ஞாயிறு, 6 ஜனவரி, 2019

பிற மாநிலங்களில் தந்தை பெரியார் விழா

தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில்  தந்தை பெரியார் 45ஆம் நினைவு நாள் கூட்டங்கள்




விசாகப்பட்டினம், ஜன.4 தெலங்கானா மாநிலத்தில் நாத்திக மக்கள் சங்கத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 45ஆம் நினைவு நாள் கூட்டம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

விசாகப்பட்டினம்


நாத்திக மக்கள் சங்கத்தின் சார்பில் ஜீடி சாரய்யா பேசும்போது, இந்துமதம் உள்ளிட்ட அனைத்து மதங்களின் சமத்துவமின்மைக்கு எதிராக, ஜாதிக்கு எதிராக, பெண்களின் உரிமைகளுக்காக போராடி வென்றவர் தந்தைபெரியார் என்று குறிப்பிட்டார்.  அதன்காரணமாகவே, தந்தை பெரியாரை அய்க்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அமைப்பு போற்றிப்பாராட்டி, நவீன சாக்ரட்டீசாக, மனித உரிமைப் போராளியாக அடையாளப்படுத்தியது

வடஇந்தியாவில் சமூகப்பணிகளுக்கான அமைப்புகள் மற்றும் பகுத்தறிவு நாத்திக இயக்கங்கள் சமுதாய மாற்றத்துக்கான அடித்தளமிட்டு முன்னேற்றமடையச் செய்து வந்துள்ளன. சுயமரியாதை இயக்கத்தை நிறுவி பரப்புரை மேற்கொண்டவர் தந்தை பெரியார் என்று கூட்டத்தில் பேசிய பல்வேறு அமைப்பினரும் குறிப்பிட்டனர்.

நாட்டின் பாதுகாப்பு என்கிற பெயரால், இந்துத்துவ வன்முறைகள் அதிகரித்து ஜனநாயகத்தை அழிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.  நாத்திக மக்கள் சங்கம் சார்பில் கூறுகையில், மதமற்றவர்களாக லட்சக்கணக்கானவர்கள் தங்களை அறிவித்துக்கொள்வதற்கு தந்தைபெரியார் வழிகாட்டியுள்ளார் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். பெண்கள் முற்போக்கு அமைப்பின் பொதுச்செயலாளர் லட்சுமி பேசுகையில், கவுரி லங்கேஷ், கோவிந்த் பன்சாரே போன்றவர்களை இந்துத்துவம்தான் கொலை செய்துள்ளது. அதுதான் இந்துத்துவப் பாசிசத்தின் உச்சமாக உள்ளது. தலித்தா முத்தி அமைப்பின் சார்பில் வெங்கடரமணா கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் கூறுகையில், மராட்டிய மாநிலத்தில் கோரேகான் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் தாழ்த்தப்பட்டவர்கள்மீது நடத்திய மோசமான தாக்குதலுக்கு மதத்தின் தீமையாகிய ஜாதிமுறையே ஆணிவேராகும். மூடநம்பிக்கைகள் மற்றும் ஜாதிக்கு எதிராக நாம் போராடவேண்டும் என்று கூறினார்.

ஜம்மிகுண்டா


தெலங்கானா மாவட்டத்தில்  கரீம் நகரிலுள்ள ஜம்மி குண்டாவில் நாத்திக மக்கள் சங்கத்தின் சார்பில்  தந்தை பெரியார் 45 ஆம் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. நாத்திக மக்கள் சங்கத்தின் கரீம் நகர் மாவட்டச் செயலாளர்  ராஜூ மற்றும் பாரத், ராஜூ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பெதாபள்ளி


கோதாவரிகனி மாவட்டம் பெதாபள்ளியில்  தந்தை பெரியார் 45ஆம் நினைவுநாள் கூட்டம் நடைபெற்றது.

கோதா வரிகனி மாவட்டத் தலைவர் ராஜலிங்கம் சிறப் புரையாற்றினார். செயலாளர் சுசித்ரா, ராஜமவுலி, மல்லண்ணா உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

- விடுதலை நாளேடு, 4.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக