆஸ்திரேலியா தினகரன் செல்லையா, மனிதநேய அமைப்பின் முதன்மை அதிகாரி, ஆஸ்திரேலியா மேரி அனி, ஆஸ்திரேலியா பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ் தங்கமணி, மொனாஷ் பல்கலைக் கழகப்  பேராசிரியர் பால் லாங், சட்டக் கல்வி மாணவி, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் இனியா பிரபு வசுமதி, சிங்கப்பூர் கவிஞர் மா.அன்பழகன், கத்தார் மோகித் பலகிரி, நாட்டிங்கம் நிங்போ பல்கலைக் கழகம், சீனா – பேராசிரியர் விக்ரந்த் கிஷோர், மேனாள் மூத்த அரசியல் அதிகாரி, அய்க்கியநாட்டுச் சபை டாக்டர் ஆர்.கண்ணன், ஜப்பான் எஸ்.கமலக்கண்ணன், பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசிய தலைவர் டாக்டர் எம்.கோவிந்தசாமி, மிஷிகன் பல்கலைக் கழகம், அமெரிக்கா பேராசிரியர் ராம் மகாலிங்கம், கிளஸ்டர், இங்கிலாந்து பேராசிரியர் செந்தில்குமார், இங்கிலாந்து ஹரிஷ் மாரிமுத்து ஆகியோரின் கருத்தாழமிக்க உரைகள்பற்றி என்னிடம் தோழர்கள் உரைத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி, மற்றொருபுறம் அவற்றையெல்லாம் கேட்டிருந்தால், நம் வயது இன்னும் குறைந்து, மேலும் உழைக்கின்ற உறுதியைப் பெற்றிருக்கலாமே என்றே எண்ணத் தோன்றியது.

மாநாட்டு வெற்றிக்கு உழைத்த
அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த சல்யூட்!

மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அத்துணைத் தோழர்களுக்கும் எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும், நன்றியும்!

சிலரது பெயர் விடுபட்டிருந்தாலும், அனைவரையும் உள்ளடக்கிய வரவேற்புக் குழு என்ற பொருளில் மகிழுங்கள் தோழர்களே!

பெரியார் உலகத்தையும், அதன் பணிகளின் சுமையையும் சற்று சுமக்க முன்வாருங்கள் தோழர்களே!

மெல்போர்ன் மாநாட்டிற்கு மேலும் விளம்பரம் செய்யும் வகையில், தமிழ்நாட்டிலிருந்து வரும் ‘இனமலர்’ நாளேடு சில வர்ணாசிரமிகளை – சங்கிகளை அலற வைத்திருப்பதே இம்மாநாட்டின் வெற்றிக்கான சரியான அடையாளம் ஆகும்!

‘‘நிறைய எழுதுங்கள்’’, அப்போதுதான் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் மேலும் விளம்பரம் பெற்று, ஆழமாக, வேரோடு விழுதுகளும் முளைக்க உதவிடும் – அவர்களுக்கும் நமது மறவாத நன்றி!

பெரியார் பன்னாட்டு அமைப்பு இணைந்து நடத்தும் அடுத்த மாநாடு ஜப்பான் அல்லது தென்னாப்பிரிக்காவில் இருக்கலாம்!

பெரியார் – அம்பேத்கர் தத்துவ ஏவுகணை பூமிப்பந்தில் இடைவெளி இன்றி எங்கும் பாயும்!

உழைத்த தோழர்களுக்கு கைகளைக் குலுக்கி, கூப்பி மகிழ்ந்து, அவர்களுக்கு நமது ‘சல்யூட்’, ‘சல்யூட்’, ‘சல்யூட்!’

 

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
5.11.2025

சனி, 15 நவம்பர், 2025

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் ''சமூக நீதிக்கான கி.வீரமணி விருது'' வித்யா பூஷன் ராவத்திற்கு வழங்கப்பட்டது

 




 






பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநரும், சமூக செயற்பாட்டாளருமான வித்யா பூஷன் ராவத் அவர்களுக்கு ''சமூக நீதிக்கான கி.வீரமணி விருது'' வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிந்தார். உடன்: எஸ்.ராஜரத்தினம் அய்.ஏ.எஸ். (ஓய்வு), சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், முனைவர் கோ.ஒளிவண்ணன், மருத்துவர் ஆர்.மீனாம்பாள், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர்

இரா.தமிழ்ச்செல்வன்.
வித்யா பூஷன் ராவத்தின்
மகள் விதிதா பிரியதர்ஷினி
(சென்னை, 14.11.2025)

‘‘ஆஸ்திரேலியாவில் பெரியார்” புத்தகம் வெளியீடு!



இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவில் ‘‘வித்யா பூஷன் ராவத்”கள் தேவைப்படுகிறார்கள்!
– திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விருதாளரைப் பாராட்டி உரை!

பெரியார்தான்; தமிழ்நாடுதான்; திராவிட மாடல்தான்
இந்தியாவின் ஒரே நம்பிக்கை!
– விருதைப் பெற்றுக் கொண்டு எழுத்தாளர் வித்யா பூஷன் ராவத் ஏற்புரை!

சென்னை, நவ.15 கிருமிகளை எதிர்க்க உடலுக்கு எதிர்ப்பு சக்தி தேவை என்பதுபோல், மூடநம்பிக்கைகளை தகர்க்க, புத்தியின் எதிர்ப்பு சக்திக்கு பெரியார் அம்பேத்கர் தேவை என்று ”சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார். விருதை பெற்றுக் கொண்டு, ’திராவிடர் கழகம், திராவிடர் இயக்கத்தின் முதுகெலும்பு’ என்று வித்யா பூஷன் ராவத் தனது ஏற்புரையில் குறிப்பிட்டார்.

இரு பெரும் விழாக்கள்!

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில், “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” மற்றும் “ஆஸ்திரேலியாவில் பெரியார்” புத்தக வெளியீட்டு விழா! என்று நடைபெற்ற இரு பெரும்  விழாக்கள் நேற்று (14.11.2025),  மாலை 6 மணியளவில், சென்னை கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைத்தளத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரியார் மருத்துவக் குழுமத்தின் செயலாளர் – மருத்துவர் ஆர்.மீனாம்பாள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.   எஸ்.ராஜரத்தினம் அய்.ஏ.எஸ். (ஓய்வு) தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.  அமெரிக்கா – பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன் ”ஆஸ்திரேலியாவில் பெரியார்” புத்தகத்தை வெளியிட, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் பெற்றுக்கொண்டு, புத்தகம் குறித்த ஆய்வுரையை வழங்கினார். அதைத் தொடர்ந்து நிகழ்வில் தமிழ், ஆங்கில மொழிகள் கலந்து இணைப்புரை வழங்கிய முனைவர் கோ.ஒளிவண்ணன், விருதாளரை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வித்து உரையாற்றினார். விருதுக்கான கருத்துருவை வாசித்த மருத்துவர் சோம. இளங்கோவன், வித்யா பூஷன் ராவத் அவர்களுக்கு, பலத்த கைதட்டல்களுக்கிடையே 2025 ஆம் ஆண்டுக்கான, “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” விருது வழங்கி சிறப்பித்தார். கழகத் தலைவர் விருதாளருக்கும், நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அவரது மகள் பிரியதர்ஷினி அவர்களுக்கும் சேர்த்து பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். தொடர்ந்து விருதாளரைப் பாராட்டி கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் மாட்சி!

முன்னதாக பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன், “பெரியார் பன்னாட்டு அமைப்பு” தொடங்கப்பட்டதன் பின்னணி மற்றும் இதுவரை விருதுகள் யார் யாருக்கு வழங்கப்பட்டன. அவர்களின் வரலாற்றை குறுகிய நேரத்தில் படக்காட்சி மூலம் விளக்கி, 1994 இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 1996 இல் சமூகநீதிக் காவலரும்; இந்திய அரசின் முன்னாள் பிரதமருமான  வி.பி.சிங் முதல், 2022இல் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வரையிலும் 22 சமூகநீதிப் போராளிகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது என்றும், அந்த வரிசையில் எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குநர் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான வித்யா பூஷன் ராவத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்றும் விவரித்தார். விருது என்பது, விருதுக்கான கருத்துரு அடங்கிய நினைவுப் பரிசு மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெளியிடப்பட்ட ”ஆஸ்திரேலியாவில் பெரியார்” புத்தகத்தின் விலை ரூ.250/- என்றும் சிறப்புச் சலுகையாக ரூ.200/- க்கு கிடைக்கும் என்று அறிவிக் கப்பட்டு, ஏராளமான தோழர்கள் உரிய தொகை கொடுத்து வரிசையாக வந்து தமிழர் தலைவரிடம் பெற்றுக்கொண்டனர்.

திராவிட மாடல்தான் ஒரே நம்பிக்கை!

விருதை பெற்றுக்கொண்ட வித்யா பூஷன் ராவத் தனது ஏற்புரையில், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியாரின் கொள்கைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் பரப்பி வருகிறார்; திராவிடர் கழகம் தான் திராவிடர் இயக்கத்தின் முதுகெலும்பாக இருக்கிறது; நாங்கள் தமிழ்நாட்டு மாடலை பின்பற்ற விரும்புகிறோம்; வடநாட்டில் மக்கள் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை; ஆர்.எஸ்.எஸ். இதைப் பயன்படுத்திக் கொள்கிறது; பெரியார், ஃபூலே, அம்பேத்கர் ஆகியோரை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்; பெரியார் – ஆசிரியர் வீரமணி – தமிழ்நாட்டின் பங்களிப்பு இந்தியா முழுவதற்கும் பெரிதாகத் தேவைப்படுகிறது; பெரியார் தான் – தமிழ்நாடு தான் – திராவிட மாடல் தான் நம்பிக்கை தருகிறது என்று குறிப்பிட்டுப் பேசினார்.

ஜாதி இருக்கும் வரை
சமூக நீதி இருக்கும்!

இறுதியாக கழகத் தலைவர் ஆசிரியர்  உரையாற்றினார். ”நாங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது சுற்றுப்பயணத்திற்கு அல்ல, பெரியாரின் தத்துவத்தை பரப்புவதற்குத்தான். மண் நன்றாக இருந்தால் விதைகள் உடனே முளைத்துவிடும். அப்படித்தான் ஆஸ்திரேலியா! மிகக்குறுகிய காலத்திலேயே ஒரு பன்னாட்டு மாநாடு அங்கே நடந்து முடிந்திருக்கிறது” என்றும், அதில் தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் காணொலி உரைகள் வழங்கியதை பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார். மேலும் அவர், ”சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” பெற்ற வித்யா பூஷன் ராவத் அவர்களைப் பற்றி பேசும் போது, ”வடநாட்டில் தமிழ்நாட்டைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், வித்யா பூஷன் ராவத் மிகச்சரியாக புரிந்துகொண்டுள்ளார்” என்று குறிப்பிட்டார். மேலும் அவர் இந்த விருது தனது பெயரில் இருப்பது தனக்கு உடன்பாடு இல்லை என்றும், பெரியார் பெயரில் தான் இருக்க வேண்டும் என்று பெரியார் பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களிடம் குறிப்பிட்டதை எடுத்துரைத்தார். தொடர்ந்து, பெரியார் பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான மருத்துவர்கள் சோம. இளங்கோவன், இலக்குவன் தமிழ், சரோஜா இளங்கோவன் ஆகியோரின் தொண்டுகளை சிறப்பித்துப் பேசினார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் மூலம் நடைபெற்ற நான்கு பன்னாட்டு மாநாடுகளின் சிறப்பை எடுத்துரைத்தார். ஜாதி இருக்கும் வரை ஜாதி அடிப்படையில் சமூக நீதி அவசியம் என்றார்! ஆகவே நமக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் வித்யா பூஷன் ராவத்கள் தேவைப்படுகிறார்கள். கிருமிகளை எதிர்க்க எப்படி உடலுக்கு எதிர்ப்பு சக்தி தேவையோ அதுபோல, மூடநம்பிக்கைகளை தகர்க்க, புத்தியின் எதிர்ப்பு சக்திக்கு பெரியார் அம்பேத்கர் தேவை என்றும், இவ்விருது வித்யா பூஷன் ராவத் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பது இன்னமும் அவர் அதிகமாகத் தொண்டாற்றுவதை ஊக்கப்படுத்தத் தான் என்று கூறி, தமது உரையை நிறைவு செய்தார்.

‘பெரியார் உலக’த்திற்கு
நா. எழிலன் எம்.எல்.ஏ. நன்கொடை

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்
நா. எழிலன் ‘பெரியார் திடலின் மாணவனாகிய நான் ‘பெரியார் உலக’த்திற்கு மேலும் 1 லட்சம் வழங்கு கிறேன்’ என்று குறிப்பிட்டு தமிழர் தலைவரிடம் அதற்குரிய காசோலை வழங்கினார்.

கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்!

இறுதியில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்வில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,  சே.மெ.மதிவதனி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு, மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாம்பரம் சு.மோகன்ராஜ், கலைமாமணி கலைவாணன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன், பெரியார் களம் தலைவர் இறைவி, சி.வெற்றிச்செல்வி, சேரலாதன், வேலூர் பாண்டு, தா.கு.திவாகரன், மு.சண்முகப்பிரியன், மு.ரா.மாணிக்கம், மா.குணசேகரன், கூடுவாஞ்சேரி மா. இராசு, சிங்கபெருமாள் கோயில் கருணாகரன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். உரைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘பெரியார் உலகத்திற்கு’நன்கொடை


 சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் ‘பெரியார் உலகத்திற்கு’

ரூ.1 லட்சத்திற்கான காசோலையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.

''ஆஸ்திரேலியாவில் பெரியார்'' புத்தகத்தை மருத்துவர் சோம.இளங்கோவன் வெளியிட, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் பெற்றுக் கொள்ளுங்கள். கொண்டார்.





- விடுதலை நாளேடு, 15.11.2025

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

கேரளத்தில் ஒலித்த திராவிட குரல்

 


கொச்சி, மார்ச் 10- கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் ஆழுவாவில் 19.2.2025 அன்று திராவிட மக்கள் சங்கம் – Dravidan People Federation ( DPF) அமைப்பின் சார்பில் ‘திராவிடம் பேசுவோம்’ என்கிற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

திராவிட மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர், வயநாடு நவுஷாத் தலைமை ஏற்றார். இந்த நிகழ்வில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் ‘திராவிட தத்துவம்’ என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஊடவியலாளர் இந்திரகுமார் தேரடி திராவிட இயக்க செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூகநீதி
திராவிடம் என்பது மொழி வழி குடும்பமாக கால்டுவெல் எவ்வாறு வகைப்படுத்தினார்? ஆரிய பார்ப்பனியம் திராவிடம் என்பதை நில அடிப்படையில் எந்த எந்த புராணங்களில் குறித்துள்ளது என்பதையும், இன ரீதியாக மேல் நாட்டு அறிஞர்கள் திராவிட இன மக்கள் என்பதை எப்படி அடையாளப் படுத்தினார்கள் என்பதையும் ஆதரபூர்வமாக விளக்கினார். மேலும் திராவிடம் என்கிற வரையறை ஏன் தற்போது வரை தேவைப்படுகிறது. எதனால் திராவிட வரையறைக்குள் நின்று பெரியாரும் அண்ணாவும் சமூக அரசியல் தளங்களில் வேலை செய்தார்கள்.
இன்றைய ‘திராவிட மாடல்’ அரசின் தொடக்கம் நீதிக்கட்சிதான். நீதிக் கட்சி ஆட்சியில் சமூக நீதிக்கான அடித்தளம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என்று தொடர்ந்து சமூக நீதி தளத்தில் இயக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
மனுதர்மம் கீழ்நிலை மக்களை படிக்கக் கூடாது என்றதும், பெண்களை ஒதுக்கி வைத்ததும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வாய்ப்பளிக்கப்படாத மக்களின் உரிமையை திராவிடர் இயக்கம் எவ்வாறு போராடி பெற்றுத்தந்தது.

கலைஞர் அரசின் மக்கள் நல திட்டம், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு சமத்துவபுரம், பெண்களுக்கு சொத்துரிமை என்று பட்டியலிட்டு இன்றைய திராவிட மாடல் அரசின் காலை உணவு திட்டம், தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை, நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமை பெண் திட்டம், சமூகநீதி கண்கணிப்பு குழு, பெண் ஒதுவார் நியமனம், மகளிர் மேம்பாடு, பொருளாதார உயர்வு, சமத்துவ சமூக நீதிக்கான திட்டங்கள், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. மேலும் இந்தியாவில் இல்லாத அளவுக்கு கல்வி, உயர்கல்வி, விளையாட்டு துறை, மருத்துவ துறை, வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் திட்டங்கள், சிறும்பான்மையினர் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, இடஒதுக்கீடு முறை உள்ளிட்டவற்றை அடங்கிய சமத்துவ ஆட்சியை கொடுக்க முடிகிறதென்றால் அதற்கு நிலையான தத்துவம் திராவிடம் தான். திராவிடம் என்பது தற்போது அரசியல் காப்பு ஆயுதமாக பயன்பட்டு வருகிறது என்றும், ஹிந்தி சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு, மாநில சுயாட்சி கோருதல், புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு, ஆரிய பண்பாட்டு திணிப்பு எதிர்ப்பு, கூட்டாச்சி தத்துவம் காக்க, இன்று அரணாக இருப்பது திராவிட தத்துவம் என்பதை மறுக்க முடியாது.

திராவிட இன மக்களான தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கருநாடகா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சியில் திராவிடத்தின் பங்கு அதிகம் என்றும், ஆரிய ஆதிக்கத்தை விரட்டிட திராவிட மக்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது காலத்தின் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
திராவிட மக்கள் சங்கத்தின் கொடி கருப்பு ஒரு பகுதியும், சிகப்பு ஒரு பகுதியும் சிகப்பில் நீதிக் கட்சியின் தராசு சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிகழ்வில் மாவட்ட மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆசிப், வழக்குரைஞர் நீனா ஜோஸ், தோழர்கள் ஆத்தூர் சதீஷ், அரக்கல் அமீர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

-விடுதலை நாளேடு, 10.03.2025

மேற்கு வங்கத்தில் வைக்கம் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாக்கள்! ‘‘ரவீந்திரநாத் தாகூர் மண்ணில் தந்தை பெரியார் விழா!”

 


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து காணொலியில் கருத்துரை!

சாந்தி நிகேதன், ஏப்.5 மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் “பெரியார் அம்பேத்கர் சித்து கானு படிப்பு வட்டம்” சார்பில் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்து காணொலியில் கருத்துரை வழங்கினார். கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நேரில் கலந்துகொண்டு உரையாற்றினார்

பெரியார் அம்பேத்கர்
சித்துகானு படிப்பு வட்டம்!

‘‘பெரியார் அம்பேத்கர் சித்துகானு படிப்பு வட்டம்” சார்பில் (சித்து, கானு ஆகியோர் வங்கத்தின் பழங்குடி மக்கள் போராளிகள் ஆவர்) நடைபெற்ற கலந்துரையாடலில், இவ்வாண்டு மேற்கு வங்க மாநிலம் முழுவதும், பல இடங்களில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாக்களைத் தொடர்ந்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் தொடக்கமாக, இவ்விழாக்கள் மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சாந்தி நிகேதன் நகரில் 23.03.2025 அன்று சாந்தி நிகேதன் நகரில் உள்ள பாஞ்சாபோன் கலைக்கூடத்தில் காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற்றன. தொடக்க நிகழ்வாக லாலன் பக்கீரின் பவுல் பாடல்கள் (BAUL of Lalan Fakir) தருண் கியேபா குழுவினரால் பாடப்பட்டன. ஜாதி ஒழிப்பைக் குறித்துப் பாடிய பாடல் நிகழ்வில் பங்கேற்ற அனைவரிடமும் ஒரு புத்தெழுச்சியை உண்டாக் கியது. அதனைத் தொடர்ந்து சாந்திநிகேதன் மண்ணுக்கே உரிய ரவீந்திரநாத் தாகூரின் இசைக் கோவைகளிலிருந்து தேவப்ரியா ப்ரம்மா, ராகுல் ஆகியோரால் ரவீந்திர சங்கீத் இசைக்கப்பட்டது.

திராவிடர் கழகம்

 

வங்காளம், தமிழ், ஆங்கில
மொழிகளில் பதாகைகள்!

முதலில் பேராளர்கள் பதிவுடன் விழா தொடங்கியது. 230 பேராளர்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்றனர். அவர்களில் பழங்குடியினர், சமூகச் செயல்பாட்டாளர்கள், இடதுசாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். மேடைக்கு வங்காளத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவரின் ”சக்தி பாத்யகர் மேடை” என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. மேடையில் தந்தை பெரியாரின் பெரிய படத்துடன் வங்காளம், தமிழ், ஆங்கில மொழிகளில் பதாகை வைக்கப்பட்டிருந்தது. அரங்கின் வெளியில் கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய மூன்று நிறங்களில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

கழகத் தலைவரால் பாராட்டப்பெற்ற
சுப்ரியா தருண்லேகா!

தந்தை பெரியாரின் சிந்தனைகளை மேற்கு வங்க மாநிலத்தில் பரப்புரை செய்யும் வகையில், ”பெரியார் அம்பேத்கர் சித்துகானு படிப்பு வட்டம்” உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் சுப்ரியா தருண் லேகா, மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் சென்று கூட்டங்களை நடத்தியும், புத்தகங்களை அறிமுகம் செய்தும் உரையாற்றி வருவதுடன், பெரியார் அம்பேத்கர் சிந்தனையாளர்களையும் ஓரணியில் திரட்டி வருகிறார். முதலில் இவர் தந்தை பெரியாரின் “இராமாயணப் பாத்திரங்கள்” நூலை வங்க மொழியில் பெயர்த்தார். பின்னர் தந்தை பெரியார் பற்றிய ஒரு அறிமுக நூலை வங்க மொழியில் எழுதினார். அவரின் இந்த தன்னலமற்ற தொண்டுக்காக திருச்சியில் இரண்டு நாள்கள் (28.12.2024, 29.12.2024) நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) மாநாட்டில், சுப்ரியா தருண்லேகா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் சிறப்பிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

 

ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசிரியர் உரை!

நிகழ்வுக்கு மேனாள் பத்திரிகையாளரும், சாந்திநிகேதன் நகரின் முக்கிய சமூகச் செயல்பாட் டாளருமான தபஸ் மல்லிக் தலைமையேற்று சிறப்பித்தார்.
பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில் ஆஸ்திரேலியாவில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த உலக மகளிர் நாள் மற்றும் ஆஸ்தி ரேலியாவில் உள்ள சுயமரியாதைக் குடும்ப விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்றிருந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மேற்கு வங்கத்தில் உள்ள ”பெரியார் அம்பேத்கர் சித்துகானு படிப்பு வட்டம்” சார்பில் நடைபெறும் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாக் குழுவினரின் வேண்டுகோளுக்கிணங்க, ஆஸ்தி ரேலியாவிலிருந்து 12 நிமிடம் கருத்துரையைக் காணொலி வழியாக ஆங்கிலத்தில் உரையாற் றினார்.

கழகத் தலைவரின் உரைக்கு
பெரும் வரவேற்பு!

திராவிடர் கழகத்தின் தலைவர் தனது உரையில், தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டப் பங்களிப்பின் சிறப்பை, தாக்கத்தை விரிவாக எடுத்துரைத்தார். இந்தியாவில் கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற முதல் மனித உரிமை போராட்டம் என்று போற்றத்தக்க வைக்கம் போராட்டம் தொடங்கியது முதல், பல்வேறு காலகட்டங்களில் போராட்டத்தின் நிலை குறித்தும் முதல் கட்டத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பிறகு, அவர்களின் அழைப்பின் பேரில் வைக்கம் சென்ற தந்தை பெரியாரின் பங்களிப்பால் அது வெற்றி அடைந்ததையும் குறித்து பல்வேறு வரலாற்று செய்திகளை எடுத்துக் காட்டி உரையாற்றினார். வைக்கம் போராட்டத்தினை முன்னெடுத்த ஜார்ஜ் ஜோசப், கே.பி. கேசவ மேனன், மாதவன் நாயர், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, அன்னை நாகம்மையார், தந்தை பெரியாரின் தங்கை எஸ்.கண்ணம்மாள் உள்ளிட்ட பலரின் பங்களிப்பையும் காந்தியாரின் தலையீட்டையும், வைக்கம் போராட்டத்தின் வெற்றி என்பது இந்தியாவில் தீண்டாமை ஒழிப்புக்கும், சமூக நீதிக்கும், சுயமரியாதைக்குமான போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுவதற்கு அடித்தளமாக இருந்துவருகிறது என்றும் அவர் தமது உரையில் சுட்டிக்காட்டினார். அரங்கத்தில் இருந்த மக்கள் மத்தியில் திராவிடர் கழகத் தலைவரின் உரை பெரும் வரவேற்பைப் பெற்றது. (உரையின் சுருக்கமான தமிழ் வடிவம் 4ஆம் பக்கம் காண்க)

திராவிடர் கழகம்

தந்தை பெரியாரின் வாழ்வும், போராட்டமும்!

தொடக்க உரையைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் ஆனந்த் ஆச்சார்யா, ”தந்தை பெரியாரின் வாழ்வும் போராட்டமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதிய அமைப்பு குறித்தும் பல்வேறு செய்திகளை எடுத்துரைத்தார். தந்தை பெரியார், ம.சிங்காரவேலர், புரட்சியாளர் அம்பேத்கர், ஜோதிபா பூலே ஆகியோரின் கொள்கைகள் இன்றைய பார்ப்பனிய பாசிச ஆட்சி நடைபெறும் சூழலில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் விளக்கிக் கூறினார். மேற்கு வங்கத்தில் ஜாதி அமைப்பு இல்லை என்று கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், ஜாதி இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டால்தான் அதற்குரிய தீர்வை கண்டடைய முடியும் என்றும் விளக்கினார். தந்தை பெரியார் குறித்த ஒரு சிறு கையேடும், ஜோதிராவ்-சாவித்திரிபாய் பூலே ஆகியோர் பற்றிய ஒரு சிறு கையேடும் வங்க மொழியில் வெளியிடப்பட்டன.

திராவிடர் கழகம்

சமூகச் செயல்பாட்டாளர்களின் உரைகள்!

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் ரன்பீர் சுமித் தனது உரையில், மராட்டியத்தில் ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளையும், சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பார்ப்பனக் கொடுமைகளுக்கு எதிரான செயல்பாடுகளையும் குறிப்பிட்டுவிட்டு, வங்காள மக்கள் அதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் கூறினார். ஷிவ்ரி வித்யாசாகர் கல்லூரி பேராசிரியர் தசரத் முர்மு அவர்கள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பழங்குடி மக்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றினார். தொடர்ந்து உரையாற்றிய ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியரும், ஒடுக்கப்பட்ட மக்கள் தலைவருமான பத்தியநாத் சாகா இன்றைய சூழலில் தந்தை பெரியாரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வங்காளத்தின் பெண்ணியப் போராளி ரொகையா பேகம் குறித்து விரிவான புகழ்பெற்ற பேராசிரியரும், சீரிய ஆய்வளருமான மீராதுன் நகார் அம்மையார் (ஓய்வு) மிகச் சிறப்பாக உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

பார்ப்பனியத்திற்கு எதிராக
போராடிய நமோ சூத்திரர்கள்!

தொடர்ந்து, வங்காளத்தின் மட்டுவா சமூகப் புரட்சி இயக்கத்தின் நிறுவனரும், எழுத்தாளரும், சமூகச் செயல்பாட்டாளருமான சுக்ரிதி ரஞ்சன் பிஸ்வாஸ் பேசுகையில், சண்டாளர்கள் என்று இகழப்பட்ட மோசமான நிலையில் தங்களின் மட்டுவா சமூகம் தீண்டத்தகாத சமூகமாக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்ததையும், பார்ப் பன ஆதிக்கத்திற்கு எதிராக ஹரிச்சந்திரா தாக்கூர், நமோ சூத்திரர்கள் எனப்பட்டோர் விடுதலைக்குப் போராடிய செய்திகளையும் எடுத்துக் கூறினார். பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்டப்படியான உரிமைக ளை உறுதிசெய்தல் குறித்து, டாக்டர் சிப்போய் சர்வேஸ்வர் உரையாற்றினார். பின்னர் ரவிதாஸ் சிந்தனைகளைப் பின்பற்றுவோரின் தலைவர் களுள் ஒருவரான கார்த்திக் ரூய்தாஸ் உரை யாற்றினார்.

கழக துணைப் பொதுச்செயலாளர் உரை!

மதிய உணவுக்குப் பின்னர், பாடலுடன் தொடங்கிய நிகழ்வில் சந்தோஷ் சாகா, சிபு சோரன் மற்றும் தோழர்கள் கலந்துரையாடலை ஒருங்கிணைத்தனர். சுபநாத் கவிதைகளை வாசித்தார். அதன் பின்னர், திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆங்கிலத்தில் உரையாற் றினார். தந்தை பெரியாரின் தேவையை உணர்ந்து இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில், குறிப்பாக வங்காளத்தில் பழங்குடியின மக்களிடம் பெரியார் கருத்துகளைக் கொண்டு செல்லும் சுப்ரியா தருண்லேகா உள்ளிட்ட தோழர்களின் முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்தார். சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் தொடங்கப் பட்டிருந்தாலும், இந்தியா முழுமைக்கும், உலகம் முழுமைக்கும் உள்ள மக்களுக்குப் பொதுவான இயக்கம் என்பதை எடுத்துக் காட்டினார். தந்தை பெரியாரின் போராட்டங்கள் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்கு எந்த வகையில் பெரும் பங்காற்றியிருக்கிறது என் பதையும், இட ஒதுக்கீட்டின் வரலாற்றையும், இன்றைய பாஜக பாசிச ஆட்சி நடைபெறும் காலத்தில் தமிழ்நாடு மாநில உரிமைக்கும், மொழி உரிமைக்கும் நடத்தும் போராட்டத்தின் அடிப்படைகளையும் 25 நிமிட அளவில் சுருக்கமாக முன்வைத்தார்.

திராவிடர் கழகம்

ஜாதிப் பின்னொட்டை நீக்குவதை இயக்கமாக்குங்கள்!

தனது பெயருடன் ஜாதிப் பெயரொட்டு இருக்கும் நிலையை தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் மாற்றிக் காட்டியது போல வங்காளத்திலும் நடைபெற வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக சுப்ரியா பானர்ஜி என்ற தன் பெயரை சுப்ரியா தருண்லேகா என்று கடந்த ஆண்டு மாற்றிக் கொண்டார். அதனை எடுத்துக் காட்டி, வங் காளத்து முற்போக்காளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் தங்கள் ஜாதிப் பெயரொட்டை நீக்குவதை இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, காலையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தந்தை பெரியார் குறித்த “பெரியார் ஒருவர்தான் பெரியார் – அவர் போல் பிறர் யார்” என்று தொடங்கும் தமிழ்ப் பாடலை கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பாடினார். தொடர்ந்து விஸ்வபாரதி பல்கலைக்கழகத் தத்துவப் பேராசிரியரும் தமிழருமான முனைவர் டெரன்ஸ் சாமுவேல், தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளைக் குறித்து எளிய ஆங்கிலத்தில் தெளிவுபட உரையாற்றினார்.

செயல்பாட்டுக் குழு பொறுப்பாளர்கள் தேர்வு!

நிகழ்வின் இறுதியாக, பெரியார் வைக்கம் & சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாக் குழு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மார்ச் 31 கொல்கத்தாவிலும், அடுத்தடுத்து வங்காளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வைக்கம் மற்றும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாக்களை நடத்த உறுதிமேற்கொள்ளப்பட்டது. சுப்ரியா தருண் லேகா தலைமையில் தோழர்கள் பியாலிதாஸ், அரிஜித் திவர், கோபால்நாத், சுபநாத், சத்யன் போஸ், பிப்லோ சாகா, தேவப்ரியா ப்ரம்மா, சந்தோஷ் சாகா, பிபத் தரன் பாக்தி, ஸ்ருதி செளத்ரி, ஆயிஷா, ருமா முகர்ஜி ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். அபிஷேக் தத்தாராய் பொருளாளராகவும், இக் குழுவின் மாணவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளராக பினோய் தாஸ் பெயரும் அறிவிக்கப்பட்டது. மராத்திப் பேராசிரியர் ரன்பீர் சுமெத் அறிவுரைக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

ஒருங்கிணைப்பாளர்களின் அரும் பணி!

சுரேஷ் மாட்டி, ரிஷான் மேதே, சாயிட் ஹபிப் மற்றும் ஏராளமான விஸ்வபாரதி பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்வை ஒருங்கிணைக்க உதவினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் சதீஸ்வரன், சேலம் கழக மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைக்கத் தொடர்பாளர்களாக உதவினர். நிறைவாக, நிகழ்வின் தலைவர் தபஸ் மல்லிக் நன்றி கூறி நிறைவு செய்தார். கழக வெளியீடுகள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தந்தை பெரியாரின் சிலை, டி-சர்டுகளை பலரும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். திராவிடர் கழக மாநாடு நடைபெறுவதைப் போலவே, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததுடன், ஒருங் கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் பலரும் கருப்பு உடைகளியேலே நிகழ்வில் பங்கேற்றனர்.
தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆணி வேர் தமிழ்நாட்டில் இருந்தாலும் அதன் பக்கவேர்கள் இந்தியா வின் பல்வேறு பகுதிகளுக்குள் ஊடுருவி ஆங்காங்கே முளைத்துக் கிளைத்து வளர்ந்து கொண்டிருப்பதை வெளிப்படையாக உணரத் தக்க வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. – நமது சிறப்பு செய்தியாளர்

-விடுதலை நாளேடு,5.4.25